அடுத்த நாளில் இருந்து ஆதவனும் ரங்கனும் வேலையில் பிசியாகி விட்டார்கள். அவன் சில பல யுக்திகளை தொழிலில் கொண்டு வர அவன் அறிவில் ரத்தினம் வியந்து போனார். மகனை மனதார பாராட்டவும் செய்தார். அவனுக்கு சில பல குறிப்புகளும் கொடுத்தார். தந்தை சொன்னதை அப்படியே ஏற்றுக் கொண்டான். அவரது அனுபவம் முக்கியமல்லவா? வெளியே ரங்கன் ஆதவனுக்கு பக்கபலமாக இருந்தான் என்றால் வீட்டில் சிந்து அவன் நேரத்தை எடுத்துக் கொண்டாள்.
அன்று காலையில் வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்தான் ஆதவன். அவன் சட்டையில் இருந்த மேல் பட்டனைத் திருகிய படி அவனைக் கொஞ்சிக் கொண்டிருந்தாள் சிந்து.
அவள் சிணுங்கல் புரிய “இன்னைக்கு சீக்கிரம் வந்துறேன் டா”, என்றான்.
“நிஜமா?”, என்று அவள் ஏக்கத்துடன் கேட்க அவனுக்கு அவள் மனது புரிந்தது. அதிக வேலை இருப்பதால் அவனால் சரியாக அவளுடன் நேரம் செலவழிக்க முடியவில்லை. அந்த மனத்தாங்கல் சிந்துவுக்கு உண்டு என்று அவனுக்கு தெரியும்.
“நாள் முழுக்க உன் கூட இருக்க ஆசை தான் டி. ஆனா எங்க அப்பன் எங்க விடுறார்? சும்மாவே ஸ்ட்ரிக்ட் ஆபிசர். இப்ப எல்லாத்தையும் என் தலைல கட்டிட்டு அவர் அவரோட பொண்டாட்டி கூட சேந்து டூயட் பாடுறார். முன்னாடி எல்லாம் நம்ம கிட்ட தொழிலைக் கொடுத்தால் அப்படி செஞ்சிறலாம், இப்படி செஞ்சிறலாம்னு ஆசையா இருக்கும். ஆனா மனுஷன் அப்ப அசரவே இல்லை. ஆனா இப்ப இன்னும் கொஞ்ச நாள் அவரே பாத்துருந்துருக்கலாம்னு தோணுது. இப்ப யார் இவர் கிட்ட எல்லாத்தையும் என் கிட்ட ஒப்படைக்கச் சொன்னா? அப்பவும் அப்படி தான் பண்ணினார். இப்பவும் மனுஷன் ஆசை புரியாம படுத்துறார்”, என்று சொன்னவனின் உதடுகள் அவள் காது மடலை உரச உள்ளுக்குள் சிலிர்த்தது சிந்துவுக்கு.
அவன் கைக்குள் கரைந்தவள் “மாமா என்ன செஞ்சாலும் அதுல ஒரு அர்த்தம் இருக்கும்”, என்றாள்.
“அர்த்தமா? போடி, உன்னை நினைச்சு நான் பைத்தியமா திரியுறது அவருக்கு எப்படி தெரியும்? வேலைல கூட கவனம் செலுத்த முடியலை டி”, என்று அவன் ஏக்கமாக சொல்ல அவளுக்கு உருகிப் போயிற்று. தான் நினைத்தது போலவே அவனும் நினைத்திருக்கிறான் என்று அவளுக்கு புரிந்தது. அது அவளுக்கு சந்தோசத்தையே கொடுத்தது.
அவனை சீண்ட எண்ணி சிறு சிரிப்புடன் “அப்படியா?”, என்று கேட்டாள்.
“இல்லையா பின்ன? அங்க ஆபீஸ் போய் என் சீட்ல உக்காந்தா உன் நினைவு தான் வரும் தெரியுமா? குடவுன் போனாலும் உன் நினைவு தான் வரும். பேக்ட்டரி போனாலும் உன் நினைவு தான் வரும். அப்படியே உன் கிட்ட மயங்கி கிடக்கேன் டி நான்”, என்று வெளிப்படையாகவே சொன்னான்.
