Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

60. மதி இனியாள் - சின்னஞ்சிறு பூவே

சின்னஞ் சிறு பூவே

பூவே 6

 

 

 



Advertisement

 

காளியம்மாவின் குரல் சற்றுக் கடிந்தது.

“ஏட்டி… இப்ப அழுகையை நிறுத்தப்போறியா இல்லையாடி?”

Advertisement

அந்த சத்தத்திலேயே அழுகை நின்றது.

Advertisement

 

 

ஆனால் விசும்பல் மட்டும் அடங்கவே இல்லை.

Advertisement

சிறு பொண்ணு… என்னதான் புரிஞ்சுக்குவாள்?

வயதான பாட்டியின் வீங்கிய காலை பார்த்த அந்த நொடியே அவள் உள்ளம் நொந்துபோனது. அழுகை அடங்கினாலும் மனசு மட்டும் அமைதியாகவில்லை.

 

 

“ஏம்மத்தா, இப்படி அழுகுற? எனக்கு ஒண்ணும் இல்லம்மா… லேசாத்தான் வீங்கியிருக்கு. ராத்திரி தூங்கி எழுந்தா சரியாகிடும்…”

என்று கொள்ளுப்பேத்தியை, அவள் பள்ளிக்கொடம் விட்டு வந்ததிலிருந்தே சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார்.

 

 

ஆனால் அவள் அதை ஏற்கவே இல்லை.

தோழிகளோடு விளையாடிவிட்டு சிரித்தபடி உள்ளே வந்தவள், கால் வீங்கி வலியில் முகம் சுருக்கி அமர்ந்திருந்த பாட்டியை பார்த்ததும் அழ ஆரம்பித்திருந்தாள். அது இப்போது காளியம்மாவின் அதட்டலில்

விசும்பலாக மட்டும் மாறி நின்றது…

 

 

“எப்டி ஆச்சு பாட்டி?”

என்று தேம்பிக்கொண்டே கேட்டாள்.

 

 

“க்கூம்… அதையே! இப்பதான்  கேக்குறியா நீ? ஏன்? காரணம் தெரிஞ்சு அதுக்கு  தனியா ஒரு மணி நேரம் ஒக்காந்து ஒப்பாரி வைக்கணும் அதானே!  உன் நெனைப்பு!” என்று சொல்லிக்கொண்டே அவர்கள் முன்னால் வந்து நின்றார்.

 

பாவமாக அவரை நிமிர்ந்து பார்த்தாள்.

 

“என்னடி பாக்குற? போய் முகத்தை கழுவி, துணியை மாத்திட்டு வேலையைப் பாரு. ஒக்காந்துட்டு கேள்வி கேட்டுட்டு இருக்க…

எம்புள்ள வெதை நெல்லு எடுக்கணும்னு சொல்லிட்டு தானே போனான்? அதைச் சொல்லாம நீங்களும் கூட சேர்ந்து பேசிட்டு இருக்கீங்க. அழுதுக்கிட்டே வெதை நெல்ல எடுத்துக்கொடுத்தா, வெள்ளாமை வூடு வந்த மாறி தான்!” என்றார் நொடிப்பாக.

 

“அவளே அழுதுட்டு கிடக்கா… நீ வேற ஏண்டி அவளை வஞ்சிட்டு கிடக்க?”

என்று மருமகளை மயிலம்மா கடிந்துகொள்ள,

 

“ஆமா… நான் அவளை ஒண்ணும் சொல்லக்கூடாது. வந்துடுவீங்க வரிஞ்சு கட்டிக்கிட்டு!

உள்ளே அவ்ளோ வேலை கிடக்கு. கூடமாட வந்து செய்யுறாளா உங்க பேத்தி?

நான் மட்டும் செய்யணும்… எனக்கு மட்டும் வயசு திரும்புதா என்ன?”

என்று இருவரின் காதிலும் விழும்படி சொல்லிவிட்டு சென்றார்.

 

அதைக் கேட்ட  மயிலம்மா மெதுவாக பேத்தியின் கன்னத்தை தடவினார்.

“வேலு போத்தா… போய் கூடமாட வேலை செய்.”

 

 

சோகமாக முகத்தைத் தூக்கியவள்,

“ஏன் பாட்டி… நான் சரியா வேலை செய்யலையா? சின்ன பாட்டி எதுக்கு அப்படி சொல்லிட்டு போறாங்க?”

என்று கேட்டாள்.

