ஏழு வருடங்களுக்கு முன்!
இது போன்றதொரு திருவிழாவில் ஊர்மக்கள் அனைவரும் கோவிலில் கூடியிருந்த வேளையில்,
“ஆத்தா வந்திருக்கேன்டா” எனப் பெருங்குரலெடுத்து சாமியாடத் துவங்கினார் ஒரு பெண்மணி. அவரது குரலுக்கு,
“அட ஆராவது மஞ்சநீர் கலந்து கொண்டாங்க. சட்டுன்னு போங்க. எலுமிச்சம்பழம் எங்க? கற்பூரத்தை கொளுத்துங்க..” என ஆளாளுக்கு பரபரக்க, நடப்பது அனைத்தையும் வேடிக்கை பார்த்திருந்தாள் அரசி.
ஆன்மீகத்தில் நம்பிக்கை இருந்தாலும் இதுபோன்ற செயல்களில் அவளுக்கு நம்பிக்கை இல்லை. கடவுள் இல்லை என்பவரைக் கூட நம்பிவிடுவாள். ஆனால், நான் தான் கடவுள் என்பவர்களை நம்பமாட்டாள்.
ஒவ்வொருவராய் தனக்கு கீழ் மண்டியிடும்படி சொல்லி அப்பெண்மணி அனைவருக்கும் விபூதி அளித்துக் கொண்டிருக்க, நாயகி அரசியையும் வந்து ஆசிர்வாதம் வாங்கச் சொல்ல மறுத்தவள்,
“இதெல்லாம் ஊரை ஏமாத்துற வேலைங் ஆத்தா” என்று எடுத்தெறிந்து பேசிவிட, சாமியாடும் பெண்ணும் அரசிக்கு எதிராய் பல வாக்குகளை சொல்லிவிட்டார்.
தெய்வக்குத்தம் ஆகியதுபோல் அருகிலிருப்பவர்கள் சித்தரிக்க,
‘வந்த எடத்துல வாய வெச்சுக்கிட்டு சும்மா இருக்காம இவளுக்கு தேவையா இது’ எனப் பார்த்திருந்தனர் விக்ரமனும், குலசேகரனும்.
“கண்ணு நீ அப்பத்தா கூட நம்ம வீட்டுக்கு போ சாமி” என்று வேலுச்சாமி அரசியை அங்கிருந்து அனுப்பி வைக்க, உடனே அவளை அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தார் ரங்கநாயகி.
மற்ற அனைவரும் கோவிலில் இருந்து பூஜையை முடித்துக்கொண்டு வீடு வர, வந்ததுமே சாட்டை வாரை கையோடு தேடி எடுத்து வந்தார் ஆறுச்சாமி.
கருவேப்பிலை மரத்தருகே நின்றிருந்த அரசி, தன் தந்தை சாட்டை வாரை எடுப்பத்தைக் கண்டதுமே அதுவரை தான் ஒடித்து வைத்திருந்த கருவேப்பிலைக் கொத்தோடு வேகமாய் உள்ளே ஓடிவந்து தூணின் பின்னால் மறைந்து நிற்க,
“என்ன கொழுப்பிருந்தா ஊரு முன்னால அப்படி எடுத்தெறிஞ்சு பேசுவ” என்று சாட்டை வாரை ஒங்க,
“ஏய் ஆறுச்சாமி” என்று வேகமாய் திரும்பினாள்.
“பேரச் சொல்லியா கூப்புடுற கழுத” என கையை ஓங்க,
“டேஏஏய்…!” என்றிருந்தாள்.
‘டேயா…!’ என வீட்டிற்குள் அடியெடுத்து வைத்த விக்ரமனும் குலசேகரனும் அதிர்ந்துபோய் பார்த்திருக்க, ஆறுச்சாமியோ அதிர்ச்சியில் அசையாது நின்றிருந்தார்.
“நான் ஆத்தா வந்திருக்கேன் டா. என்னைய அடிக்கவே கையை ஓங்குவியா நீ?” என கத்திக் கொண்டு அங்கிருந்து வந்து நடுவீட்டில் குதித்துக் கொண்டிருந்தாள்.
“அட அக்கட்டால போ ஆறுச்சாமி. என்ர குலசாமி செல்லாண்டியம்மா தான் எம்பேத்தி உருவத்துல வந்திருக்கா” என நாயகி வந்து அரசியின் முன்னால் மண்டியிட்டு கைகூப்ப, அவரை நிமிர்ந்து பார்த்தவள் சிரிப்பை அடக்கிக் கொண்டு
“ஏய் நாயகி! நீ ரங்கநாயகி இல்ல” என,
[the_ad id=”6605″]
“என்ன சொல்லுற ஆத்தா” எனப் பதறினார் நாயகி.
