ஏனென்றால் வைகுந்த் நல்ல நிறமாக இருந்தான். ஆனால் வைதேகி மாநிறம் தான். ஆனால் அழகாக இருந்தாள். அதனால் சிறு தாழ்வு மனப் பான்மை அவளுக்குள் எழுந்தது. அது கூட அவனை அதிகம் பிடித்ததால் தான். இந்த திருமணம் நடக்க வேண்டும் என்று அவள் மனமும் ஆண்டவனிடம் பிராத்தித்தது.
அன்று இரவு உணவை முடித்து விட்டே ஆதவன் அனைவரையும் சென்னைக்கு அனுப்பி வைத்தான். வைகுந்த் வீட்டினர் மற்றும் அசோக் அனைவரும் கிளம்பியதும் “ரங்கா இங்க வா டா”, என்று அழைத்தான் ஆதவன்.
“என்னண்ணே?”, என்ற படி வந்தான் ரங்கன்.
“நாளைக்கு காலைல நீ ரெயில்வே ஸ்டேஷன் போகணும் டா”
“சரிண்ணே”, என்று சொல்லி விட்டு அவன் செல்லப் போக “டேய் இரு டா, முழுசா கேட்டுட்டு போ”, என்றான் ஆதவன்.
“எனக்கு தெரியும்ணே. சிந்து தங்கச்சி சொல்லுச்சு. அதோட பிரண்டு யாரோ வராங்களாம். அவங்களை கூப்பிட தானே போகணும்?”
“ஆமா டா”
“சரிண்ணா கூட்டிட்டு வந்துறேன். ஆனா அவங்க எப்படி இருப்பாங்க அண்ணா? ஏதாவது போட்டோ இருக்காண்ணா?”
“எதுக்கு டா போட்டோ? அவளை தான் நீ பாத்துருக்கியே?”
“நானா? எப்ப?”
“வரப் போறது அஞ்சலி டா”
“என்னது அந்த பொண்ணா?”, என்று அவன் அதிர அவனை வியப்பாக பார்த்த ஆதவன் “ஆமா அவ தான். நீ ஏன் இவ்வளவு அதிர்ச்சியாகுற?”, என்று கேட்டான்.
“இல்லைண்ணே சும்மா தான். இப்ப எதுக்கு அந்த பொண்ணு வருது? என்னைக்கு திரும்பிப் போகும்?”, என்று ரங்கன் கேட்க இதுவும் ஆதவனுக்கு வியப்பாக தான் இருந்தது.
“அவ எங்க திரும்பிப் போறது? அவ தானே இனி நம்ம மேனேஜர். இனி இங்க நம்ம வீட்ல நம்ம கூட தான் இருப்பா. அவ நம்பர் உனக்கு அனுப்புறேன். போய்க் கூட்டிட்டு வந்துரு”, என்று சொன்ன ஆதவன் அவன் முகத்தைப் பார்க்காமல் சென்று விட்டான். பார்த்திருந்தால் அதிர்ந்திருப்பான். ஏனென்றால் ரங்கன் அதிர்ச்சியில் சிலையாக நின்றான். இப்படி ஒரு திருப்பத்தை அவன் எதிர் பார்க்கவே இல்லை.
ஆனால் அதே நேரம் அஞ்சலியோ சந்தோஷமாக டிரைன் ஏறினாள். எப்போதும் கணக்கு வழக்கை ரங்கன் தான் பார்ப்பான். ஆனால் இனி கணக்கு வழக்கை கம்ப்யூட்டருக்கு மாற்றி அதைப் பார்க்கும் பொறுப்பு அஞ்சலியிடம் வரப் போகிறது. ரங்கன் இருக்கும் வீட்டில் இருக்கவும் அவனுடன் பணி புரியவும் அஞ்சலிக்கு கசக்குமா என்ன?
அவளுடைய குடும்ப சூழ்நிலைக்கு அவளது சம்பளமும் தேவையாக இருக்க அவளது வீட்டினரும் அவளை சந்தோஸ்மாக வேலைக்கு அனுப்பினார்கள். அதற்கு மங்கை கொடுத்த உறுதியும் சிந்துவின் தாய் பேசியதும் தான் காரணம்.
அடுத்த நாள் காலை அவளை அழைக்கப் போகும் போது அவனுக்கு படபடப்பாகத் தான் இருந்தது. அஞ்சலியின் பார்வை ஏதோ விதத்தில் அவனை பாதிப்பது தான் காரணம். அவனே சென்று இப்படி பார்க்காதே என்று எப்படிச் சொல்ல முடியும்? எப்போதாவது தான் அவளைப் பார்ப்போம் என்பதால் அவன் அதை பெரியதாக எடுக்க வில்லை. ஆனால் அவள் இனி இங்கு தான் இருப்பாள் என்று சொன்னதும் அவனுக்கு சகலமும் ஆடியது.
டிரைன் வரும் முன்பே சென்று அவளுக்காக காத்திருந்தான். அவனைத் தேடிய படி வந்த அஞ்சலிக்கு அவனைக் கண்டதும் முகம் மலர்ந்தது. அவள் பார்வையைக் கண்டு “ஆரம்பிச்சிட்டா”, என்று எண்ணியவன் வேகமாக அவளை நெருங்கி அவள் கையில் இருந்த இரண்டு பைகளையும் வாங்கிக் கொண்டான்.