 

 

“அதெல்லாம் ஒண்ணுமில்லத்தா. வெளக்கு வைக்குற நேரத்துலயும் நீ அழுதுட்டிருந்தா என்ன பண்ண?

அதுக்குத்தான் அப்படி சொல்லிட்டு போறா. சீக்கிரம் போய் முகத்தை அலம்பு… இப்ப உன் மாமன் வந்திடுவான்.”

என்று பேத்தியை உள்ளே அனுப்பிவைத்தார்.

 

 

அதற்குள் தெருவிலிருந்து,

“போண்டா… போண்டா…”

என்ற குரல் கேட்டது.

“முனிஸ் போண்டா… என்ன வெலைடி?”

என்று கேட்டபடி வந்தான் மாணிக்கம்.

 

“நீ கையில காசு எடுத்துட்டு வெலை கேளு. நான் சொல்லுறேன்.”

என்றாள் அவளும்.

 

“ஏண்டி… நான் பணம் தர மாட்டேனா?”

என்றவனை முறைத்துப் பார்த்தாள்.

 

“உனக்குத்தான் வேலை வெட்டி இல்லை. எனக்கும் அப்படின்னு நினைச்சிட்டியோ?

தள்ளுவே… எனக்கு நேரமாகுது.”

என்று பல்லைக் கடித்தாள்.

 

அவளை ரசித்தபடி,

“என்னடி… மாமனை பார்த்து முறைக்குறவ? நானும் கட்டிக்கிற முறை தாண்டி ஞாபகம் இருக்கட்டும்…”

என்றான் கோணல் சிரிப்புடன்.

 

அவள் நேராக அவன் கண்களை பார்த்தாள்.

“எது? உன்னைய கட்டிக்க?

நான் என்னவோ தவம் கிடக்குற மாதிரி நெனைப்பு தான் உனக்கு!”

 

“என்னடி… ரொம்பத்தான் சடச்சிக்கிறவ!

கையில இருக்குற போண்டா வேணாம்… உன்கிட்ட இருக்குற போண்டாவ கொடுடி…”

என்றவன் பார்வை அவள் நெஞ்சில் நின்றது.

 

அவள் கண்களில் தீ பறந்தது.

“மரியாதையா போய்டுவே! வயசுக்குன்னு கூட பாக்கமாட்டேன்.

மானம் சந்தி சிரிச்சு போயிடும்!”

 

அந்த நேரத்தில் அருகே ஓடி வந்தான் முத்துபாண்டி.

“நீ இங்க என்ன பண்ணுறே?”

என்று அண்ணனை பார்த்து கேட்டான்.

 

 

“ஒண்ணுமில்லடா… போண்டா சாப்பிடலாம்னு வந்தா, தர மாட்டுறா. அதான் கேட்டுட்டு இருக்கேன்.”

என்றான் மாணிக்கம்.

 

 

“ஏன்? புள்ள போண்டா கேட்டா கொடுக்க வேண்டிதானே? அதை விட்டுட்டு எதுக்கு வாயாடிட்டு இருக்க?”

என்றவனை முறைத்துப் பார்த்தாள் அவள்.

 

“உங்க அண்ணன் கேட்டதும் கொடுக்கணுமா?”

 

“பின்ன அதுக்குத்தானே கூவி கூவி கத்திட்டிருக்க?”

என்று அப்பாவியாக கேட்டான்.

என்னவோ, அவன் அண்ணன் கேட்டது ‘போண்டா’ என்று அவன் நினைத்து பதில் சொல்லிக்கொண்டிருந்தான்..

 

ஆனால் மாணிக்கம் அவளை பார்த்தபடியே,

“அதான் அவனே சொல்லிட்டானே… கொடுத்தா…”

என்று இரட்டை அர்த்தத்துடன் பேச,

 

அவளது கண்கள் லேசாக கலங்கின.

வேகமாக மூச்சை இழுத்துவிட்டவள், அவன் கையில் நான்கு போண்டாக்களை திணித்துவிட்டு வேகநடையுடன் அங்கிருந்து நகர்ந்தாள்.

 

“ஏய்! புள்ள… காசு வாங்கிட்டு போ!”

என்ற பாண்டியின் குரல் அவள் முதுகில் மோதியது.

ஆனால் அவள் திரும்பிப் பார்க்கவே இல்லை.

 

“விடுடா காசு வாங்காட்டி போறா” என்றவன் ,

சிரித்தபடி ஒரு இனிப்பு போண்டாவை வாய்க்குள் திணித்தான்.

