“என்ன நடந்துச்சுன்னு இப்ப சொல்லப் போறியா இல்லையா டா?”, என்று ஆதவன் அரட்டிக் கேட்ட பிறகும் ரங்கன் அமைதியாக தான் இருந்தான்.
உன் தங்கச்சி என் கிட்ட சொல்லக் கூடாதுன்னு சத்தியம் வாங்கினாளாக்கும்”, என்று கேட்டதும் அவன் ஆம் என்று மண்டையை ஆட்டினான்.
“இருபது வருஷமா கூட இருந்த என்னை விட உன் தங்கச்சி தான் உனக்கு முக்கியமா டா?”, என்று ஆதவன் கேட்டதும் அதற்கு பதில் சொல்ல முடியாமல் தலை குணிந்தான் ரங்கன்.
“சரி நீ உன் தங்கச்சிக்கே விசுவாஸமா இரு. எனக்கு கண்டிப்பா இந்த பிரியா தான் ஏதோ செஞ்சிருப்பான்னு தோணுது. அதுவும் இவ செய்கையைப் பாத்தா இவளுக்கு என் மேல இருக்குறது வெறிப் பிடிச்ச ஆசை மாதிரி இருக்கு. அந்த ஆசையை வச்சே என்ன நடந்துச்சுன்னு நான் உண்மையைக் கண்டு பிடிக்கிறேன். அதுவும் நாளைக்கே. அதுக்கப்புறம் உனக்கு இருக்கு. என்னை இந்த பாடு படுத்துற உன் தங்கச்சிக்கும் இருக்கு”
“தங்கச்சி பாவம்ணே”
“அப்ப நான் பாவம் இல்லையா டா? அவளை நினைச்சு பைத்தியம் மாதிரி இருக்குற நான் பாவம் இல்லையா?”
“நீயும் பாவம் தான். ஆனா தங்கச்சி ரொம்ப பாவம்”
“அட போடா”
“நீ என்ன சொன்னாலும் தங்கச்சி பக்கம் தான் நான் இருப்பேன். தங்கச்சிக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்ணே. அதனால தான் கோச்சிக்கிட்டு போய்டுச்சு”
“என்ன டா சொல்ற?”
“உன் பொண்டாட்டி மனசை நானா உனக்கு சொல்லணும்? எல்லாத்தையும் கண்டு பிடிக்கிற மாதிரி நீயே கண்டு பிடி. தப்பு எல்லாம் உன் பக்கம் தான். ஐயர் கிட்ட நாள் தள்ளி போடச் சொல்லிருக்க. வேணுக்குன்னு கையை உடைச்சிருக்க”
“இது எப்படி டா உனக்கு தெரியும்? சிந்து சொன்னாளா?”
“அதெல்லாம் தெரியாது. சரி நான் ஐயாவை கூப்பிட போகணும். பதினொரு மணிக்கு மில்லுக்கு வரச் சொன்னாங்க. நீ எங்கயாவது போகணும்னா பெரிய காரை எடுத்துட்டு போ”, என்று சொல்லி விட்டு ஓடி விட்டான்.
அன்று இரவு முழுவதும் ஆதவனுக்கு தூக்கமே வரவில்லை. அடுத்த நாள் காலை எப்போது விடியும் என்று காத்திருந்தான். காலை உணவு நேரம் முடிந்ததும் ரத்தினம் குடவுனுக்கு கிளம்பிக் கொண்டிருந்தார்.
அப்போது “அப்பா உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்’, என்றான் ஆதவன்.
முன்பென்றால் “உன் வெட்டிக் கதை கேக்க எனக்கு நேரம் இல்லை”, என்று சொல்லியிருப்பார். இப்போதோ “என்ன தம்பி, சொல்லுப்பா”, என்றார். ரங்கனும் அங்கே தான் இருந்தான்.
“அம்மா இங்க வா, நீயும் வந்து உக்காரு”, என்று ஆதவன் அழைத்ததும் மங்கையும் அங்கே வந்து அமர்ந்தாள்.
மூவரும் அவனை குழப்பமாக பார்த்தார்கள். “என்னப்பா சொல்லு’, என்றார் ரத்தினம்.
“அது வந்துப்பா… நான் ஒரு முடிவு எடுத்துருக்கேன். அது வந்து.,.. நான் என்ன சொன்னாலும் சிந்து இங்க வருவான்னு எனக்கு நம்பிக்கை இல்லை”
“இல்லை என் மருமக கண்டிப்பா இங்க வருவா”, என்று அவசரமாக சொன்னாள் மங்கை.
அன்னை அவசரமாக சொன்னதைக் கண்டு சிரிப்பு வரப் பார்த்தாலும் அதை அவர்களுக்கு தெரியாமல் அடக்கி கொண்டவன் “நீ கூப்பிட்டும் அவ வரலை மா”, என்றான்.
