செந்தாமரை இங்கு பஞ்சாபிலேயே தங்க நேர்ந்ததை குறித்து, வெற்றிச்செல்வன், விஷயம் தெரிந்தபோது மட்டும் கோபம் கொண்டதோடு சரி. அதன்பிறகு, அன்றிரவே அவளுக்காக விமான டிக்கட்டை மட்டும் ரத்து செய்து விட்டு, “பத்திரமா இருக்கணும் சரியா?” என்றான் வெகு இயல்பாக.
‘மதியம் அரை மனதோடு ஒப்புக்கொண்டவன் இவன்தானா?’ என்று மலைப்பாக இருந்தது பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு. தலைகீழ் மாற்றங்கள் கருத்தில் பதியாமல் இருக்குமா?
“என்ன மாஹி?” அவளது அமைதியில் கணினியிலிருந்து பார்வையைத் திருப்பி அவள் முகம் பார்க்க, அவளோ அவனது புத்தகங்களை வருடிக் கொண்டிருந்தாள். அவளுக்கு என்னவோ உறுத்தியது. கணவனின் செய்கை மதியத்திற்கும், இரவுக்கும் இடையே ஏகப்பட்ட மாறுதல்கள் என்று தோன்றியது. கேட்கத்தான் முடியவில்லை.
கணினியை அணைத்தவன், “என்ன மாஹி என்ன யோசனை?” எனக் கேட்டபடி அருகில் வந்தான். எதுவுமில்லை எனத் தலையசைத்தாள். ஆனால், முகத்தில் தெளிவில்லை.
அவனுக்கு காரணம் புரியவில்லை. யோசனையோடே, அவளது செய்கையைப் பார்த்தவன், “இவ்வளவு புக்ஸ் எதுக்குன்னு கேட்க மாட்டியா?” என்று ஆவலாக, மெல்லிய ஏக்கத்துடன் கேட்டு நின்றான்.
கணவனின் குரலிலிருந்த பாவனையில், அவளது மற்ற சிந்தனைகள் எல்லாம் அறுந்து விழுந்தது. குறுநகையுடன், “தெரியுமே! நீங்க ரொம்ப படிப்ஸ். உங்க ஆசை, லட்சியமே ஐ.ஏ.எஸ் ஆகணும்ங்கிறது தான்” என்றாள் அவன் கனவினை அவளது விழிகளில் கண்டபடி.
‘தெரிந்து வைத்திருக்கிறாளா?’ என்று வியப்பாக இருந்தது. நாம் சொல்லித் தெரிந்து கொள்ளவில்லையே என்னும் மெல்லிய சுணக்கமும்!
[the_ad id=”6605″]
வெற்றியின் வியப்பை உணர்ந்து, “அத்தை, முத்து எல்லாம் உங்களைப் பத்தி நிறையா பேசுனாங்க. உங்களைப் பத்தி நிறைய, நிறைய சொன்னாங்க… கல்யாணத்துக்கு முன்ன போன் செய்யும்போதெல்லாம்” அவன் கேட்காமலேயே விவரம் கூறினாள்.
‘நான் அவளை அழைக்கவேயில்லை’ என்னும் சுணக்கம் அவளுக்கு இருப்பது, வெற்றிக்கு தெளிவாகவே புரிந்தது. திருமண ஏக்கங்களை எப்படியும் பாழ் படுத்தி விட்டோம் தானே! என்ன காரணம் சொன்னாலும் அதைச் சரி செய்யவோ, நேர் படுத்தவோ இயலாதே!
“அது… மாஹி… ரியலி சாரி… என்னை ரொம்ப தேடி இருப்ப தான…” அவளது விரல்களை, தனது கரங்களுக்குள் பாதுகாப்பாய் வைத்துக் கொண்டு, அவளது முகம் பார்த்து கேட்டான். யாசிப்பாகவா, மன்னிப்பாகவா அவளால் அவனது பாவனையைப் பிரித்தறிய முடியவில்லை.
