“அம்மா எத்தனை தடவை சொன்னாலும் இவருக்கு புரியாது. ஆதவன் இல்லைன்னா நம்ம சிந்து எதிர் காலமே கேள்விக் குறி ஆகிருக்கும். என்னோட நட்பை மதிச்சி, உங்க வார்த்தைக்காக அவன் வாழ்க்கையவே ஒப்படைச்சிருக்கான். இவருக்கு எங்க அந்த நன்றி உணர்வு எல்லாம் வரப் போகுது? அவனுக்கு என்ன குறைச்சல் சொல்லுங்க? இவருக்கு இவரோட அக்காவும் அக்கா குடும்பமும் தான் முக்கியம். நீங்க வீட்டுக்கு கிளம்புங்க. நான் மண்டபத்தை கிளீன் பண்ணச் சொல்றேன். நாம அடுத்த வேலையைக் கவனிப்போம். ஆதவன் கிட்ட இருந்து கால் வந்த அப்புறம் மத்தது எல்லாம் பேசிக்கலாம்”, என்று சொல்லி அமுதவள்ளியை அங்கிருந்து அழைத்துச் சென்றான்.
அவர்கள் சென்றதும் ஒரு பெருசு வந்து ஏகாம்பரம் அருகில் அமர்ந்தார். “ஏகா, உன் பொண்ணுக்கு நல்ல மாப்பிள்ளை அமைஞ்சிட்டார். என்னா கலரு. அப்படியே வெள்ளை வெளேர்னு இருக்கார்ல?”, என்று கேட்டார்.
“என்னது அவன் கலரா?”, என்று ஏகாம்பரம் கேட்க “உன் அக்கா மகனை விட கலர் தான். என்ன ஒரு கம்பீரம்? அப்படியே ஒரு சிரிப்பு சிரிச்சார் பாரு. நானே ரசிச்சேன். உன் மக கொடுத்து வச்சவ”, என்று அவர் ஆதவனை புகழ “யோவ் போயா”, என்று சொல்லி விட்டு அறைக்குள் சென்றவர் “என்னால உன்னை மாப்பிள்ளையா ஏத்துக்க முடியலை டா. உன்னை எனக்கு பிடிக்கவே இல்லை”, என்று ஆதவன் நேரில் இருப்பதாக எண்ணிக் கொண்டு அவனிடம் பேசினார். அதே நேரம் அவருக்கு மகளின் எதிர்காலம் குறித்து கவலையாக இருந்தது. கோகுலை நினைத்து ஆத்திரமாக வந்தது.
அப்போது அவரது போன் அடிக்க அதை எடுத்துப் பார்த்தார். அவரது அக்கா பார்வதி தான் அழைத்தாள்.
அதை எடுத்து “சொல்லுக்கா”, என்று எரிச்சலுடன் சொன்னார்.
“எங்க இருக்கீங்க தம்பி? நான் வந்த அப்புறம் அங்க என்ன நடந்துச்சு தம்பி? சிந்து தங்கம் கலங்கிட்டாளா? உன் பொண்டாட்டி அந்த பேச்சு பேசலைன்னா நான் சிந்துவை என் நெஞ்சுல தாங்கிருந்துருப்பேனே? என் மருமகளை ஒரு நாலு நாள் என் வீட்ல விட்டுட்டு போறியா? நான் அவளை நல்லா பாத்துக்குறேன். கொஞ்ச நாள் கழிச்சு கேசவனுக்கு கல்யாணம் முடிச்சுக் கொடுத்துறலாம்”
“அடப் போக்கா நீ வேற. இங்க என்ன எல்லாமோ நடந்துருச்சு”
“என்ன டா?”
“சிந்துவுக்கு கல்யாணம் ஆகிருச்சு. இனி அவ உன் மருமக இல்லை?”
“என்னது?”
