வெற்றிச்செல்வன் செந்தாமரையுடைய பெற்றோரை அழைத்து வந்து அவளோடு இணைத்து வைத்தபொழுது எவ்வளவுக்கெவ்வளவு மகிழ்ந்து, ஆர்ப்பரித்து, கர்வம் கொண்டாளோ… அதையெல்லாம் திருமண பேச்சுவார்த்தை தொடங்கிய பிறகு சீட்டுக்கட்டு மாளிகை போலத் தகர்த்தெறிந்திருந்தான்.
திருமணம் குறித்துப் பெற்றவர்கள் பேசினார்கள் என்று சொன்ன அன்று, அத்தனை மகிழ்ந்தவன், விடிய விடிய உறக்கம் தொலைத்து, உறக்கம் மறந்து, உறக்கத்தை மறக்கச் செய்து பேசியவன், அதன்பிறகு இம்மியும் கண்டு கொள்ளாமல் இருந்தால் அவளும் தான் என்ன செய்வாள்?
பெண் பார்க்க வந்தபோது வரவில்லை. அவனிடமிருந்து கைப்பேசி அழைப்புகளும் இல்லை. இவளாக அழைத்தாலும் அதிகம் பேசுவதில்லை. நிச்சயத்தையும் திருமணத்திற்கு முந்தைய தினம் வைத்துக் கொள்ளலாம் என்று அவர்கள் வீட்டில் கூறிவிட்டார்கள். திருமணத்திற்கு உடை வாங்கச் சென்றபோதும் தலையைக் காட்டி விட்டு மறைந்து விட்டான்.
செந்தாமரை வெற்றியை ஒவ்வொரு விஷயத்திலும் எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்தது போனது தான் மிச்சம். அவன் இவள் கண்களில் படவேயில்லை. இரண்டு, மூன்று முறை இவளாகக் கைப்பேசி அழைப்பு விடுத்த போதும் சரியாகப் பேசாததால் இவளாக அழைப்பதையும் நிறுத்தி விட்டாள். அவனுக்காக தோன்றி அழைக்கட்டும் என்று! அப்பொழுதும் அவன் அழைக்கவில்லை.
[the_ad id=”6605″]
மில்லில் ஏதோ பிரச்சனை ஓடிக்கொண்டிருக்கிறது என்று மட்டும் செந்தாமரைக்குத் தெரியும். அதற்காக இப்படியா என்று கோபமாக வந்தது. ஆனால், மில்லில் பிரச்சனை என்பது அவனாக உருவாக்கி வைத்திருக்கும் மாயை என்பதை அவள் அறிய வாய்ப்பில்லையே! உண்மையில் அவன் மாரியப்பனையும், சந்தன பாண்டியையும் கண்காணித்து வருகிறான். அவன் கவனம் முழுவதும் அதில் தான். அதனால் தான் திருமண விஷயத்தில் கூட அவனால் எந்த ஈடுபாடும் காட்ட இயலவில்லை.
இந்த சமயத்தில் வெற்றிக்கு ஒரு நல்ல விஷயமும் நடந்தது. ‘சேலம் சந்தன பாண்டியார்’ பெண்கள் விஷயத்தில் மோசம் என்பது தான் பரவலான செய்தி. இப்பொழுது மாரியப்பன் இந்த மாதிரி விஷயத்தில் மாட்டிக் கொண்டதால், இதுவரை அவனுக்கு எதுவும் தேவை என்றால் கண்டும் காணாமல்… மறைமுகமாக உதவி செய்து வந்தவர், இப்பொழுது முழுக்க பின்வாங்கி விட்டார்.
இது மாரியப்பனே எதிர்பாராத ஒன்று. அவனுக்கு எப்பொழுது உதவி என்றாலும் சந்தன பாண்டி தான் உதவி செய்வார். ஏன் வெற்றியை அடித்து ஊரை விட்டுத் துரத்த, தன்னால் முடியாத போதும் அவரிடம் தான் உதவி கேட்டு அடியாட்களை வரவழைத்தான். உண்மையில் அங்கு தான் அவனது தவறு வெட்ட வெளிச்சமாகியிருந்தது. அதுவரை மாரியப்பனை மட்டும் சந்தேகித்து வந்த வெற்றி, அந்த நிகழ்வின் பிறகு தான் சந்தன பாண்டியையும் கண்காணிக்கத் தொடங்கியிருந்தான்.
இது மாரியப்பனுக்குப் பலத்த அடி. ஏற்கனவே இதைச் செய்தது யார் என்று தெரியவில்லை. இப்பொழுது உதவிக்கும் ஆள் இல்லை. தொழிலும் முடங்கி, அவமானமும் ஏற்பட்டு… இனி அவர் ஒரு நடைப் பிணம் மட்டுமே! அந்த நடைப் பிணமும், தற்போதிருந்த சூழலில், சிறைச்சாலைக்குள் தான் காலத்தைக் கடத்தும் நிலை வரும் போல! சிறை தண்டனையிலிருந்து மீண்டாலும், இனி இந்த சரிவிலிருந்து மாரியப்பனால் அவ்வளவு எளிதில் மீள முடியாது. கிட்டத்தட்ட அஸ்தமனம் என்னும் நிலை!
