ஆனாலும் போட்டிருக்கும் நைட்டி எப்போது விலகுமோ என்ற பயத்திலே வெகு நேரம் விழித்திருந்தாள். அவள் அருகில் படுத்திருந்த ரங்கநாயகியோ நல்ல உறக்கத்தில் இருந்தார்.
சிந்துவின் பட்டுச் சேலையை மடித்து கொடியில் போட்டு விட்டு வந்த மங்கை அவளுக்கு மறுபுறம் படுத்தாள். சிந்து அதைக் கவனித்துக் கொண்டு தான் இருந்தாள். சிந்து தூங்கி விட்டாள் என்று எண்ணி அவளுக்கு போர்வையை போத்தி விட்டாள் மங்கை. மங்கையின் அந்த செய்கை சிந்துவுக்கு அவளது தாயை நினைவு படுத்தியது. அதனால் சிந்துவுக்கு மங்கை மற்றும் ரங்கநாயகி மீதான பயம் குறைந்தது.
அதே நேரம் தன்னுடைய அறையில் படுத்திருந்தான் ஆதவன். அவனுக்கு தூக்கம் வருவேனா என்று இருந்தது. தன்னுடைய குடும்பம் திருமணத்தை இவ்வளவு எளிதாக ஏற்றுக் கொண்டதை எண்ணி சந்தோஷமாக இருந்தது. அப்போது தான் ரிசப்ஷன் பற்றி சிந்து வீட்டில் சொல்ல வேண்டும் என்ற நினைவு வந்தது. அதனால் மணியைக் கூட பார்க்காமல் அசோக்குக்கு அழைத்து விட்டான்.
தங்கையின் வாழ்வு என்ன ஆகுமோ என்ற கவலையில் தூங்காமல் தான் இருந்தான் அசோக். அதனால் நண்பன் அழைக்கவும் உடனே எடுத்து விட்டான்.
“டேய் மாப்பிள்ளை, எதுவும் பிரச்சனை இல்லையே?”, என்று அசோக் பரபரப்பாக கேட்க “அதெல்லாம் ஒண்ணும் இல்லை டா. எல்லாம் ஓகே தான். நாளைக்கு சாயங்காலம் ரிசப்ஷன் வச்சிருக்காங்க. அத்தை மாமா கிட்ட சொல்லிரு. அதைச் சொல்லத் தான் கூப்பிட்டேன்”, என்றான் ஆதவன்.
“நிஜமாவா டா? நான் பயந்துட்டே இருந்தேன். நீ ஓகே தானே? உன் மனசுல ஏதும் கஷ்டமா இல்லைல்ல?”
“சிந்து… சிந்து ஓகே தானே?”, என்று கேட்டவனின் குரலில் அண்ணனுக்குரிய தவிப்பு தெரிந்தது.
“அவ என் பொறுப்புன்னு சொன்னேனா இல்லையா? சிந்து அம்மா பாட்டி கூட தூங்க போயிட்டா. அப்பா சொந்தக்காரங்களுக்கு இப்பவே சொல்ல ஆரம்பிச்சிட்டார். ரங்கன் எல்லா ஏற்பாடும் செய்ய ஆரம்பிச்சிட்டான்”
“மாமா ஒண்ணுமே சொல்லலையா?”
“நானும் செம பீதில தான் டா வந்தேன். சும்மாவே என்னை வச்சி செய்வார். இன்னைக்கு நான் செத்தேன்னு நினைச்சேன். கூடவே சிந்துவை எதுவும் சொல்லிருவாங்களோன்னு பயந்துட்டே இருந்தேன். ஆனா நான் பயந்த மாதிரி எதுவும் நடக்கலை. பாட்டியும் அம்மாவும் அவரை ஆப் பண்ணிருப்பாங்கன்னு நினைக்கிறேன். உன் தங்கச்சி கிட்ட பேசினார். என் கிட்ட பேசலை”
“அது வருத்தமா இருக்கா? நான் மாமா கிட்ட பேசி மன்னிப்பு கேக்கவா?”