“ஆமா, நம்ம அசோக்கோட ஃபிரண்ட் கூட கல்யாணம் முடிஞ்சிருச்சு. மாப்பிள்ளை ஊர் கோயம்புத்தூர் பக்கம் ஏதோ கிராமமாம். கிளம்பி போய்ட்டா என் பொண்ணு”
“ஏன் டா இதுக்கு சம்மதிச்ச? நீ தடுத்து நிறுத்திருக்கலாம்ல?”, என்று அவள் கோபத்துடன் கேட்க “உன் மவன் பண்ணின வேலைக்கு என்னை என்ன பண்ணச் சொல்ற?”, என்று எரிச்சலுடன் கேட்டார் ஏகாம்பரம்.
“அதை விடு தம்பி. அந்த மாப்பிள்ளையை உனக்கு பிடிக்கலையா?”, என்று போட்டு வாங்கினாள் பார்வதி.
“ஆமாக்கா. அவனைப் பாத்தாலே எரிச்சல் வருது”, என்று உண்மையைச் சொன்னார் ஏகாம்பரம்.
“அப்படின்னா என் மருமகளை கூட்டிட்டு வந்துரு டா. நான் கேசவன் கிட்ட இன்னைக்கே பேசுறேன். உடனே கல்யாணம் முடிச்சு வச்சிறலாம். என்னைக்கு இருந்தாலும் அவ என் மருமக டா”
“சரி, போனை வை. என்ன செய்ய முடியும்னு பாக்குறேன்”
“சரி டா தம்பி. எனக்கும் ஏதோ போன் வருது. அப்புறம் பேசுறேன்”, என்று சொல்லி விட்டு உடனேயே வந்த இரண்டாவது காலை எடுத்தாள். ஆனால் அந்த பக்கம் பேசுவது கேட்காமல் போனதால் “ஹலோ ஹலோ, கேக்குதா?”, என்ற படி அவள் கான்பரன்ஸ் பட்டனை அழுத்தி விட்டாள்.
“அம்மா, நான் கோகுல் பேசுறேன்”, என்று சத்தம் கேட்டதும் போனைக் கட் பண்ணாமல் காதிலே வைத்திருந்தார் ஏகாம்பரம். அவர் அவனை திட்ட நினைக்கும் போது “எடுபட்ட நாயே, எங்க டா சோவாரப் போன? எவ்வளவு சொத்து, எவ்வளவு பணம்? எப்பேற்பட்ட குடும்பம்? சொந்தமா உனக்கு ஆஸ்பத்திரி வச்சு தறேன்னு வேற சொல்லிருந்தான். எல்லாத்தையும் கெடுத்துட்டியே?”, என்று கத்தினாள் பார்வதி.
பார்வதி பேச்சில் அதிர்ந்து போய் இருந்தார் ஏகாம்பரம். “அக்காவுக்கு, பணம் சொத்து தான் முக்கியமா? என் மக முக்கியம் இல்லையா?”, என்ற கேள்வி எழுந்தது அவருக்குள். அதனால் அவர்கள் பேசியதை அமைதியாக கேட்டார். உண்மை அவர்கள் வாயாலே வரட்டும் என்பது அவர் எண்ணம்.
“போமா, எப்ப பாத்தாலும் பணம் சொத்துன்னு உயிரை வாங்கிக்கிட்டு. சொத்துக்காக ஒரு பொம்மை கூட வாழ முடியுமா? துணி எடுக்க போகும் போது கார் பார்க்கிங்ல வச்சு ஒரு முத்தம் கொடுக்க போறேன். ஊன்னு ஒரே அழுகை. அவளை மியூசியம்ல தான் கொண்டு வைக்கணும். அதெல்லாம் உனக்கு புரியாது. சரி விடு. அங்க என்ன நடந்துச்சு?”