“பொய், நான் தான் உங்க கிட்ட மயங்கி கிடக்குறேன்னு அஞ்சலி சொல்றா. அவ ஏதாவது கால் பண்ணினா கூட நான் சரியா பேச மாட்டிக்கிறேன், அதுவும் உங்க நினைப்புல பேச மாட்டிக்கிறேன்னு சொல்றா”
“அதுவும் உண்மை தான். என் தங்கச்சி சொன்னா அது சரியா தான் இருக்கும். நீ என் மேல வச்சிருக்குற அன்பு ரொம்ப பெருசு டி. அதை நினைச்சு எனக்கு எவ்வளவு கர்வமா இருக்கு தெரியுமா? இப்படி அன்பு காட்டுற பொண்டாட்டி யாருக்கு கிடைக்கும்?”, என்று அவன் சொல்ல அவள் அவனை இறுக கட்டிக் கொண்டாள்.
இருவரும் அந்த அணைப்பில் தங்களை மறந்து நிற்க “டேய் நான் எல்லாம் சரியா ஏழு மணிக்கு கம்பேனில போய் நிப்பேன். இப்ப மணி ஒன்பதாகுது, ஆனா இன்னும் கிளம்பக் காணும்”, என்று ரத்தினம் குரல் கொடுக்க “ஐயோ நம்ம வீட்டு பெரிய அலாரம் அடிச்சிருச்சு. சாயங்காலம் சீக்கிரம் வரேன் டி பட்டு. பாய்”, என்றவன் தன்னுடைய போனை எடுத்துக் கொண்டு கிளம்பினான். சிறு சிரிப்புடன் அவளும் அவன் பின்னே சென்றாள்.
இருவரும் புன்னகை முகத்துடன் கீழே வர பெற்றவர்களுக்கு சந்தோஷமாக இருந்தது. ஆதவன் தந்தையை காண முடியாமல் சங்கடமாக வர “மங்கை, ரெண்டு பேருக்கும் சாப்பாடு வை”, என்றார் ரத்தினம்.
தந்தை இருப்பதால் அமைதியாக சாப்பிட்டான் ஆதவன். சிந்துவை ஏக்கமாக பார்த்துக் கொண்டே அவன் கிளம்பிச் செல்ல சிந்து. மங்கை. ரத்தினம் மூவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
“ஏங்க, கொஞ்ச நாள் நீங்களே தொழிலை பாத்துருந்துருக்க கூடாதா? கொஞ்ச நாள் அவன் சந்தோஷமா இருக்கட்டுமே? இப்பவே அவன் தலையில பொறுப்பை சுமத்தணுமா?”, என்று கேட்டாள் மங்கை.
“பையன் பிஸ்னஸ் செய்ய ஆசைப் படுறானேன்னு அவசரப் பட்டு கொடுத்துட்டேன் டி. அப்புறம் தானே தெரியுது, என் புள்ளை என்னை மாதிரியே பொண்டாட்டியை பிரிய முடியாம தவிக்கிறது”, என்று அவர் சிரிப்புடன் சொல்ல மங்கை மற்றும் சிந்து இருவரின் முகமும் சிவந்து போனது.
“கிழவனுக்கு ஆசையைப் பாரு”, என்று முணுமுணுத்தாள் மங்கை. சிந்து வெட்கப் பட்டுக் கொண்டே அறைக்குள் ஓடி விட்டாள்.
அலுவலகம் சென்ற ஆதவன் மனைவி நினைப்பை ஒதுக்கி விட்டு வேலையில் கவனம் செலுத்த முயன்றான். வெகு நேரம் கழித்து அதில் வெற்றியும் கண்டான். பொதுவாகவே ரங்கன் அவனுக்கு அதிக வேலைகள் வைக்க மாட்டான். முக்கியமான முடிவுகள் எடுப்பது, சைன் பண்ணுவது, மேற்பார்வை இடுவது, என்ன என்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று சொல்வது மட்டுமே ஆதவன் வேலையாக இருக்கும். ஆனால் ரங்கன் எல்லாவற்றிலும் இறங்கி வேலை செய்வான். இருவரும் சேர்ந்து உழைத்ததால் தொழில் ஏறுமுகமாகவே இருந்தது.
ஒரு முக்கியமான பைலைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது ஆதவன் மொபைல் ஒலித்தது. அதை எடுத்துப் பார்த்தான். அதில் ‘வைகுந்த்’ என்று பெயர் மின்ன ஆதவன் முகம் மலர்ந்தது.