“அட போடா, நானும் எங்க அப்பாவும் எப்ப கலகலன்னு சிரிச்சு பேசிக்கிட்டோம், இப்ப பேச? அதெல்லாம் சரியாகிரும். நீ அப்பா கிட்ட நேர்ல நாளைக்கு பேசு. ஆனா மன்னிப்பு எல்லாம் கேக்க வேண்டாம். நீ மன்னிப்பு கேட்டா நான் என்னமோ சிந்துவுக்கு வாழ்க்கை கொடுத்த மாதிரி இருக்கும். நிஜமாவே அவளை பிடிச்சு தான் டா கட்டிக்கிட்டேன். அவளை கொஞ்ச நாளைக்கு முன்னாடி பாத்துருந்தா நானே பொண்ணு கேட்டுருப்பேன். நான் ஒரு பொண்ணு கிட்ட மயங்கினேன்னா அது கட்டவுட்ல பாத்த உன் தங்கச்சியை பாத்து தான்”
“ஏய், நிஜமாவா டா?”, என்ற அசோக்குக்கு வியப்பாக இருந்தது.
“நிஜமா தான். எங்க வாழ்க்கை என்ன ஆகுமோன்னு எல்லாம் பயப்படாதே. நான் பாத்துக்குறேன். எந்த குற்ற உணர்வும் இல்லாம நல்லாத் தூங்கு. அத்தை மாமா கிட்ட சொல்லிரு. எல்லாரும் நாளைக்கு வந்துருங்க. சிந்து உங்களை ரொம்ப எதிர் பார்ப்பா. நானும் என் பம்பர மாமாவைப் பாக்கணும்”, என்று சொல்லி போனை வைத்தான் ஆதவன்.
“பம்பர மாமாவா?”, என்று அதிர்ந்த அசோக் பின் சிரித்துக் கொண்டான். மன நிம்மதியுடன் அமுதவள்ளியை அழைத்த அசோக் ஆதவன் சொன்ன விஷயத்தைச் சொல்ல அவளுக்கும் மகளை எண்ணி நிம்மதியாக இருந்தது.
“எப்படியும் அப்பா சிந்துவை நினைச்சு தூங்காம தான் இருப்பார். அவர் கிட்ட சொல்லி நாளைக்கு கிளம்ப ஏற்பாடு பண்ணு மா. எனக்கு தூக்கம் வருது, அவர் கிட்ட பேசினா அவர் பி. பி எனக்கு வந்துரும்”, என்று சொல்லி விட்டுச் சென்று விட்டான்.
“கடவுளே இந்த மனுஷன் கிட்ட பேசினாலே எனக்கு நாக்கு தள்ளுமே”, என்று எண்ணிக் கொண்டு ஏகாம்பரத்திடம் பேச ஆரம்பித்தாள். அவள் சொன்னதை எல்லாம் அமைதியாக வெகு நேரம் கேட்டுக் கொண்டிருந்தார் ஏகாம்பரம்.
கணவர் மாறி விட்டார் போல என்று எண்ணிய அமுதவள்ளி “நாம நாளைக்கு காலைல கிளம்புவோங்க. என்ன தான் சாயங்காலம் பங்ஷன்னாலும் நாம சீக்கிரமே போனா நம்ம பாப்பா கூட கொஞ்ச நேரம் இருக்கலாம்ல? என்ன சொல்றீங்க?”, என்று கேட்டாள்.
“நீ சொல்றது எல்லாம் புரியுது வள்ளி. ஆனா நான் வர மாட்டேன். அவன் எல்லாம் எனக்கு மாப்பிள்ளையா?”, என்று ஆரம்பிக்க அவர் தலையில் கல்லைத் தூக்கி போட்டு விடலாமா என்று எண்ணினாள் அமுதவள்ளி.
இரவு முழுவதும் பேசிய படியே அவரைக் கரைத்தாள் அமுதவள்ளி. பார்வதி குடும்பத்தை பற்றி திட்டி திட்டி அமுதவள்ளி பேச “இப்பவே இந்த பேச்சு பேசுறா. இதுல அக்காவோட உண்மையான குணம் தெரிஞ்சா அவ்வளவு தான்”, என்று எண்ணிக் கொண்டு “சரி சரி வரேன், பேச்சை விடு”, என்று சொல்லி விட்டார். அதன் பிறகு தான் நிம்மதியாக மூச்சு விட்டாள் அமுதவள்ளி. “உன் அப்பா வறேன்னு சொல்லிட்டார் டா”, என்று மகனுக்கும் தகவல் சொன்னாள்.
ஆதவன் வீட்டில் வேலைகள் எல்லாம் மளமளவென்று நடந்து கொண்டிருந்தது. மண்டப அலங்காரம், பூ, பந்திக்கு என அனைத்துக்கும் ஃபோன் செய்து சொன்ன ரங்கன், ரத்தினம் சொன்ன வேலையை எல்லாம் முடிக்கும் போது காலை ஐந்து மணி ஆகி இருந்தது.
