சின்னஞ் சிறு பூவே
பூவே 9
Advertisement
வெற்றி சொன்ன வார்த்தையில் அப்படியே அசையாது நின்றுவிட்டாள் வேலு..
Advertisement
‘நா இருக்கேன்ல’ என்ற வார்த்தை, பாட்டியை நினைத்து சொன்ன வார்த்தையாக அவளுக்கு தெரியவில்லை.. இவ்வளவு நேரம் அவளின் தனிமை பயத்துக்கான வார்த்தையாகத்தான் தெரிந்தது…
Advertisement
உண்மையிலேயே அந்தச் சிறுபெண் பயந்தது, ஆதரவற்ற தன் நிலையை எண்ணித்தான்.. அவளின் ஒரு பிடிப்பு பாட்டி மட்டுமே. பெற்றவர்கள் இருக்கிறார்கள் என்று அவளுக்கு தெரிந்தாலும், அவர்களை நெருங்கக்கூடாத சூழ்நிலையை காலம் உருவாக்கி வைத்திருந்தனர்…
Advertisement
பாட்டி ஒன்றே அவளின் பிடிப்பு. இப்போது அந்தப் பிடிப்பே ஆட்டம் கண்டது.. மயிலம்மாவின் வயோதிகம் நாளுக்கு நாள் அவருக்கு மட்டும் பயத்தை தரவில்லை, வேல்விழிக்கும் சேர்த்துத்தான் பயத்தை கொடுத்தது…
அப்படி ஒரு பயத்தின் பிடியில் இருந்தவளைத்தான், வெற்றியின் ஒரு வார்த்தை அவளுக்கு புது தெம்பை கொடுத்தது…
“ஏட்டி, எதுக்கு நடு வூட்டுல இடிச்சபுளி கணக்கா நிக்குறவ? வேற வேலை வெட்டி இல்லையா உனக்கு?” என்று தலையிலே இடித்து சரசு சொன்னதும்..
அவர் தலையில் இடித்தது வலி எடுக்க ,லேசாக கண்களும் கலங்கியது அவளுக்கு..
அதே நேரம் பின்கட்டிலிருந்து கை, காலை கழுவிக்கொண்டு உள்ளே வந்தவன் பார்வையில் சரசுவின் செய்கை பட,
“க்கா, எதுக்கு நீ வேலுவ அடிக்குற?” என்றான்..
“நா எங்கடா அடிச்சேன்? தலையிலதான் லேசா அடிச்சேன்.. அப்பத்தா வந்த நேரத்துல இருந்து இவ அசையாம இருக்கா, அதான் என்னான்னு கேட்டுட்டு இருக்கேன்…” என்றாள்..
“அதை வாயாலே கேக்க வேண்டியதுதானே? தலையில அடிச்சு கேக்க சொல்லிச்சா?” என்றான் அவனும் விடாமல்..
“டேய், நீ என்ன ரொம்ப பேசுற! நா என்னவோ இன்னைக்குத்தான் புதுசா அடிச்ச மாதிரி.. எப்பவும் பண்ணுறதுதானே…” என்ற தமக்கையை நெற்றி சுருக்கிப் பார்த்தான்..
“நீ என்ன சொல்லுற? வேலு, நீ சொல்லு.. அக்கா உன்னை எப்பவும் இப்படி தான் பண்ணுமா?” என்றான்..
“அது வந்து மாமா…” என்று தயங்கி நிறுத்தினாள்..
“சொல்லு வேலு…” என்று பல்லைக் கடித்தான்..
அவனால் தாங்கவே முடியவில்லை.. தன் கண்ணுக்குள் வைத்து பொத்திப் பொத்தி பார்த்தவளை, தன் உடன்பிறந்தவளே வதைத்ததை எண்ணி அவனுக்கு மனது தாங்கவே இல்லை…
“நீ என்னடா அவளை கேக்குற? நா தான் சொல்லுறேனே! ஏன்? அவளை அடிச்சா யாரு கேப்பா?” என்று சொல்லி அவளை அடிக்க கையை உயர்த்தினாள்..
“மாமா…” என்று பயத்தில் கண்களை மூடிக்கொண்டு, கைகளை தலையில் வைத்துக்கொண்டாள்..
தள்ளி நின்று பார்க்குறவங்களுக்கு சரசு லேசாக அடிப்பது போலத்தான் தெரியும்.. அடி வாங்கியவளுக்குத்தானே தெரியும், அந்த லேசான அடிக்கே அவள் தலை விண்விண்ணென்று வலிக்கும் என்று…
ஓங்கிய கை அந்தரத்திலேயே நின்றது..
தன் கை அந்தரத்தில் நிற்பதை அதிர்ச்சியுடன் பார்த்தாள் சரசு..
