பின் எழுப்பித் தான் ஆக வேண்டும் என்ற நிதர்சனம் புரிய அவன் தோளில் கை வைத்து எழுப்பினாள். சோம்பலுடன் கண் விழித்த ஆதவன் தனக்கு எதிரில் அழகு தேவதை போல நின்ற சிந்துவைக் கண்டதும் அவனது சோர்வு எல்லாம் பறந்து போனது போல இருந்தது. அவளை ரசித்துப் பார்த்தான். அவளது அழகை அவன் கண்கள் மேய்ந்தது.
மெருன் கலரில் வெள்ளை கற்கள் பதித்த சேலையை அணிந்திருந்தாள். கழுத்திலும் காதிலும் இருந்த நகைகள் அவள் உடைக்கு பொருத்தமாக இருந்தது. தலையைப் பின்னாமல் விரித்துப் போட்டிருந்தாள்.
நெற்றியில் சின்னதாக இருந்த கோபி வடிவ பொட்டும் அதற்கு மேலாக பூசியிருந்த சந்தனக் கீற்றும், நெற்றி வகிட்டில் இருந்த குங்குமமும் அவளுக்கு அவ்வளவு பாந்தமாக இருந்தது. இயல்பிலே சிவந்த அவளது இதழ்கள் பனியில் குளித்த ரோஜா இதழ்கள் போல பளபளவென்று இருந்தது.
அவனை எழுப்பியதில் இருந்து அவன் அவளையே பார்த்துக் கொண்டிருக்க அவன் பார்வையில் அவளுக்கு வெட்கம் தான் வந்தது.
“பாத்தது போதும். மாமா, உங்களை எழுப்பச் சொன்னாங்க. சீக்கிரம் எழுந்து வாங்க”, என்று சொல்லி விட்டு அவள் திரும்ப அவள் கையைப் பற்றி சுண்டி இழுத்தான். அவன் அப்படிச் செய்வான் என்று தெரியாமல் அவன் மார்பிலே பூமாலையாக விழுந்தாள்.
“ஐயோ, என்ன பண்ணுறீங்க, விடுங்க”, என்று முனங்கிக் கொண்டே அவள் அவன் கையில் இருந்து விடு பட நினைக்க அவன் கரங்களோ அவளை இழுத்து அணைத்தது.
அவள் தோளில் முகம் புதைத்து அமைதியாக அவள் வாசனையை உள் இழுத்தான். அவள் முகம் அவனுடைய வெற்று மார்பில் பதிந்திருந்தது. அவன் மார்பின் ரோமங்கள் அவள் கன்னத்தை வருடி குறுகுறுப்பை ஊட்டியது.
அவளது அருகாமையையும் அவளது வாசனையையும் உணர்ந்து அவளைக் கட்டிக் கொண்டு படுத்திருந்தான் ஆதவன். அவன் உதடுகள் அவளுடைய காதுக்கு கீழே பதிய சிந்துவின் உடல் நடுங்கியது.
அவள் உடலில் நடுக்கத்தை உணர்ந்தவன் அதைக் குறைக்க எண்ணி அவளை சற்று அழுத்தமாக தன்னுடைய உடலோடு இறுக்க சிந்துவின் உடல் அவன் உடலோடு மேலும் அழுந்தியது.
“எந்திரி டி”, என்று எச்சரிக்கை செய்த மனதை அவள் கண்டு கொள்ளவே இல்லை.
அவள் விலகி விடுவாள் என்று அவன் எதிர்பார்க்க அவள் அப்படியே அவன் செய்கையில் கட்டுண்டு இருக்கவும் அவன் உடல் ஜிவ்வென்று சூடேறியது. அதற்கு மேல் பொறுக்க முடியாமல் அவளை அப்படியே கீழே சரித்து அவள் மேல் படர்ந்தான்.
எதிர்பார்ப்பில் அவள் கண்கள் மூடிக் கொள்ள அவன் அந்த ஈர இதழ்களை நோக்கிக் குனிந்தான்.
இருவரின் உதடுகளும் ஒற்றிக் கொள்ள நினைக்கும் போது “தம்பி, நான் தான் மருமக கிட்ட உன்னை எழுப்பச் சொன்னேன். கொஞ்சம் சீக்கிரம் வாப்பா, அவசரம்”, என்று ரத்தினம் குரல் கேட்டது.
