“ஹாய் அத்தான்”, என்ற பிரியாவின் குரல் கேட்டு திரும்பிப் பார்த்த ஆதவன் அவளைக் கண்டு புன்னகைத்தான். அவனுடைய கட்டுமஸ்தான உடலைக் கண்டு அவளுக்கு மயக்கம் தான் வந்தது. உள் பனியனுடன் நின்றவனை ரசித்துப் பார்த்தாள்.
“வா பிரியா, அத்தை வரலையா?”, என்று அவள் கேட்ட பிறகு தான் நடப்புக்கு வந்தாள்.
“அம்மாவும் அப்பாவும் ஏதோ பங்க்சனுக்கு போயிட்டாங்க. அண்ணனும் அண்ணியும் முகிலை ஸ்கூல்ல சேக்குறது பத்தி விசாரிக்கப் போயிட்டாங்க. அதான் வீட்ல போர். இங்க ஓடி வந்துட்டேன். சரி நீங்க சாப்பிட்டீங்களா?”
“எனக்கு பசிக்கலை. நான் சாப்பிட நேரம் ஆகும் பிரியா”
“மணி தான் எட்டரை ஆகிருச்சே? வாங்க அத்தான் பிளீஸ்”, என்று அவள் கண்களைச் சுருக்கிக் கெஞ்ச “சரி அம்மா கிட்ட சொல்லி சாப்பாடு எடுத்து வைக்கச் சொல்லு. நான் கை கால் கழுவிட்டு வரேன்”, என்றான்.
“சரி”, என்று சந்தோசத்துடன் அங்கிருந்து ஓடினாள் பிரியா.
அவள் சென்றதும் “ரங்கா”, என்று அழைத்தான் ஆதவன்.
“அண்ணே”, என்ற படி ரங்கன் அவனுடைய அருகில் வர “முகம் கழுவிட்டு வா, சாப்பிடலாம் வா”, என்றான் ஆதவன்.
“இதோ வரேண்ணே”, என்று சொன்ன ரங்கன் தன்னுடைய போனில் இருந்து அந்த வீடியோவை ஆதவனுக்கு அனுப்பி வைத்து விட்டே முகம் கழுவச் சென்றான்.
முகம் கழுவிக் கொண்டே ரங்கன் ஆதவனைப் பார்க்க ஆதவனோ அவனுடைய சட்டையைக் கையில் எடுத்து அதைப் போடப் போனான். அப்போது அவனுடைய போனில் ஏதோ மெஸ்ஸேஜ் வந்ததற்கு உதாரணமாக லைட் எரிந்தது. உடனே சட்டையை சேரில் போட்டு விட்டு தன்னுடைய போனை எடுத்தான்.
ரங்கன் ஏதோ வீடியோ அனுப்பிருக்கவும் ரங்கனை திரும்பி பார்த்தான். ரங்கன் அவனையே ஆர்வமாக பார்த்துக் கொண்டிருக்கவும் அந்த வீடியோவை ஓட விட்டான். பின் போனை மட்டும் எடுத்துக் கொண்டு வீட்டுக்குள் வந்தான். பிரியாவை உண்டு இல்லை என்று ஆக்குவான் என்ற எண்ணத்தில் அறையும் குறையுமாக முகம் கழுவி விட்டு ரங்கன் வீட்டுக்குள் ஓடி வர “என்ன டா பனியனோட வர. சட்டையை எங்க?”, என்று ஆதவனிடம் கேட்டுக் கொண்டிருந்தாள் மங்கை.
“அந்த சட்டை கசங்கிருச்சு மா. அழுக்கு வேற பட்டிருச்சு. நீங்க எல்லாருக்கும் சாப்பாடு எடுத்து வைங்க. நான் வேற சட்டையை போட்டுட்டு வரேன்”, என்று சொல்லி விட்டு அறைக்குள் சென்றான். அறைக்குள் சென்ற ஆதவனையே பார்த்துக் கொண்டிருந்தான் ரங்கன்.
“இந்த அண்ணே விடீயோவை பாத்துச்சா பாக்கலையான்னு தெரியலையே?”, என்று எண்ணிய படி ரங்கன் நின்று கொண்டிருக்க “நீ என்ன டா கனவு கண்டுட்டு இருக்க. வா வந்து உக்கார்”, என்று அழைத்தாள் மங்கை.
“இதோ வரேன் மா”, என்று சொன்ன ரங்கன் பிரியா எதிரில் சென்று அமர்ந்தான். ஆனாலும் அவன் கண்கள் ஆதவன் எப்போது வருவான் என்று தான் பார்த்துக் கொண்டிருந்தது.