 

 

“நீ அந்த புள்ளைகிட்ட நான் வரதுக்கு முன்னாடி என்ன பேசுன?”

என்று சந்தேகமாக கேட்டான் பாண்டி.

 

“நான் என்னடா பேசுவேன்? போண்டாவை தான் தரச் சொன்னேன்.

கடைசிவரைக்கும் தரவே இல்ல தெரியுமா?”

என்றவன் இன்னொரு கார போண்டாவை வாய்க்குள் போட்டுக்கொண்டான்.

 

“கடைசி வரைக்கும் தரவே இல்லையா…” என்று மனதிற்குள் சொல்லிக்கொண்ட பாண்டி, அவனை சந்தேகமாக முறைத்தான்.

 

“என்னடா என்னை சந்தேகமாவே பாக்குற?

வழக்கமா முறைப்பொண்ணுகிட்ட என்ன பேசுவாங்களோ, அப்படித்தான் நானும் பேசினேன்.

அதுக்குப் போய் முகத்தை தூக்கிட்டு போறா!”

 

“எருமை! படிக்குற புள்ளைகிட்ட என்னடா பேசி வச்சியிருக்க?”

என்று தமையனை திட்டியவனின் கண்முன், கலங்கிய விழிகளுடன் வந்து நின்றாள் முனிஸ்வரி.

 

அவன் அசையாமல் நின்றிருக்க, திடீரென்று முதுகில் சுரீரென்று வலி தெரிந்தது.

திரும்பிப் பார்த்தான்.

 

வெற்றி நின்றிருந்தான்.

“என்ன பங்காளி… தெருவுல நின்னு கானா காணுற? என்ன சங்கதி?”

என்று கேட்டான்.

 

“வழக்கம்போல எங்க அண்ணன் ஒரு ஏலரையை இழுத்து விட்டுட்டான்டா…”

என்றான் சோகமாக.

 

“இதுக்கா  இப்டி தெகைச்சு நின்னுட்டிருக்க?

அது எப்பவும் நடக்குறதுதானே பங்காளி!”

என்று பாண்டி தோளில் கை போட்டான்.

 

“எப்பவும் நடக்குறதுதான்…

ஆனா இந்த தடவை நான் மாட்டிட்டேன்டா…”

என்று முனிஸ்வரியிடம் நடந்ததை சொல்லி முடித்தான்.

 

“சரி… அதுக்கும் நீ இப்படி நிக்கிறதுக்கும் என்ன சம்பந்தம்?” என்று வெற்றி சந்தேகமாக கேட்க,

 

அவனிருந்த மனநிலையில் இவனின்  சந்தேக பார்வை கவனத்தில் இல்லை,  “அந்த புள்ள கத்திட்டு போயிருந்தாக்கூட மனசு ஆறியிருக்கும் டா…

ஒரு மாதிரி… நீ கூட அப்டிதான்ற மாதிரி பாத்தது தான்டா கண் முன்னாடி வருது…”

என்று சொல்லும்போதே அவன் முகத்தில் ஒரு வித சோகம் தெரிந்தது.

 

 

வெற்றி அவன் தோளை தட்டினான்.

“சரி விடுடா… பொண்ணுங்க மனசு சீக்கிரம் கலங்கிடும். நாளைக்குள்ள மறந்துடுவா.”

என்றாலும், பாண்டியின் முகம் தெளிவாகவில்லை.

 

“இல்லடா… அந்த புள்ளை அழுத மாறி  இருந்துச்சே…”

என்று இன்னும் குற்ற உணர்வுடன் சொன்னான்.

அவனை பார்த்து சிரித்த வெற்றி..

 

“சரி விடுடா ஆகுற வேலையை பாரு, வெதை நெல்லு எடுத்து வச்சிட்டியா” என்றான் வெற்றி

 

“ஆச்சுடா  , நாளைக்கு மொளைக்கு விடனும்.. நீ எடுத்துட்டியா”,

 

” இனி தாண்டா”

 

“சரி , நீ போய் வேலையை பாரு” என்று எதிரே இருந்த தன் வீட்டிற்குள் நுழைந்தான் பாண்டி..

 

 

உள்ளே வந்தவனின் பார்வை முதலில் அன்னையை தேடியது.

அவர் இன்னும் அடுப்படியில் அமர்ந்தபடி இருந்தார்.

