“நல்லது நல்லது. ஆமா உன் குரல்ல ரொம்ப சந்தோஷம் தெரியுது. அவன் எதுக்கு டா அழுது வடிஞ்சிட்டு பேசுறான்?”
“அது… அது வந்து மா”
“என்ன டா இழுக்குற? ஆதவன் தண்ணி கிண்ணி அடிச்சானா?”, என்று மங்கை கேட்க “அம்மா நீ என்னை எப்ப தான் நம்ப போற? எனக்கு அந்த பழக்கமே இல்லை. சும்மா போனைப் பண்ணி கடுப்பேத்தாம வை போனை”, என்று சொல்லி கட் பண்ணி விட்டான் ஆதவன். அவன் கோபத்தை மிரண்டு போய் பார்த்தாள் சிந்து.
“அம்மா கிட்ட ஏண்ணே கோபப் படுற?”, என்று கேட்டான் ரங்கன்.
“மனுஷன் நிலைமை புரியாம படுத்துது டா. அங்க போனதும் அப்பா என்ன சொல்வாரோன்னு எனக்கு பயமா இருக்கு. உனக்கு தான் அவரைப் பத்தி தெரியும்ல?”
“விடுண்ணே பாத்துக்கலாம். நீயும் தங்கச்சியும் ஐயா காலுல விழுந்தா எல்லாம் சரியா போகும். அப்படியே ஆசீர்வாதம் பண்ணுவார் பாரேன்”
“என்ன நடக்குமோ தெரியலை. பயமா தான் இருக்கு”, என்ற படி அருகில் இருந்தவளைத் திரும்பி பார்த்தான். அவளோ கண்களில் கண்ணீர் மறைக்க தலை குனிந்து அமர்ந்திருந்தாள்.
“இப்ப எதுக்கு அழுற?”, என்று சிடுசிடுத்தான்.
அவள் அமைதியாக இருக்கவும் “சிந்து, இப்ப எதுக்கு அழுற?”, என்று கேட்டான்.
“இந்த கல்யாணம் தான்….”, என்று முணங்கினாள். இந்த திருமணத்தால் அவனுக்கு பிரச்சனை என்று அவள் வருத்தப் பட அவனோ “என்னைக் கல்யாணம் பண்ணினதை நினைச்சு அழுறாளா? எங்க கல்யாணம் இவளுக்கு இந்த அளவுக்கு வருத்தத்தைக் கொடுக்குதா?”, என்று எரிச்சலுடன் எண்ணினான்.
“இப்ப எதுக்கு இப்படி அழுது சீன் போட்டுட்டு இருக்க? நடந்தது நடந்து போச்சு. இனி எதையும் மாத்த முடியாது. ஏற்கனவே நான் செம கடுப்புல இருக்கேன். நீ வேற என் ஆத்திரத்த கிளப்பாத. ஏற்கனவே உன் அப்பன் என்னை பேச கூடாதது எல்லாம் பேசிட்டார். இங்க எங்க அப்பன் என்ன வச்சிருக்காரோ தெரியலை. நீயும் வேற படுத்தாத”, என்று சொல்ல அவனைத் திரும்பி பார்த்தாள். அவனும் அவளைப் பார்த்தான்.
ஆனால் அவள் கண்ணீர் இன்னும் அதிகமாகவும் “இப்ப எதுக்கு டி இப்படி ஒப்பாரி வச்சிட்டு இருக்க?”, என்று எரிச்சலுடன் கேட்டான்.
“அப்பாவைப் பாக்கணும்”
“அதானே பாத்தேன். அதுக்குள்ள உன் அப்பாவைத் தேடிட்டா? அந்த ஆளை நினைச்சாலே கண்ணுல தண்ணி ஊத்திக்குமே. அவருக்கு போன் போட்டு பேசு”
“அப்பாவை பாக்கணும் போல இருக்கு”
“இதுக்கே உங்க ரெண்டு பேரையும் பிரிச்சி வைக்கணும்”, என்று அவன் சொல்ல அவளோ அவனை அதிர்ந்து போய் பார்த்தாள்.
“அண்ணே, சும்மா சும்மா தங்கச்சியை எதுக்கு மிரட்டுற? ஐயாவை நினைச்சு நீ பயப்படுற மாதிரி தானே அதுவும் பயப்படும். நீ உன் பயத்தை தங்கச்சிக் கிட்ட கோபமா வெளிப்படுத்துறது சரி இல்லைண்ணே”, என்றான் ரங்கன்.