அறைக்குள் சென்ற ஆதவன் மீண்டும் அந்த வீடியோவைப் பார்த்து விட்டு வேறு ஒரு சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டு கீழே வந்தான். ரங்கன் அவனை ஆவலாக பார்க்க அவனோ பிரியாவுக்கு அடுத்து கிடந்த சேரில் அமர்ந்து அமைதியாக உணவு உண்ண ஆரம்பித்தான். அதுவும் பிரியா எதுவோ கேட்க அதற்கு புன்னகையுடன் பதில் வேறு கொடுத்தான்.
அந்த காட்சியைக் கண்டு ரங்கனுக்கு மண்டையை பிய்த்துக் கொள்ளலாம் போல இருந்தது. அப்போது தான் ஓர் விஷயம் அவனுக்கு நினைவும் வந்தது. ரங்கன் எப்போதும் மொக்கையான காமெடி வீடியோவை அனுப்புவதால் அதை ஓப்பன் செய்யும் ஆதவன் அதை முழுதாக பார்க்க மாட்டான்.
“ஐயையோ மத்த வீடியோ மாதிரி இதையும் பாக்காம விட்டுட்டாங்களோ”, என்று எண்ணிக் கொண்டு மீண்டும் அவனுக்கு அந்த வீடியோவை அனுப்பினான்.
“டேய் என்ன பழக்கம் இது, சாப்பிடும் போது போனை குடைஞ்சிட்டு இருக்குறது? ஒழுங்கா சாப்பிடு”, என்று மங்கை அதட்ட அமைதியாக சாப்பிட ஆரம்பித்தான்.
ஆனாலும் ஆதவனை அடிக்கடி பார்த்த படி இருந்தான். ஆதவனோ அவனைக் கண்டு கொள்ளாமல் பிரியாவிடம் பேசிய படி இருந்தான். ரங்கனுக்கு தான் சாப்பிடும் ஆசையே இல்லாமல் போய் விட்டது.
அத்தான் தன்னிடம் பேசியதால் சந்தோஷமாக இருந்தாள் பிரியா. சாப்பிட்டு முடித்ததும் அவள் கிளம்பி வீட்டுக்குச் செல்ல ரங்கன் தன்னுடைய போனை எடுத்துப் பார்த்தான். ஆதவன் அந்த வீடியோவை பார்த்தது போல ப்ளு டிக் இருக்க மீண்டும் அனுப்பினான் ரங்கன்.
அப்போது “ஏண்டா, ஒரே வீடியோவை திரும்ப திரும்ப அனுப்புற?”, என்று கேட்டான் ஆதவன். அவன் கேள்வியில் அதிர்ந்து திரும்பியவன் “எப்பவும் போல என் வீடியோவை நீ பாக்கவே இல்லைல்ல? இந்த வீடியோவை நீ கண்டிப்பா பாக்கணும்ணே. நீ முழுசா பாக்குற வரைக்கும் நான் அனுப்பிட்டே இருப்பேன்”, என்றான்.
“நான் பாக்கலைன்னு யார் டா சொன்னது? நான் அப்பவே பாத்துட்டேன்”
“அண்ணே”, என்று அவன் நம்பாமல் கேட்க “நிஜமாவே பாத்துட்டேன் டா”, என்றான் ஆதவன்.
“நிஜமாவா? அப்புறம் ஏன்….?’
“அப்புறம் ஏன் பிரியா கிட்ட நல்லா பேசினேன்னு தானே கேக்க வர?”
“ஆமா”
“ஏன் பேசினா என்ன? அவ என்ன அவ்வளவு பேசிய தப்பா பண்ணிட்டா? பிரியா என் மேல இவ்வளவு அன்பா இருக்கான்னு இப்ப தான் தெரிஞ்சது. பேசாம அவளைக் கல்யாணம் பண்ணா தான் என்ன?”, என்று ஆதவன் கேட்டதும் “அண்ணே”, என்று அதிர்வாக அழைத்தான் ரங்கன்.
“என்ன டா, உன் தொங்கச்சி தான் விட்டுட்டு போய்ட்டாளே? இதுக்கு அப்புறம் அவ பின்னாடியே கெஞ்சிட்டு இருக்க சொல்றியா? பிரியா என் மேல ஆசையா இருக்கா. அவளை விடணுமா என்ன?”
“அண்ணே உன் கிட்ட இருந்து இப்படி ஒரு பேச்சை நான் எதிர் பாக்கலை. நீயாண்ணே இப்படி பேசுறது? என் தங்கச்சி கால் தூசிக்கு வருவாளா இந்த பிரியா?”
