சிறிது நேரம் கழித்து பரமுவை அழைத்து வைதேகி சம்மதம் சொன்ன விஷயத்தைச் சொன்னான். அவரும் முறைப்படி அவர்களை பெண் பார்க்க வரச் சொல்லவே உடனே வைகுந்த்தை அழைத்தான்.
“சொல்லு மச்சான். விஷயம் காயாப் பழமா?”, என்று கேட்டான் வைகுந்த்.
“நிஜமாவா?”, என்று உண்மையான சந்தோசத்தில் கேட்டான் வைகுந்த்.
“ஆமா டா, வைதேகி தான் சென்னை மாப்பிள்ளை வேண்டாம்னு சொதப்பினா. அதான் அவ கிட்ட உன் காதலைச் மேலோட்டமா சொல்லிருக்கேன். அதுக்கப்புறம் தான் அவ சரின்னு சொன்னா. நீ அப்புறமா உன் காதலை விம் போட்டு விளக்கிகோ. சரி உங்க வீட்ல பேசி என்னைக்கு பொண்ணு பாக்க வரீங்கன்னு சொல்லு”
“அம்மா அப்பா கிட்ட நீயே சொல்லேன் ஆதவா. எனக்கு கூச்சமா இருக்கு டா”
“டேய் எல்லாம் நான் தான் செய்யணுமா? சரி சொல்றேன். வேற என்ன செய்ய?”, என்றவன் வைகுந்தின் தந்தை நாராயணனை அழைத்தான்.
அதை எடுத்து “ஹலோ யாரு?”, என்றார் அவர்.
“ஹலோ அங்கிள் நான் ஆதவன் பேசுறேன்”
“சொல்லுப்பா ஆதவா எப்படி இருக்க? கல்யாணம் முடிஞ்சதை கூட சொல்லலையே?”
“அது அவசரமா முடிஞ்சிருச்சு அங்கிள்”
“அதையும் வைகுந்த் சொன்னான் பா. நல்லா இருக்கல்ல? சிந்து நல்லா இருக்காளா?”
“ஆமா பா, அவனுக்கும் வயசு ஆகிருச்சுள்ள? ஏதாவது பொண்ணு இருக்கா?”
“ஒரு பொண்ணு இருக்கு அங்கிள். என் மாமா பொண்ணு தான். பேர் கூட அவனுக்கு பொருத்தமா இருக்கும். அவ பேர் வைதேகி. நான் போட்டோ அனுப்பிருக்கேன். பிடிச்சிருந்தா பொண்ணு பாக்க வாங்க”
“நான் பாத்துட்டு கூப்பிடுறேன் பா”, என்று சொல்லி போனை வைத்தவர் போட்டோவைப் பார்த்தார். வைதேகியை அவருக்கு மிகவும் பிடித்து போனது. அவர் மனைவி கமலத்திடமும் காட்டினார். அவளுக்கும் பிடித்து விட்டது.
மீண்டும் ஆதவனை அழைத்து நாளை பெண் பார்க்க வருவதாக தகவல் சொன்னார். பின் மகனை அழைத்து அவனுக்கு ஒரு பெண் பார்த்திருப்பதாக சொல்லி பெண் பார்க்க செல்ல விருப்பதையும் சொன்னார். ஒரு காதல் திருமணம் பெரியவர்களால் நிச்சயிக்கப் பட்ட திருமணமாக அங்கே மாற்றப் பட்டது.
சிறிது நேரம் கழித்து ஆதவனை அழைத்த வைகுந்த் “டேய் ஆதவா, தேங்க்ஸ் டா”, என்றான்.
