மாடிக்கு சென்றதும் வைதேகி பயத்துடன் நகத்தைக் கடித்த படி இருக்க “வைதேகி”, என்று மென்மையாக அழைத்தான். அவன் காந்த குரலில் அவனை நிமிர்ந்து பார்த்தாள் அவள்.
“என்னைப் பிடிச்சிருக்கா?”, என்று அவன் சிரிப்புடன் கேட்க “ம்ம்”, என்றான்.
“கொஞ்சமா நிறையவா?”, என்று அவன் கேட்டதும் அதற்கு என்ன பதில் சொல்ல என்று தெரியாமல் திணறினாள் வைதேகி.
அவள் திணறலை ரசித்தவன் “சரி விடு, அதை இன்னொரு நாள் கேக்குறேன். உனக்கு என் கிட்ட ஏதாவது கேக்கணுமா?”, என்று கேட்டான் வைகுந்த்.
“ம்ம்”
“என்ன கேளு?”
“உங்களுக்கு என்னை பிடிக்கும்னு அத்தான் சொன்னாங்க”
“அதை அவன் உன் கிட்ட சொன்னது எனக்கு வருத்தம் தான். பர்ஸ்ட் நைட்ல நானே உன் கிட்ட நேர்ல சொல்லலாம்னு இருந்தேன்”, என்று அவன் புலம்ப அவள் முகம் சிவந்து போனது.
அவள் சிவந்த முகத்தை ஆசையாக பார்த்தவன் “தப்பா எடுத்துக்காத, பிளீஸ் ஒரே ஒரு தடவை”, என்று சொல்லி அவளை நெருங்கினான்.
அவன் சொன்னதைக் கேட்டும் அவன் நெருங்கி வருவதை கண்டும் அவள் அதிர்ந்து விழிக்க “ஏய் பயப்படாத, முகம் சிவந்து நின்னியா? அதான் உன் கன்னத்தை தொட்டுப் பாக்கணும் போல இருந்துச்சு. தொடலாமா?”, என்று கிறக்கமாக கேட்டான்.
அவன் அப்படிக் கேட்டதும் மூச்சடைத்துப் போனவள் அவனையே இமைக்காமல் பார்த்தாள்.
அவள் அமைதியாக இருக்கவும் “சரி வேண்டாம்னா விடு. நீ கேக்க வந்ததைக் கேளு”, என்றான்.
“உங்களுக்கு ஏன் என்னைப் பிடிச்சது?”, என்று தயக்கத்துடன் கேட்டாள்.
“உன்னை முதல் முறையா ஆதவன் காட்டின போட்டோல தான் பாத்தேன். அப்ப என்னால உன் கிட்ட இருந்து பார்வையை திருப்பவே முடியலை. அன்னைக்கு பச்சைக் கலர் தாவாணி போட்டுருந்த. அப்பவே மனசுல பதிஞ்சிட்ட? நாள் ஆக ஆக உன்னை மறந்துருவேன்னு நினைச்சேன். ஆனா இப்ப வரைக்கும் என்னால முடியலை. என் மனசுல ஆழமா பதிஞ்சிட்ட”, என்று அவன் சொல்ல அவளோ அவனை பிரம்மிப்பாக பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளது பரவசமான பார்வையே அவளது மனதை அவனுக்கு புரிய வைக்க “பிளீஸ், தப்பா நினைக்காத. என்னால கண்ட்ரோல் பண்ணவே முடியலை”, என்று சொன்னவனின் வலது கை உயர்ந்து அவளது இடது கன்னத்தை வருடியது.
அவன் தொடுகையில் சிலிர்த்து அவள் கண்களை மூட அந்த பஞ்சுக் கன்னத்தில் இருந்து அவனால் கையை எடுக்கவே முடிய வில்லை. அவளது கன்னத்தின் மென்மையை அவன் உதடுகளும் உணர ஆசை கொண்டது.
“ஐ லவ் யு வைதேகி. இது என்னோட ரொம்ப நாள் ஆசை”, என்று பிதற்றியவன் அவளது வலது கன்னத்தில் இதழ் பதித்து விட்டான்.
அவனுடைய முத்தத்தில் அவள் அதிர்ந்து கண் விழிக்கும் போது வெகு அருகாமையில் நின்ற அவனைக் கண்டு அப்படியே பின்னே சாயப் போனாள். அப்படியே அவளது இடையை வளைத்துப் பிடித்து தன்னுடன் இறுக்கியவன் “இப்பவே உன்னைத் தூக்கிட்டு போகணும் போல இருக்கு டி. என்னோட பல வருஷம் தவம் டி நீ. உன் பெர்மிசன் இல்லாம முத்தம் கொடுத்ததுக்கு சாரி. நீ ரொம்ப மென்மையா இருக்க. ஆனா நான் உன் விசயத்துல ரொம்ப வேகமா இருக்கேன். சீக்கிரம் என் வீட்டுக்கு வந்துரு சரியா?”, என்று சொன்னவன் கடைசியாக அவளது நெற்றியில் இதழ் பதித்து விட்டு “நேரம் ஆச்சு, வா போகலாம்”, என்றான்.
