சிந்து அப்படிக் கேட்டதும் வியப்பாக அவளைப் பார்த்தார் ஏகாம்பரம். “நீங்க செஞ்சது பெரிய தப்புங்க. நம்ம சிந்துவோட வாழ்க்கையை முடிச்சி விடுற வேலையைப் பாத்துருக்கீங்க? அவர் எவ்வளவு ஆசையா பொண்டாட்டியைப் பாக்க வந்துருப்பார்? இப்படி பிரச்சனையை பெருசாக்கி வச்சிருக்கீங்களே?”, என்று சொல்லி மனம் கலங்கினாள் அமுதவள்ளி.
“என்ன ஆள் ஆளுக்கு நான் தப்பு பண்ண மாதிரியே பேசுறீங்க? அவன் எல்லாம் ஒரு ஆளுன்னு…”, என்று ஏகாம்பரம் சொல்ல “நீங்க தப்பு தான் பா பண்ணிருக்கீங்க”, என்றாள் சிந்து.
“சிந்து”, என்று அவர் அதிர்வாக அழைக்க “ஏன் பா அவரை பாக்க விடாம பண்ணுனீங்க? அவரை இங்க உக்கார வச்சிருக்கலாம்ல?”, என்று அவள் கலங்கிய குரலில் கேட்க முதல் முறை அவளது ஏக்கத்தைக் கண்டவர் திகைத்தே போனார்.
அப்போதும் அவள் மனது தெளிவாக புரியாமல் அவளை சமாதானப் படுத்தும் நோக்குடன் “என்னடாம்மா, அவன் போனா போறான் டா. அப்பா உனக்கு வேற கல்யாணம் பண்ணி வைக்கிறேன்”, என்று சொல்லி அவள் நெஞ்சில் ஈட்டியைப் பாய்த்தார். அமுதவள்ளி அவர் சொன்னதைக் கேட்டு நெஞ்சில் கையை வைத்த படி நிற்க “வாயை மூடுங்க”, என்று கத்தியது சிந்துவே தான்.
“குட்டிமா”, என்று ஏகாம்பரம் அதிர்வாக அழைக்க “என் கிட்ட பேசாதீங்கப்பா. உங்களைப் பாக்கவே எனக்கு பிடிக்கலை”, என்றாள் மகள்.
“சிந்து”
“அவர் என் புருஷன் பா. அவரை இத்தனை நாள் நீங்க மதிக்காதது எனக்கு தெரியும். ஆனா அவர் அதை பெருசா எடுத்துக்கிட்டதே இல்லை. இன்னைக்கு என்னைப் பாக்க வந்தவரை இப்படி அவமானப் படுத்தி அனுப்ப எப்படி உங்களுக்கு மனசு வந்துச்சு?”, என்று சிந்து கேள்வி கேட்க “இவருக்கு இது தேவை தான்”, என்று எண்ணிக் கொண்டு மகள் பேசுவதை வேடிக்கை பார்த்தாள் அமுதவள்ளி. கூடவே கணவன் என்றால் பயந்த பெண்ணுக்கு கூட வீரம் வரும் போல என்று புரிந்தும் கொண்டாள்.
ஏகாம்பரம் மகளையே திகைப்பாக பார்த்துக் கொண்டிருக்க “என் சந்தோஷம் முக்கியம்னு நினைச்சிருந்தா இப்படி பண்ணுவீங்களா பா?”, என்று கேட்டாள் சிந்து. அவருக்கு என்ன சொல்ல என்று கூட தெரியவில்லை. அவளே தொடர்ந்தாள்.
“ரொம்ப ஈஸியா சொல்லிட்டீங்க. வேற கல்யாணம் பண்ணிக்கோன்னு. நான் எப்படிப்பா அவரை விட்டுட்டுய் வேற கல்யாணம் பண்ணுவேன்னு நீங்க நினைச்சீங்க? அவர் என் உயிர் பா. அவரை நான் விரும்புறேன். அவர் மட்டும் தான் என் வாழ்க்கை”, என்று சொன்ன அவள் குரலில் அப்படி ஒரு தெளிவை அனைவரும் கண்டார்கள்.
