இருவரும் மெதுவாக வெளியே வர “எனக்கு பயமா இருக்கு அஞ்சு”, என்றாள் சிந்து.
“எப்பவும் உன் கூட நான் இருக்கேன். பயப்படாம வா”, என்று அஞ்சலி நம்பிக்கை கொடுக்க தலை குனிந்த படி வந்தாள் சிந்து. அவள் மணமேடையில் அமர்ந்ததும் ஏகாம்பரம் மனைவியை முறைக்க அவளோ கணவன் புறம் திரும்பவே இல்லை. ஐயர் சடங்குகளை ஆரம்பித்தார்.
அதே நேரம் “டேய் மாப்பிள்ளை, ஒரு இக்கட்டுல என் தங்கச்சியை உன் தலைல தள்ளி விடுறோம்னு நினைக்கிறியா? ஏன்னா எங்க சுயநலத்துக்கு உன் வாழ்க்கையை பணையம் வைக்க கூடாதுன்னு தோணுது டா. சிந்து ரொம்ப நல்லவ. ஈ எறும்புக்கு கூட துரோகம் செய்யக் கூடாதுன்னு நினைப்பா. அவ கிட்ட இருக்குற ஒரே ஒரு மைனஸ். அவளோட பயம் தான். அதைப் போக்க நீ கொஞ்சம் போராடணும். உண்மையைச் சொல்லணும்னு தோணுச்சு அதான்”, என்றான் அசோக்.
“எனக்கு உண்மையிலே உன் தங்கச்சியை பிடிச்சிருக்கு டா அசோக். என் வீட்ல என்ன சொல்வாங்களோன்னு மட்டும் தான் எனக்கு பயமா இருக்கு. வேற எதுவும் இல்லை. எனக்கு பரிபூரண சம்மதம்”, என்றான் ஆதவன்.
“அவளோட பயம்….”
“பயம் அப்படிங்குறது இயற்கையான விஷயம் அசோக். உன் தங்கச்சி மத்தவங்க கிட்ட பயந்தாலும் வீட்ல இருக்குற உங்க கிட்ட அவ இயல்பா தானே இருக்கா? அதே மாதிரி என் கிட்டயும் இயல்பா அவ மாறுவா. அவளை மாத்த என்னால முடியும். நீ கலங்காத. உன் தங்கச்சிக்கு வாழ்க்கை கொடுக்கணும்னு எல்லாம் நான் சம்மதிக்கலை. சத்தியமா ரொம்ப பிடிச்சுப் போய் தான் கட்டிக்கிறேன். என்ன, ஒரே ஒரு விஷயம் தான் உறுத்தலா இருக்கு”
“என்னது டா?”
‘உன் அப்பா வாய் தான். அது தான் கொஞ்சம் ஓவரா இருக்கு”
“அவர் கிடக்கார் விடு. இந்தா இந்த பட்டு வேஷ்டி சட்டையை மாத்திக்கோ”, என்று அசோக் சொன்னதும் அது கோகுலுக்கு வாங்கியதோ என்று தயங்கினான் ஆதவன்.
“இது அந்த நாய்க்கு வாங்கினது இல்லை டா. எனக்கு வாங்கினது. புதுசு தான். என்னோடதை போட்டுக்க மாட்டியா?”
“என்ன டா இப்படி கேட்டுட்ட? காலேஜ் ஹாஸ்டல்ல ஜட்டியை தவிர மத்த எல்லாத்தையும் மாத்தி மாத்தி போட்டது எல்லாம் மறந்துட்டா என்ன?”, என்று கேட்டு ஆதவன் புன்னகைக்க அசோக் முகத்திலும் புன்னகை உதயமானது.
ஆதவன் உடை மாற்ற ஆரம்பித்தான். பின் மாப்பிள்ளைக்கான அழைப்பு வர அசோக் ஆதவனை அழைத்துக் கொண்டு மணமேடைக்கு வந்தான். அவனை வெறுப்பாக பார்த்தார் ஏகாம்பரம்.
மாப்பிள்ளை மாறியதில் கூட்டத்தில் சலசலப்பு கேட்க ஆதவனை சிந்து அருகில் அமர வைத்தான் அசோக். செல்ல மகளின் அருகே அவன் அமர்ந்திருப்பது ஏகாம்பரத்துக்கு எரிச்சலாக வந்தது.