“பதறாத, தெய்வ நாயகினு சொல்ல வந்தேன். அழகுல நீ சரோஜா தேவி. அறிவுல நீ பானுமதி. குரல் வளத்துல நீ எல்.ஆர் ஈஸ்வரி. மொத்தத்துல நீ நாயகி.. கதாஆஆநாயகி. அநியாயமா இந்தக் குடும்பத்துக்கு வாக்குப்பட்டு வந்து ஒழச்சு ஓடா தேஞ்சு இப்படி வீணாப் போய்ட்டியே நாயகிஈஈஈ” என,
“சரித்தேன் ஆத்தா. என்னைய மருதையில கேட்டாக மன்னார்குடியில கேட்டாக. என்ர கெரகம் இங்க வந்து மாட்டிக்கிட்டேன்” என நாயகி புலம்ப ஆரம்பித்தார்.
“ஆமா அம்பாசமுத்திரதுல அம்பானி கேட்டாக. அமெரிக்காவுல ட்ரம்ப்பு கேட்டாக. ஆத்தா பல்லை பாத்தும் பெரிய மனசு பண்ணி நம்ம அப்பாரு தான் கட்டிருக்காரு, ஆனா ஆத்தாளுக்கு வெசனத்தை பாத்தியா மாப்ள” எனக் குலசேகரன் விக்ரமனின் காதைக் கடிக்க,
“அவ ஒரு கூட ஐஸை ஆத்தா தலையில எறக்கிட்டா மச்சா. இனி இங்கிருந்தா நமக்கும் ஆபத்து. கெளம்பிடுவோம் வா” என்று அவன் நண்பனைக் கூட்டிக்கொண்டு நழுவப் பார்க்க,
“கூட்டத்துல காளைக ரெண்டும் நழுவப் பார்க்குது. போனா ரத்தம் கக்குவானுக” என்று கத்தினாள் அரசி.
உடனே இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு நகராது ஆளுக்கொரு தூணின் அருகில் நின்றுகொள்ள, அரசி பயங்கரமாய் கத்திக் கொண்டும் கையில் வைத்திருந்த கருவேப்பிலை கொத்தோடு குதித்துக் கொண்டும் இருந்தாள்.
“வேப்பிலைக்கு பதிலா கருவேப்பிலையை கையில வெச்சுட்டு ஆடுறா மாப்ள” என்றான் குலசேகரன் அதை கண்டுபிடித்து.
“சும்மா இரு மச்சா. இதைய சொல்லி நீயே வம்புல போய் மாட்டாத. இன்னிக்கு கோவில்ல நடந்ததை மனசுல வெச்சிட்டு தான் இப்படி பண்ணிட்டு இருக்கா” என்றுவிட்டான் விக்ரமன்.
“அநியாயம் பண்ணுறீங்க டா. ஊரே அழிஞ்சுபோயிடும் டா” என்றாள் அவள் பாட்டிற்கு.
“என்னாத்தா சொல்லுற? புரியுற மாறி சொல்லு. உம்பிள்ளைக என்ன தப்பு செஞ்சிருந்தாலும் மன்னிச்சிரு ஆத்தா” என்று முத்துலட்சுமி சொல்ல,
“ஆத்தாள மலையேத்தனுமே! நான் என்ன பண்ணுவேன்” என்று நாயகி ஒரு புறம் சுற்றிக் கொண்டிருக்க,
“ஆத்தாள நம்ம ஆறுச்சாமி மாமன் சாட்டை வாரால வெளுக்காம இருந்தாலே அதெல்லாம் ஆத்தா தானா மலை எறிரும்ங்க அப்பத்தா” என்றான் குலசேகரன்.
‘இந்த மாம்ஸ் எதுக்கு நம்ம பக்கம் வருது. நம்ம மாம்ஸை டார்கெட் பண்ணலையே?’ என முடியை விலக்கி அவன் முகத்தைப் பார்க்க,
“பாக்குறா பாருங் பாக்குறா பாருங்” என கைநீட்டி குலசேகரன் அவளை காண்பிக்க.
“மூட்ரா வாய..” என்றிருந்தாள்.