‘ஆம் என்று சொல்வதா? இல்லை என்று சொல்வதா? ஆம் தான் என்று உனக்குத் தெரியாதா?’ வாயைத் திறந்து கேட்டிடவில்லை. ஆனால், அவளது விழிகள் அவனிடம் அதைத்தான் கேட்டு நின்றது.
மன்னவன் இந்த சூழலில், மன்னிப்பு தான் கேட்டிருக்க வேண்டும். ஆனால் அவனோ, வேறு பேசினான். “எத்தனை மன்னிப்பு கேட்டாலும் போதாது மாஹி… ஆனா, மன்னிப்பு கேட்டா, அந்த தவறை மறுபடியும் செய்யக் கூடாது தானே! அப்படி என்னால இருக்க முடியுமா தெரியலை. நான் இறங்கற வேலை ஆபத்தானதுன்னா… என் கவனம் அதிலிருந்து சிதறாது. அப்ப நீ, அம்மா, முத்து, நம்ம குழந்தைங்க யாரா இருந்தாலும், உங்களோட எதிர்பார்ப்புக்கு ஏத்த மாதிரி என்னால இருக்கவே முடியாது. அப்ப எல்லாம் என்னை உன்னால புரிஞ்சுக்கிட்டு, சகிச்சுக்கிட்டு போக முடியும் தானே!” அவள் விரல்களை விடுத்து, முகம் பற்றிக் கேட்டவனின் விழிகள் தன்னவளிடம் கோரிக்கை வைத்தது.
ஊர்த்தலைவர் என்னும் பொறுப்புக்கே அந்தளவு தான் இருக்கிறான் என்பதைக் கண்கூடாக பார்த்தவள் தானே! இனி கலெக்டர் என்னும் பதவி என்றால், சொல்லவும் வேண்டுமோ? அதுகுறித்து தான் சொல்கிறான் போல என்று தான் முதலில் நினைத்தாள்.
ஆனால், மனதின் ஓரத்தில் இருக்கும் சந்தேகம் சட்டென்று விழித்துக் கொண்டது. ‘ஒருவேளை சுந்தரேசன், அந்த ஆசிரியரை எல்லாம் இவன் ஏதோ செய்து விட்டதாக… நமக்குச் சந்தேகம் எழுகிறதே! அது குறித்துத் தான் பூடகமாக எதையும் சொல்கிறானோ!’ என்று இந்த சூழலுக்கு சற்றும் ஒவ்வாத ஒரு அச்சம், அவளது மனதைக் குளிரூட்டியது.
அவளது முகம் சற்று கலவரப்பட, “என்ன மாஹி? இதுக்காக என்னை வெறுக்க மாட்ட தானே? முடிஞ்சவரை என்னை மாத்திப்பேன் டா” என்றான் கரை காணாத காதலுடன். முகத்தில் கலக்கம் நன்றாகவே தெரிந்தது.
எப்பொழுதும் காதல் தானே வெல்லும்… மெல்லிய சந்தேகங்களை உடைத்தெறிந்து… இங்கும் விதிவிலக்கல்ல! உறுதியாகத் தெரியும் முன்பு சந்தேகத்தைப் பிடித்துத் தொங்க வேண்டாம் என நினைத்தவள், தன் சந்தேகங்களைப் புறந்தள்ளினாள். அதற்கு அவனது கலக்கமும் முக்கிய காரணம்.
அவன் கலக்கத்தைத் தாங்காது… மார்பில் சாய்ந்தவள், “யோவ்… அப்படியெல்லாம் விட்டுட்டு போக முடியாது… என்னை நீ கவனிக்காட்டி… உன் கூடத் தானே இருப்பேன், அதெல்லாம் உன்னைக் கவனிக்க வெச்சுடுவேன்” என்றாள் கெத்தாக. சூழலை இலகுவாக்க அவள் பேசியது நன்றாகவே வேலை செய்தது. கணவனும் பெருமையாக, பூரணமாக உணர்ந்தான், தன்னவளின் பேச்சினில்.