கூட்டத்தில் எழுந்த சலசலப்பால் ஆதவன் முகம் மாறியது. அவனுக்கு ஏதோ போல இருந்தது. அதைக் கண்ட அசோக் “எல்லாரும் கொஞ்சம் அமைதியா இருங்க. மாப்பிள்ளை மாறினது உங்க எல்லாருக்கும் குழப்பமா இருக்கும். நான் அதுக்கான விளக்கம் சொல்றேன். ஏற்கனவே பாத்த மாப்பிள்ளை ஒரு அயோக்கியன்னு கடைசி நேரத்துல தான் தெரிஞ்சது. அதனால தான் இந்த முடிவு. இப்ப என் தங்கச்சியைக் கட்டிக்க போற மாப்பிள்ளை என்னோட நண்பன் தான். ரொம்ப நல்லவன். அதனால சந்தோஷமா மணமக்களை வாழ்த்துங்க”, என்று சொல்ல கூட்டம் அமைதியானது. கூடவே அவர்கள் பொருத்தத்தையும் வியந்து பார்த்தது.
“அந்த கெட்டவனைப் பத்தி இப்பவே தெரிஞ்சதுன்னு சந்தோஷப் படு ஏகாம்பரம். அவனும் அவன் மூஞ்சியும். இந்த பையன் தான் நம்ம பொண்ணுக்கு பொருத்தமா இருக்கான். ரெண்டு பேரையும் பாக்க அவ்வளவு அம்ஸமா இருக்கு”, என்று ஒரு பெருசு சொல்ல அவரை முறைத்தார் ஏகாம்பரம்.
அப்போது தான் உள்ளே வந்த ரங்கன் மாப்பிள்ளையாக ஆதவன் அமர்ந்திருப்பதைக் கண்டான். அவன் அதிர்ச்சியாக விழிக்க ஆதவன் கண்களால் கெஞ்சினான். அந்த கெஞ்சலில் பல வேண்டுகோள் இருந்தது.
இந்த திருமணம் எனக்கு பிடித்திருக்கிறது, அதைக் கெடுத்து விடாதே என்ற வேண்டுதல். ரத்தினத்திடம் உடனே இந்த தகவலை சொல்லி விடாதே என்ற வேண்டுதல்.
அதை புரிந்து கொண்டான் ரங்கன். “அண்ணன் என் கிட்ட கெஞ்சுவதா? எனக்கு வாழ்க்கை கொடுத்தவங்க என் கிட்ட கெஞ்சுறதா?”, என்று எண்ணிய ரங்கன் சந்தோசமாக புன்னகைத்து விட்டு “புது மாப்பிள்ளைக்கு எல்லாரும் ஜோரா ஓ போடுங்க”, என்று கத்த அதைக் கேட்ட மற்றவர்களும் ஆதவனின் நண்பர்களும் ஓஓஓ என்று கத்தினார்கள். அங்கே சந்தோஷம் மட்டுமே தாண்டவம் ஆடியது. மாப்பிள்ளை மாறியது யார் மனதிலும் பதிய வில்லை.
ரங்கன் கத்தியதைக் கேட்டு மற்றவர்களும் ஆரவாரமாக கத்த ஆதவன் முகம் வெட்கத்தில் சிவந்தது. எல்லார் முகத்திலும் சிரிப்பு மலர்ந்தது. ஆனால் சிரிக்க வேண்டிய சிந்துவோ பயத்துடன் தலை குனிந்து அமர்ந்திருந்தாள்.
அவளுடைய மாலையை சரி செய்வது போல குனிந்த அஞ்சலி “அண்ணா, உங்களைப் பாக்க ரொம்ப நல்லவங்களா தான் தெரியுறீங்க. என் சிந்துவை நீங்க நல்லா பாத்துக்குவீங்க தானே?”, என்று கலக்கத்துடன் ஆதவனிடம் கேட்டாள். அவள் கேட்டது ஆதவனுக்கு தெளிவாக கேட்டது. சிந்துவும் அவன் என்ன பதில் சொல்வான் என்று காதைத் தீட்டிக் கொண்டு காத்திருந்தாள்.
“என்னோட பொண்டாட்டி என்னில் சரி பாதி. அவளை நான் என் கண்ணுக்குள்ள வச்சிப் பாத்துக்குவேன். போதுமா சிஸ்டர்?”, என்று சிறு சிரிப்புடன் ஆதவன் சொல்ல அஞ்சலிக்கு நிம்மதியாக இருந்தது.
அவன் பதிலில், அவனுடைய குரலில் இருந்த உறுதியில் கட்டுண்டு முதல் முறையாக அவனை நிமிர்ந்து பார்த்தாள் சிந்து. அவன் அவளையே பார்த்துக் கொண்டிருக்க படக்கென்று தலை குனிந்து கொண்டாள். அவனுக்கோ அந்த ஒற்றை பார்வை சிலிர்ப்பைத் தந்தது. நிச்சயம் அவளை இயல்பாக தன்னால் மாற்ற முடியும் என்று எண்ணிக் கொண்டான்.