“ஆனா அவன்”, என்று ஆரம்பித்த ஏகாம்பரம் மகள் பார்த்த பார்வையில் “அவர்ர்ர்…. உன்னை விரும்பலையே மா?”, என்று கேட்டார்.
“அது என்னோட பிரச்சனைப் பா. நான் கூட இத்தனை நாள் அப்படித் தான் நினைச்சேன். ஆனா என் மேல அன்பு இல்லைன்னா அவர் ஏன் பா நீங்க மதிக்க மாட்டீங்கன்னு தெரிஞ்சும் என்னைத் தேடி இங்க வரணும்? எதுக்கு இங்க வந்து உங்க கிட்ட இப்படி அவமானப் படணும்? அப்படின்னா அவருக்கு நான் முக்கியம் தானே? நான் தான் அவரைத் தப்பா நினைச்சிருக்கேன். என்னைக்கு இருந்தாலும் அவர் இல்லைன்னா எனக்கு வாழ்க்கையே இல்லை பா. அவர் மேல அதிக அன்பு இருக்க போய் தான் அவரை விட்டுக் கொடுத்துட்டு நான் இங்க வந்தேன். அவரோட சந்தோசத்துக்கு நான் இடைஞ்சலா இருக்க கூடாதுன்னு தான் நான் வந்தேன். அவரை வேண்டாம்னு உதறிட்டு வரலை. அப்படியே அவர் கிட்ட நான் கோவப் பட்டு வந்தாலும் அவரை விட்டுட்டு நான் வேற வாழ்க்கையை தேடிக்குவேனா? அப்படி நடந்தா நான் செத்து தான் போவேன்”
“சிந்து”
“உண்மை தான் பா. அவர் தான் எனக்கு எல்லாமும். அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும் பா. உங்களை விட அதிகமா பிடிக்கும். அது ஏன்னு இப்ப வரைக்கும் எனக்கு தெரியலை. எனக்கு அவர் வேணும்”, என்று சொல்லி சிந்து அழ “சிந்து மா”, என்று அழைத்த அமுதவள்ளி மகளை தோளோடு அணைத்துக் கொண்டாள்.
“ஏன் மா அப்பா இப்படிப் பண்ணினார்?”
“விடு டா, அதெல்லாம் மாப்பிள்ளை உன்னைத் தப்பா நினைக்க மாட்டார். நான் உன்னைக் கொண்டு போய் அங்க விடுறேன். இல்லைன்னா அசோக் வரட்டும்”, என்றாள்.
“வேண்டாம் மா, எந்த முகத்தை வச்சிட்டு அங்க போவேன்? ஏற்கனவே அவரை வேண்டாம்னு சொல்லிட்டு இங்க வந்தேன். அத்தை மாமா கூப்பிட்டப்பவும் நான் போகலை. இப்ப என்னைத் தேடி வந்த மனுசனை அப்பா அவமானப் படுத்தி அனுப்பிட்டார். நானும் அவரை மதிக்கலை. இவரும் அவரை மதிக்கலை. நான் அவரை விட்டு வந்தது வந்தாவே இருக்கட்டும். நான் இனி அங்க போறதா இல்லை. எந்த முகத்தை வச்சிட்டு அவரைத் தேடிப் போவேன்? நான் என் புருஷன் இல்லாம தினம் தினம் அழுது சாகுறதை இவர் கண் குளிரப் பாக்கட்டும். அது தான் இவருக்கு தண்டனை”, என்று சொன்ன மகளை வேதனையாக பார்த்தார் ஏகாம்பரம்.
தளர்ந்து போய் மாடியேறியவள் அறைக்குள் சென்று மறைந்தாள். மகளுக்காக உணவை ஊட்ட வந்த அமுதவள்ளி மகள் வானத்தை வெறித்துப் பார்த்த படி இருக்கவும் அவள் கண்களும் கலங்கியது.
தான் கலங்கினால் அவள் மேலும் கலங்குவாள் என்பதால் “சிந்து , இந்தா சாப்பாடு கொண்டு வந்துருக்கேன், சாப்பிடு”, என்றாள்.
“எனக்கு வேண்டாம் மா, பசிக்கலை”
“சொன்னா கேக்கணும்”, என்று மிரட்டி அவளுக்கு அந்த சாப்பாடை ஊட்டி விட்டாள். வேண்டா வெறுப்பாக அதை உண்டு முடித்தாள்.