 

“என்னப்பத்தா… இன்னும் வலி இருக்கா?”

என்று அருகில் அமர்ந்தான்.

 

“வலி எல்லாம் ஒண்ணுமில்லய்யா… வயசு ஆக ஆக உடம்பு முன்ன மாதிரி ஒத்துழைக்க மாட்டேங்குது.”

என்று சிரிக்க முயன்றார்.

 

ஆனால் அந்த சிரிப்புக்குப் பின்னே இருந்த வலியை வெற்றியால் புரிந்துகொள்ள முடிந்தது.

அவன் மெதுவாக கீழே அமர்ந்து, அவரின் காலை தன் மடியில் வைத்தான்.

 

“என்னைய்யா பண்ணுற?” என்று பதறினார் மயிலம்மா.

 

“சும்மா இரு.”

என்று சொல்லியவன் மெதுவாக வீங்கிய இடத்தை வருடி விட்டான்…

 

“போதும்யா, நேரம்போகுது போய் வெதை நெல்லு எடுக்குற வழியை பாருய்யா” எனவும்,

 

அவர் காலை கீழே இறக்கி வைத்தவன்.. “அதுக்கென்ன எடுத்துட்டா, போச்சு” என்று திண்ணையை தாண்டி வீட்டிற்குள் காலை வைத்தான்..

 

அதே நேரம், உள்ளிருந்து மெதுவாக நடந்தபடி வந்தாள் வேல்விழி. ஆடை மாற்றி  முகம் கழுவியிருந்தாலும், அழுத தடம் இன்னும் கண்களில் இருந்தது..

 

அவள் முகத்தை கண்டு நெற்றி சுருக்கினான்  “என்னாச்சு வேலு, முகம் ஒரு மாறி இருக்கு”.

 

” அது, பாட்டி காலை பாத்ததும். அழுகை வந்திடிச்சு மாமா” என்றாள்

 

“இன்னைக்கு காலையில நீ, முழிச்சு முழியே! சரியில்லை போ. அழுதுகிட்டே இருக்க, சீக்கிரம் முகம் கழுவிட்டு வா” என்றவன் பின்கட்டை கடந்து  வீட்டை ஒட்டியபடி இருந்த ஓட்டு வீட்டுக்குள் நடந்தான்…

 

இவளும் முகம் கழுவி , வெற்றி போன அறைக்குள் வந்து நின்றாள்..

 

இதையெல்லாம் பார்த்தபடி காளியம்மா , சமையல் செய்துக்கொண்டிருந்தவர் மனது படபடவென அடித்துக்கொண்டது… ‘யாருக்கும் தன் மனது தெரியாது. என்று வெற்றி நினைத்திருந்தாலும்.. பெற்றவளுக்கு தெரியாதா மகனின் சூது.. அந்த வெட்டவெளியில் இருந்தவர்  வீட்டை நிமிர்ந்து பார்த்தார்..

 

 

‘அந்த ஊரிலே முதல்முறை மாடி வீடு கட்டியது வெற்றி தான்… பெரும்பாலும் அந்த ஊரில் ஓட்டு வீடும், கூரை வீடுகளும் நிறைந்திருந்தாலும், இன்னும் சில இடங்களில் சிமெண்டு வீடுகளும் இருந்தன…

வெற்றி  கட்டிய வீடு மட்டும் கொஞ்சம் வேற மாதிரி இருந்தது. முன்னாடி பெரிய திண்ணை, உள்ளே நுழைந்ததும் விசாலமான மாடம், அதுக்கு அடுத்ததாக அறைகள்… பக்கத்திலேயே ஓட்டு வீடு  வெள்ளாமைக்கான தனி  இடமாக இருக்க…

அந்த வீட்டை பார்த்தாலே, எவ்வளவு கஷ்டப்பட்டு இவ்வளவு வளர்ச்சி  அடைந்தான்  என்பது அவன் மட்டுமே அறிந்தது..

 

‘மகன் கட்டிய இந்த வீட்டை தன் பேத்திகளான, காவ்யா  அபிராமி தான் ஆளனும்’  என்ற பேராசை காளியம்மாவுக்கு..

 

ஆனால் தன் எண்ணத்துக்கு எதிராக தானே ! மகனின் எண்ணமும் இருக்கு..

 

காலம் யாருடைய ஆசையை  நிறைவேற்ற காத்திருக்கு  என்று பொறுத்திருந்து தான் பார்க்கணும் ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!