“வாயை மூடிட்டு அந்த இளநீர் கடைல வண்டியை நிறுத்தி இளநீர் வாங்கு டா”
“சரிண்ணே”, என்று சொல்லி காரை நிறுத்தியவன் காரில் இருந்து இறங்கி இரண்டு இளநீர் வெட்டி வாங்கிக் கொண்டு காருக்குள் வந்து அவனிடம் கொடுத்தான்.
இரண்டையும் கையில் வாங்கிய ஆதவன் “நீயும் குடிச்சிட்டு வா”, டா”, என்றதும் அந்த ஏசி காரை மூடி விட்டு இளநீர் குடிக்கச் சென்றான்.
“இந்தா குடி”, என்று அவள் புறம் ஒன்றை நீட்டினான் ஆதவன். அவன் அமைதியாக சொல்லியிருந்தால் வாங்கியிருப்பாளோ என்னவோ? அவன் இது வரை கோபமாகவே பேசவும் “எனக்கு ஒண்ணும் வேண்டாம்”, என்றாள்.
“அப்ப இதை நான் என்ன செய்ய? தூர எரியவா?”, என்று அவன் கேட்டதும் அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவன் விழிகள் அவளிடம் இதை குடி என்று மிரட்டவும் இல்லை. குடியேன் என்னும் கெஞ்சவும் இல்லை. ஆனால் அவளைப் பார்த்த படியே இருக்கவும் அவனது அமைதியான பிடிவாதம் அவளுக்கு புரிந்தது.
அவசரமாக அதை வாங்கிக் கொண்டாள். ஸ்ட்ராவை வாயில் வைத்து உரிய ஆரம்பித்தாள். அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் ஆதவன். ஸ்ட்ராவை இரண்டு உதடுகளுக்கு இடையில் வைத்து அவள் உரிய அவன் கண்கள் அவளுடைய சிவந்த உதடுகளில் நிலைத்தது. அது வரை இருந்த எரிச்சல் மறைந்து அவளை ரசனையாக பார்த்தான். மணப்பெண்ணுக்கே உரிய அலங்காரத்தில் அவள் அழகு பல மடங்கு அதிகமாக தான் தெரிந்தது.
“கடவுளே இவளைப் பற்றி வீட்டில் என்ன சொல்வது? இவள் என்னோட வீட்டில், என்னோட ஊரில் இயல்பா இருப்பாளா??”, என்று பல விதமான சிந்தனை உதயமானது.
“அண்ணே இளநீர் குடிச்சிட்டேன். வழுக்கை வெட்டித் தரச் சொல்லவா?”, என்று கேட்டான் ரங்கன்.
“இப்ப இருக்குற நிலைமைல வழுக்கை திங்குற ஆசையா டா வரும்?”, என்று ஆதவன் சொல்ல “எனக்கு வெட்டித் தாங்க அண்ணா”, என்று தன்னுடைய இளநீயை நீட்டியிருந்தாள் சிந்து.
ஆதவன் அவளை திகைப்பாக பார்க்க “கொடு மா தங்கச்சி அண்ணன் வெட்டி வாங்கிட்டு வரேன். கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை?”, என்று சொல்லி விட்டு வாங்கிச் சென்றான்.
அவன் அப்படிச் சொன்னதில் களுக்கென்று சிரித்தாள் சிந்து. அவளை அவன் வியப்பாக பார்த்தான். சிறிது நேரத்துக்கு முன்பு அப்படி அழுதவளா இவள் என்று வியப்பாக இருந்தது அவனுக்கு.
அப்போது அவனை நிமிர்ந்து பார்த்தவள் அவன் தன்னையே பார்த்த படி இருக்கவும் அவன் பார்வையில் கூச்சம் வர “எனக்கு இளநீயை விட வழுக்கை தான் பிடிக்கும். அதான்”, என்று முணுமுணுத்தாள்.
“இவள் குமரியா? இல்லை, குமரி உருவத்தில் இருக்கும் குழந்தையா?”, என்று எண்ணினான் ஆதவன்.
“இந்தா மா தங்கச்சி. சாப்பிடு. இந்தா இதையே ஸ்பூன் மாதிரி வச்சி சாப்பிடு. கைல படாது”, என்று பாசமாக கொடுத்த ரங்கன் “இன்னொரு இளநீயை வாங்கிட்டு வரவா மா?”, என்று கேட்டான்.
