“என்னன்னு சொல்லுங்கண்ணா. அண்ணி வேற அழுதுட்டு இருக்காங்க. அந்த பொண்ணு வீட்ல எதுவும் சொன்னாங்களா?”, என்று கேட்டாள் வேணி.
“அவங்க ஒண்ணும் சொல்லலை. இது வரை அந்த பொண்ணும் இங்க வரலை. அதனால ஆதவனுக்கு வேற கல்யாணம் பண்ணலாம்னு பாக்குறேன். அவனும் சரின்னு சொல்லிட்டான்”, என்று சொல்ல வேணி மற்றும் பிரியா முகம் ஒளிர்ந்தது என்றால் மற்ற அனைவரின் முகமும் இருண்டது.
“அப்பா, என்ன பேசிட்டு இருக்கீங்க?”, என்று கோபமாக கேட்டாள் செல்வி.
“நீ அமைதியா இரு பாப்பா. பெரியவங்க பேசுறோம்ல?”, என்று மகளைத் தடுத்தார் ரத்தினம்.
“செல்வி கேக்குறதுல என்ன தப்பு இருக்கு மச்சான்? ஏதோ அந்த பொண்ணு கோச்சிக்கிட்டு போயிருச்சு. உடனே அடுத்த கல்யாணம் பத்தி பேசலாமா? அதுவும் நம்ம குடும்பத்துல?”, என்று கேட்ட விஸ்வத்தை முறைத்தாள் வேணி.
“இத்தனை நாள் காத்துட்டு இருந்தாச்சு மாப்பிள்ளை. அந்த பொண்ணு வரலை. நான் என் மகனுக்கு வேற கல்யாணம் பண்ணத் தான் போறேன். நான் இப்ப உங்களை வரச் சொன்னது கல்யாணம் பண்ணனுமா வேண்டாமான்னு கேக்குறதுக்கு இல்லை. நம்ம பிரியாவை ஆதவனுக்கு கட்டிக் கொடுப்பீங்களா இல்லையான்னு கேக்குறதுக்கு தான்?”, என்று ரத்தினம் சொன்னதும் பழம் நழுவி பாலில் விழுந்து அது நழுவி வாயில் விழுந்தது போல இருந்தது வேணி மற்றும் பிரியாவுக்கு.
“கட்டாயம் அண்ணே. பிரியாவை நம்ம ஆதவனுக்கு கொடுக்க எனக்கு முழு சம்மதம். என்னங்க அப்படி தானே?”, என்று அவசரமாக சம்மதம் கொடுத்தாள் வேணி.
விஸ்வம் மனைவியை முறைத்துப் பார்த்தார். பிரியா முகத்தில் இருந்த சந்தோஷத்தை தான் பார்த்துக் கொண்டிருந்தான் ஆதவன். செல்வி எதுவோ சொல்லப் போக அவள் கையைப் பற்றி சக்தி அமைதியாக இரு என்னும் விதமாய் கண்ணைக் காட்டினான். அவள் பதிலுக்கு அவனை முறைக்க அவனோ ஆதவனைக் கண்ணைக் காட்டினான்.
ஆதவன் ஒரு வித ஆராய்ச்சியுடனும் கோபத்துடனும் பிரியாவைப் பார்த்துக் கொண்டிருக்க செல்வியும் நடப்பதை அமைதியாக வேடிக்கைப் பார்த்தாள்.
“அண்ணி நீங்க என்ன அமைதியா இருக்கீங்க? அண்ணன் எவ்வளவு பெரிய சந்தோஷமான விசயம் சொல்லிட்டு இருக்காங்க”, என்று சொன்னாள் வேணி.
“எனக்கு இதுல சந்தோசமே இல்லை வேணி. உனக்கு தான் தெரியுமே? நான் மனசுல பட்டதைச் சொல்லிருவேன்னு. எனக்கு இது சுத்தமா பிடிக்கலை. எனக்கு மருமகன்னா அது சிந்து மட்டும் தான்”, என்று மங்கை வெளிப்படையாகவே சொல்லி விட்டாள்.
“அண்ணி என்ன உளறுறீங்க? வெண்ணை திரண்டு வரும் போது தாழியை உடைக்கிறீங்க?”, என்று கோபமாக கேட்டாள் வேணி. அவள் கோபத்தை அதிசயமாக பார்த்துக் கொண்டிருந்தார் ரத்தினம். அவர் அறிந்த தங்கை இப்படி இல்லையே என்று அவருக்கு குழப்பமாக இருந்தது.
“இல்லை வேணி, நீயும் இதுக்கு சம்மதிக்காத. ஒரு பொண்ணு வாழ்க்கையைக் கெடுத்த பாவம் நம்ம பிரியாவுக்கு வேண்டாம்”, என்று மங்கை சொல்ல அனைவரும் அவர்களின் வாக்கு வாதத்தைத் தான் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். விஸ்வமோ குழப்பத்தின் உச்சியில் இருந்தார். அவருக்கு தெரிந்து ஆதவன் இப்படி ஒரு முடிவை எடுப்பான் என்று அவரால் நம்ப முடியவில்லை.