“நானே கொண்டு வரேன்”, என்று சொன்ன அஞ்சலியின் குரலை அவன் கவனிக்கவே இல்லை. காரில் அவன் அருகே ஏறி அவள் அமர்ந்த பிறகு அமைதியாக காரை எடுத்தான்.
“எப்படி இருக்கீங்க?”, என்று கேட்ட அஞ்சலிக்கு அவன் பதிலே சொல்ல வில்லை. அதற்கு பிறகு அஞ்சலியும் அவனிடம் பேச வில்லை. ஆனால் அவள் பார்வை அடிக்கடி அவன் புறம் திரும்பியது. அதை அவன் உணர்ந்தே இருந்தான். இதில் இருந்து எப்படித் தப்பிக்க என்று அவனுக்கு வழியே தெரிய வில்லை.
வீட்டுக்குச் சென்றதும் அஞ்சலியை அனைவரும் பாசமாக வரவேற்றார்கள். அதுவும் அவள் சிந்து போல அமைதியாக இல்லாமல் கலகலவென பேசவும் ரத்தினம் அவளுடன் சேர்ந்து நன்கு கதை பேச ஆரம்பித்து விட்டார்.
ரத்தினம் மங்கை அறைக்கு அருகே இருந்த அறை அஞ்சலிக்கு என்று ஒதுக்கப் பட்டது. அன்றில் இருந்து அவளும் அந்த வீட்டில் ஒருத்தி ஆனாள். அவள் வந்ததில் சிந்துவுக்கோ சொல்ல முடியாத அளவு சந்தோஷம் வந்தது.
அடுத்த நாளே அஞ்சலி வேலைக்கு வந்து விட முதலில் ஆதவன் அவளுக்கு முக்கியமான விஷயங்களை சொல்லிக் கொடுத்து விட்டு ஏதாவது சந்தேகம் இருந்தால் ரங்கனிடம் கேட்கச் சொன்னான். அவள் சந்தேகம் கேட்டால் ரங்கனும் எங்கோ பார்த்துக் கொண்டு அவளுக்குச் சொல்லிக் கொடுத்தான். ஆனால் அவன் பாராமுகம் அவளை வதைத்தது மட்டும் நிஜம்.
வேலைக்கு வந்த இடத்தில் யாருக்கும் எந்த பிரச்சனையும் வரக் கூடாது, அதுவும் தோழிக்கு எந்த கஷ்டத்தையும் கொடுக்க கூடாது என்று கவனமாக இருந்தாள் அஞ்சலி. ஆனால் ரங்கனிடம் அலைபாயும் மனதை அடக்குவது அவளுக்கு கஷ்டமாக தான் இருந்தது. நாட்கள் அப்படியே நகர்ந்தது.
அஞ்சலி இங்கு வேலைக்கு வந்ததில் ரங்கன் தான் திணறிப் போனான். ஒரே வீட்டில் இருப்பதாலும் ஒரே இடத்தில் வேலை செய்வதாலும் அவளது அருகாமையை அவனால் தவிர்க்க முடியவில்லை. அவள் ஏதாவது கேள்வி கேட்டால் அமைதியாக சொல்லிக் கொடுக்கிறான் தான். ஆனால் சொல்லிக் கொடுக்கும் போது அவள் அருகாமையில் திண்டாடிப் போவது அவனுக்கு மட்டுமே தெரியும்.
அவளது நேசப் பார்வையில் தான் கொஞ்சம் கொஞ்சமாக இருந்த சலனம் அவனையே சூறாவளியாக சுழற்றிக் கொண்டிருந்தது. சிறிது சிறிதாக அவன் மனதிலும் அவள் மீதான சலனம் எழத் தான் செய்தது. அதை அடக்குவதில் அவன் போராட்டம் தொடர்ந்து கொண்டிருந்தது.
பிரியாவுக்கு தீவிரமாக வேணி மாப்பிள்ளை பார்க்க அவளுக்கு செவ்வாய் தோஷம் இருப்பதால் வரன் தள்ளி தள்ளிப் போய்க் கொண்டிருந்தது. அண்ணன் என்ற கடமைக்கு சக்தியும் அவளுக்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டு தான் இருந்தான். விஸ்வமோ மகனிடம் “எல்லாம் முடிவானதும் வந்து சொல்லு சக்தி. அப்பான்னு கடமைக்கு வந்து நிக்குறேன்”, என்று சொல்லி விலகிக் கொண்டார்.
இதில் தன்னுடைய அண்ணன் வைதேகி திருமணத்துக்கு முன்னே நின்று எல்லா காரியங்களையும் செய்கிறார் என்று எண்ணி வேணிக்கு பொறாமையாக கூட இருந்தது. ஆனால் அவள் தான் அந்த பாசத்தை இழந்து விட்டாளே?
