“என்ன பிரியா இது? ஏற்கனவே உங்க அப்பா நம்மளை விட்டுட்டு போயிட்டார்னு நான் கவலைல இருக்கேன். இதுல நீ வேற ஏன் இப்படி பண்ணுற? ஆதவன் இறந்த காலம் மா. உனக்கு அம்மா வேற நல்ல பையனா பாத்து கல்யாணம் செஞ்சு வைக்கிறேன். இனி ஆதவன் விசயத்துல நீ தலையிட்டா என்னை உயிரோட பாக்க முடியாது. உங்க அப்பா என்னை வெறுத்தப்பவே நான் பாதி செத்துட்டேன். மீதி இருக்குற உயிரை நீ வாங்கிறாத”, என்று சொன்னாள் வேணி.
அண்ணனும் அன்னையும் பேசியது பிரியாவை அதிகம் பாதித்தது. ஆதவன் கிடைக்க வில்லை என்ற விரக்தியில் ஏங்கி ஏங்கி அழுதாள் பிரியா. அவளை வெகு நேரம் அழ விட்டு வேடிக்கை பார்த்த வேணிக்கு அவளது மனதின் கசடு எல்லாம் கண்ணீராக வெளியேறுவதாகவே பட்டது.
அன்றைய இரவில் ஆதவன் ரத்தினம் மற்றும் மங்கையிடம் பேசிக் கொண்டிருக்க அறைக்குச் சென்ற சிந்து உடனே தூங்கி விட்டாள். வெகு நேரம் கழித்து அறைக்குச் சென்றவன் அவள் தூங்கியதைக் கண்டு அதிர்ந்து போனான். ஆனாலும் அவளை எழுப்ப மனதில்லாமல் அவள் அருகே படுத்திருந்தான். அவனுக்கு சரியாக தூக்கம் வர வில்லை.
அவள் வேண்டும் என்று அவனது உடலும் மனமும் கெஞ்சியது. இங்கேயே இருந்தால் தன்னை மீறி அவளை நெருங்கி விடுவோம் என்று புரிய எழுந்து மொட்டை மாடிக்கு சென்று விட்டான்.
பாதி ராத்திரியில் விழிப்பு வந்தது சிந்துவுக்கு. அருகில் ஆதவன் இல்லை என்றதும் குழம்பிப் போனவள் அவனைத் தேட எழுந்தாள். மொட்டை மாடிக்குச் செல்லும் கதவு திறந்திருக்க அங்கே சென்றாள்.
அங்கே கிடந்த மர ஊஞ்சலில் வானத்தைப் பார்த்த படி அமர்ந்திருந்தான். நிலவின் வெளிச்சம் இல்லாமல் போனாலும் நட்ச்சத்திர வெளிச்சம் லேசாக அந்த இடத்தை நிறைத்திருந்தது.
“நீங்க என்ன தூங்காம இங்க உக்காந்துருக்கீங்க?”, என்ற சிந்துவின் குரலில் திரும்பிப் பார்த்த ஆதவன் “தூக்கம் வரலை, நீ போய் தூங்கு போ”, என்றான். அவன் கண்கள் ஆசையுடன் அவளைக் காண அந்த ஆசையைக் கண்டவளுக்கு அங்கிருந்து செல்ல மனதில்லை. அவனது செல்ல கோபமும் அவளுக்கு புரிந்தது.
“உங்களை யாரு லேட்டா வரச் சொன்னது?”, என்று கேட்ட படி அவன் அருகே சென்று அமர்ந்தாள். அவன் அவளை வியப்பாக பார்க்க அவளோ இன்னும் அவனை நெருங்கி அமர்ந்தாள். உணர்வுகளையே அவளுக்கு வெளிக்காட்ட தெரியாது என்று அனைவரும் பயப்பட அவளோ அவனது உணர்வுகளையும் அவன் சொல்லாமலே புரிந்து கொள்கிறாள்.
அவன் கரம் அவளைப் பற்ற அவனது இடது தோளில் சாய்ந்து கொண்டாள். அவள் கையைப் பற்றியவன் அவளது உச்சந்தலையில் இதழ் பதித்தான்.
வெகு அருகில் அவன் கண்களைச் சந்தித்தாள் சிந்து. அந்த இருளும் தென்றலும் நிறைந்த ஏகாந்த பொழுது இருவர் மனதிலும் காதலை நிறைத்தது. வெகு நாட்கள் கழித்து அவனுக்கு அவளுடன் கிடைத்த தனிமை, அவளது அருகாமை இரண்டும் சேர்ந்து அவன் உடலை சற்று சூடேற்றியது.