“இந்த தேங்க்ஸ் எல்லாம் வேண்டாம். உன் காதலை கஷ்டப் பட்டு சேத்து வச்சிருக்கேன். அதைக் காப்பாத்துறது உன் கடமை. வைதேகி எனக்கு தங்கை மாதிரி. அவளை கஷ்டப் படுத்தினா நம்ம நட்பு அந்த இடத்துல இருக்காது சொல்லிட்டேன். அப்புறம் எங்க வீட்ல உனக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லைன்னு சொல்லி வச்சிருக்கேன் டா. இங்க இருக்குற வரை நீ நல்லவனா தான் இருந்த. ஆனா பாரின் போன அப்புறம் எப்படின்னு தெரியலை. இருந்தாலும் என் வார்த்தையை எப்படியாவது காப்பாத்து”, என்று நண்பனுக்கு அறிவுரை சொன்னான்.
“பாரின் போன அப்புறம் பீர் குடிக்க லேசா பழகிட்டேன் டா ஆதவா. ஆனா என்னோட வைதேகிக்காக அதை கண்டிப்பா விட்டுருவேன். அவளை விட எனக்கு எதுவும் பெருசு இல்லை டா”
“எப்படியோ நல்லா இருந்தா சரி தான். சரி நாளைக்கு நேர்ல வா பாக்கலாம்”, என்று சொல்லி போனை வைத்தான் ஆதவன்.
“எப்பா எல்லாம் பேசி முடிச்சாச்சா?”, என்று கேட்டாள் சிந்து.
“ஒரு வழியா பேசி முடிச்சாச்சு டி. நாளைக்கு எல்லாரும் பொண்ணு பாக்க வராங்களாம். சரி அஞ்சலி கிட்ட பேசுனியா? கிளம்பிட்டாளா?”
“பேசுனேங்க. நாளைக்கு நைட் கிளம்பி வரதா சொன்னா”
“சரி டி, தூக்கம் வருது. உள்ள போகலாமா? மொட்டைமாடில குளிர ஆரம்பிச்சிருச்சு”
“குளிருதுன்னு சொல்லுங்க ஒத்துக்குறேன். ஆனா தூக்கம் வருதுன்னு பொய்ச் சொல்லக் கூடாது. நீங்க எதுக்கு கூப்பிடுறீங்கன்னு எனக்கு தெரியும்”, என்று அவள் சிணுங்களுடன் சொன்னாள்.
“வர வர நீ ரொம்ப அறிவாளியா மாறிட்டு வர டி சிந்து குட்டி. தூங்கப் போனா தூங்க மட்டும் தான் செய்யணுமா?”, என்று கேட்டவன் அவளை தன் கரங்களால் அள்ளிக் கொண்டான். சிறு சிரிப்புடன் தன்னுடைய கரங்களை அவனுடைய கழுத்தில் மாலையாக கோர்த்துக் கொண்டாள் சிந்து.
அடுத்த நாள் காலை ஒரு பத்து மணி போல “டேய் ஆதவா, நாங்க ஊருக்குள்ள வந்துட்டோம் டா. முதல்ல உங்க வீட்டுக்கு வரவா? இல்லை, நேரா வைதேகி வீட்டுக்கு வரவா?”, என்று கேட்டான் வைகுந்த்.
“சரி டா”, என்று சொல்லி ஆதவன் வீட்டுக்குச் சென்றான். அவர்கள் வரும் போது ரத்தினம் மற்றும் மங்கை இருவரும் வாசலில் நின்று அவர்களை வரவேற்றார்கள். ரங்கன், ஆதவன், சிந்து என அனைவரும் அங்கே தான் இருந்தார்கள். வைகுந்த் காரில் இருந்து இறங்கியதும் வைகுந்த்தைக் கண்ட ரத்தினத்துக்கு திருப்தியாக இருந்தது.
எல்லாரும் வீட்டுக்குள் செல்லப் போக “ஒரு நிமிஷம் இருங்க. ஒரு முக்கியமான ஆள் இறங்க வேண்டியது இருக்கு”, என்றான் வைகுந்த்.
“யார் டா வந்திருக்கா?”, என்று ஆதவன் கேட்கும் போது காரில் இருந்து இறங்கிய அசோக்கை கண்டு அனைவருக்கும் ஆனந்த அதிர்வாக இருந்தது.