வெற்றிக்கு அவனது திட்டம் சரிவர நடந்து முடிந்ததும் தான் உற்சாகமே! எதிராளியை முழுக்க முடங்கச் செய்தாயிற்றே!அதிலும் சந்தன பாண்டி விலகிக் கொண்டது எதிர்பாராத இன்ப அதிர்ச்சி எனலாம்.
இதெல்லாம் ஒரு முடிவுக்கு வந்தபிறகே, மில்லில் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்து, கவனிக்க வேண்டியவர்களை, கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்தான். தொழிலில் அனைத்தையும் சீரமைத்த பிறகே, ஓரளவு ஓய்வாக உணர்ந்து… சற்றே இறுக்கம் தளர்ந்தான். உண்மையில் இந்த இரண்டு மாதங்களில் மனதிற்கும், உடலுக்கும் அதீத அலைச்சல்.
அனைத்தையும் மூட்டை கட்டி வைக்கத் திருமணம் வந்திருந்தது. அனைத்து வேலைகளையும் முடித்திருந்தபடியால், திருமணத்தில் அவன் வெகு வெகு இயல்பாக, மகிழ்ச்சியாக பொருந்திப் போனான். உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள், ஊர்க்காரர்கள் என ஏகப்பட்ட கூட்டம்.
[the_ad id=”6605″]
ஆரம்பத்தில் செந்தாமரையின் முகவாட்டத்தையோ, தயக்கத்தையோ அவனால் கவனிக்கக் கூட முடியவில்லை. போகப் போக தெளிவாகப் புரிந்தது. ஆதரவாக அவளது கரம் பற்றி, “என்ன ஆச்சு?” என்றான் மென்மையாக.
‘ஒன்னும் இல்லை’ என மறுப்பாகத் தலையசைத்தாள் கல்யாணப்பெண். ஆனால், எதுவோ இருக்கிறது என அவனுக்கு நன்கு புரிந்தது. இருக்கும் சூழலில் எதுவும் கேட்கவும் முடியவில்லை. வந்திருந்த உயர் அதிகாரிகளைப் பார்த்து மிரள்கிறாளோ என்று எண்ணம் தோன்றவே,
“எல்லாரும் அப்பாவோட பிரண்ட்ஸ்” என்றான் அவனாகவே. தலையை மட்டும் உருட்டிக் கொண்டாள்.
திருமணத்தன்று காவல்துறை அதிகாரி போல இருப்பவர் ஒருவர் வந்து, வெற்றிச்செல்வனை விட இவளிடம், நல்ல அறிமுகமான பாவத்தைக் காட்டினார். இவளுக்கு அவரது அணுகுமுறை குழப்பத்தைத் தந்தது.
“எப்படி இருக்கீங்க?” என நன்கு தெரிந்தவர் போல அவர் இவளிடம் கேட்க, சத்தியமாக அவளுக்கு அந்த நேரத்தில் அவர் யாரென்று தெரியவில்லை. இலகு மனநிலையிலிருந்திருந்தால் நொடியில் கண்டுபிடித்திருப்பாள். இப்பொழுது சற்று குழப்பமும், ஆதங்கமுமாக இருக்க அவளால் அவரை அடையாளம் காண முடியவில்லை. ஆனால், முகம் எங்கோ பார்த்தது போல தான் தோன்றியது. எங்குப் பார்த்திருக்கிறாள் என்று தான் சட்டென்று நினைவில் வரவில்லை.
பதில் கூற வேண்டுமே என்று, புன்னகை முகமாகவே, “நல்லா இருக்கேன் சார். நீங்க எப்படி இருக்கீங்க? சாப்பிட்டீங்களா?” என்று சம்பிரதாயமாகக் கேட்டு வைத்தாள்.
“நானும் நல்லா இருக்கேன் மா. இதோ சாப்பிடறேன். நம்ம வீட்டு விசேஷம் சாப்பிடாம போவேனா?” என்றார் உரிமையாக. பதிலுக்குச் சிரித்து மட்டும் வைத்தாள்.
வெற்றியிடமும் ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசியவர், இருவருக்கும் வாழ்த்தைக் கூறி விட்டு மேடையிலிருந்து இறங்கினார். அவர் யாரெனப் புரியாமல் சிறிது நேரம் யோசித்தும் அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை.
அதன்பிறகு சடங்குகள், சம்பிரதாயங்கள் என நேரம் இழுத்துக் கொண்டது.