தமக்கையின் கையை சிறைபிடித்தவன்,
“இன்னொரு தடவை வேலு மேல உன் கை பட்டுச்சு… என்னை நீ வேறாளாத்தான் பார்ப்ப க்கா…” என்றான் அடக்கப்பட்ட கோவத்துடன்..
சரசுக்கு உச்சக்கட்ட அதிர்ச்சி என்றே சொல்லலாம்.. தன் தம்பியிடமிருந்து இப்படியொரு எதிர்ப்பை அவள் கனவில்கூட கண்டதில்லை. அப்படியிருக்க நேரில் கண்டாள்… அதிர்ச்சியாகாமல் இருந்தால்தான் அதிசயம்…
“எய்யா, என்னய்யா பண்ணுற! அவ உன் அக்கா, அதை மறந்துடாதய்யா!” என்ற குரலுடன் காளியம்மா, மாமியாரை வேலுவின் அறையில் விட்டு வெளியே வந்தவருக்கு இவர்களின் உரையாடல் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது…
மூவருக்கும் நடந்த உரையாடலை ஆதிமுதல் அந்தம் வரை கேட்டுக்கொண்டுதான் நின்றார்…
வெற்றியின் கடைசி வாக்கியத்தில்தான் நிலைமை விபரீதமாவதை கண்டு குரல் கொடுத்தார்.“எய்யா, என்னய்யா பண்ணுற! அவ உன் அக்கா, கை விடுயா யாராவது வந்தா மானம் போகும்!” என்று காளியம்மா சொல்லவும்..
வெற்றி தமக்கையின் கையை விட்டவன், “அக்கான்னா எதை வேணாலும் பண்ணலாமா?” என்றான் அடக்கப்பட்ட கோவத்துடன்..
“டேய்!” என்று சரசு அதட்ட,
“நீ கொஞ்சம் சும்மா இரு க்கா…” என்றவன் குரலில் இருந்த அழுத்தத்தில் அவளே அமைதியாகிவிட்டாள்..
“இவ்ளோ நேரம் என்ன நடந்துச்சுன்னு எல்லாத்தையும் கேட்டுட்டுதான் இருந்தேன்.. வேலு பயந்து கை தூக்குற அளவுக்கு பழக்கி வைச்சிருக்கீங்க…” என்றவன் வார்த்தையில் வேலுவே அதிர்ந்து அவனை பார்த்தாள்..
“மாமா… அது…” என்று அவள் ஏதோ சொல்ல வர,
“நீ சும்மா இரு வேலு…” என்றவன், பார்வை கூட அவள் பக்கம் திருப்பவில்லை..
“ஏன் டா! நாங்க என்ன கொடுமையா பண்றோம் அவளுக்கு? வூட்டுல இருக்க புள்ளைக்கு ரெண்டு வார்த்தை சொன்னா தப்பா?” என்று காளியம்மா கேட்க,
“ரெண்டு வார்த்தை சொல்றது வேற… கையை நீட்டுறது வேற…” என்றான் வெற்றி..
“அடப்பாவி! இவளுக்காக இப்ப எங்களையே எதிர்த்து பேசுற அளவுக்கு வந்துட்டியா நீ?” என்று சரசு கண்களை துடைத்துக்கொண்டே பேச,
அவளை நேராக பார்த்தவன்..
“தப்பு இல்லனா நான் பேசவே மாட்டேன்…” என்றான்..
அந்த வார்த்தையில் அங்கிருந்த இடமே அமைதியாகிவிட்டது..
வேலுவோ பயத்தில் நின்றவாறே இருந்தாள்.. இதுவரை தனக்காக யாரும் இப்படி நின்றதே இல்லை.. பெரிய பாட்டியை தவிர்த்து, இப்போது , தனக்காக வெற்றி நின்றது …
அவள் மனசுக்குள் ஏதோ புதுசா பாதுகாப்பான உணர்வு மெதுவாக பரவியது …
“டேய் வெற்றி…
ரொம்பதான் இவளுக்கு சப்போர்ட் பண்ணுற…” என்று சரசு கடுப்பாக சொல்ல,
“சப்போர்ட் பண்றேனா, இல்ல நியாயம் பேசுறேனா நீயே யோசிச்சு பாரு க்கா…” என்றான் அவனும் விடாமல்..
“எல்லாத்துக்கும் அந்த புள்ளைய தலையில தூக்கி வச்சிக்கோ! நாளைக்கு நம்ம தலையிலயே ஏறி ஒக்காந்துக்குவா… இவ ஆத்தா மாறி , நன்றி இல்லாத ஜென்மங்கள்” என்று முகத்தை சுழித்து சரசு சொன்னதும்…
அந்த வார்த்தையில் சட்டென்று வெற்றியின் முகம் மாறியது.. “அக்கா, வார்த்தையை பாத்து பேசு.. எலும்பு இல்லாத நாக்குன்னு இஷ்டத்துக்கு வார்த்தையை விடாத” எனறான் அடக்கப்பட்ட கோவம் அவன் கழுத்து நரம்புகள் துடித்து நின்றது..