“எனக்கு ஒண்ணும் ஆகாது அத்தை. எனக்கு அத்தான் தான் வேணும். பிளீஸ் எனக்கும் அத்தானுக்கும் கல்யாணம் பண்ணி வைங்க”, என்று இடையில் புகுந்து பேசினாள் பிரியா. அவளை விஸ்வம் வெறுப்பாக பார்த்தார் என்றால் ரத்தினமோ அதிர்ந்து போய் பார்த்தார். பிரியா வேண்டாம் என்று தான் சொல்லுவாள் என்று எதிர் பார்த்தார் அவர்.
“முடியாது. என்னால இந்த விசயத்துக்கு சம்மதம் சொல்ல முடியாது. ஒரு பொண்ணா நான் இதுக்கு சம்மதிக்க மாட்டேன்”, என்று மங்கையும் அடித்துப் பேசினாள்.
“அத்தை காரியத்தை கெடுக்காதீங்க. பிளீஸ் இதுக்கு ஒத்துக்கோங்க”, என்று பிரியா மங்கையிடம் கெஞ்ச ஆதவன் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
“முடியாது முடியாது. நான் உயிரோட இருக்குற வரைக்கும் என் மகன் ரெண்டாவது கல்யாணம் பண்ண முடியாது. அப்படி ஒரு வேளை அவன் பண்ணணும்னா பண்ணிக்கட்டும். ஆனா நான் உயிரோட இருந்தா தானே அதை எல்லாம் பாக்கணும். நான் செத்து போறேன்”
“அத்தை பிளீஸ். உங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா என் ஆசை. நான் இத்தனை நாள் பட்ட கஷ்டம் எல்லாம் வீணாகிரும்”, என்று பிரியா சொல்ல “ஆமா அண்ணி, பிளீஸ் கடைசி நேரத்துல நீங்க காரியத்தைக் கெடுக்காதீங்க”, என்றாள் வேணி.
“இல்லை, எனக்கு இப்படி ஒரு வாழ்க்கை வேண்டாம். என் மருமகளுக்கு நான் வாக்கு கொடுத்துருக்கேன் அவளுக்கு அம்மாவா இருப்பேன்னு. ஆனா இப்ப அவ வாழ்க்கை என் மகனால கெடுதுன்னா அவனை பெத்ததுக்கு நான் ரொம்ப வருத்தப் படுறேன். அதனால என்னோட உயிரை மாய்ச்சிக்கிறது தான் சரி”
“அண்ணி சொன்னா கேளுங்க. கொஞ்சம் அமைதியா யோசிங்க. அவ யாரோ. நமக்கு நம்ம பிரியா வாழ்க்கையும் ஆதவன் வாழ்க்கையும் தான் முக்கியம். சின்ன வயசுல இருந்து பிரியா ஆதவனைத் தான் விரும்புறா. அவன் இல்லாம அவ சந்தோஷமா இருக்க மாட்டா அத்தை”, என்று வேணி உளற “ஆ,மா அத்தை அத்தானை தவிர வேற யாரையும் நான் கட்டிக்க மாட்டேன். அத்தான் இல்லைன்னா எனக்கு வாழ்க்கையே இல்லை. அதான் கஷ்டப் பட்டு பிளான் பண்ணி அந்த சிந்துவை இங்க இருந்து விரட்டினேன். இப்ப அத்தான் கூட கல்யாணத்துக்கு சம்மதிச்சதுக்கு அப்புறம் இப்படி நீங்க சொதப்புறீங்களே?”, என்று பிரியாவும் உளறி விட்டாள்.
அடுத்த நொடி அங்கே அனைவருக்கும் அதிர்ச்சியே நிலவியது. மங்கையோ கண்கள் தெறித்து விடும் போல வேணியையும் பிரியாவையும் அதிர்ச்சியாக பார்த்தாள். ரத்தினம் அதிர்ச்சியில் எழுந்து நின்று விட்டார். “சபாஷ், கடைசியில் பூனைக் குட்டி வெளியே வந்து விட்டது”, என்ற படி கைகளைத் தட்டினான் ஆதவன்.
“நான் அன்னைக்கே சொன்னேன்ல? என்னை நம்புனீங்களா?”, என்று கேட்ட செல்வி சக்தியை முறைத்துப் பார்த்தாள். அவனோ வெறுப்புடன் தாயையும் தங்கையையும் பார்த்தான்.
வேணியும் பிரியாவும் தாங்கள் உளறியதை உணர்ந்து யாரையும் நிமிர்ந்து பார்க்க முடியாமல் நின்றார்கள்.
“இந்த உண்மையை உன் வாயால சொல்ல வைக்க தான் இந்த பிளானே பண்னினேன்”, என்றான் ஆதவன்.
