அதை எல்லாம் நம்பவா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்தாள் சிந்து. ஆனால் முன்பு போல் ஆதவனை முழு மனதாக அவளால் சந்தேகப் பட முடியவில்லை. முன்பு போல் கோபப் பட்டு அவனை விட்டுச் செல்லவும் மனதில்லை. இன்று அவன் நடந்து கொண்ட முறையில் வெளிப்பட்ட காதலை நினைத்துப் பார்த்தாள்.
“இந்த பிரியா வேணுக்குன்னு தான் பொய் சொல்றா. அவங்க வரட்டும். அவளைப் பத்திச் சொல்லி அவளுக்கு ஒரு வழி பண்ணுறேன்”, என்று எண்ணிக் கொண்டிருக்கும் போது அவளை அழைத்தான் ரங்கன்.
அதை எடுத்து “சொல்லுங்கண்ணா”, என்றாள்.
“உனக்கு ஒரு வீடியோ அனுப்பிருக்கேன் தங்கச்சி. அந்த பிசாசுங்க என்ன வேணும்னாலும் செய்யும். அதான் சேஃப்டிக்காக எடுத்து வச்சேன். அதைப் பாரு”
“பிரியா விஷம் குடிச்சிட்டான்னு ஆஸ்பத்திரிக்கு பாக்க வந்தோம் மா. இப்ப அவளுக்கு ஒண்ணும் இல்லை. நல்லா தான் இருக்கா”
“யாரெல்லாம் போனீங்கண்ணா?”
“நான், அண்ணே, ஐயா மூணு பேரும் போனோம் மா. சரி நாங்க வீட்டுக்கு தான் வரோம். நான் சொன்னதை நீ அண்ணன் கிட்ட சொல்லிறாத”, என்று சொல்லி அவன் போனை வைத்ததும் அந்த வீடியோவைக் குழப்பத்துடன் பார்த்தாள்.
ஹாஸ்பிட்டலில் படுத்திருந்தாள் பிரியா. அப்போது ரத்தினம் மற்றும் ஆதவன் இருவரும் அந்த அறைக்குள் நுழைவது பட்டது. வேணியும் அங்கே நின்றாள்.
ரத்தினம் பிரியாவையும் வேணியையும் திட்டு திட்டு என்று திட்ட ஆதவனோ “சில ஜென்மங்களுக்கு நீங்க சொல்றது எல்லாம் புரியாதுப்பா. உங்க எனர்ஜியை வேஸ்ட் பண்ணாதீங்க. இனி யார் செத்தா நமக்கு என்ன? இருந்தா நமக்கு என்ன? நாளைக்கு ஊருக்குள்ள ஒரு பேச்சு வந்துறக் கூடாதுன்னு தான் பாக்க வந்தோம். பாத்தாச்சு தானே? வாங்க போகலாம்”, என்று சொல்லி அவரை அழைத்துச் செல்ல இத்துடன் வீடியோ முடிவடைந்தது.
அதைக் கண்டு நிம்மதியடைந்தாள் சிந்து. கூடவே பொய் சொன்ன பிரியா மேல் கோபமும் வந்தது. அதே நேரம் அவளை நினைத்து கவலையாகவும் இருந்தது.
பார்த்து சிறிது நாட்களே ஆன தனக்கே ஆதவனை விட்டுப் பிரிய முடியவில்லை என்னும் போது சிறு வயதில் இருந்து ஆதவன் மீது ஆசைப் பட்ட அவளுக்கு எப்படி இருக்கும் என்று அவளுக்காக யோசித்தாள் சிந்து. ஆனால் அவளால் அனுதாபப் பட மட்டும் தான் முடியும். கணவனை விட்டா கொடுக்க முடியும்? அவன் இல்லாமல் அவள் பட்ட அவஸ்தைகள் கொஞ்சமா நஞ்சமா?
வீட்டுக்கு அவர்கள் வந்ததும் மகள் மூலம் விஷயம் தெரிந்த மங்கை கணவனுக்கும் மகனுக்கும் கூட்டிச் சென்ற ரங்கனுக்கும் நன்றாக திட்டு மழை பொழிந்தாள். அதில் கழண்டு கொண்டு ஆதவன் அறைக்குள் வந்ததும் சிந்து அவனைத் தான் பார்த்தாள்.