இடையில் ஒருமுறை, “என்ன மாஹி பேசவே மாட்டீங்கற?” என வெற்றிச்செல்வன் அலுத்து வேற கொண்டான். அவளுக்கு ஆற்றாமை எல்லாம் போய் கோபம் கனன்றது. திருமணம் எத்தனை மகிழ்வான நிகழ்வு, அதைப் போய் வீணடித்து விட்டு இப்பொழுது பேச்சைப் பார் என்று எரிச்சலானது.
இவனுக்குத் தேவை என்றால், வந்து பேசுவான். இல்லாவிட்டால் கண்டு கொள்ள மாட்டான். என்னைப் பார்த்தால் எப்படித் தெரிகிறது இவனுக்கு? இவனுக்காகக் காதல் வந்திருந்தால் என் மனம் புரிந்திருக்கும். தந்தை பார்த்த பெண் என்று தெரிந்த பிறகு வந்த அபிப்ராயம் தானே! அதனால் தான் இப்படி அலைக்கழிக்கிறான் என அவளின் மனம் சுணங்கியது.
ஒருவழியாக வரவேற்பும், திருமணமும் வெகு சிறப்பாக நடந்து முடிந்திருந்தது. அடுத்த வாரத்தில் பஞ்சாபில், அங்கு இருக்கும் தெரிந்தவர்களுக்காக ஒரு திருமண வரவேற்பும், அதைத்தொடர்ந்து தம்பதிகள் பஞ்சாபிற்கு அருகிலுள்ள சிம்லாவிற்கு தேனிலவு செல்வதாகவும் ஏற்பாடு.
தேனிலவு தொடர்பாக அம்மாவும், தம்பியும் ஏற்பாடு செய்திருக்க, வெற்றிக்கே திருமணத்திற்கு இரண்டு நாட்கள் முன்பு தான் விஷயம் தெரியும். அம்மாவிடம் எதுவும் சொல்லாமல், ‘எதுக்குடா?’ எனத் தனிமையில் தம்பியைக் கடிந்திருந்தான்.
[the_ad id=”6605″]
‘தேனிலவு எதற்கென்றால் அவன் எப்படி பதில் சொல்வான்?’ அண்ணனுடன் கூடக்கூட மல்லுக்கு நிற்கும் அவனே பே’வென விழித்தான் இந்த கேள்வியில்.
“என்னடா இப்படி முழிக்கிற?” என்று வெற்றி உலுக்க,
“இல்லை ஏதோ சிமிர்தி கிட்ட மாஹி பாட்ட லவ்லியா பாடினேன்னு சொன்னாளே!” என்றான் முத்து சம்பந்தமே இல்லாமல்.
“அதுக்கு என்னடா இப்ப?” என வெற்றி புரியாமல் கேட்டிருக்க,
“பின்ன ஹனி மூன் எதுக்குன்னு கேட்கிற? உனக்குக் கல்யாணம் ஆகப்போகுது ஞாபகம் இருக்கா?”
“அடச்சீ… அங்கேயே எதுக்கு ஏற்பாடு பண்ணறீங்கன்னு கேட்டேன் டா? என்னை அங்க டேரா போட வைக்க பார்க்கறீங்களான்னு கேட்க வந்தேன்” என்று வெற்றி சற்று சிடுசிடுப்பாக சொல்ல,
இப்பொழுது முத்து முறைத்தான். “ஆமா சிம்லா பஞ்சாபுக்கு அடுத்த தெருவுல இருக்கு. நாங்க உன்னை மடியில வெச்சுக்க போறோம். ஏன் டா உன் வீட்டுக்கு வரதுக்கு நீ கணக்கு பார்ப்பியா?” என எரிச்சலாக கேட்டான்.
முத்துவுக்கு கோபத்தைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. கோபத்தில் அங்கிருந்து நகரப்போனவனின் கையைப் பிடித்துத் தடுத்த வெற்றி, “முத்து… அப்படியில்லை டா, அங்க வந்தா மறுபடியும் உங்களை விட்டுட்டு இங்க வரதுக்கு கஷ்டமா இருக்கும். அதான் அப்படி பேசிட்டேன். பிளீஸ் டா புரிஞ்சுக்க”
“என்னத்த புரிஞ்சுக்க சொல்லற? உனக்கு அப்பா எல்லா விஷயத்துலேயும் கூடவே இருந்தாரு. உன் படிப்பு முடிச்சு, அவருக்காக நீ சில வருஷம் மிலிட்டரி’யில சர்வீஸ் செஞ்சு, அதுக்கு அப்பறம் அந்த வேலையை விட்டுட்டு வந்து, உனக்காக… உன் ட்ரீம் ஜாப் தேர்ந்தெடுத்து… அந்த வழியில பயணிக்கிற வரை அப்பா உன் கூடவே இருந்தாரு. ஆனா, எனக்கு? சொல்லு எனக்கு யார் இருக்காங்க? அம்மா, அவங்க என்ன செய்வாங்க?” ஆற்றாமையும், தவிப்புமாக இளையவன் கேட்க, என்ன சொல்கிறான் இவன் என உடைந்து போனான் வெற்றி.