பஞ்சாபில் அறிந்தவர், தெரிந்தவர்களுடன் ரிசப்ஷன் வெகு விமரிசையாக நடந்தது. செந்தாமரைக்கு இங்கும் அதே பிரமிப்பு. நன்கு செல்வாக்கான குடும்பம், அதற்கேற்ப விழா ஆடம்பரமாக இருந்தது.
என்ன யார் பேசுவதும் இவளுக்குப் புரியவில்லை. ஹிந்தி, பஞ்சாபி, ஆங்கிலம் என ஆளுக்கொரு வகை. மெல்லிய புன்னகையுடன் கடந்தாள்.
“நாம இங்க தான் வந்துடுவோமா?” பாதி ரிசப்ஷனில் கணவனின் காது கடித்தாள் மனைவி.
“கண்டிப்பா…” என்றான் கண்சிமிட்டி.
[the_ad id=”6605″]
“இதெல்லாம் சொல்லித் தானே நீங்க கல்யாணம் செய்திருக்கணும்” என்றாள் முகத்தைச் சுருக்கி.
கணவனோ அவளது கோபத்தைக் கண்டுகொள்ளாது, அவளது பாவனையில் லயித்து, “அழகி…” என்று மனதார புகழ்ந்தான். முறைத்தாலும் பெண்ணவளின் கன்னங்கள் சிவப்பேரியிருந்தது.
ஆனால், வெற்றியின் இந்த பேச்சு கூட, என்னவோ சாயம் பூசியது போலத் தான் செந்தாமரைக்கு தெரிந்தது. திருமணத்தன்று இருந்த கலகலப்புக்கும், இன்று ஏதோ யோசனையுடன்… முகத்தில் மட்டும் புன்னகை வாடாமல் வைத்திருப்பவனுக்குமான வித்தியாசம் அவளுக்கு நன்றாகவே புரிந்தது.
ஆனால், கணவன் தெளிவு போல தான் காட்டிக் கொண்டான். அனைவரையும் வரவேற்றான். முறையாக அறிமுகம் செய்து வைத்தான். அவர்கள் பேசுவது புரியாமல் விழிப்பவளுக்கு எடுத்துக் கூறினான். ஆனால், அனைத்துமே இயந்திர கதியில் நடக்கிறதோ என்ற எண்ணம் மட்டும் செந்தாமரைக்கு எழுந்து கொண்டே இருந்ததை அவளால் தடுக்க இயலவில்லை.
உண்மையும் அதுதானே! அவனது எண்ணங்கள் முழுவதும் ‘சந்தன பாண்டியரை’ தானே வளம் வந்து கொண்டிருந்தது.
அன்றிரவு தனிமையில், வெற்றிச்செல்வன் இதுவரை யாரிடமும் பகிராத தன் மனதின் பக்கங்களை மனைவியிடம் திறந்து காட்டினான்.
“நான் ஏன் சேலம் வந்தேன்னு தெரியுமா மாஹி?”
“அத்தை சொன்னாங்க… மாமாவோட ஆசை… அதுக்காக என்ன வேணா செய்வான் அப்படின்னு” முகத்தைச் சுருக்கி வைத்து அவள் சொன்ன பாவனையில்,
“உடனே மேடத்துக்கு எங்க அப்பா சொன்னதால தான் உன்னை கட்டிக்கிறேன்னு மறுபடியும் தோணி இருக்குமே!” என்றான் கேலியாக. அவளுடைய பரமேஸ்வரன் ஐயா என்ற அழைப்பை விட, மாமா என்றழைப்பு அவனுக்கு மிகவும் நிறைவாக இருந்தது.
உதட்டைச் சுளித்து முறைத்தாள். அவனுக்கு அவளுடைய பாவனை அப்படியொரு சிரிப்பைத் தந்தது.
“பாரு… அப்பா மேல எனக்கு நிறைய பாசம், மரியாதை எல்லாம் இருக்கு. அதுக்காக என்னோட வாழ்க்கையை அவர் இஷ்டத்துக்கு எல்லாம், என்னால எப்பவும் வாழ முடியாது” என்று தொடங்கினான்.