ஏகாம்பரம் மட்டும் அங்கே நடப்பது எதுவும் பிடிக்காமல் மனதுக்குள் புகைந்து கொண்டிருக்க மற்ற அனைவருமே சந்தோஷமாக அவர்கள் திருமணத்தைப் பார்த்தார்கள். ஐயர் சொன்னதும் அனைவரின் ஆசீர்வாதத்துடன் சிந்துவின் கழுத்தில் தாலியைக் கட்டினான் ஆதவன். மூன்று முடிச்சையும் அவனே போட அவள் குனிந்த தலை நிமிரவே இல்லை.
அதன் பின் ஐயர் அவர்களின் நேரத்தை எடுத்துக் கொண்டார். பெரியவர்கள் காலில் விழச் சொல்லும் போது ஏகாம்பரம் காலில் விழ வேண்டுமா என்று தோன்றியது ஆதவனுக்கு. ஏனென்றால் அவர் பேச்சு அவனை கடுப்பேற்றி இருந்ததே.
ஆனால் ஐயர் மணமக்களை அமரச் செய்து மற்றவர்களை வாழ்த்தச் சொல்ல அவர்களுக்கு யார் காலிலும் விழும் நிர்பந்தம் அங்கே அமைய வில்லை.
ஆனந்தவள்ளி இருவருக்கும் விபூதி பூசி வாழ்த்த ஏகாம்பரம் மகளுக்கு மட்டும் பூசி விட்டார். அதை அவன் எதிர் பார்க்கவும் இல்லை. ஆனால் சிந்து மனது முதல் முறையாக “அப்பா ஏன் அவங்களுக்கு பூசலை? எல்லாரும் அவங்களுக்கும் தானே பூசுறாங்க?”, என்று எண்ணியது. அவள் அவளுக்காக கூட இது வரை யோசித்ததில்லை. ஆனால் அவனுக்காக முதல் முறையாக சிந்தித்தாள். அதுவே பெரிய மாற்றம் தானே?
மண மேடையை சுற்றும் போது அவள் கைகள் அவன் கரங்களுக்குள் அடங்கி இருக்க அவளுக்கோ வியர்த்து ஊற்றியது. அவள் கைகளில் இருந்த ஈரமும் நடுக்கமும் அவளது பயத்தை அப்பட்டமாக அவனுக்கு புரிய வைக்க அவள் கரத்தை அழுத்திப் பிடித்துக் கொண்டான். எப்போதும் உன்னைக் கை விட மாட்டேன் என்ற உறுதி அதில் இருக்க அவளுக்கோ மேலும் பயமாக தான் இருந்தது.
அதன் பின் மணமக்கள் ரிசப்ஷன் மேடையில் நிற்க “தங்கச்சி சிந்து பக்கத்துலே நீ நில்லு மா. எங்கயும் போகாத. அவ கூடவே இரு. நீ இருந்தா அவ தைரியமா இருப்பா. நானும் வேற அவளுக்கு புதுசு”, என்று சொன்னான் ஆதவன். அவன் அப்படிச் சொன்னதும் தன்னையறியாமலே மீண்டும் அவனை நிமிர்ந்து பார்த்தாள் சிந்து.
மீன் போன்று இருந்த அவளுடைய கண்களையே ஊடுருவிப் பார்த்தான் ஆதவன். ஏதோ அவளுடைய கண்களுக்குள்ளே செல்லும் உணர்வு அவனுக்கு வந்தது. அவன் அவளையே பார்க்கவும் அவள் தலை குனிந்து கொண்டாள். அவனும் சிரித்துக் கொண்டான்.
ஆதவன் பேச்சில் ஆச்சர்யமான அஞ்சலிக்கு தோழி மீது அவன் வைத்திருக்கும் அக்கறை பிடித்திருந்தது. “நீங்க என்னை கரடின்னு துரத்தி விடுற வரைக்கும் இங்க தாண்ணா இருப்பேன். என் பிரண்டை விட்டு நான் எப்படிப் போவேன்?”, என்று அவனிடம் சொல்லி சிரித்த அஞ்சலி சிந்துவுக்கு மட்டும் கேட்கும் வகையில் “இவர் தான் உனக்கு பெஸ்ட் சிந்து. உன் அப்பாவை விட உன்னை நல்லாப் பாத்துக்குவாங்க”, என்று சொல்ல ஏதோ சிந்துவுக்கும் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.
அடிக்கடி பார்த்திருந்தாலும் கோகுல் அவளிடம் சாதாரணமாக கூட பேச மாட்டான். அவளிடம் அக்கறையாகவும் பேச மாட்டான். அதனால் அவனைத் திருமணம் செய்ய அவளுக்கு பயமாக தான் இருந்தது. இப்போது அந்த பயம் எல்லாம் அவளை விட்டு அகன்றிருந்தது.