“நான் வரவே மாட்டேன்னு சொல்லலை மச்சான். வரேன். ஒரு தப்பான பொண்ணை பெத்து வச்சிருக்கேனே? அதை கரை சேக்குற வரைக்கும் என் கடமை இருக்க தான் செய்யுது. என்னைப் பொறுத்த வரைக்கும் பிரியா செஞ்சது தப்பு தான். அவ மேல எனக்கும் கோபம் இருக்க தான் செய்யுது. ஆனா பிள்ளைங்க தப்பு செஞ்சா அப்பா அம்மா தானே அவங்களை சரி செய்யணும்? பிரியாவை திருத்தாம அவளை மேலும் மேலும் தப்பு செய்ய தூண்டினதுனால தான் எனக்கு வேணி மேல வெறுப்பா வருது. நான் இப்ப கால் பண்ணினது எதுக்குன்னா பிள்ளைங்களைக் கொஞ்சம் பாத்துக்கோங்கன்னு சொல்லத் தான் மச்சான். சக்தி தலைல எல்லா பொறுப்பையும் தள்ளிட்டு வந்துட்டேன். ஆனா அவனும் எல்லாம் பழகத் தான் செய்யணும்;. எத்தனை நாளைக்கு அவன் கூட நான் துணைக்கு வர முடியும்? நான் இல்லாதப்ப அவன் தான் எல்லாம் செய்யணும். அப்புறம் பிரியாவுக்கு ஏதாவது ஒரு வரன் பாருங்க. கல்யாணம் முடிஞ்ச பிறகு அவ வாழ்க்கை சரியாகிரும்”
“கண்டிப்பா பாக்குறேன் மாப்பிள்ளை. நீங்க கவலைப்படாதீங்க. நான் பாத்துக்குறேன்”
“உங்களை நம்பி தான் விட்டுட்டு வந்துருக்கேன்”
“நான் தான் சொல்றேன்ல? நான் பாத்துக்குறேன்னு. நீங்க தைரியமா இருங்க. ஆனா கூடிய சீக்கிரம் திரும்பி வந்துருங்க”, என்று சொல்லி போனை வைத்த ரத்தினம் சக்தியை அழைத்தார்.
“சொல்லுங்க மாமா”, என்றான் சக்தி.
“எங்க இருக்க மருமகனே?”
“ஆஃபிஸ்ல மாமா”
“சரி வேலை இருக்கா? இன்னும் வீட்டுக்கு கிளம்பலையா?”
“வேலை முடிஞ்சிட்டு மாமா. இப்ப கிளம்பனும். நீங்க என்ன கால் பண்ணிருக்கீங்க? சொல்லுங்க மாமா”
“பிரியாவுக்கு மாப்பிள்ளை பாக்கணும் பா”
“எந்த முகத்தை வச்சிட்டு மாமா நான் அவளுக்கு மாப்பிள்ளை பாப்பேன். அவளைப் பத்தி நான் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கிட்ட என்ன சொல்ல முடியும்?”
“நம்ம பொண்ணை நாமளே விட்டுக் கொடுக்க முடியாது மருமகனே. தரகர் கிட்ட நானும் சொல்லி வைக்கிறேன். நீ போட்டோ ஜாதகம் எல்லாம் நாலு இடத்துல கொடுத்து வை. நானும் ஆதவன் கிட்ட சொல்றேன்”
“சரி மாமா, நாளைக்கே தரகர் கிட்ட கொடுத்து வைக்கிறேன். உங்களுக்கும் தரேன்”, என்று சொல்லி போனை வைத்தவன் அன்று வீட்டுக்கு வந்ததும் அன்னையிடம் ரத்தினம் அழைத்தையும் பிரியாவுக்கு மாப்பிள்ளை பார்ப்பதைப் பற்றியும் சொன்னான்.
“சந்தோஷமா பாக்கட்டும் பா. இப்போதைக்கு பிரியா வாழ்க்கை தான் எனக்கு மனசை அரிக்குது. அவளுக்கு ஒரு நல்லது நடந்தா எனக்கு அதுவே போதும்”, என்றாள் வேணி.
இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பிரியா எந்த மறுப்பும் சொல்ல வில்லை. அமைதியாக அமர்ந்திருந்தாள். அதுவே அவள் சம்மத்தை சக்திக்கு சொன்னது.
அதே நேரம் “வைதேகி இங்க வா மா”, என்று அழைத்தார் பரமசிவம்.
“என்னப்பா? ஏதாவது வேணுமா?”, என்று கேட்ட படி அவர் அருகில் வந்தாள்.