சிறு சிரிப்புடன் அதை எடுத்து காதில் வைத்து “ஹாய் மச்சான், என்ன டா சென்னை நம்பர்ல இருந்து கால் பண்ணுற? சென்னைக்கு வந்துட்டியா? எப்ப வந்த?”, என்று கேட்டான்.
“இன்னைக்கு தான் டா வந்தேன். வந்ததும் உனக்கு அடிச்சிட்டேன். அப்பா அம்மா எப்படி இருக்காங்க? ரங்கன், சிந்து எல்லாம் நல்லா இருக்காங்களா?”
“என்னைக் கேக்காம மத்த எல்லாரையும் கேக்குற?”, என்று நண்பனை வம்பிழுத்தான் ஆதவன்.
“அவங்க நல்லா இருந்தா நீயும் நல்லா இருப்பியே?”
“சரி தான், இன்னும் இந்த வாய் மட்டும் உன் கிட்ட இருந்து குறையலை”
“அது நம்ம கேங்க் எல்லாருக்கும் கிடைச்ச வரம் டா”
“மேய்க்கிறது எருமை, இதுல பெருமையா டா? சரி அசோக் கிட்ட பேசுனியா?”
“இல்லை டா, போன் ஆன் பண்ணி உனக்கு தான் முதல்ல பேசுறேன். நீ தானே என் உயிர் நண்பன்? அவனுக்கு இனி தான் பண்ணனும்”
“நம்பிட்டேன், மச்சான் நம்பிட்டேன். நீ என்ன வெங்காயத்துக்கு எனக்கு முதல்ல கால் பண்ணிருப்பன்னு தெரியாதா?”
“ஹி ஹி கண்டு பிடிச்சிட்டியா?”
“உன்னை நான் அறிவேன் மச்சான். சரி அடுத்து என்ன பண்ணப் போற?”
“என்ன பண்ண? பத்து நாள் லீவ் எடுத்துட்டு சென்னை ஆஃபிஸ்ல ஜாயின் பண்ணனும். அம்மா இனி பாரின்க்கு விட மாட்டேன்னு சொல்லிட்டாங்க”
“சூப்பர் டா, வாழ வேண்டிய வயசுல எதுக்கு பாரின் எல்லாம்?”
“நானும் வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன் டா”
“சரி கல்யாணம் பத்தி என்ன முடிவு பண்ணிருக்க?”
“வீட்டுக்கு வந்த உடனே கல்யாணம் பத்தி அம்மாவும் அப்பாவும் பேச ஆரம்பிச்சிட்டாங்க டா ஆதவா. அதான் உனக்கு கால் பண்னினேன்”
“அப்படி வா வழிக்கு. சரி இப்ப என்ன பண்ணப் போற?”
“நீ தான் சொல்லணும் ஆதவா. அம்மா அப்பா கிட்ட கொஞ்சம் பொறுங்கன்னு சொல்லிருக்கேன். நீ வைதேகி வீட்ல பேசுனியா? குறிப்பா வைதேகி கிட்ட? அவங்க வீட்ல சொல்றதை வச்சு தான் நான் எங்க வீட்ல பேச முடியும்?”
“இங்க எல்லாம் ஓகே தான் டா. நீ வந்துட்டல்ல? ரெண்டு நாள்ல நான் எல்லாம் பேசிட்டு உனக்கு தகவல் சொல்றேன். அப்புறம் நீ அம்மா அப்பாவை அழைச்சிட்டு வா”
“சரி டா, அப்புறம் ஆதவா வைதேகிக்கு என்னைப் பிடிக்குமா?”, என்று உண்மையிலே தவிப்பாக தான் கேட்டான்.
“உனக்கு என்ன டா, ராஜகுமாரன் மாதிரி இருக்க? உன்னைப் பிடிக்காம இருக்குமா? கவலைப்படாதே, உன் கல்யாணம் என் பொறுப்பு. வைதேகி எனக்கு தங்கச்சி மாதிரி தான். அவளுக்கு உன்னை மாதிரி மாப்பிள்ளை கிடைச்சா அவ சந்தோஷமா இருப்பா”
“சரி டா, நீ அவங்க வீட்ல பேசிட்டு சொல்லு. நான் நைட் பேசுறேன்”, என்று சொல்லி போனை வைத்தான் வைகுந்த்.