இடது கையால் அவளது இடையை வளைத்து தன்னருகே இழுத்தான். சிறு சிரிப்புடன் அவள் அவனைப் பார்க்க அவன் இதழ்கள் அவளது நெற்றியில் பதிந்தது. கண்களை மூடி அந்த முத்தததை ரசித்தாள். நெற்றியில் பதிந்த இதழ்கள் அவளது கன்னம் காது, மூக்கு, தாடை என்று பயணித்தது.
கடைசியாக அவளுடைய துடிக்கும் இதழ்களை அவன் சிறை செய்த போது அவள் கரங்கள் உயர்ந்து அவன் கழுத்தை வளைத்துக் கொண்டது. மெய் மறந்து அவன் இதழ் முத்தத்தை அனுபவித்தாள். அவனாக விடும் வரை அவள் அவனிடம் இருந்து விலக எண்ணவே இல்லை.
அவள் ஒத்துழைப்பில் அவன் மீண்டும் மீண்டும் நெருங்க அவளது கைகள் அவன் சட்டைக் காலரை அழுத்தமாக பற்றியது.
தன்னுடைய தோளில் சாய்ந்திருந்தவளை விலக்கி நேராக சேர்த்து அணைத்தவன் மீண்டும் அவள் இதழ்களை சிறை செய்தான். அவன் இதழ்கள் செய்யும் மாயாஜாலத்தால் உண்டான வெம்மையை வீசிக் கொண்டிருந்த தென்றலாலும் குளிர்விக்க முடியவில்லை.
முதலில் மென்மையாக ஆரம்பித்த இதழ் தீண்டலும் அவனது கை அணைப்பும் கொஞ்சம் கொஞ்சமாக வேகமெடுத்தது. அவளுடைய இடையில் பதிந்திருந்த அவன் கரங்கள் அவள் உடலில் சற்று அழுத்தமாக பயணிக்க “ரூமுக்கு போகலாமா?”, என்று அவன் காதில் முணுமுணுத்தாள்.
அதுவே அவளது சம்மதத்தை அவனுக்கு பறைசாற்றியது. “போகணும்”, என்றவன் அவள் கழுத்து வளைவில் வாசம் பிடித்தான். அவன் கரம் அவன் வேலையை சரியாக செய்தது.
அவனது மீசையின் குறுகுறுப்பும், தாடை ரோமங்களின் உரசலும் அவளுக்கு சற்று எரிச்சலைக் கொடுத்தது. அவன் தொடுகையில் கரைந்தவள் “பிளீஸ் ரூமுக்கு போகலாம்”, என்று முனங்கினாள்.
உடனே அவள் பேச்சைக் கேட்டு எழுந்து கொண்டவன் அவளை தன்னுடைய கரங்களில் ஏந்திக் கொண்டான். அவனுடைய கண்களைப் பார்த்த படிய அவனது கழுத்தைச் சுற்றி தன்னுடைய கரங்களை போட்டுக் கொண்டாள் சிந்து.
அவளை கரங்களில் அள்ளிக் கொண்ட படியே படிகளில் இறங்கி அறைக்குள் வந்து அவளை கட்டிலில் விட்டவன் கதவைப் பூட்டி விட்டு அவள் அருகே சரிந்தான்.
அவன் கரங்கள் அவளை அணைத்துக் கொள்ள சந்தோஷமாக அவன் மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள். மீண்டும் முத்த ஊர்வலத்தை துவங்கியவன் தன்னுடைய தடைகளை களைய முயன்றான். அவளது மென்மையான மறுப்பு அங்கே எடுபடவே இல்லை.
அவன் கொஞ்சம் கொஞ்சமாக அவளுக்குள் மூழ்கிக் கொண்டிருக்க அவளோ இந்த உலகத்திலே இல்லை. அவன் தேடலில் தன்னுடைய தயக்கத்தை உதறி அவனுடன் ஒன்றினாள்.
சிறிது நேரம் கழித்து அவளிடம் இருந்து விலகியவன் கண்டது அவள் கண்களில் தேங்கி இருந்த அவளது கண்ணீரைத் தான். அவளைக் கஷ்டப் படுத்தி விட்டோம் என்று புரிய “சாரி”, என்று அவள் காதுக்குள் முனங்கினான். அவளோ வெட்கத்துடன் அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்.