“இப்ப அதுக்கு என்ன செய்யனும் தம்பி? நீ வேணும்னா சென்னைக்கு போறியா? நீ ஆசைப் பட்ட மாதிரி சென்னைல தொழில் தொடங்கு, நான் பணம் தரேன்”, என்று சொன்னார் ரத்தினம். அதைக் கேட்டு வியப்பின் எல்லைக்கே சென்றார்கள் அனைவரும். மருமகளுக்காக மகனை விட்டுக் கொடுக்க அவர் தயாராக இருப்பதும் இத்தனை நாள் அவன் மேல் நம்பிக்கை இல்லாமல் பணம் கொடுக்க மறுத்தவர் இன்று அதை தருகிறேன் என்று சொன்னதும் ஆச்சர்யமாக இருந்தது.
“என்னை நம்பினதுக்கு தேங்க்ஸ் பா. ஆனா நான் வேற முடிவு எடுத்துருக்கேன். அது என்னன்னா என்னை வேண்டாம்னு சொன்ன சிந்து எனக்கும் வேண்டாம். அதனால நான் வேற கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்”, என்று அவன் நிதானமாக அறிவிக்க அவனுடைய பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த ரங்கனும் திகைப்புடன் அண்ணனைப் பார்த்தான். பின் அவன் காரணம் இல்லாமல் எதையும் செய்ய மாட்டான் என்று எண்ணி அமைதி காத்தான்.
ரத்தினமும் மங்கையும் அதிர்ச்சியாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
“உனக்கு என்ன பைத்தியமா டா புடிச்சிருக்கு? உன்னை என் வயித்துலயா பெத்தேன். பொண்டாட்டி கோச்சிக்கிட்டு போனா அவ வர வரைக்கும் கூட உன்னால காத்துட்டு இருக்க முடியலையா? அதுக்குள்ள இன்னொரு கல்யாணம்னு சொல்ற?”, என்று திட்டினாள் மங்கை.
“என்ன மா நீ? நீயெல்லாம் என்ன அம்மாவோ? மருமக திமிரா இருந்தா அவளை வெட்டி விட்டுட்டு உனக்கு புடிச்ச மாதிரி பொண்ணு பாத்து எனக்கு கல்யாணம் பண்ணி வைப்பியா? அதை விட்டுட்டு வியாக்கியானம் பேசிட்டு இருக்க?”, என்று கேட்டான் ஆதவன்.
“அந்த கேவலமான காரியத்தை நான் ஏன் டா பண்ணனும்? எப்பவும் ஒருத்தனுக்கு ஒருத்தின்னு நினைக்கிறவ நான். என் மகன் நீ ரெண்டாம் கல்யாணம் பண்ண நினைச்சா நான் விட்டுருவேணா? அப்புறம் என் மருமக ஒண்ணும் திமிர் பிடிச்சவ கிடையாது. அவ சாந்த சொரூபி”, என்று மகனிடம் சொன்ன மங்கை கணவன் புறம் திரும்பி ”என்னங்க நீங்க, அமைதியா இருக்கீங்க? இவனைத் திட்டும் போதெல்லாம் நான் உங்களை திட்டிருக்கேன். இப்ப இவனை நாலு சாத்த மாட்டீங்களான்னு இருக்கு”, என்றாள்.
“என்னை என்ன பண்ண சொல்ற மங்கை. எனக்கே அவன் சொன்னது அதிர்ச்சியா தான் இருக்கு”, என்று சொன்ன ரத்தினம் ஆதவன் புறம் திரும்பி “தம்பி, ஒரு வேளை உனக்கு கல்யாண ஏற்பாடு பண்ணினா மருமக இங்க பொறாமைல இங்க வந்துருவானு இப்படிச் சொல்றியோ?”, என்று மகனை நல்ல படியாக நினைத்தே கேட்டார். அப்படித் தான் இருக்கும் என்று எண்ணி மங்கையும் மகனைப் பார்த்தாள்.
“அட போங்கப்பா, என்னை வேண்டாம்னு போனவளை வர வைக்க பிளான் போட்டுட்டு இருக்க நான் என்ன பைத்தியமா? எனக்கு அது தான் வேலையா? எனக்கு வேற கல்யாணம் பண்ணனும். அவ எக்கேடு கேட்டுப் போனா எனக்கு என்ன?”, என்று அவன் கேட்டதும் தான் தாமதம் மங்கை அவனை அடிக்கவே கை ஓங்கி விட்டாள்.
அவளைத் தடுத்த ரத்தினம் அப்போதும் மகன் பக்கம் நியாயம் இருப்பதாக நம்பினார். “சரி, நீ சொல்றதுக்கு நான் சம்மதிக்கிறேன். உனக்கு ரெண்டாம் தாரமா யார் பொண்ணு தருவா?”, என்று கேட்டார் ரத்தினம்.
“என்னங்க, அவன் தான் அப்படிச் சொல்றான்னா நீங்களும் வாய்க்கு வந்ததை பேசிட்டு இருக்கீங்க?”, என்று கோபப் பட்டாள் மங்கை.
