கூடவே, “மாமா தன் வேலைக்காகத் தானே இங்க வந்தாரு. அவரே இங்க இருந்திருந்தாலும்… வேலையை முடிச்சு ரிடையர்மெண்ட் வாங்கியதும் அங்க தானே அத்தை கூட்டிட்டு போயிருப்பாங்க?” என்று கேட்டபோது மஞ்சுளாவிடம் பதில் இல்லை.
‘அது தானே உண்மை!’ மனம் நிதர்சனத்தை அலசியது. அதோடு வெற்றி திருமணத்திற்காகச் சேலத்திற்குச் சென்றவளிடம் மாமியார் நடந்து கொண்ட முறை முற்றிலும் வேறல்லவா! முன்புபோல புறக்கணிப்போ, உதாசீனமோ எதையும் அவள் பார்க்கவில்லையே! மிகவும் அனுசரணையாக, ஆறுதலாகத் தானே இருந்தார். அதிலேயே அவரது மாற்றம் புரியவில்லையா என மனம் இடித்துரைத்தது.
“என்ன அத்தை யோசனை?”
“நீ சொல்லறதும் சரி தான் டா. எனக்குத் தான் பூர்வீகம்ன்னு ஒன்னு இல்லை. ஆனா, உங்க மாமாக்கு இருக்கே! அந்த பூர்வீகம் என் பசங்களுக்கும் கிடைக்கட்டும். அது தான் முறை!” என மனதார ஒப்புக் கொண்டார். அந்த வார்த்தைகளில் செந்தாமரையின் முகம் மலர்ந்தது.
முத்து தன் அன்னையை அதிசயமாகப் பார்த்தான். அம்மாவால் பாட்டியோடு ஒத்துப்போகவே முடியாது என்பது அவன் எண்ணம். ஏன் அவனுக்கும், வெற்றிக்கும் கூட அப்படித்தான்! பாட்டியின் குணம் அப்படி. அதில் அண்ணன் அங்கு போய் இருந்தது ஒரு அதிசயம் என்றால், இப்பொழுது அன்னையும் அங்கேயே செட்டில் ஆக ஒப்புக்கொண்டது இன்னொரு பேரதிசயம்.
ஆனால், தற்போது இருக்கும் சூழலில், பாட்டி மீது அவனுக்கு எந்தவித கோபமும் இல்லை என்பதை அவன் ஒப்புக் கொண்டு தான் ஆக வேண்டும். எப்பொழுதும் கம்பீரமாகவும், நிமிர்வாகவும் வலம் வந்த பெண்மணியை… இப்பொழுது ஒடுங்கி பார்க்கவே அத்தனை வேதனையாக இருந்தது.
அண்ணனின் திருமணத்திற்கு ஊருக்குச் சென்றபோது, முத்துவுக்கும் சற்று உறுத்தியது தான். அண்ணன், இங்கு வந்த வேலையை முடித்துவிட்டு ஊர் திரும்பி விட்டால், பாட்டி தனியாக என்ன செய்வார்? இந்த மில், வயல், வரப்பு இதெல்லாம் யார் பேணிக்காப்பார்கள்? என்ற எண்ணம் அவனுக்கும் தோன்றியது. அண்ணன் மேற்பார்வைக்கு மாற்று ஏற்பாடு செய்வான் என்றாலும், பாட்டியைத் தனியாக விட வேண்டும் என்பது அவனுக்கும் கஷ்டமாகத்தான் இருந்தது.
எப்படியும் அப்பத்தா தங்களோடு வருவதற்கு ஒப்புக் கொள்ளமாட்டார் என்பதில் அவனுக்கு உறுதி. ‘வேறு என்ன செய்யலாம்?’ என்று அவ்வப்பொழுது யோசிப்பதும் உண்டு. இப்பொழுது, தன் அன்னை பழையதை எல்லாம் மறந்து இறங்கி வந்ததை நினைக்க அவனுக்கு மனம் சற்று இதமாகக் கூட இருந்தது.
[the_ad id=”6605″]
அந்த இதமான மனநிலையில் இலகுவாக, “என்ன அண்ணி உங்க மாமியாரைச் சமாளிக்க, அவங்க மாமியார் கூட கோர்த்து விட பார்க்கறீங்க போல!” எனக் கேலி செய்ய,
“முத்து… எப்பவும் நீயும், நானும் ஒரே டீம். நாம உங்க அண்ணாவை மட்டும் தான் டேமேஜ் செய்யணும். நோ யூ டர்ன்” சீரியஸாக டீல் பேசினாள்.
“எல்லாம் அவன் இருக்கும்போது சரி தான் அண்ணி… அவன் தான் இங்க இல்லையே!”
“அதுக்காக என்னையே வம்பு பேசுவியா? நான் எவ்வளவு சீரியஸ் விஷயம் பேசிட்டு இருக்கேன். இதுக்கு தான் சின்ன பசங்க சாவகாசமா கூடாதுன்னு சொல்லறது” என செல்லமாக தன் தலையிலேயே அடித்துக் கொண்டாள்.
கேட்டுக்கொண்டிருந்த இருவருக்கும் புன்னகை தான் வந்தது.
செந்தாமரை புன்னகை முகமாகவே, “நீங்க வரேன்னு ஒத்துக்கிட்டது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு அத்தை. தேங்க்ஸ்” என்று மஞ்சுளாவிடம் மனதார கூறியவள், முத்துவிடம், “தம்பி ஊருக்கு போக டிக்கட்ஸ் எல்லாம் அரேஞ் பண்ணுங்களேன்” என தன் பேச்சை மீண்டும் தொடங்கினாள்.