“சிந்து, நான் எங்க போனேன்னா….?”, என்று ஆரம்பித்தான்.
“நீங்க ஒண்ணும் சொல்ல வேண்டாம். எனக்கு எல்லாம் தெரியும். போய்க் குளிச்சிட்டு வாங்க”
“தெரியுமா? யார் சொன்னா? ரங்கனா?”
“அண்ணன் சொல்றதுக்கு முன்னாடியே வேற ஒரு ஆள் தகவல் கொடுத்துருச்சு. நீங்க குளிச்சிட்டு வாங்க, சொல்றேன்”, என்றதும் குழப்பத்துடன் குளிக்கச் சென்றான்.
குளித்து முடித்து துண்டைக் கட்டிய படி ஈரத் தலையுடன் வந்தவனின் கோலத்தைக் கண்டு அவள் முறைக்க “நீ மட்டும் இப்படி வரலாம். நான் வரக் கூடாதா?”, என்று சிணுங்களுடன் கேட்டவன் அவளை பின் பக்கம் இருந்து அவளை அணைத்துக் கொண்டான்.
அவன் உடலில் ஒட்டியிருந்த ஈரம் அவள் மேல் பட்டதும் அவளுக்கு குளிர்ந்தது. “ஐயோ, ஈரத் தலையோட இருக்கீங்களேன்னு தான் முறைச்சேன்”, என்று சொல்லி அவன் கைகளில் இருந்து விலகியவள் அவனுக்கு தலையை துவட்டி விட்டாள்.
மீண்டும் அவளை தன்னுடைய கையணைப்பில் கொண்டு வந்தவன் “இப்ப சொல்லு”, என்றான்.
“முதல்ல நீங்க என்னை மன்னிக்கணும்”
“நீ என்ன டி தப்பு பண்ணின?”
“அன்னைக்கு கோச்சிக்கிட்டு போனதுக்கு?”
“ரொம்ப சீக்கிரமா மன்னிப்பு கேட்டுட்ட? சரி விடு. அதைப் பத்தி பேச வேண்டாம் சிந்து”
“இல்லை, இன்னைக்கு ஒரு நாள் பேசியே ஆகணும்”
“அதைப் பத்தி பேசி ஒண்ணும் ஆகப் போறது இல்லை சிந்து. என் மேல தான் எல்லாத் தப்பும். நான் உன் கிட்ட மனசு விட்டு பேசிருக்கணும். உன் மேல இருக்குற ஒரே தப்பு என்னன்னா? என் சட்டையைப் பிடிச்சு நீ கேள்வி கேக்காம போனது தான். நீ என்னை விட்டுட்டு போயிருந்துருக்க கூடாது”
“சரி இப்ப கேக்குறேன்”, என்று சொல்லி அவன் கழுத்தில் கை வைத்தவள் “என் கிட்ட சொல்லாம எதுக்கு ஆஸ்பத்திரி போனீங்க?”, என்று கேட்டாள்.
அவளை இடையோடு வளைத்து அணைத்தவன் “இந்த மிரட்டல் சூப்பரா இருக்கு டி”, என்றான்.
“பேச்சை மாத்தாதீங்க, பதில் சொல்லுங்க”
“தப்பு தான். திருப்பியும் நீ கோச்சிக்கிட்டு போய்ருவியோன்னு பயம். அப்பா தான் போயிட்டு வந்து புரிய வச்சிக்கலாம்னு சொன்னாங்க. கடைசியா என்னை மன்னிச்சிரு டி. நான் பாவம் தானே? உனக்காக கையை எல்லாம் உடைச்சிக்கிட்டேன்ல”, என்று அவன் பாவமாக கேட்க அவளுக்கு சிரிப்பு வந்தது.
“ஒரு முத்தம் கொடுத்தா வேணும்னா மன்னிக்கிறேன்”, என்று சிரிப்புடன் கேட்டாள்.
“முதல் தடவை உனக்கு முத்தம் கொடுக்க அவ்வளவு பயந்தேன் டி. நான் எவ்வளவு லூசா இருந்துருக்கேன் பாரு”, என்று அவன் புலம்ப “நீங்க லூசுன்னு தான் எனக்கு தெரியுமே?”, என்று சிரித்தாள் சிந்து. அப்படிச் சொன்ன அவளுடைய இதழ்களைச் சிறை செய்தான்.