“அவளுக்கு வேற ஒருத்தன் கூட கல்யாணம் ஆகிருச்சாம் டா”
“கட்டினவன் பாவம். நான் தப்பிச்சிட்டேன்”
“போடா கூறு கெட்டவனே. அவ்வளவு சீக்கிரம் அவளை விட்டுற மாட்டேன். அவளை வச்சு தான் நாம செட்டில் ஆக முடியும். நீ டாக்டர்க்கு படிச்சது, உன் தம்பி போலீஸ் ஆனது, எல்லாம் என் தம்பியால தான். சிந்து என் மருமகளா வந்துட்டா நம்ம நிலைமை இன்னும் மாறிரும்”
“அதுக்கு என்ன பண்ணச் சொல்ற? என்னால அவளைக் கட்டிக்க முடியாது”
“அண்ணன் கிட்ட அவளை அவ புருஷன் கிட்ட இருந்து வெட்டி விடச் சொல்லிட்டு நம்ம கேசவன்க்கு கட்டிக் கொடுக்க கேட்டுருக்கேன் டா. என் தம்பியும் சரின்னு சொல்லிட்டான். இனி உன் தம்பிக் கிட்ட பேச வேண்டியது தான் பாக்கி”
“அட போமா, அவன் எப்படி வீட்டோட மாப்பிள்ளையா இருக்க சம்மதிப்பான்? அவனுக்கும் அவளைப் பிடிக்காது”
“அவனை எப்படியாவது சம்மதிக்க வைக்கணும். சும்மா ஒரு மாசம் என் தம்பி வீட்ல போய் உக்காந்துட்டு அப்புறம் வேலை பாக்குற இடத்துக்கு அவளை கூட்டிட்டு போகச் சொல்லிருவேன். கேசவனுக்கும் அவளைப் பிடிக்கலைன்னா சிந்துவை அத்து விட்டுட்டு வேற பொண்ணை கட்டி வைப்பேன் டா. என் தம்பிக் கிட்ட நீலிக் கண்ணீர் வடிச்சா நம்பிருவான். சிந்து நம்ம வீட்டுக்கு மருமகளா ஆகணும் டா. அதுக்கப்புறம் அவ கூட வாழ்ந்தாலும் சரி. வாழாம போனாலும் சரி. எப்படியும் சொத்து நமக்கு வரும். அது போதும். அந்த வள்ளி என்னை மதினியார்னு கொஞ்சமாவது மதிக்கிறாளா? அவளுக்கு நான் பாடம் புகட்ட வேண்டாமா? அவ மக மூலமா தான் நான் அதைச் செய்யணும்”
“அந்த அத்தை மேல உனக்கு என்ன தான் வஞ்சமோ? சரி நீ கேசவன் கிட்ட பேசு. அவன் அவளைக் கல்யாணம் பண்ணிகிட்டா எனக்கு ஹாஸ்பிட்டல் கிடைக்க வாய்ப்பிருக்கு”, என்று கோகுல் சொல்ல “அடி செருப்பால? என்ன டா வாய்ப்பிருக்கு மயிரு.. அப்பன் இல்லாத பிள்ளைகள்னு படிக்க வச்சு பெரிய பொறுப்புல உக்கார வச்சா, அடி மடிலே கையை வைக்கீங்களா? பாவம் பாவம்னு பாத்த எனக்கே ஆப்பு அடிக்கிறீங்களா?”, என்று கத்தினார் ஏகாம்பரம்.
அவர் குரல் கேட்கவும் அம்மா மகன் இருவரும் அதிர்ந்து போனார்கள். “தம்பி…” “மாமா”, என்று இருவரும் பதறிப் போய் அழைக்க “வாயை மூடுங்க. மனுசங்களா நீங்க? எவ்வளவு நம்பினேன்? இப்படி கழுத்தை அறுத்துட்டீங்களே? எப்படி எப்படி என் பணத்துல சொகுசா வாழணும்னு பிளான் போடுறீங்களோ? கடவுள் இருக்கான். அதான் சரியான நேரத்துல உங்களை பத்தி தெரிய வச்சிட்டார். இன்னும் தம்பி மாமான்னு உறவு சொல்லிட்டு யாரும் வீட்டுப் பக்கம் வந்தா காலுல போட்டுருக்குற செருப்பைக் கழட்டி அடிப்பேன்”, என்றார்.