இன்று வெற்றியிடமிருந்து யாருமே , இப்படியொரு கோவத்தை எதிர்பார்த்திருக்க மாட்டாங்க…
காளியம்மாவும் , சரசுவும் திகைத்து தான் நின்றனர்..
வேலுவோ அதிர்ச்சியுடன் அவனை பார்த்தாள்..
“மாமா…” என்று அவள் மெதுவாக அழைக்க,
“நீ சும்மா இரு வேலு…” என்றவன், இந்த முறை கொஞ்சம் மென்மையாக தான் சொன்னான்..
காளியம்மாவோ நிலைமை கை மீறி போவதை உணர்ந்து,
“சரி, போதும்… எல்லாரும் சாப்பிட வாங்க…” என்று பேச்சை மாற்ற முயற்சித்தார்..
“நீங்க போங்கம்மா… நா கொஞ்ச நேரம் கழிச்சு வரேன்…” சொன்னவன் திண்ணையில் வந்து அமர்ந்துக்கொண்டான்…
காளியம்மாவும் , மகளை திட்டிக்கொண்டே உள்ளே அழைத்து சென்றார்..
அவர்கள் சென்றதும் அங்கே ஒரு கனமான அமைதி நிலவியது..
வேலு, வெற்றியை தேடி வாசலுக்கு வந்தவள் தலைகுனிந்துகொண்டே,
“என்னால தான்… எல்லாரும் சண்டை போடுறீங்க…” என்று மெதுவாக சொல்ல,
“உன்னால இல்ல…” என்றவன் உடனே..
அவள் நிமிர்ந்து பார்க்க,
“இவ்வளவு நாளா எனக்கு தெரியாம போனதால…” என்றான்..
அந்த வார்த்தையில் வேலுவின் கண்கள் மீண்டும் கலங்கியது..
அவளை பார்த்தவன் சற்று தணிந்த குரலில்,
“வேலு…” என்று அழைத்தான்..
“ம்ம்…” என்றாள் மெதுவாக..
“இனிமே யாராவது உன்ன கை நீட்டி அடிக்க வந்தா… சும்மா நிக்காத…” என்றான்..
அவள் குழப்பமாக பார்க்க,
“என் பேர சொல்லு…” என்றான் அவன் அழுத்தமாக..
வெற்றி சொன்ன வார்த்தையில் வேலுவின் கண்கள் பெரிதானது..
“மாமா…” என்றாள் அதிர்ச்சியோடு..
“என்ன மாமா?” என்றவன் சற்று தணிந்த கோவத்துடன்..
“ சக்திமான் நாடகத்துல ஆபத்து வந்தா… சக்திமான்னு கூப்பிட்டா வருவாரே! அப்டி வருவியா மாமா நீ” என்றாள் சிறுபிள்ளை குரலில்…
“அவள் அப்டி சொன்னதும். இதுவரை இருந்த இறுக்கமான மனநிலை மாறி.. வாய் விட்டு சிரித்தான்.. அவளின் பேச்சில்…
இவன் சிரிப்பு சத்தம் கேட்டு , காளியம்மாவும் , சரசும் எட்டி பார்த்தனர்…
“பாத்தியாமா, என்கிட்ட அப்டி கத்திட்டு, அவ கிட்ட மட்டும் பல்லை காட்டுறான்..
இன்னும் வயசுக்கு கூட வரல , அதுக்குள்ள என் தம்பியை .. அவ கைக்குள்ள போட்டுக்கிட்டா, இன்னும் வயசுக்கு வந்துட்டா! எப்டி மாறி நிக்கபோறானோ? என் தம்பி” என்ற சரசு , குழப்பத்தில் இருந்த காளியம்மா மனதில் கல்லை கொண்டு எறிந்தாள்…
“ஏம் மாமா.. இப்டி சிரிக்குற நீ? பாரு, பெரியம்மா என்னை முறைச்சு பாத்துட்டு போறாங்க” என்றாள்..
வெற்றி திரும்பி வீட்டுக்குள்ள பார்த்தவன், “அவங்க பாத்தா நீ ஏன் பயப்படுற?” என்றான் சிரிப்பு குறையாம..
“நா பயப்படல…” என்று உடனே சொல்ல வந்தவள், சரசு திரும்பி பார்த்ததும் சட்டென்று அவன் பின்னாடி ஒளிந்துக்கொண்டாள்..