“ஆதவா என்னப்பா இதெல்லாம்?”, என்று கேட்டார் ரத்தினம்.
“சொல்றேன் பா. முதல்ல உங்க தங்கச்சி மக செஞ்ச காரியத்தைப் பாருங்க”, என்று சொன்னவன் டிவியைப் போட்டு அதில் போனை கனெக்ட் செய்தான்.
அதில் பிரியாவின் செய்கை பதிந்திருக்க அனைவரும் அவளை குழப்பமாக பார்த்தார்கள்.
“அவ போட்டு பாக்குறது என்னோட சட்டை. அதுவும் இது நேத்து காலைல நடந்தது. அப்ப தான் இவ ஆசையே எனக்கு தெரிஞ்சது”, என்று ஆதவன் சொல்ல அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. “தம்பி சொல்றது உண்மை தான் பா. இதுக்கு அத்தையும் உடந்தை”, என்றாள் செல்வி.
“இவ தான் சிந்து கிட்ட ஏதோ சொல்லி அவளை இங்க இருந்து போக வச்சிருக்கா பா”, என்று தந்தையிடம் சொன்ன ஆதவன் மங்கை புறம் திரும்பி “அம்மா நான் உன் பையன் மா. சிந்து என் கூட வாழ்ந்தாலும் சரி வாழலைன்னாலும் சரி அவ தான், அவ மட்டும் தான் என் பொண்டாட்டி. அது மட்டுமில்லாம அவளை நான் ரொம்ப விரும்புறேன் மா”, என்று சொல்ல மங்கை முகம் மலர்ந்தது. வேணி முகம் இருண்டது.
“என்னண்ணே? எங்களைக் கூப்பிட்டு வச்சு அசிங்க படுத்துறீங்களா?”, என்று கோபமாக கேட்டாள் வேணி.
“இல்லை உங்க வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏத்திருக்கான். பொண்டாட்டி வீட்டை விட்டு போனதும் நொந்து போய் இருந்தவன் என் மகன். அவன் திடீர்னு வந்து கல்யாணம் பண்ணணும்னு சொன்னா நான் நம்பிருவேணா? எனக்கு அவன் மேல நம்பிக்கை இருந்தது. அதான் அவன் சொன்னதை செஞ்சேன். ஆனா இவ இப்படி ஒரு அயோக்கிய தனம் செஞ்சிருப்பான்னு தெரியாது. அதுக்கு நீயும் கூட்டு. ஏய் பிரியா சிந்து கிட்ட என்ன சொன்ன சொல்லு?”, என்று அதட்டினார் ரத்தினம்.
“ஆமா நான் தான் அவளை விரட்டினேன். நானும் அத்தானும் விரும்புறேன்னு சொன்னேன். அத்தானுக்கு அவளை பிடிக்கலைன்னு சொன்னேன்”, என்றாள் பிரியா.
“எதுக்கு டி இப்படி பொய்ச் சொன்ன?”, என்று கேட்டாள் மங்கை.
“எது பொய்? நான் சொல்றது தான் உண்மை. அவ கூட வாழப் பிடிக்காம ஜோசியர்க்கு துட்டு கொடுத்து அத்தான் தான் பேச வச்சாங்க. அதைத் தான் அவ கிட்ட சொன்னேன். இது உண்மை தான். உங்க பையன் கிட்ட கேளுங்க”, பிரியா திமிராக பேச அவளை ஒரு அடி அடித்தாள் மங்கை.
“சீ நீயெல்லாம் ஒரு பொண்ணா? இந்த குடும்பத்தோட நகை முழுக்க மருமகளான சிந்துக்கு தான் போகணும். ஆனா அதுல பாதியை உனக்கு கொடுக்கணும்னு நான் என் புருசன் கிட்ட சொன்னேன். அதுக்கு அவர் அது வேண்டாம். அதே அளவு புதுசா செஞ்சி போடலாம்னு சொன்னார். ஆனா நீ என் குடும்பத்தை இந்த அளவுக்கு கொண்டு வந்துருக்க?”
“நான் பண்ணினது தப்புன்னா உங்க பையன பண்ணினது மட்டும் சரியா? நான் சொன்னது உண்மை தான். வேணும்னா ஜோசியர் கிட்ட கேளுங்க. அப்புறம் அவ கூட சாந்தி முகூர்த்தம் நடக்க கூடாதுன்னு வேணுக்குன்னு கையை உடைச்சிருக்கார்”, என்று சொல்ல அனைவரும் திகைப்புடன் ஆதவனைப் பார்த்தார்கள்.
குற்ற உணர்வுடன் தாய் தந்தையைப் பார்த்தவன் “அது என்னோட பெர்ச்னல் விஷயம். அதுல தலையிட யாருக்கும் உரிமை இல்லை. என் வாழ்க்கையை எப்ப துவங்கணும்னு நான் தான் முடிவு பண்ணனும்”, என்று பிரியாவைப் பார்த்துச் சொன்னான்.