“நான் உன்னை கூட்டிட்டு போகட்டா டா? நீ தானே அங்க இருந்து வந்த? அப்படின்னா நீ தான் போகணும் மா”
“வேண்டாம் மா. அவருக்கு நான் சரி இல்லை”
“இப்படிச் சொன்னா எப்படி மா? அவரா இங்க வந்து உன்னைக் கூட்டிட்டு போகணும்னு எதிர் பார்க்குறியா?”
“அந்த எதிர்பார்ப்பு இருந்துச்சு மா. அவருக்கு நான் முக்கியம் இல்லையோன்னு கஷ்டப் பட்டு தான் இங்க வந்தேன். அதனால அவர் என்னை தேடி வந்ததும் எனக்கு சந்தோஸமா தான் இருந்தது. ஆனா அப்பா அதை தான் கெடுத்துட்டாரே?”
“நாம இருக்கும் போது மாப்பிள்ளை வந்துருந்தார்னா அவர் கூட போயிருப்பியா சிந்து?”
“போயிருப்பேன் மா”
“அவர் மேல நம்பிக்கை வந்துட்டா?”
“ஆமா”
“எப்படி?”
“அவர் நான் வேணும்னு நினைச்சு தானே இங்க வந்தார்”, என்று அன்னைக்குச் சொன்னவள் மனதுக்குள் “ஒரு வேளை என்னை வேண்டாம்னு சொல்லத் தான் இங்க வந்திருப்பாரோ?”, என்றும் பயந்தாள்.
“அதான் நீயே அங்க போன்னு சொல்றேன். என்ன பிரச்சனை வந்தாலும் அங்க இருந்தே சமாளி பாப்பா”, என்று அமுதவள்ளி சொல்ல மறுப்பாக தலை அசைத்தாள் சிந்து. அமுதவள்ளிக்கு அவளை எப்படித் தேற்ற என்று தான் தெரிய வில்லை.
வீட்டுக்கு வந்த ஆதவனிடம் சிந்துவைப் பற்றி ஆவலாக விசாரித்தார்கள் மங்கையும் ரங்கனும். ரத்தினம் வெளிப்படையாக எதையும் கேட்க வில்லை என்றாலும் அவர் கண்கள் அவனைத் தான் நோக்கியது.
நடந்ததை அப்படியே அவர்களிடம் சொல்ல அவனுக்கு மனதில்லை. சொன்னால் கட்டாயம் ஏகாம்பரம் மேல் அவர்களுக்கு கோபம் எழும் என்று தெரியும். சிந்து தான் தன்னுடைய வாழ்க்கை என்றான பிறகு இரு வீட்டினருக்கும் இடையே பகை உருவாவதை அவன் விரும்ப வில்லை. அதனால் முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டான்.
“என்ன தம்பி நாங்க கேட்டுட்டே இருக்கோம். நீ கம்முன்னு இருக்க? சிந்து என்ன சொன்னா? உன் கூட வரலையா? அவ கோபம் போயிட்டா”, என்று கேட்டாள் மங்கை.
“நான் அவளைப் பாக்கவே இல்லை மா”
“என்னப்பா சொல்ற?”
“ஆமாம்மா, நான் போனப்ப அவங்க வீட்ல யாருமே இல்லை. அப்புறம் அசோக் நம்பருக்கு கூப்பிட்டேன். அவன் தான் எல்லாரும் ஊட்டிக்கு டூர் போனதா சொன்னான். கூடவே அவங்க சொந்தக்காரங்களுக்கு கல்யாணமாம். அதுக்கு போயிருக்காங்க. வர மாட்டேன்னு சொன்ன சிந்துவை கட்டாயப் படுத்தி கூட்டிட்டு போயிருக்காங்க. நான் கால் பண்ணிட்டு போயிருந்துருக்கணும். அவங்க வந்ததும் போய்ப் பாக்குறேன் மா”, என்று சமாளித்தான்.
“சரிப்பா”, என்று சொல்லி விட்டு மங்கை உள்ளே செல்ல ரங்கனும் சென்று விட்டான். ரத்தினம் மட்டும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார்.