“இல்லைங்கண்ணா வேண்டாம், இதுவே போதும்”, என்று சொன்ன சிந்து அதை உண்ண ஆரம்பிக்க ஆதவன் ரங்கனைப் பார்த்தான்.
ரங்கன் சிந்துவையே நெகிழ்வாக பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டு “என்ன டா பார்வை பலமா இருக்கு”, என்று நக்கலாக கேட்டான் ஆதவன்.
“தங்கச்சி சாப்பிடுதுண்ணே”, என்று பாசமாக சொல்ல “நான் என்ன உன் தங்கச்சி வாந்தி எடுக்குறானா சொன்னேன்? நானே வீட்ல என்ன ஆகும்மோன்னு பயத்துல இருக்கேன். ஊர்க்காரங்களை நினைச்சா அதுக்கு மேல கலக்கமா இருக்கு. தொழில் போட்டிக்காரங்க எப்ப டா சந்தர்ப்பம் கிடைக்கும்னு இருக்கானுங்க. அதை நினைச்சு பயந்துட்டு வந்தா நீங்க பாசமலர் படம் ஒட்டிட்டு இருக்க. காரை எடு டா பேசாம”, என்று சொன்னதும் அவசரமாக காரை எடுத்த ரங்கன் “ஏண்ணே இப்ப நீ சொன்னது விவேக் பட வசனம் தானே?”, என்று கேட்டான்.
“ஆமா ஆமா, நானும் பாத்துருக்கேன்”, என்று வழுக்கை தேங்காயை சாப்பிட்டுக் கொண்டே வந்த சிந்து சொல்ல அவளைத் திரும்பிப் பார்த்தான் ஆதவன். அவள் அப்படியே அமைதியாகி விட்டாள்.
சிறிது தூரம் சென்றதும் தன்னுடைய கையில் இருந்த குப்பையை தூரப் போட்டிருந்தாள் சிந்து. பின் அவள் கண்கள் வெளிப் பக்கம் பார்த்து இயற்கை காட்சிகளை ரசித்த படி வந்தது.
அதன் பின் இரவு எட்டு மணிக்கு இரவு உணவு உண்ண ஒரு ஹோட்டலில் வண்டியை நிறுத்தினான் ரங்கன். “டேய் ரங்கா, இவ இதே டிரஸ் ஓட ஹோட்டலுக்கு வர முடியாது. அதனால சாப்பாடு வாங்கிட்டு வந்துரு. கார்ல வச்சு சாப்பிட்டுக்கலாம்”, என்றான் ஆதவன்.
சரி என்று சொல்லிச் சென்ற ரங்கன் அவர்கள் இருவருக்கு மட்டும் உணவை வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தான். “உனக்கு இல்லையா டா?”, என்று கேட்டான் ஆதவன்.
“நான் ஹோட்டல்ல உக்காந்து ஃபுல் கட்டு கட்ட வேண்டாமா? நமக்கு இந்த ஒரு செட் தோசை எல்லாம் பத்தாது”, என்று சொல்லிச் சென்றான். ஆனால் அவர்களுக்கு தனிமை கொடுக்க தான் அவன் செல்கிறான் என்று ஆதவனுக்கு புரிந்தது.
சிறு சிரிப்புடன் “கை கழுவிட்டு சாப்பிடு சிந்து”, என்றான். அவளும் கை கழுவி விட்டு அமர ஆதவன் உணவு பொட்டலத்தைப் பிரித்தான்.
ஒரு செட் தோசை, ஒரு செட் இட்லி, ஒரு செட் சப்பாத்தி என்று அவன் வாங்கி இருக்க அதில் எதை எடுத்து சாப்பிட என்று தெரியாமல் தடுமாறினாள் சிந்து. ஏனென்றால் இட்லியை எடுத்தால் அவனுக்கு இட்லி தேவையாக இருக்குமோ என்று அவளுக்கு குழப்பமாக இருந்தது.
அவள் குழப்பத்தைக் கண்டவன் தோசையில் பாதியைப் பிய்த்து அவளுக்கு கொடுத்து விட்டு இட்லியில் பாதியை எடுத்துக் கொண்டான்.