ரத்தினம் அழைத்ததும் அவள் படக்கென்று எழுந்து அமரப் போக அவன் தலையிலே முட்டிக் கொண்டாள்.
“ஏய் ரிலாக்ஸ், அப்பா தானே? நான் பாத்துக்குறேன்”, என்று அவளை சமாதானப் படுத்தியவன் “இதோ வரேன் பா”, என்று சொல்லிக் கொண்டே எழுந்து சென்றான்.
அவன் சென்ற பின்னரும் அவளது இதயத்துடிப்பு எகிறிய வண்ணம் இருந்தது. அவள் உடலில் இருந்த நடுக்கமும் மிச்சம் இருந்தது. அவனைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தாள். கூடவே அவள் மனமும் அவளுக்கு புரிந்தது. அவனை முழுமையாக தன்னுடைய மனமும் ஏற்றுக் கொண்டதை உணர்ந்து கொண்டாள். அவன் இடத்தில் வேறு யாரும் இருந்தால் தான் இந்த அளவுக்கு இயல்பாக இருந்திருப்போமா என்று அவளுக்குள் கேள்வி எழுந்தது. அவனைத் தன்னுடைய வாழ்க்கையில் கொண்டு வந்த தன்னுடைய அண்ணன் அசோக்குக்கு மனதார நன்றி சொன்னாள்.
கீழே சென்ற ஆதவனோ தந்தை சொன்ன விஷயத்தில் திகைத்துப் போய் நின்றான்.
“என்னப்பா சொல்றீங்க?”, என்று அவன் அதிர்ச்சியாக கேட்க “அமைதியா பேசு டா. உங்க அம்மாவுக்கு இன்னும் விஷயம் தெரியாது”, என்றார்.
“என்னப்பா ஆச்சு?”
“நீ சிந்துவைக் கூட்டிட்டு வந்ததை உன் அம்மா செல்வி கிட்ட சொல்லிருக்கா. அதை பிரியா கேட்டுருப்பா போல? உடனே விஷத்தை எடுத்துக் குடிச்சிட்டாளாம் தம்பி. இப்ப தான் சக்தி கால் பண்ணினான். ஆஸ்பத்திரில சேத்துருக்காங்களாம்”
“லூசாப்பா அவ?”, என்று தன்னுடைய தலையிலே அடித்துக் கொண்டான் ஆதவன்.
“மருமகளுக்கு இந்த விஷயம் தெரிய வேண்டாம். ஏற்கனவே இப்ப தான் மனசு மாறி பிள்ளை வந்துருக்கு. இது தெரிஞ்சா என்ன நினைக்குமோ? இந்த பிரியாவும் ஏன் தான் இப்படி பண்ணுறாளோ? எந்த பேய் அவளைப் பிடிச்சு ஆட்டுதுன்னே தெரியலை”
“எல்லாம் உங்க தங்கச்சி கொடுக்குற செல்லம் தான். வேற என்ன?”
“வேணியும் இப்படி இருப்பான்னு நான் நினைக்கவே இல்லை டா. இப்ப என்ன பண்ணுறது?”
“என்ன பண்ண? போய் ஒரெட்டு பாத்துட்டு வரேன். நம்ம சக்திக்காக போய்த் தான் ஆகணும் பா”
“நீ மட்டும் போனா தப்பா போயிரும் டா தம்பி. அதையே உன் அத்தைக்காரி மருமக கிட்ட சொல்லிட்டா வேற வினையே வேண்டாம். அதனால நானும் வரேன். நாலு புத்தி சொல்லிட்டு வருவோம். வேற என்ன செய்ய? நம்ம கைக்குள்ளே வளந்த பொண்ணு. என்ன தான் கோபம் இருந்தாலும் மனசு கேக்க மாட்டிக்கு. இது உன் அம்மாவுக்கும் தெரியக் கூடாது. சரி நீ சட்டையை மாட்டிட்டு கிளம்பி வா. குளிக்க வேண்டாம். ஆஸ்பத்திரி தானே போறோம். வந்து குளிச்சிக்கோ”
“சரிப்பா, இப்ப சிந்து கிட்ட என்ன சொல்லிட்டு வர?”
“உண்மையும் சொல்லாத. பொய்யும் சொல்லாத. வந்து சொல்றேன்னு சொல்லிட்டு வா. நான் உன் அம்மா கிட்டயும் ஏதாவது சொல்லிட்டு வரேன்”, என்று சொன்னதும் அறைக்குள் சென்றான் ஆதவன்.