நம்பாத பாவனையை அவள் பார்க்க, “உண்மை தான் மாஹி… உனக்கு தோணலாம். அம்மா, தம்பி அவங்களை பத்தி யோசிக்காம கிளம்பி, அப்பாவோட ஆசைக்காக வந்துட்டான். இவன் இப்ப அப்படியே மாத்தி பேசறான்னு…” மெலிதாக சிரித்துக் கொண்டாள்.
“அப்பாவுக்கு எதுவும் ஆகலைன்னா நான் அங்க வந்திருக்கவே மாட்டேன் மாஹி. அவரோட இழப்பு என்னை ரொம்பவும் பாதிச்சுடுச்சு. இன்னும் சொல்லணும்ன்னா… அதுக்கு காரணமே நான் தானோ அப்படிங்கிற குற்றவுணர்ச்சி என்னை ரொம்பவும் வதைக்குது” என்று சொல்லும் போதே அவனது குரல் கரகரத்தது.
என்ன சொல்கிறான் இவன் என்பது போல அதிர்ச்சியாகச் செந்தாமரை பார்க்க, “எங்க தாத்தா தான் ஊர்த்தலைவர். அவர் இறந்தப்ப, நானும், அப்பாவும் மிலிட்டரி சர்வீஸ்’ல தான் இருந்தோம்” என்று தொடங்கியவன், பரமேஸ்வரன் சேலம் போனது, மாரியப்பனை ஊர்த்தலைவர் ஆக்கியது… அவனது தகிடுதத்தங்கள்… என எல்லாம் கூறினான்.
“இதெல்லாம் உனக்கே ஓரளவு தெரிஞ்சிருக்கும். ஆனா, அங்க அந்த மாரியப்பன் செய்த தப்பை சரி செஞ்சே ஆகணும்ன்னு அப்பா நினைச்சாரு. அவருக்கு அது உறுத்தல். ஆனா, அதுக்காக அப்பா தன்னோட வேலையை விட்டுட்டு போகணும்ன்னு நினைக்கலை. ஏன் அவர்தான் போகணும்ன்னே அவர் முதல்ல யோசிக்கலை.
நான் அவரோட ஆசைக்காக மிலிட்டரி சர்வீஸ் முடிக்க இருந்த நேரம்.., இனி என்னோட கனவுகளுக்காக பயணிக்கலாம்ன்னு நினைச்ச சமயம்.., அப்ப வந்து, அப்பா என்கிட்ட கேட்டாரு. நான் தான் தப்பா மாரியப்பனை கை காட்டுனேன். இப்ப என்னால ஊருக்கே சிரமம். எல்லாம் என்னோட தப்பு தான்.
[the_ad id=”6605″]
இதைச் சரி பண்ணியே ஆகணும். உன்னால நிச்சயம் முடியும். நீ சரி பண்ணி கொடுக்கறியான்னு என்கிட்ட தான் வந்து நின்னாரு…” அதற்கு மேலே தொடர முடியாமல் வெற்றிக்கு நா தழுதழுத்தது.
செந்தாமரை அவனை ஆதரவாக முதுகை வருடித் தந்து, நீர் அருந்தக் கொடுத்தாள். “உங்களுக்கு மனசுக்கு கஷ்டமன்னா சொல்ல வேண்டாம்ங்க. ஏன் அலட்டிக்கறீங்க?” என வெகு தயக்கமாக, தவிப்பாகக் கணவனிடம் சொன்னாள். தன் கணவன் கம்பீரம் தொலைத்து, தந்தையை இழந்த குழந்தையாக வாடுவதை அவளால் பார்க்கவே முடியவில்லை.
எதுவும் அவனாக தன்னிடம் சொல்வதில்லை என குறைபட்டவள் தான். அதற்காக இப்படி மனம் வருந்தும் கடந்த காலங்களை எல்லாம் கிளறி எடுக்க வேண்டாமே என்னும் தவிப்பு வந்தமர்ந்து கொண்டது. அவன் இவ்வளவு தூரம் வருந்திப் பேசுகிறானே என அவளுடைய விழிகளும் கலங்கி நின்றது.