“என்னது டா வா” என் குலசேகரன் அதிர,
“மச்சா சும்மா இரு” என அவன் கையை விக்ரமன் பிடிக்க, அதைத் தட்டி விட்டவன்,
“நீ பேசாம இரு மாப்ள. இவளுக்கு வாய் அதிகம் ஆகிடுச்சு இன்னிக்கு ஒரு கை பாக்குறேன்” என்றிட,
“அதுக்கு மேல உன்ர இஷ்டம்” என அவன் கையை விட்டுவிட்டான் விக்ரமன்.
“வந்து என்ர முன்னாடி மண்டியிட்டு மன்னிப்பு கேளு டா” என்றாள் அரசி.
“சேகரா சொன்னதை செய்யு. ஆத்தா கோபத்துக்கு ஆளாகாதா”
“அட நீங் சும்மா இருங் அப்பத்தா. இவ தான் நடிக்குறானா நீங் அதுக்குமேல பண்ணிக்கிட்டு இருக்குறீங்க”
“கோவில்ல யாராவது மேல வந்தா மட்டும் தான் ஆத்தான்னு ஒத்துப்பீங்களா டா? நான் எங்கயும் வருவேன் டா. தூணிலும் இருப்பேன் துரும்பிலும் இருப்பேன். அரசிய எனக்கு ரொம்ப பிடிச்சதால இப்போ அவ மேல வந்திறங்கி இருக்கேன்டா தடியா” என, குலசேகரன் பல்லைக் கடித்துக் கொண்டு நின்றிருந்தான்.
“என்னடா பக்கத்தூரு பிரியாவுக்கு கடுதாசி போட்டயாமே” என்றதில் திடுக்கிட்டு அரசியைப் பார்க்க, முடியை விலக்கி அவனைப் பார்த்து
“இப்போ மண்டி போடுறயா?” என்றாள்.
அவன் விக்ரமனைப் பார்க்க,
‘அப்போவே போகாதைன்னு சொன்னேன். நீ கேக்கலையே மச்சா’ எனப் பார்த்திருந்தான்.
பக்கத்து ஊர் பிரியாவிற்கு மைக் மாரிமுத்து காதல் கடிதம் எழுத, அதை யாருக்கும் தெரியாது தபால் செய்யுமாறு குலசேகரனிடம் காலில் விழாத குறையாய் கெஞ்ச, அவனும் சென்று தபால் செய்து விட்டு திரும்பும் போது அரும்பிடம் மாட்டிக் கொண்டான்.
என்னது? ஏது? யாருக்கு? என்று எலிபோல் குடைந்து விசயத்தை தெரிந்துகொண்டாள். தெரிந்ததோடு நிறுத்தாமல் அரசியின் காதிலும் போட்டு விட்டாள்.
‘எல்லாம் எங்கக்கா மக எலி வேலையாதான் இருக்கும். சொன்னதை செய்யலைனா அந்தக் கடுதாசியை எழுதுனதே நான் தான்னு ஊருக்குள்ள சொல்லி வெச்சாலும் வெப்பாளுக’ என்று நினைத்தவன்
“மன்னிச்சிரு ஆத்தா மன்னிச்சிரு ஆத்தா” என மண்டியிட,
“நல்லா இரு. நல்லா இரு” என்று அவன் தலையில் கருவேப்பிலைக் கொத்தால் அடிக்க, தப்பித்தோம் பிழைத்தோம் என எழுந்து அங்கிருந்து நழுவிக் கொண்டான்.
அடுத்து அருந்தமிழ் அவள் காலில் விழச்செல்ல,
“தமிழு நீ அங்கேயே இரு. என்ர ஆசி உனக்கு எப்போவும் இருக்கு” என கையை தூக்கி வாழ்த்தினாள்.
“லட்சுமி.!” என்று அடுத்து குரல் கொடுக்க,
‘இவ என்ன ஆடு மாடெல்லாம் கூப்பிடுறா’ என பார்த்திருந்தான் விக்ரமன்.
“நம்ம லட்சுமியை பிடிச்சாரட்டுங்களா அம்மணி?” என மாடசாமியும் குரல் கொடுக்க,
“டேய் நான் சொன்னது கோமாதா லட்சுமி இல்லைடா. நம்ம குடும்பத்து மகாலட்சுமி” என்று சொல்ல, வேலுச்சாமி தன் மனையாளை போகுமாறு கண்காட்ட,
“என்னையவா கூப்புட்டீங் ஆத்தா” என்று வந்து நின்றார் முத்துலட்சுமி.