“அப்பா உனக்கு கல்யாணம் பண்ணலாம்னு இருக்கேன் டா”, என்று பரமசிவம் சொன்னதும் ஒரு நொடி திகைத்தாலும் “கொஞ்ச நாள் போகட்டுமே பா?”, என்றாள்.
“இது தான் சரியான வயசு டா”
“அப்படின்னா சரிப்பா, உங்க இஷ்டம்”, என்று உடனடியாக சம்மதம் சொன்னாள்.
“உனக்கு ஒரு வரன் வந்திருக்கு மா. மாப்பிள்ளை சென்னையாம்”, என்று அவர் ஆரம்பித்ததும் “அங்க எல்லாம் வேண்டாம் பா. இங்க பக்கத்துல ஏதாவது பாருங்களேன். உங்களை எல்லாம் விட்டுட்டு அவ்வளவு தூரம் போக முடியாது”, என்று சொல்லி விட்டுச் சென்று விட்டாள்.
உடனே ரத்தினத்தை அழைத்த பரமசிவம் வைதேகி சொன்னதைச் சொல்ல “மச்கான் இந்த வரன் ஆதவன் தான் கொண்டு வந்தான். பய ரொம்ப ஆசைப் பட்டான். சரி பரவால்ல. நான் அவன் கிட்ட சொல்லிக்கிறேன்”, என்றார் ரத்தினம்.
“வேண்டாம் மாப்பிள்ளை, நான் ஆதவன் கிட்ட பேசுறேன்”, என்று சொல்லி போனை வைத்து விட்டு ஆதவனுக்கு அழைத்தார் பரமசிவம்.
மனைவியுடன் கதை பேசிக் கொண்டிருந்தவன் அவர் அழைக்கவும் அதை எடுத்து “சொல்லுங்க மாமா”, என்றான்.
“நீ கொண்டு வந்த வரன்னு சொன்னதும் அவங்க ரெண்டு பேரும் சரின்னுட்டாங்க. ஆனா வைதேகி தான்….”
“என்ன சொன்னா?”, என்று பதட்டமாக கேட்டான்.
“பெருசா ஒண்ணும் இல்லைப்பா. சென்னை மாப்பிள்ளை வேண்டாம்னு சொல்றா”
“ஓ அப்படியா? எனக்கு இந்த சம்பந்தத்தை விட மனசில்லை மாமா. நான் ஒரு தடவை வைதேகி கிட்ட பேசவா?”
“கண்டிப்பா பேசு ஆதவா. நீ சொன்னா அவ கேப்பா”
“இப்பவே பேசுறேன் மாமா. நான் அவ நம்பர்க்கு கூப்பிடுறேன்”, என்று சொல்லி அவளை அழைத்தான்.
“ஹலோ ஆதவன் அத்தான் சொல்லுங்க. எங்க அக்கா எப்படி இருக்காங்க?”
“உங்க அக்காவை பத்தி போன்ல தான் கேக்கணுமா? வீட்டுக்கு வரலாம்ல?”
“நான் ஆச்சி கூட அங்க வரத் தான் செய்றேன். அக்கா கிட்ட கேளுங்க. நீங்க தான் வீட்ல இருக்குறது இல்லை. சரி நீங்க என்ன எனக்கு கால் பண்ணிருக்கீங்க? உங்களுக்கு அக்கா கிட்ட பேசவே நேரம் பத்தாதே?”, என்று சிரிப்புடன் கேட்டாள். அதைக் கேட்டுக் கொண்டிருந்த சிந்துவும் அழகாக புன்னகைத்தாள்.
“வாயாடி, கல்யாணம் வேண்டாம்னு சொன்னியாம்? அதைப் பத்தி தான் கேக்க கூப்பிட்டேன்”, என்றான் ஆதவன்.
“அப்புறம் எதுக்காக நான் பாத்த மாப்பிள்ளையை வேண்டாம்னு சொன்ன?”
“அந்த மாப்பிள்ளை நீங்களா பாத்தீங்க? எனக்கு தெரியாதே? சென்னை மாப்பிள்ளைன்னு தான் வேண்டாம்னு சொன்னேன்”
“ஏன் அங்க வேண்டாம்?”
“அம்மா, அப்பா, பாட்டி, நீங்க எல்லாரும் இங்க இருக்கும் போது நான் மட்டும் எப்படி அங்க போவேன்?”
“இதுல என்ன இருக்கு வைதேகி? இங்க கூட்டிட்டு வான்னு சொன்னா அவன் கூட்டிட்டு வரப் போறான்? ஏன் சிந்து நம்ம ஊர்ல வந்து இருக்கலையா?”