“டேய் ரங்கா, நைட் முழுக்க தூங்கலையா டா?”, என்று கேட்ட படி எழுந்து வந்தாள் மங்கை.
“இல்லை மா, இப்ப தான் எல்லாம் முடிஞ்சது. எல்லாத்துக்கும் சொல்லிட்டேன். இன்னும் குளிச்சு கிளம்பி மண்டபத்துக்கு போனா அங்க எல்லாம் பாக்க சரியா இருக்கும். இன்னைக்கு நைட், இல்லைன்னா நாளைக்கு பகல்ல நல்லா தூங்கிக்கிறேன்”, என்று சந்தோஷமாக சொன்னான்.
“சரி டா, அப்புறம் ஒரே ஒரு உதவி செய்”
“செய்ன்னு சொல்லுங்க மா, உதவின்னு எல்லாம் சொல்லக் கூடாது”
“வேணியையும் விஸ்வம் அண்ணனையும் இங்க வரச் சொல்றியா? நாங்க தான் நேராப் போய்ச் சொல்லணும். ஆனா விஸ்வம் அண்ணனோட அம்மா பேச்சு கொஞ்சம் சரி கிடையாது. அது இப்ப வேற வீட்ல தான் இருக்குது. இருந்தாலும் நாங்க அங்க போனா என்னவோ அவங்க மகன் வீட்ல இருந்து அள்ளிட்டு வந்த மாதிரியே ஊர் எல்லாம் பேசும் அதான்”
“ஐயா நைட்டே சொன்னதுனால இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அவங்க வீட்டுக்கு போய்க் கதவைத் தட்டினேன் மா. ஆனா கதவை யாரும் திறக்கலை. இதோ இப்ப விடிஞ்சிருச்சே. இப்ப போறேன்”, என்று சொல்லி விட்டுக் கிளம்பினான்.
அவன் வேணி வீட்டுக்கு சென்ற போது பால் கறந்த செம்புடன் நின்றிருந்தாள் வேணி.
ரங்கனைக் கண்டதும் “வா ரங்கா, என்ன இந்த நேரத்துல வந்துருக்க?”, என்று கேட்டாள் வேணி.
“அது வந்துங்கம்மா ஐயாவும் அம்மாவும் உங்களையும் ஐயாவையும் வீட்டுக்கு வரச் சொன்னாங்க. நான் அப்பவே வந்து கதவைத் தட்டினேன். யாரும் எந்திக்கலை”
“அசந்து தூங்கிட்டேன் போல? அண்ணனா என்னை வரச் சொல்லுச்சு? எதுக்கா இருக்கும்? அதுவும் இவ்வளவு காலைல?”
“அது வந்து…”
“என்னன்னு உனக்கு தெரியுமா ரங்கா?”
“நம்ம அண்ணே கல்யாணத்துக்கு போன இடத்துல ஒரு சின்ன சம்பவம் ஆகிருச்சு”
“என்ன ஆச்சு டா என் மருமகனுக்கு?”
“அண்ணேனோட பிரண்டோட தங்கச்சி கல்யாணத்துக்கு போன இடத்துல அந்த பொண்ணு கல்யாணம் நின்னுருச்சு மா”
“அடப்பாவமே”
“ஆமா மா, அதனால அண்ணே தான் அந்த பொண்ணைக் கட்டிக்கிட்டார்”
“என்னது?”
“ஆமாங்க மா, நேத்து பண்ணிரெண்டு மணிக் கிட்ட தான் வீட்டுக்கே வந்தோம். கல்யாணப் பொண்ணை பழைய வீட்ல தான் தங்க வச்சிருக்கோம். ஐயா எல்லாருக்கும் போன்ல தகவல் சொல்லிட்டு இருக்காங்க. அம்மா அக்கம் பக்கத்துல இருக்குறவங்களுக்கு சொல்ல கிளம்பிட்டு இருந்தாங்க. நீங்களும் வந்தா ஐயாவுக்கும் அம்மாவுக்கும் உதவியா இருக்கும். அப்புறம் உங்க கிட்ட சொல்றதுக்கு முன்னாடி செல்வி அக்கா கிட்டயும் சக்தி ஐயா கிட்டயும் சொல்லக் கூடாதுன்னு அவங்க கிட்டயும் சொல்லலை. நீங்க வரும் போது அவங்களையும் கூட்டிட்டு வாங்க. இன்னைக்கு நைட் வரவேற்பு வைக்க போறோம் மா. எல்லா ஏற்பாடும் ஆரம்பிச்சிருச்சு”, என்று சந்தோஷமாக சொன்னான்.