“வாத்தா வாத்தா. உன்னையவே தான். நீ குணத்துல தங்கலட்சுமி. வீரத்துல கோவில்பட்டி வீரலட்சுமி. சாப்பாடு போடுறதுல அன்னலட்சுமி மொத்தத்துல வேலுச்சாமி வாழ்கைக்கு ஒளிகொடுத்த தீபலட்சுமி” என்று வாழ்த்தி அனுப்ப,
‘ஏது கோவில்பட்டி வீர லட்சுமியா’ எனப் பார்த்திருந்தான் விக்ரமன்.
[the_ad id=”6605″]
“வேலுச்சாமி! நீ எனக்கு ரொம்ப பிடிச்சவனப்பா. உன்ர தங்கமான மனசுக்கு நீ நல்லா இருப்பப்பா இந்தா திருநீறு” என்று திருநீறு கொடுத்து அனுப்பிவிட்டாள் வேலுச்சாமிக்கு. அடுத்து சுற்றும் முற்றும் முடியை விலக்கிப் பார்த்தவள்,
“வரசொல்லு அந்த அடங்காத காளையை” என்றாள்.
‘யார சொல்லுறான்னு தெரியலையே’ என விக்ரமன் பார்க்க..
“யார ஆத்தா?” என்று நாயகி கேட்க,
“உன்ர மவன் ஆறுச்சாமியத்தேன்” என்றாள். அவர் வேண்டாய் வெறுப்பாய் அவள் முன் வந்து நிற்க,
“சாட்ட வாரை இனி நீ கையுல எடுத்தா ஆத்தாவோட கடுங்கோபத்துக்கு ஆளாகிடுவ. ரெண்டு பிள்ளைகளையும் ஒருசேர பாருப்பா ஆறு. ஒரு கண்ணுல வெண்ணையும் ஒரு கண்ணுல சுண்ணாம்புமா? அரசி கேட்குறதை எல்லாம் மறுக்காம செஞ்சு கொடுக்கோணும். அவ சந்தோசமா இருந்தா தான் ஆத்தா சந்தோசமா இருப்பேன்” என்றதும் அவர் சந்தேகமாய் பார்க்க,
அவர் நெற்றியில் திருநீறை அப்பியவள்,
“போ போ முறைக்காம போ. ஆத்தாவையே முறைப்பையா நீயு. ஏய் ரங்கநாயகி உன்ர மவன் என்ன ஆத்தாவையே முறைக்குறாப்புல சொல்லி வெய்யு” என்றாள்.
“வா ஆறுச்சாமி இங்க. ஏன் ஆத்தா கோபத்தை அதிகப்படுத்துற” என் அவரை பின்னால் இழுத்தார் நாயகி.
“ஏய் முரட்டுக் காளை. நீ வா என்ர முன்னால” என்று விக்ரமனை அழைக்க,
‘என்ன ரைமிங்கா கூப்புடுறா? படத்துக்கு போக விடாம பண்ணுனதுக்கு பழி வாங்கப் போறா’ என்று எண்ணிக்கொண்டு முன்னால் செல்ல,
“மண்டிபோடு” என்றாள். அவன் முடியாதென்று முறைக்க,
“என்ன முறைக்குற போடு” என்றாள் கையிலிருந்த கருவேப்பிலை கொத்தை சுழற்றியபடி.
“கண்ணு விக்ரமா போட்டுடு ப்பா” என நாயகி சொல்ல,
[the_ad id=”6605″]
‘மானத்தை வாங்குறாளே’ என ஒருவழியாக போட்டுவிட்டான்.
“உன்ன நம்புன கன்னுக்குட்டியை நீ தான்டா காப்பாத்தோனும். இப்படி காட்டிக் கொடுக்கக் கூடாதுடா காளையா” என அவன் தலையில் கருவேப்பிலையால் அடிக்க, அவன் முறைத்துப் பார்த்திருக்க, முடியை விலக்கி அவள் சிரிப்பது நன்கு தெரிந்தது.
பாரபட்சம் பார்க்காது அனைவரையும் ஒரு வாங்கு வாங்கிவிட்டாள் அன்று.
ஏழு வருடங்கள் கடந்திருக்க, இன்றைய திருவிழா கூட்டத்தில் அனைவரும் ஆளுக்கொரு மூலையில் நின்றிருந்தாலும் அன்றைய நாளின் நினைவுகளில் இருந்து விடுபட முடியாது அனைவரின் பார்வையும் அரசியின் மீதே இருந்தது. அவளோ,
‘எதுக்கு இப்படி எல்லாரும் என்னையவே பாக்குறாங்க’ என எதுவுமே தெரியாதது போல் அரும்பை அழைத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள்.
வாசம் வீசும்..!