ஏதோ வாழ்க்கை முழுமை அடைந்தது போல நிறைவு இருவருக்கும் வந்திருந்தது. “பிடிச்சிருந்ததா?”, என்று அவன் காதுக்குள் முனங்க அவள் புன்னகையுடன் அவனைப் பார்க்க அந்த புன்னகை கூட அவனுக்கு அழைப்பாகவே இருந்தது. மீண்டும் அவன் அவளை நெருங்க அவளும் சந்தோஷமாக அவனை அணைத்துக் கொண்டாள்.
இந்த விஷயம் எல்லாம் எப்படித் தெரியும் என்று கேட்டு அவளை நச்சரித்தான் ஆதவன். அவள் நாளைக்கு சொல்வதாக சொல்ல அதன் பின் அங்கே பேச்சுக்கே இடம் இல்லாமல் சென்றது.
அடுத்த நாள் இருவருக்கும் மிக அழகாக விடிந்தது. இருவரும் கெஞ்சி கொஞ்சி காலை உணவை உண்ண வரும் போது மணி பத்து ஆகி இருந்தது. பின் ரங்கனுடன் அவன் வெளியே சென்று விட சிந்து மங்கையுடன் நேரத்தைச் செலவிட்டாள்.
அப்போது அவளது போனுக்கு “எப்படித் தெரியும்னு சொல்லு டி”, என்று குறுஞ்செய்தி அனுப்பி வைத்தான் ஆதவன்.
“இப்படி தான் தெரியும். என் ஃபிரண்ட் தான் சொல்லிக் கொடுத்தா. போதுமா?”, என்று பதில் அனுப்பியவள் அந்த வீடியோவையும் சேர்த்து அவனுக்கு அனுப்பி வைத்தாள்.
அதைப் பார்த்து அதிர்ந்து போனவனுக்கு அதை அனுப்பியது அஞ்சலி தான் என்று புரிந்தது. சிந்துவுக்கு வாழ்க்கையை புரிய வைக்க அஞ்சலி எந்த அளவுக்கு கஷ்டப் பட்டிருப்பாள் என்று அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. தன் வாழ்க்கையை சரி செய்த அஞ்சலி மேல் ஏற்கனவே இருந்த பாசம் இன்னும் அதிகமானது அவனுக்கு.
வீடியோ பார்த்ததில் இருந்து அவனுக்கு இருப்பே கொள்ள வில்லை.
“நான் வீட்டுக்கு கிளம்பி வரட்டா?”, என்று அவளுக்கு மெஸ்ஸேஜ் அனுப்பி வைத்தான் ஆதவன்.
“இப்ப எதுக்கு?”
“எனக்கு இங்க வேலையே ஓடலை. வீட்டுக்கே வந்துறலாம்னு இருக்கு. ஏற்கனவே உன் நினைப்புன்னா இப்ப வீடியோ வேற”, என்று அனுப்ப அவனுக்கு போன் போட்டு பேசினாள் சிந்து.
அதற்கு அடுத்த நாளே அவளை அழைத்துக் கொண்டு ஹனிமூன் கிளம்பி விட்டான் ஆதவன். தேனிலவை திகட்ட திகட்ட கொண்டாடினார்கள் இருவரும்.
அங்கிருந்தது வந்ததும் இருவருக்கும் வாழ்க்கை சாதாரணமாக நகர்ந்தது. அவளை அடிக்கடி அவளது வீட்டுக்கும் அழைத்துச் சென்று வந்தான். அவர்களின் சந்தோசத்தைக் கண்டு அங்கே அனைவரின் மனமும் நிறைந்து போனது.
இப்படியே நாட்கள் நகர அதற்கு அடுத்த வாரத்தில் தன்னுடைய தொழில்கள் அனைத்தையும் மகனுக்கு எழுதி வைத்த ரத்தினம் “என்ன செய்யணுமோ உன் விருப்பம் போல செய். நான் உன் முடிவுல குறுக்க வர மாட்டேன். நான் உன்னை முழுசா நம்புறேன். ரங்கனை கூட வச்சிக்கோ”, என்று சொல்லி அவனிடம் ஒப்படைத்து விட்டு ஒதுங்கிக் கொண்டார். அதில் ஆதவனுக்கு வியப்பு தான். மங்கையோ கணவரின் செயலில் மிகுந்த சந்தோஷம் கொண்டாள்.