“அண்ணா”, என்ற படி சிந்து ஓடி வந்து அவனைக் கட்டிக் கொண்டாள்.
“டேய் மச்சான், நீயும் வறேன்னு சொல்லவே இல்லை”, என்று சொன்ன ஆதவனும் அவனை கட்டிக் கொண்டான். ரங்கன், ரத்தினம், மங்கை மூவரும் அவனை வரவேற்றார்கள்.
“பொண்ணு பாக்க போறேன் வரியானு வைகுந்த் கேட்டான். எனக்கும் உங்க எல்லாரையும் பாக்கணும் போல இருந்தது. அதான் நானும் வந்தேன்”, என்றான் அசோக்.
உள்ளே சென்று அமர்ந்ததும் அனைவருக்கும் ஜூஸ் கலக்கிக் கொடுத்தாள் மங்கை. சிறிது நேரம் அங்கே பேசிக் கொண்டிருந்து விட்டு அனைவரும் வைதேகி வீட்டுக்கு கிளம்பிச் சென்றார்கள்.
அதே நேரம் அங்கே வைதேகிக்கு அலங்காரம் செய்து கொண்டிருந்தாள் ஜோசியரின் மகள் ஜானகி. ஜானகியை விட இரண்டு வயது வைதேகி மூத்தவள் தான் என்றாலும் இருவருக்கும் இடையே சிறுவயதில் இருந்து நட்பு இருப்பதால் வா போ என்று தன் பேசிக் கொள்வார்கள்.
“ஜானு, ரொம்ப பவுடர் போடாத. அடிக்கிற மாதிரி இருக்கப் போகுது. அம்மா சொன்னாங்கன்னு இவ்வளவு நகை எல்லாம் வேண்டாம். பட்டிக் காடு மாதிரி இருக்கும்”, என்று படபடப்புடன் சொல்லிக் கொண்டிருந்தாள் வைதேகி.
“வைதேகி, கொஞ்சம் டென்ஷன் ஆகாம இரு. உன்னைப் பாத்ததும் எங்க அண்ணனுக்கு உன்னை ரொம்ப பிடிக்கணும்ல? அப்படின்னா இந்த அலங்காரம் எல்லாம் தேவை தான்”
“எந்த அலங்காரமும் இல்லாமலே உங்க அண்ணனுக்கு என்னை ரொம்ப பிடிச்சிருச்சாம்”
“என்ன டி சொல்ற?”
“அது ஒரு பெரிய கதை டி, அப்புறம் சொல்றேன்”, என்று சொன்னாள் வைதேகி. ஒரு வழியாக அனைவரும் வந்து விட பெண் பார்க்கும் படலம் ஆரம்பமானது.
சிந்துவும் ஜானகியும் சேர்ந்து வைதேகியை அழைத்து வர வைகுந்தால் அவளிடம் இருந்து பார்வையை திருப்ப முடியவில்லை. அவன் அப்படி என்றால் அசோக்கோ ஜானகியைக் கண்டு அதிர்ந்து போனான். அவள் அழகு அப்படி இருந்தது.
எத்தனையோ பெண்களைப் பார்த்த போதும் யாரிடமும் அவன் இப்படி சலனம் கொள்ள வில்லை. அவன் பார்வையை அவள் கண்டு கொண்டாள்.
“இவன் என்ன என்னைப் பொண்ணு பாக்க வந்த மாதிரி பாக்குறான்?”, என்று எண்ணிய ஜானகிக்கு அங்கிருந்து ஓடி விட வேண்டும் போல இருந்தது.
“டேய், உன் ஜொள்ளை கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணு”, என்று ஆதவன் சொல்ல அசடு வழிந்தான் வைகுந்த். ஆதவன் அப்படிச் சொன்னதும் ஒரு நொடி ஜெர்க் ஆன அசோக் “ஓ அவனைச் சொன்னானா? நான் கூட என்னையோன்னு நினைச்சிட்டேன்”, என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு ஆதவனைப் பார்த்தான்.