அங்கே சிந்து இன்னும் கண்களை மூடி கனவில் மிதப்பது போல படுத்து தான் கிடந்தாள். அவள் உதட்டில் உறைந்திருந்த சிரிப்பே அவளது நிலையை அவனுக்கு தெளிவாக எடுத்துச் சொல்லியது.
அவளை அணைக்கச் சொல்லி அவன் கரங்கள் பரபரத்தது. ஆனால் தந்தை காத்திருப்பார் என்ற உண்மை புரிய “சிந்து”, என்று அழைத்தான்.
கண்களைத் திறந்தவள் வெட்கத்துடன் அவனைப் பார்க்க “அப்பா கூட கொஞ்சம் வெளிய போயிட்டு வரேன்”, என்றான்.
“எங்கே?”, என்று கேட்க வில்லை என்றாலும் அவள் கண்கள் அந்த கேள்வியைக் கேட்க அவளுடைய உரிமையான அந்த செய்கை கூட அவனுக்கு பிடித்தது. “ஒரு முக்கியமான விஷயம். என்னன்னு வந்து சொல்றேன், சரியா?”, என்றதும் தலையை ஆட்டினாள்.
ஆனால் குளிக்க கூட செய்யாமல் எங்கே போகிறான் என்ற மிகப் பெரிய கேள்வி அவள் மனதில் உலா வந்தது. ஆதவனும் ரத்தினமும் காரில் ஏறியதும் ரங்கன் காரை எடுத்தான். மூவரும் ஹாஸ்பிட்டல் சென்றதும் வேணி அவர்களைக் கண்டு கதறி அழுதாள். செல்வியும் சக்தியும் எரிச்சலோடு அமர்ந்திருந்தார்கள். முகிலை தன்னுடைய மடியில் படுக்க வைத்திருந்தாள் செல்வி.
வேணியிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் பிரியாவைப் பார்க்க உள்ளே சென்றார்கள். சிறிது நேரம் இருந்து விட்டு வீட்டுக்கு கிளம்பி விட்டார்கள்.
இனிய மயக்கத்தில் இருந்த சிந்துவுக்கு ஒரு போன் வந்தது. யாரென்று தெரியாமல் அதை எடுத்தாள். “ஹலோ நான் பிரியா பேசுறேன். என்ன டி ரொம்ப சந்தோஷமா இருக்க போல?”, என்று கேட்டாள்.
“நீ எதுக்கு என்னைக் கூப்பிடுற?”
“என் வாழ்க்கையைக் கெடுத்த உன் நிம்மதியைக் கெடுக்க வேண்டாமா? அதுக்கு தான் கூப்பிட்டேன்”
“உனக்கு என்ன தான் வேணும்? இப்ப என்ன நடிக்க போற?”
“நடிக்கலை. உண்மையைத் தான் சொல்லப் போறேன். ஆமா அத்தான், அதான் உன் புருஷன் இப்ப எங்க இருக்கார்னு தெரியுமா?”
“அவர் எங்க இருந்தா உனக்கு என்ன?”
“அது எப்படி எனக்கு என்னன்னு கேப்ப? அவங்க இப்ப என்னைப் பாக்க தானே வந்துருக்காங்க?”
“என்ன உளறுற?”
“ஆமா, அத்தான் இப்ப என் கூட தான் இருக்கார்”
“அங்கயா? மாமாவும் கூட தானே எங்கயோ போனாங்க. சும்மா கதை விடாத நீ”
“ஓஹோ அப்படிச் சொல்லிட்டுத் தான் வந்தாரா? அத்தான் மட்டும் தான் என் கூட இருக்காங்க”
“எங்க அவங்க கிட்ட போனைக் கொடு பாப்போம்”
“பாத்ரூம் போய்ருக்காங்க. வந்ததும் பேசச் சொல்றேன். என்னைப் பாக்க வந்த அத்தான் உன்னைத் திட்டி புலம்பிட்டே இருக்காங்க. திருப்பியும் வந்து எங்க உயிரை ஏன் வாங்குற? அத்தானுக்கும் நீ வந்தது பிடிக்கலை. அத்தை மாமாக்காக தான் உன்னைக் கூட்டிட்டு வந்தாங்க. பேசாம போய்ரு. இல்லை அத்தானே உன்னை விரட்டுவாங்க”, என்று சொல்லி போனை வைத்து விட்டாள்.