அவள் அவனையே பார்த்துக் கொண்டிருக்க “நான் முன்னாடி போறேன். நீ பின்னாடி வா”, என்று சொல்லிச் சென்றான். ஒரு வித மயக்க நிலையில் அவன் பின்னே சென்றாள் வைதேகி. இருவரின் முகங்களுமே அவர்கள் மனதை மற்றவர்களுக்கு புரிய வைத்தது. அடுத்த கட்ட பேச்சு வார்த்தையும் ஆரம்பமானது.
பெரியவர்கள் திருமண விஷயம் பேசிக் கொண்டிருக்க “என்ன டா வைதேகி கிட்ட நம்பர் வாங்கிட்டியா?”, என்று நண்பனிடம் கேட்டான் ஆதவன்.
“ஐயோ மறந்துட்டேனே? சரி சரி அதான் நீ இருக்கியே? அப்புறம் என்ன கவலை? உன் கிட்ட வாங்கிக்கிறேன்”
“அடப்பாவி, அப்ப இவ்வளவு நேரம் அவ கிட்ட என்ன பேசின?”
“அது வந்து முத்தம்….”
“என்னது முத்தம் கொடுத்தியா?”
“ஐயோ இல்லை டா, பதட்டத்துல உளறுறேன். நீ அவசரப் பட்டு நான் காதலிக்கிறதை அவ கிட்ட சொன்னல்ல? அதைத் தான் கேட்டுட்டு இருந்தா. உன்னை யார் சொல்லச் சொன்னா?”
“அது தப்பு தான் டா. ஆனா இவ சென்னை மாப்பிள்ளை எனக்கு வேண்டாம்னு சொல்லும் போது என்ன செய்ய? இவ அப்படிச் சொன்ன உடனே மாமாவும் யோசிச்சார். நான் பல வருஷம் நீ லவ் பண்ணதைச் சொன்ன உடனே அதுல இம்ப்ரஸ் ஆகி சரின்னுட்டா. இப்ப சொல்லு. நான் சொன்னது தப்பா?”
“சாரி டா, நீ சொன்னது தான் சரி”, என்று சொன்ன வைகுந்த் பரமு ஏதோ கேட்கவும் அவரைப் பார்த்தான். திருமண தேதியை நிச்சயத்து விட்டுக் கிளம்பினார்கள். அனைவரும் கிளம்பும் போது அசோக்குக்கு ஜானகியிடம் பேச வேண்டும் போல இருந்தது.
“அப்பா பாத்ரூம் எங்க இருக்கு?”, என்று பரமசிவத்திடம் கேட்டான் அசோக்.
“பின்னாடி இருக்கு பா. சிந்து அண்ணனுக்கு பாத்ரூமைக் காட்டு மா”, என்று சொன்னார் பரமசிவம்.
“வா அண்ணா”, என்று சிந்து சொல்லும் போது “அக்கா சேலை அவுருற மாதிரி இருக்கு. கொஞ்சம் ரூமுக்கு வாங்களேன்”, என்றாள்.
“ஜானு, என் அண்ணாவுக்கு பாத்ரூமைக் காட்டேன். நான் வைதேகி கூட போறேன்”, என்று சொல்லி விட்டு சிந்து சென்று விட்டாள்.
தங்கைக்கு மனதுக்குள் நன்றி சொல்லி விட்டு ஜானகியின் பின்னே சென்றான் அசோக்.
“இதோ, இது தான் பாத்ரூம். போங்க”, என்று சொல்லி விட்டு ஜானகி அங்கிருந்து நகரப் போக “ஒரு நிமிஷம், நில்லுங்க. நான் உங்க கிட்ட பேசணும்னு தான் வந்தேன்”, என்றான் அசோக்.
அவள் அவனைத் திகைப்பாக பார்க்க அதை உணர்ந்து “என் தங்கச்சி உங்களை ஜானுன்னு சொன்னா. உங்க பேர் என்ன? ஜானகியா? இல்லை வேற ஏதாவதா?”, என்று கேட்டான்.
“அது எதுக்கு உங்களுக்கு?”, என்று அவள் சற்று எரிச்சலுடன் கேட்க “நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க”, என்றான்.