ஆதவனின் கண்களோ “உன்னையும் சேர்த்து தான் சொன்னேன்”, என்னும் விதத்தில் அவனைக் கண்டு சிமிட்டியது. “கண்டு பிடிச்சிட்டானே?”, என்று எண்ணி சிறு சிரிப்புடன் தலையை திருப்பிக் கொண்டான் அசோக்.
மீண்டும் வைகுந்த் பார்வை வைதேகி மீதே இருக்கவும் “டேய், பரமு மாமாவுக்கு காதல் கீதல் எல்லாம் பிடிக்காது. அதனால நானே கஷ்டப் பட்டு உன் லவ்வை வெளிய சொல்லாம இதை அரெஞ்ச் மேரேஜா மாத்திருக்கேன். இப்படி அவளைக் கண்ணெடுக்காம பாத்து வச்சு காரியத்தை சொதப்பிறாத”, என்று எச்சரிக்கை செய்தான் ஆதவன்.
“சரி சரி நான் எதையும் காட்டிக்கலை. ஆனா இன்னும் ரெண்டு விஷயம் மட்டும் நீ செய்யணும்”, என்று சாதாரணமாக சொன்னான் வைகுந்.
அவன் முக பாவனையே ஏதோ வில்லங்கமாக சொல்லப் போகிறான் என்று ஆதவனுக்கு உணர்த்தியது. அதனால் “என்ன டா?”, என்று கலவரமாக கேட்டான்.
“இன்னைக்கு வைதேகி கிட்ட என்னை தனியா பேச வைக்கணும்”
“என்னது தனியாவா? ரொம்ப கஷ்டம். சரி இன்னொன்னு என்னது?”
“அவ நம்பர் வாங்கித் தரணும். இல்லைன்னா முதல்ல உள்ளது மட்டும் செய். நானே அவ கிட்ட நம்பர் வாங்கிக்கிறேன்”
“எங்க மாமா கிட்ட அடி வாங்காம போக மாட்ட போல?”
“பிளீஸ் டா”, என்று வைகுந்த் கெஞ்ச ஆதவனுக்கும் பாவமாக தான்
இருந்தது.
“என்ன ரெண்டு மாப்பிள்ளைங்களும் குசுகுசுன்னு பேசுறீங்க?”, என்று கேட்டார் பரமசிவன். “ஒண்ணும் இல்லை மாமா, இவனை உங்க எல்லாருக்கும் பிடிச்சிருக்கான்னு கேக்கச் சொன்னான்”, என்றான் ஆதவன்.
அதைக் கேட்டு அனைவரும் சிரிக்க ஆதவனை முறைத்துப் பார்த்தான் வைகுந்த். “எங்க எல்லாருக்கும் மாப்பிள்ளையை ரொம்ப பிடிச்சிருக்கு. உங்களுக்கு பொண்ணைப் பிடிச்சிருக்கா?”, என்று கேட்டார் ரத்தினம்.
“பாரின்க்கு போனவன் ஏதாவது வெள்ளைக்காரியா பாத்து இழுத்துட்டு வந்துருவானோன்னு பயந்துட்டே இருந்தோம் சம்பந்தி. ஆனா எங்களுக்கு தேவதை மாதிரி மருமக கிடைச்சிருக்கா. எங்களுக்கு பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு. எங்களுக்கு பெண் குழந்தைங்க இல்லை. உங்க பொண்ணை எங்க மக மாதிரி பாத்துக்குறோம். நம்பி கொடுங்க”, என்று வைகுந்தின் தந்தை நாராயணன் சொல்ல அனைவருக்கும் பரம திருப்தியாக இருந்தது. வைகுந்தின் அன்னையும் சந்தோசத்துடன் வைதேகிக்கு பூவை வைத்து விட அனைவருக்கும் திருப்தியாக இருந்தது.