“இல்லை மாஹி… யாராவது கிட்ட சொல்லணும். என்னால அம்மா, முத்து கிட்ட எல்லாம் இதைச் சொல்ல முடியாது” என்றவன் மேலும் தொடர்ந்தான்.
“நீயே நினைச்சு பாரு. எனக்குன்னு ஒரு ஆசை, லட்சியம் இருக்கு… அதை நோக்கிப் போக விடாம ஏற்கனவே அவர் ஆசைக்காக மிலிட்டரி சர்வீஸ் பண்ணுனேன். மறுபடியும் இன்னொரு வேலை தந்தா? அப்ப அவரோட விருப்பத்தை என் மேல திணிச்சுட்டே இருந்தா… என் விருப்பம்? அது கனவாவே இருக்க வேண்டியது தானா?
அதுவும் எங்க போக சொல்லறாரு. என் அப்பா காதல் கல்யாணம் செய்துட்டாருன்னு ஒரே காரணத்துக்காக, என் அம்மாவை மதிக்காத வீட்டுக்கு. என் அம்மாவை எவ்வளவு பேசுவாங்க தெரியுமா? மானம் போச்சு, கௌரவம் போச்சுன்னு…
என்னால அவரு சொல்லறதை ஏத்துக்கவே முடியலை. அவரு கேட்கவும் மறுத்துட்டேன். ஆனா, நான் மறுத்திருக்க கூடாதல்ல…” என்றவன் எச்சில் விழுங்கினான்.
இடையில் ஏதோ சமாதானமாகப் பேச வந்த செந்தாமரையை, பேச விடவில்லை. “நான் போயிருந்தா… அவருக்கு இந்த நிலை வந்திருக்காது இல்லையா? மாரியப்பன் விஷயத்துல… அவனுக்கு தண்டனை வாங்கி தந்தாரு… ஊருல இருக்க பிரச்சனையெல்லாம் சரி பார்த்தாரு… அப்பறம்…” என்றவன் மேற்கொண்டு தொடர விரும்பவில்லை. அவனே, அதைச் சமீபத்தில் தானே கண்டு பிடித்தான். அதுவும் இவள் எதுவும் குழம்பிக் கொண்டால்…. நாம் செய்யவிருப்பதைத் தடுக்க நினைத்தால்… அனைத்தையும், அனைத்தையும் இதழ்களுக்குள் அடக்கினான்.
ஏற்கனவே வெற்றிச்செல்வன் பல விஷயங்களைக் கூறி விட்டதால், அதில் தத்தளிக்க முடியாமல் போராடியவள், இதைக் கருத்தில் கொள்ளவில்லை.
கணவனின் கவலையை, குற்றவுணர்வை மட்டுப்படச் செய்வதே பிரதானமாக இருக்க, “விடுங்க… விபத்து நடந்தா, நாம என்ன பண்ண முடியும்?” என்றாள் ஆறுதலாக. அவளுக்கு விஷயம் அப்படித்தான் சொல்லப் பட்டிருந்தது. பரமேஸ்வரன் விபத்தில் இறந்தார் என்பதாக.
“விபத்தா? அவனுங்க பிளான் பண்ணி செஞ்சது…” என்றான் விழிகள் சிவக்க, உக்கிரமாக, உடல் விறைக்க.
அவனது தோற்றம் அவளுக்கே பயம் தந்தது. இருந்தும் அவன் சொல்லிய விஷயம் அவளுக்கும் பலத்த அதிர்ச்சி. பரமேஸ்வரன் ஐயாவின் இறப்பு… திட்டமிட்டு நடந்ததா? அந்த மனிதரையும் ஒருவருக்குக் கொல்லுமளவு விரோதம் இருக்குமா?
“யாருங்க?” என்றாள் குரல் நடுங்க.