“தம்பி, இந்த அக்கா சொல்றதை கேளு டா”
“வாயை மூடு, உன்னை எல்லாம் அக்கான்னு சொல்லவே எனக்கு அருவருப்பா இருக்கு. என் கிட்டயே பிடுங்கி தின்னுட்டு என் மகளுக்கே துரோகம் செய்ய பாத்துருக்கீங்க. டேய் கோகுல் நாயே, என் மக கிட்ட இருந்து நீ எஸ்கேப் ஆகல டா. உங்க குடும்பத்துக் கிட்ட இருந்து என் மக தான் தப்பிச்சிருக்கா”
“மாமா… நான்….”
“சீ என்னை அப்படிக் கூப்பிடாதே. நீயெல்லாம் ஒரு பிறவி து. உன்னை அடக்கணும்னு நான் உன்னை வீட்டோட மாப்பிள்ளையா இருன்னு சொல்லலை. என் மக கஷ்டப் படக் கூடாதுன்னு தான் சொன்னேன். ஆனா நீங்க எவ்வளவு சுயநலமா இருந்துருக்கீங்க?”
“தம்பி”
“உன்னை வாயை மூடச் சொன்னேன். ஒழுங்கு மரியாதையா இன்னும் ஒரு மாசத்துல நான் உனக்கு வாங்கிக் கொடுத்த வீட்டை விட்டு நீ கிளம்பிருக்கணும். பத்திரத்தை வாங்க என் பி. ஏ வருவான். எதுல கையெழுத்து போடணுமோ போட்டுட்டு போய்க்கிட்டே இரு. அக்கா நொக்கான்னு நான் செஞ்சது எல்லாம் போதும். என் பொண்டாட்டி பேச்சைக் கூட கேக்காம உன்னை எல்லாம் அக்கான்னு மதிச்சு எல்லாம் செஞ்சேன் பாரு. என்னை செருப்பால அடிக்கணும். வை போனை”, என்று சொல்லி விட்டு வைத்து விட்டார். அவருக்கு அவர்களின் பேச்சைக் கேட்டு நெஞ்சமெல்லாம் காந்தியது.
இப்போது நடந்ததை அமுதவள்ளியிடம் சொன்னால் காலம் முழுமைக்கும் பார்வதியைக் கழுவிக் கழுவி ஊற்றுவாள் என்பதால் வாயை இறுக்கமாக மூடிக் கொண்டார். மீண்டும் சிந்து விடத்தில் அவர் நினைவு சென்றது. பார்வதி குடும்பம் பற்றி உண்மை தெரிந்தாலும் அவரால் ஆதவனை மாப்பிள்ளையாக எண்ண முடியவில்லை.
அதே நேரம் சிந்து சென்று கொண்டிருக்கும் கார் பைப்பாசை தாண்டிக் கொண்டிருந்தது. ஆதவன் சீட்டில் தலை சாய்த்து படுத்திருந்தான். சிந்து அமைதியாக வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் கண்கள் இந்த பக்கம் திரும்பவே இல்லை. ஆதவன் என்ன மூடில் இருக்கிறான் என்று தெரியாமல் ரங்கனும் எதுவும் பேசுவதாக இல்லை.
காருக்குள் அமைதியே நிலவ ஆதவன் போன் இசைத்தது. சிந்துவும் அவனைத் திரும்பிப் பார்த்து விட்டு மீண்டும் திரும்பிக் கொண்டாள். அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு போனை எடுத்து யாரென்று பார்த்தான்.
மங்கை தான் அழைத்தாள். அதை எடுத்தவன் “சொல்லு மா”, என்றான்.
“எங்க தம்பி இருக்க?”
“இப்ப தான் கிளம்பிருக்கோம் மா. வரதுக்கு பதினொரு மணி இல்லை பன்னிரெண்டு மணி ஆகிரும்”