வைதேகி திருமணத்துக்கு நாள் நெருங்க நெருங்க ரங்கநாயகி பாட்டி சந்தோஷமாக இருந்தார். மகள் குடும்பமும் மகன் குடும்பமும் ஒன்றுக்குள் ஒன்றாக இருப்பது அவருக்கு ஒரு சந்தோஷம் என்றால் ஆதவன் நண்பனை வைதேகி திருமணம் செய்வதால் மூன்றாம் தலைமுறையும் ஒன்றாக இருக்கும் என்று அவர் நிம்மதி கொண்டார். இப்படியே அனைவருக்கும் நாட்கள் கடக்க ஒரு நாள் மயங்கி விழுந்தாள் சிந்து.
அவளை மங்கை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதிக்க அவள் கருவுண்டாகி இருப்பது தெரிந்தது. விஷயம் தெரிந்து அந்த வீடே கொண்டாட்டமாக இருந்தது. ஆதவன் ஆசையாக தன்னவளைக் காண வந்தான்.
“சிந்து சிந்து.. எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா?”, என்று கேட்ட படி அவளை இறுக அணைத்துக் கொண்டான்
“எனக்கும் தான். ஆனா குழந்தை பிறந்தா ரொம்ப வலிக்குமா?”, என்று அவள் பயத்துடன் கேட்க அவளை கொஞ்சி கொஞ்சியே அவள் பயத்தை அகற்றினான். ஆனாலும் அவள் அடுத்த பயம் அதைப் பற்றியே இருந்தது. அவளைப் பார்க்க வரும் அனைவரும் “அப்படிச் செய்யாதே… இப்படிச் செய்யாதே… இதைச் சாப்பிடாதே… வேகமாக நடக்காதே…”, என்று பல அறிவுரைகளைச் சொல்ல உண்மையிலே சிந்து பயந்து தான் போனாள். இப்போதும் அவள் பயத்தை விரட்டியது அஞ்சலி தான். அஞ்சலி அவளுக்கு தோழி மட்டும் அல்ல. சில நேரம் அன்னையாகவும் இருந்தாள்.
அடுத்த நாளே விஷயம் அறிந்து சிந்து குடும்பம் கிளம்பி வந்தது. ஏகாம்பரமும் மகளைக் காண வந்து விட்டார். ஆதவனிடம் அவர் நன்றாக பேசினார். சுபா குடும்பமும் செல்வி குடும்பமும் வேறு அவளைக் காண வந்து விட்டார்கள். வீடே பரபரப்பாக தான் இருந்தது.
அடுத்து வந்த மாதங்களில் வீட்டில் இருக்கும் அனைவரும் அவளை உள்ளங்கையில் வைத்து தாங்கினார்கள். ஆனாலும் வாந்தி, மயக்கம், சோர்வு என அவள் கஷ்டப் படத் தான் செய்தாள். ஆதவனின் அன்பு அவளை அதையெல்லாம் கடக்க வைத்தது. அவள் சிறிது சோர்ந்து போனாலே அவளுக்கு உற்சாகம் கொடுத்தான் ஆதவன். மங்கை அவள் உடலைப் பார்த்துக் கொண்டாள்.
வேலைகளை மீண்டும் ரத்தினம் மற்றும் ரங்கனிடம் பார்க்கச் சொல்லி விட்டு மனைவியுடன் நேரம் செலவழித்தான் ஆதவன்.
வைகுந்த் வைதேகி திருமணமும் வந்தது. வைகுந்த் அன்று சந்தோஷமாக இருந்தான். வைதேகியோ படபடப்புடன் தான் இருந்தாள். ஆதவன் தான் முன்னே நின்று இந்த திருமணத்தை நடத்தி வைத்தான். அதில் ரங்கநாயகி பாட்டிக்கு பெருமை பிடி பட வில்லை.
அனைவரின் ஆசியோடு அவள் கழுத்தில் தாலி கட்டினான் வைகுந்த். இங்கே எல்லா சடங்குகளும் முடிந்து அவனுடன் புகுந்த வீட்டுக்குச் சென்றாள் வைதேகி. நாராயணனும் கமலமும் அவளிடம் நன்கு பேசினார்கள். ஆனாலும் கொஞ்சம் பயந்த படி தான் இருந்தாள்.
அன்றைய இரவு அவர்களுக்கு முதலிரவு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. நடுக்கமும் தயக்கமுமாக அவள் அவனுடைய அறைக்குள் செல்ல எழுந்து அவள் அருகே வந்தவன் அவள் கையில் இருந்த பால் டம்ளரை வாங்கி வைத்து விட்டு அவளை அழைத்து வந்து கட்டிலில் அமர வைத்தான்.
அவள் தன்னுடைய கரங்களைக் கோர்த்த படி அமர்ந்திருக்க “எனக்கு இதெல்லாம் கனவு மாதிரி இருக்கு வைதேகி”, என்றான் வைகுந்த்.
“ஏன்?”, என்று தயக்கத்துடன் கேட்டாள்.
“நீ சாதாரணமா கேட்டுட்ட? இரு வரேன்”, என்று சொன்னவன் ஒரு ஆல்பத்தை எடுத்து வந்து அவளிடம் நீட்டினான்.