அதை பார்த்தவன் சிரிச்சபடியே, “அடடா… பயப்படலன்னு சொன்னவ, பின்னாடி வந்து ஒளிஞ்சிக்கிறியே?” என்று கேட்க,
“அது… சும்மா…” என்று திணறினாள்..
அவள் முகத்தை பார்த்தவன் மெதுவாக, “வேலு…” என்று அழைத்தான்..
“ம்ம்…”
“யாரு என்ன சொன்னாலும், நீ தப்பு இல்லாத விஷயத்துக்கு பயப்படக்கூடாது… புரியுதா?” என்றான்..
அவள் உடனே தலையாட்டினாள்..
ஆனா அந்த கண்களில் இன்னும் பயம் முழுசா போகவில்லை…
அதை கவனித்தவன், “சரி… இப்போ எதுக்கு வந்த?” என்று கேட்டான்..
“சாப்பிட வா மாமா, மதியம் என்னேரம் சாப்பிட்டேன்னு தெரியல, இதுல பாட்டியை வேற ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போய் வந்தது அலைச்சலா இருக்கும்னு” சொன்னதும்..
“பார்றா , இவ்ளோ யோசிச்சியா, இந்த சின்ன மூளைக்குள்ள” என்று அவள் தலையை பிடித்து ஆட்டினான்’..
“வா மாமா”
“சரி” எழுந்தவன் உள்ளே நடக்க, வேலுவும் அவன் பின்னாடியே நடந்தாள்…
வீட்டுக்குள் வந்ததும் அங்கே இருந்த அமைதி, சில நிமிஷத்துக்கு முன் நடந்த சண்டையை நினைவுபடுத்தியது…
சரசு பாத்திரத்தை சத்தமாக வைத்து கொண்டிருந்தாள்..
காளியம்மாவோ எதுவும் பேசாமல் சாப்பாடு பரிமாறிக்கொண்டிருந்தார்..
வெற்றி எதுவும் பேசாமல் அமர, வேலு வழக்கம்போல, தன் தட்டில் உணவை எடுத்துக்கொண்டு.. அவள் அறைக்குள் போக பார்க்க..
அதை பார்த்தவன், “அங்க இல்ல… இங்க உட்கார்…” என்று தன் பக்கத்திலிருந்த இடத்தை காட்டினான்..
அந்த ஒரு வார்த்தையில் மூணு பேரும் அவனை பார்த்தனர்…
வேலுவே அதிர்ந்து, “மாமா… நா இங்கயா?” என்றாள் மெதுவாக..
“ஆமா… இங்க தான்…” என்றான் சாதாரணமா..
சரசுவுக்கு முகமே மாறிவிட்டது.. “வெற்றி!” என்று அவள் அதட்டலாக அழைக்க,
“என்ன க்கா?” என்று அவன் நிதானமாக திரும்பி பார்த்தான்..
“அவ எப்போ இருந்து உன் பக்கத்துல ஒக்காந்து சாப்புடுற அளவுக்கு வந்தா?” என்றாள் கடுப்பாக..
“இப்போ இருந்து…” என்றான் ஒரு வார்த்தையில்..
“டேய்!”
“க்கா…” என்று அவனும் அழுத்தமா அழைத்தவன்,
“சாப்பிடுற நேரத்துலயாவது பிரச்சனை பண்ணாத…” என்றான்..
அந்த குரலில் இருந்த உறுதியில் சரசு பல்லை கடிச்சுக்கிட்டு அமைதியா நின்றாள்…
வேலுவோ உட்காரலாமா வேண்டாமா என்று தயங்கி நின்றாள்..
அவளை பார்த்தவன், “வேலு… உட்கார்…” என்றான் இந்த முறை மென்மையாக..
அவளும் மெதுவாக வந்து அவன் பக்கத்தில் அமர்ந்தாள்…
அவள் அமர்ந்த உடனே, வெற்றி தன் தட்டிலிருந்த முட்டை ஆம்லேட்டை அவளுக்கு வைக்க..
அதை பார்த்த வேலுவின் கண்கள் மெதுவாக கலங்கியது…
“என்ன?” என்று அவன் கேட்க,
“ஒன்னுமில்லை…” என்று அவள் தலையசைத்தாள்..
ஆனா அந்த “ஒன்னுமில்லை”க்குள்ள,
அவள் இதுவரைக்கும் ஏங்கிய பாசமும், பாதுகாப்பும் இருந்தது…
மூடிய விழிகளில் நீர் வர படுத்திருந்தார் மயிலம்மா…
‘தனக்கு அடுத்து தன் பேத்திக்கு பாதுகாப்பாக பேரன் இருப்பான்’ எனற தைரியம் பெற்றது அவர் மனம்…