அவள் மெதுவாக உண்டு கொண்டிருக்க அவன் உண்டு விட்டு சப்பாத்தியைப் பிரித்தான். அவளுக்கு ஒன்று வைக்கப் போக “எனக்கு போதும்”, என்ற படி அவன் கையைப் பிடித்தாள் சிந்து.
அவள் கை பட்டதும் அவன் ரசனையுடன் அவளைப் பார்க்க அவளோ “சாரி”, என்று சொல்லி விட்டு கையை எடுத்துக் கொண்டாள்.
சிறு சிரிப்புடன் அந்த சப்பாத்தியை உண்ண ஆரம்பித்தான். அவன் உண்டு முடிக்கும் போது அவள் ஒரு இட்லியை வைத்துக் கொண்டு உண்ண முடியாமல் திணற “சாப்பிட முடியலையா?”, என்று கேட்டான்.
“ம்ம், தூரப் போட்டுறவா?”, என்று தயக்கத்துடன் கேட்க “என் வயித்துல கொஞ்சம் இடம் இருக்கு”, என்ற படி அதை எடுத்து வைத்து உண்ண ஆரம்பித்தான்.
“ஐயோ அது எச்சி”, என்று சொல்ல அதற்குள் அந்த இட்லி அவன் வாய்க்குள் சென்றிருந்தது.
அவள் அவனை பேவென்று பார்த்துக் கொண்டிருக்க அவளது அந்த தோற்றம் அவனுக்கு ரசிக்கும் படியாக இருந்தது. எப்போதும் அவன் பார்த்தால் தலை குனிந்து கொள்பவள் இப்போது அவனையே பார்க்கவும் அவனும் அவளைப் பார்த்தான். அவள் இதழின் ஓரம் சிறு உணவுத் துணுக்கு ஒட்டி இருக்க தனது வலது கையை அவள் முகம் நோக்கி நகர்த்தினான்.
அவள் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்க பெரு விரல் கொண்டு அந்த துணுக்கை துடைத்தவன் அவள் உதடை முழுமையாக வருடி விட்டே கையை விலக்கினான். படக்கென்று காரில் இருந்து இறங்கியும் விட்டான். அங்கேயே அமர்ந்திருந்தால் தன்னுடைய கட்டுப்பாட்டையும் மீறி அவளை நெருங்கி விடுவோம் என்று அவனுக்கு பயம் வந்திருந்தது.
கணவனாக மனைவியை நெருங்க அவனுக்கு எந்த தயக்கமும் இல்லை தான். தன்னுடைய உதடால் அந்த உணவுத் துணுக்கை எடுக்க கூட அவனுக்கு விருப்பம் தான். ஆனால் சிந்துவின் மனநிலையை கணக்கில் கொண்டு தான் வெளியே வந்து விட்டான். சிறிது நாள் ஆகட்டும் என்று எண்ணிக் கொண்டான். இருந்தாலும் அவள் இதழ்களை வெகு அருகில் பார்த்ததும் அதைச் சுவைக்க தான் அவனுக்கு ஆவல் வந்தது.
கை கழுவி விட்டு முகத்தில் தண்ணீரை அடித்து தன்னுடைய உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வந்தான். அவளோ பிரம்மை பிடித்த மாதிரி அமர்ந்திருந்தாள்.
நடந்ததெல்லாம் சரியா தவறா என்ற மிகப் பெரிய குழப்பம். அவன் தொட்டதும் தனக்குள் எழுந்த மாற்றங்கள் புரிய வில்லை என்றாலும் அதை உணர்ந்தவளுக்கு அதை எப்படி எடுக்க என்று தான் தெரிய வில்லை. கூடவே அவன் ஏன் அப்படிச் செய்தான் என்று குழப்பமும் வந்தது.
சில நேரம் அவள் சாப்பிடும் போது அப்படி உணவு ஒட்டி இருந்தால் ஏகாம்பரம், அசோக், அமுதவள்ளி, அஞ்சலி என அனைவரும் துடைத்து விட்டிருக்கிறார்கள் தான். ஆனால் அப்போதெல்லாம் உருவாகாத புதிய உணர்வு இப்போது அவளுக்குள் எழுந்தது.
அதுவும் அவன் விரல் தன்னுடைய உதட்டை வருடும் போது அவன் கண்களில் வந்த மாற்றத்துக்கான அர்த்தம் அவளுக்கு புரியவே இல்லை.