சிறிது நேரம் கழித்து அவளிடம் நடந்ததை விசாரித்தான். அவள் பிரியா பேசியதைப் பற்றிச் சொன்னதும் அவனுக்கு கோபமாக வந்தது. ரங்கன் வீடியோ எடுத்து அனுப்பியதையும் பாராட்டினான். அவன் பிரியா மேல் கோபப் பட சிந்து அவனை சமாதானப் படுத்தினாள்.
அந்த சமாதானம் அடுத்த முத்த யுத்தத்தை ஆரம்பித்து வைத்தது. “சரி சரி போதும், இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு வச்சிக்கலாம்”, என்று சொல்லி எழுந்து கொண்டவன் அவள் கண் முன்னே உடை மாற்றினான். அவன் செய்கையில் அவள் செல்லமாக கடிந்து கொள்ள அவளை மீண்டும் சீண்டினான். அவளது நெற்றி வகிட்டில் இருந்த குங்குமம் அவன் சட்டையில் ஒட்டிக் கொள்ள அதை இருவருமே கவனிக்க வில்லை.
மங்கை இரவு உணவை உண்ண அழைக்க இருவரும் சென்றார்கள். “இது என்ன டா, சட்டைல கரையா இருக்கு?”, என்று கேட்டாள் மங்கை. அனைவரும் அவனைப் பார்க்க சிந்துவின் முகத்தில் இருந்த குங்குமம் அவன் சட்டையில் தீட்டி இருந்தது.
“அச்சோ?”, என்ற படி அவள் நாணத்தில் தலை குனிய ஆதவன் உல்லாசமாக சிரித்தான். கூடவே அந்த இடத்தை விரலால் ஆசையாக வருடியும் விட பெரியவர்களுக்கும் விஷயம் புரிந்து போனது. சிறியவர்களின் வாழ்க்கையைப் பற்றிய கவலையும் அவர்களை விட்டுச் சென்றிருந்தது. ரங்கன் கூட ஆதவனைக் கண்டு கண்ணடித்துச் சிரித்தான்.
“மங்கை சாப்பாடு வை”, என்று சொல்லி நிலைமையை சமாளித்தார் ரத்தினம்.
சாப்பிட்டுக் கொண்டே அங்கே பிரியா பற்றிய பேச்சு பேசப் பட பிரியா சிந்துவுக்கு போன் செய்து பேசியதை பற்றி சொன்னான் ஆதவன்.
உடனே தன்னுடைய போனை எடுத்த ரத்தினம் சக்திக்கு தான் அழைத்தார். “மருமகனே உங்க தங்கச்சின்னு நீங்க பாக்கலாம். ஆனா நான் பாக்க மாட்டேன். பொறுமைக்கும் ஒரு அளவு இருக்கு”, என்றார்.
“என்ன ஆச்சு மாமா?”, என்று அவன் குழம்ப அனைத்தையும் சொன்னவர் “இனி நீங்களும் செல்வியும் மட்டும் தான் எங்களுக்கு சொந்தம். இதை இதோட நிறுத்திக்க சொல்லுங்க”, என்று சொல்லி விட்டு போனை வைத்து விட்டார்.
அவருடைய கோபத்தில் மிரண்ட சக்தி அந்த கோபத்தை அன்னை மற்றும் தங்கையிடம் இறக்கி வைத்தான். “இன்னொரு தடவை ஆதவன் விசயத்துல தலையிட்டீங்கன்னா அம்மாவும் இல்லை, தங்கச்சியும் இல்லைன்னு சொல்லிட்டு தலை முழுகிட்டு போய்கிட்டே இருப்பேன். பாவம்னு பொறுத்து போனா அளவுக்கு மீறி போறீங்க? இது தான் கடைசி. தேவையில்லாம ஏதாவது பண்ணுனீங்க என் பொண்டாட்டி கூட சேந்து மாமனார் வீட்ல செட்டில் ஆகிருவேன். அப்பாவும் போய்ட்டார், நானும் போயிட்டா உங்க நிலைமை என்ன ஆகும்னு யோசிச்சு பாருங்க”, என்று ஒரே போடாக போட்டு விட்டான். இருவரும் அதிர்ந்து போனார்கள்.