“அமைதியா இரு மங்கை. நம்ம மகன் வாழ்க்கையையும் நாம பாக்கணும். சொல்லுப்பா, யார் பொண்ணு தருவா?”
“பிரியாவை எனக்கு கேட்டுப் பாருங்கப்பா”, என்று அவன் சொன்னதும் அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள்.
“ஆதவா”, என்று ரத்தினம் அதிர்வாக அழைக்க “எனக்கு வேற வழி தெரியலைப்பா. இப்படியே இருந்தா நான் பைத்கியமாகிருவேன் போல. என் மனசுல பட்டதைச் சொல்லிட்டேன். அப்புறம் உங்க விருப்பம்”, என்றவன் ரங்கன் தோளில் கையைப் போட்ட படி வெளியே வந்து “எப்படி டா என் நடிப்பு?”, என்று கேட்டான்.
“இவங்க கிட்ட உண்மையைச் சொன்னா நடிக்கிறேங்குற பேர்ல சொதப்பிருவாங்க அதான். இப்ப அம்மா கண்ணுல இருந்து வர கண்ணீர் நிஜம். அதுவும் அவங்க மருமகளுக்காக. எனக்கு அந்த நிஜம் தான் வேணும். அப்ப தான் அந்த பிரியா பத்தி இவங்க புரிஞ்சிப்பாங்க”
“நல்ல ஐடியா தான். அனா ஐயா அம்மா முகம் மாறிருச்சு. அம்மா அழுதுட்டு இருக்காங்க”
“அது இன்னும் கொஞ்ச நேரம் தான் டா. அப்புறம் சரியாகிரும்”, என்றான் ஆதவன்.
அதன் பின் ஆதவன் நினைத்தது போலத் தான் நடந்தது. தன்னுடைய போனை எடுத்து தங்கைக்கு அழைத்தார் ரத்தினம். அதை எடுத்த வேணி “சொல்லுங்கண்ணே”, என்றாள்.
“வேணி நீ மாப்பிள்ளையை கூட்டிட்டு இங்க வா மா. அப்படியே சக்தி, செல்வியைக் கூட்டிட்டு வா. பிரியாவையும் அழைச்சிட்டு வா”
“எதுக்குண்ணே திடீர்னு?”
“நீ வா சொல்றேன்”, என்று சொல்லி விட்டு அவர் போனை வைக்க மங்கை அவரை தீப்பார்வை பார்த்தாள்.
“என்ன டி இப்படி ஒரு பார்வை?”
“இப்ப உங்களுக்கு சந்தோஷமா?”
“நான் என்ன டி செஞ்சேன்?”
“அவன் தான் பைத்தியம் மாதிரி பேசுறான்னா நீங்களும் ஆடுறீங்க?”
“அவன் சொல்றது நியாயம் தானே?”
“உங்க ஆம்பளை புத்தி இப்படி தானே யோசிக்கும்? ஆனா நான் சிந்து, பிரியா ரெண்டு பேரைப் பத்தியும் யோசிக்கிறேன்”
“நான் மட்டும் யோசிக்கலைன்னு பாத்தியா? எனக்கு என்னமோ ஆதவன் பக்கம் சரியா இருக்கும்னு தோணுது. இது வரைக்கும் நான் அவனை நம்பினது இல்லை. ஆனா இப்ப நம்புறேன். பாப்போம். நீ கொஞ்சம் பொறுமையா இரு. அதோ அவங்க வந்துட்டாங்க”, என்று அவர் சொன்னதும் மங்கையும் வாயை மூடிக் கொண்டு அவர்களை வரவேற்றாள்.
“என்ன அண்ணே, திடீர்னு எல்லாரையும் வரச் சொல்லிருக்கீங்க?”, என்று கேட்டாள் வேணி.
செல்வியோ கலங்கிப் போயிருந்த தன்னுடைய அன்னை முகத்தைத் தான் பார்த்தாள்.
“என்னவா இருக்கும்?”, என்ற குழப்பத்துடன் அமர்ந்தார்கள். “ஆதவன் அத்தான் எங்க அத்தை?”, என்று கேட்டாள் பிரியா.
“இதோ வந்துட்டேன் பிரியா”, என்ற படி அங்கு வந்தான் ஆதவன். அவன் அருகே ரங்கனும் இருந்தான். ஆதவன் அவளைப் பார்த்து சிரிக்க பிரியாவும் அவனைக் கண்டு புன்னகைத்தாள். இதைக் கண்களால் கணவருக்கு காட்டினாள் செல்வி. சக்தியும் நடப்பதைக் கண்டு குழம்பிப் போனான்.
எல்லாரும் அமைதியாக இருக்க “என் மகனோட கல்யாண வாழ்க்கை தோத்து போயிருச்சு வேணி. ஆனா என் மகன் வாழ்க்கை எனக்கு நல்லா இருக்கணும். அதான் உங்களைக் கூப்பிட்டு விட்டேன்”, என்று ஆரம்பித்தார் ரத்தினம்.