“வாஸ்தவம் தான்.. இருந்தாலும்….”, என்று அவள் இழுக்க “கடைசி நேரத்துல காரியத்தை கெடுக்காத வைதேகி. இந்த கல்யாணம் நடந்தே ஆகணும். உன் கிட்ட நான் இது சொல்லக் கூடாது தான் . ஆனா இதை தவிர வேற வழி இல்லை”, என்று ஆரம்பித்தான் ஆதவன்.
“என்ன அத்தான் புதிர் போடுறீங்க?”
“என்னோட பிரண்டு பேர் வைகுந்த். அவன், நான், சிந்து அண்ணன் அசோக் எல்லாரும் ஒண்ணா தான் படிச்சோம். நாம குலதெய்வம் கோவிலுக்கு போனப்ப எல்லாரும் குருப் போட்டோ எடுத்தோமே, உனக்கு நினைவு இருக்கா?”
“இருக்கு அத்தான்”
“அதை நான் காலேஜ்க்கு கொண்டு போயிருந்தேன். அப்ப அந்த போட்டோல உன்னைப் பாத்த வைகுந்த் கல்யாணம்னு ஒண்ணு பண்ணினா உன்னைத் தான் பண்ணுவேன்னு இவ்வளவு வருஷம் காத்துருக்கான்”
“என்னது?”, என்று அதிர்வுடன் கேட்டாள்.
“ஆமா வைதேகி, அவனுக்கு நீன்னா உயிர். அவனை மிஸ் பண்ணிறாத. அவனுக்கு நான் அவன் காதலை சேத்து வைப்பேன்னு வாக்கு கொடுத்துருக்கேன். ஆனா உன்னைக் கட்டாயப் படுத்த விரும்பலை. இதுக்கு மேல உனக்கு என்ன செய்யனுமோ செய்”
“அத்தான்”
“சொல்லு மா”
“உங்களுக்கு சரின்னு தோணுச்சுன்னா எனக்கு சம்மதம் தான்”, என்று அவள் தயக்கத்துடன் சொல்ல “வைதேகி நிஜமா தான் சொல்றியா?”, என்று ஆர்வமாக கேட்டான்.
“நீங்க என்னல்லாமோ சொல்றீங்க? அதை எல்லாம் என்னால தெளிவா யோசிக்க முடியலை. ஆனா அவங்களை உங்களுக்கு பிடிச்சிருக்குல்ல? அதனால எனக்கு ஓகே. நீங்களும் எனக்கு அப்பா மாதிரி தான். அதனால எனக்கு சம்மதம்னு அப்பா கிட்ட பேசுங்க”, என்று அவள் சொல்ல அவள் அன்பில் நெகிழ்ந்து போனான்.
“கண்டிப்பா பேசுறேன் மா. நீ என் மேல் வச்ச நம்பிக்கையை நான் கண்டிப்பா காப்பாத்துவேன் வைதேகி. வைகுந்த் உன்னை நல்லா பாத்துப்பான். நான் எல்லாம் பாத்துக்குறேன். இரு உன் அக்கா பேசனுமாம்”, என்று சிந்துவிடம் கொடுத்தான். இருவரும் வெகு நேரம் பேசிக் கொண்டிருக்க ஆதவன் பொறுமை போனது. அதைப் பார்த்த சிந்து “சரி கல்யாணப் பொண்ணு, நான் நாளைக்கு பகல்ல பேசுறேன். இல்லைன்னா அத்தை கூட வீட்டுக்கு வரேன். இப்ப போனை வைக்கிறேன்”, என்றாள்.
“என்ன அக்கா நீங்க என் கிட்ட பேசுறதுனால அத்தானோட வயிறு எரியுது போல? இங்க புகை வருதே”, என்று சிரித்தாள் வைதேகி.
“அதெல்லாம் இல்லையே?”, என்று அவசரமாக மறுத்த சிந்து “லைட்டா எரிய தான் செய்யுது போல? வைக்கிறேன் வைதேகி”, என்று சொல்லி வைத்து விட்டாள்.
அவளை இறுக அணைத்துக் கொண்டவன் “என் முறைப்பொண்ணு என்ன டி சொல்றா?”, என்று கேட்டான்.
“நான் அவ கிட்ட பேசுறதைப் பாத்து உங்களுக்கு பொறாமையா இருந்துச்சுல்ல? அதை அவ சரியா கண்டு பிடிச்சு சொன்னா”
“அவளுக்கும் தெரிஞ்சு போச்சா?”, என்று சொன்னவன் அதன் பிறகு அவளை பேச விட வில்லை.