“அப்ப, என் தங்கச்சி மட்டும் யாருண்ணே? கடைசில உன் பணக்கார புத்தியை காமிச்சிட்டல்ல? என் தங்கச்சி மனசை எல்லாரும் தான் உடைச்சாங்கன்னா நீயும் ஒரெடியா உடைக்க போறல்ல? இனி என் கிட்ட பேசாத. நான் போறேன்”
“நிதர்சனத்தைச் சொன்னா உனக்கு கோபம் வருதா? சரி கோச்சிக்கிட்டு எங்க போகப் போற?”
“எங்கயும் போறேன்? உனக்கு என்ன? என் தங்கச்சியை மறந்த வீடு எனக்கு வேண்டாம்”
“இதுவும் உன் தங்கச்சி வீடு தான் டா. பிரியாவை நான் கல்யாணம் பண்ணினா, அவளும் உனக்கு தங்கச்சி தான் டா ரங்கா”
“அவ என் தங்கச்சியா? அவ ஒரு பேய். என் தங்கச்சியை விரட்டின பேய்…”, என்று உளறி விட்டு ஒரு நொடி நிறுத்திய ரங்கன் ஆதவனை பார்த்தான்.
ஆதவன் அவனைக் கூர்மையாக பார்த்த படி இருக்கவும் தன்னைச் சமாளித்துக் கொண்டு “நான் போறேன். எனக்கு இங்க இருக்க பிடிக்கலை”, என்று சாதாரணமாக சொல்லி விட்டு கிளம்பப் பார்த்தான்.
அப்போது “நில்லு டா”, என்று ஆதவன் சொன்னதும் நின்ற ரங்கன் ஆதவனைப் பார்த்தான். “அண்ணன் நான் உளறினதைக் கண்டு பிடிச்சிருக்குமோ?”, iஎன்று அவனுக்கு பயமாக இருந்தது.
“போறவனைத் தடுக்க கூடாது. ஆனா உன் தங்கச்சியை விரட்டின பேய் தான் பிரியானு சொன்னீயே. சாரி சாரி உளறுனியே? அதுக்கு என்ன காரணம்னு சொல்லிட்டு கிளம்பு”, என்று சொன்ன ஆதவன் அவனையே கூர்மையாக பார்த்தான்.
“அண்ணா அது வந்து…. அது கோபத்துல… ‘
“நீ பிரியா மேல கோபமா இருக்குறது தான் தெரியுதே. ஆனா நீ உளறினதைப் பத்தி சொல்லித் தான் ஆகணும். சொல்லு டா”
“ஒண்ணும் இல்லையே. நான் ஒண்ணும் உளறலையே? ஏதோ கோபத்துல பேசிட்டேன்”
“ஒண்ணுமே இல்லை. உனக்கு ஒண்ணுமே தெரியாது. அப்படி தானே?”
“ஆமாண்ணே”
“ஓஹோ”
“நிஜமா ஒண்ணுமே இல்லைண்ணே”
“இதை நான் நம்பனுமா?”
“அண்ணே”
“நான் அந்த வீடியோவைப் பாக்கணும்னு நீ தவிச்ச தவிப்பை பாத்தேன் டா. அது மட்டுமில்லாம என்னால பிரியாவோட செய்கையை இப்பவும் நம்ப முடியலை. ஒரு மாதிரி உடம்பெல்லாம் பூச்சி ஊருண மாதிரி அருவருப்பா இருந்தது. அதனால தான் அவ போட்ட சட்டையை தொடக் கூட செய்யலை”, என்று ஆதவன் சொன்னதும் “அண்ணே”, என்று ஆவலாக அழைத்தான் ரங்கன்.
“அவ இப்படி செய்வான்னு நான் கற்பனைல கூட நினைக்கலை டா ரங்கா. இன்னைக்கு தான் அவ பேசும் போது அவ கண்ணுல தெரிஞ்ச ஆசையைப் பாத்தேன். இத்தனை நாள் நான் அதைக் கவனிக்கவே இல்லை பாரேன். உன்னை திரும்பி பார்த்தா நீ என்னை அவ்வளவு தவிப்போட பாத்துட்டு இருக்க. அப்படின்னா உனக்கு ஏதோ தெரிஞ்சிருக்கணும்னு தோணுச்சு. அதனால தான் போட்டு வாங்கினேன். நீயே உளறிட்ட. என்ன நடந்தது ரங்கா?”
“அண்ணே”, என்று அவன் தயங்க “என்ன நடந்துச்சு சொல்லு டா. சிந்து வீட்டை விட்டுப் போக காரணம் பிரியாவா?”, என்று கேட்டான் ஆதவன். அப்போதும் “அது வந்துண்ணா”, என்று தயங்கினான் ரங்கன்.