“பருவ வயசுல பன்னி கூட அழகா தான் இருக்கும். அது கிட்ட போய்ச் சொல்லுங்க”, என்று எரிச்சலுடன் முணுமுணுத்தாள்.
“என்னங்க இப்படி எல்லாம் ஹார்ஷா பேசுறீங்க?”, என்று பாவமாக கேட்டான் அசோக்.
“வேற எப்படி பேசச் சொல்றீங்க? முதல் தடவை பாத்த பொண்ணு கிட்ட அழகா இருக்கன்னு சொல்றீங்க? இது தப்பா தெரியலையா? சிந்து அக்காவோட அண்ணானு தான் சும்மா விடுறேன்”
“அழகா இருக்கீங்கன்னு உண்மையைச் சொன்னது தப்பாங்க?”
“முதல்ல இப்படிச் சொல்லுவீங்க? அப்புறம் நம்பர் கேப்பீங்க? அப்புறம் காதல் கல்யாணம்னு வந்து நிக்கும். எனக்கு தெரியாது”
“ஏன் அப்படி நடந்தா தான் என்ன?”, என்று அவன் கேட்க அவள் வியப்பாக அவனைப் பார்த்தாள். ஒரு நொடி அவன் தைரியத்தை மெச்சியவள் அடுத்த நொடி அவனை முறைத்துப் பார்த்தாள்.
“நான் யாருன்னு தெரியுமா? எங்க குலம் கோத்திரம் தெரியுமா? என் அம்மா அப்பா பத்தி தெரியுமா? என்னைப் படிக்க வைக்க கூட என் குடும்பம் கஷ்டம் தான் படுது. ஆதவன் அண்ணன் தான் எனக்கு பீசே கட்டுறார். எனக்கு இன்னும் கொஞ்சம் மாசம் படிப்பு இருக்கு. அதை முடிச்சு நான் வேலைக்கு போகணும். அப்ப தான் என் குடும்பம் நல்லா இருக்கும். தேவையில்லாம காதல் கல்யாணம்னு என்னைக் குழப்பாதீங்க”, என்று சொன்னவள் அங்கிருந்து சென்று விட்டாள்.
அவள் அப்படிப் பேசியதே அவனுக்கு அவள் மனதை புரிய வைத்தது. அவன் கூட அவளை பிடித்திருக்கிறது என்ற விதத்தில் தான் யோசித்தான். ஆனால் அவளோ திருமணம் காதல் என்ற அளவுக்கு யோசித்ததிலே அவள் மனதில் அவன் மீது சிறு சலனம் ஏற்பட்டிருக்கிறது என்று புரிந்தது.
அதற்கு பின் அவன் அவளிடம் பேச முயல வில்லை. போகும் போது அவள் அவனையே பார்க்க அதை உணர்ந்தாலும் அவன் அவளைத் திரும்பிக் கூட பார்க்க வில்லை. அதை கண்டு சிறு விரக்தி சிரிப்பு அவள் உதடுகளில் உதயமானது.
“என் குடும்பத்தோட உண்மை நிலையைச் சொன்ன உடனே கண்டுக்காம போறான்? போடா போ. உன்னை மாதிரி எத்தனை பேரை நான் பாத்துருப்பேன்”, என்றவள் வைதேகியிடம் சொல்லி விட்டு வீட்டுக்கு சென்று விட்டாள். இன்று ஏதோ ஒரு பாரம் அவளை அழுத்தியது.
இங்கே சிந்து வைதேகிக்கு போட்டிருந்த அலங்காரத்தை கலைத்துக் கொண்டிருக்க வைதேகியோ அமைதியாக இருந்தாள். “என்ன வைதேகி, ஏதோ யோசனையாவே இருக்க?”, என்று கேட்டாள் சிந்து.
“அக்கா அவங்க என்னை விரும்புறாங்களாம். அத்தான் சொல்றாங்க. அவங்களும் சொல்றாங்க. ஆனா என்னால நம்பவே முடியலை. அவங்க எவ்வளவு அழகா இருக்காங்க. ஆனா அவங்களுக்கு எப்படி என்னைப் போய் பிடிச்சது? அது உண்மையா பொய்யா?”, என்று புலம்பினாள்.
“நீயும் அழகா இருக்க வைதேகி. அதான் உன்னைப் பாத்த உடனே வைகுந்த் அண்ணா மயங்கிட்டாங்க. இது பெரிய விஷயம் இல்லை”, என்று அவளுக்கு சிந்து தைரியம் சொன்னாலும் வைதேகியின் மனது அதை நம்ப முடியாமல் படபடத்து தான் போனது.