“ஹ்ம்ம் கிளம்பணும்ன்னு தெளிவா இருக்கீங்க… சரி அண்ணி நானாவது கூட வரவா? தனியா அவ்வளவு தூரம்…”
“அச்சோ நான் என்ன குழந்தையா, அதெல்லாம் பத்திரமா போயிப்பேன். எதுவும் சந்தேகம்ன்னா, இந்த டப்பா இருக்கல்ல இதுல கூப்பிட்டு உன்கிட்ட கன்பார்ம் பண்ணிக்கிறேன்” என்று கைப்பேசியை ஆட்டினாள்.
சிரித்தபடியே, “இப்ப தான் புரியுது அண்ணி. அப்பாவையும், அண்ணாவையும் எப்படி கவுத்தீங்கன்னு…” என்று முத்து உணர்ந்து கூறினான். தன அண்ணியின் பேச்சில் உயிர்ப்பு இருந்தது. அவர் இருக்கும் இடம், கலகலப்பாகக் கழிந்தது. அவனுக்கு இது புதுவித அனுபவம். அதிலும் அப்பத்தாவோடு இணையவிருப்பது உண்மையிலேயே அழகான அனுபவம்.
“இவ்வளவு லேட்டாவா புரியுது… தப்பாச்சே!” என அவள் தாடையில் கைவைத்து யோசிக்க,
“ஆஹா… அண்ணி முன்னவே தெரியும்… இது புரியாம இருக்குமா?” என முத்து நக்கலடித்து சிரித்தான். அவள் முறைத்தாலும், அவனோடு இணைந்தே நகைத்தாள். அதன்பிறகு, இருவருமாகச் சேர்ந்து, டிக்கட் பதிவில் இறங்க, அடுத்த இரண்டு தினங்களில் செந்தாமரை சேலம் கிளம்புவதாக இருந்தது.
*** “உஃப் ஒருவழியா முதல் பத்து டிக்கட்டை அனுப்பியாச்சு டா. இனி அடுத்த செட் ஆளுங்களை லிஸ்ட் எடுக்கணும்” என்று சிம்லாவில் இருந்த காவல் கூட்டத்தினன் ஒருவன் கூற,
“ஆஹான்… அது மட்டும் சொல்லறியே? உனக்கு போஸ்டிங் கன்பார்ம் ஆனதையும் சொல்லு…” என ஒருவன் புன்னகை முகமாகக் கூறினான்.
அதைப் பெரிதாகப் பேசாதவனோ, “உங்களை எல்லாம் ரொம்ப மிஸ் பண்ணுவேன் டா…” என்றான் முகத்தைத் தொங்கப் போட்டபடி.
அனைவருக்கும் ஒத்த சிந்தனைகள் என்பதால், அனைவரிடமும் நல்ல நட்பு உருவாகியிருந்தது. அதோடு, பலரும் ஏற்கனவே ஒருவருக்கொருவர் தெரிந்தவர்களும் கூட! அதாவது, ஒருவன் இந்த கூட்டத்தில் இணைந்தால், அவனைப்போன்ற நற்குணம் கொண்ட மற்றவர்களையும் இணைத்துக் கொள்வார்கள்.
“எங்களையா? நம்ப முடியலையே! யாரையும் தூக்கிப் போட்டு மிதிக்க முடியாதுன்னு வேணா நீ கவலைப்படலாம்” என்று வாரினான் கேட்டுக் கொண்டிருந்தவன்.
[the_ad id=”6605″]
“அட, அதுக்கென்ன குறை? அதான் ஐயா சப்-இன்ஸ்பெக்டர் ஆகிட்டாரே! இனி அதெல்லாம் ஜெகஜோதியா நடக்கும்…” என இன்னொருவன் முந்திக்கொண்டு சொல்ல,
இருவருக்கும் புன்னகை மட்டுமே பதில் அவனிடம்!
அவனது பிரிவின் வேதனை புரிய, “மச்சி, பிரீயா விடுடா… எப்படியும் போஸ்டிங் கிடைச்சு எல்லாரும் கிளம்பத் தானே போறோம். அதோட எங்க இருந்தாலும், நாம இத்தனை பேரு இருக்கிறதே… ஒரு பலம் தானே! எப்படியும் உன்கிட்டயே எங்க யாருக்கும் போஸ்டிங் கிடைச்சா நாங்களும் வந்துட போறோம்” என ஆறுதல் கூறினான்.
“ஆமாம் டா…” என் இன்னொருவனும் கூற,
“ஹலோ சீனியர்ஸ்… போதும் ஒரு நல்ல கோச் போறாரேன்னு எங்களுக்குத் தான் அதிக கவலை… நீங்க என்னன்னா எங்களை கண்டுக்காம… நீங்களே பேர்ஃவல் பார்ட்டி வெச்சுப்பீங்க போல… நாங்களும் இங்க தான் இருக்கோம். எங்களுக்காகவும் கொஞ்சம் கவலைப் படுங்க…” என்று கூறினான் சற்று இளம்பிராயத்தில் இருக்கும் ஒருவன்.
கல்லூரி படிப்பை முடித்து, போலீஸ், மிலிட்டரி வேலைகளுக்கு முயற்சிப்பவர்கள் சிலரும் இங்கு இருக்கிறார்கள். அவர்களுக்கு ஏற்கனவே தேர்வை முடித்து, போஸ்டிங்கிற்காக காத்திருப்பவர்கள் சொல்லித்தருவது வழக்கம். ஒரு சங்கிலித் தொடர் போல்… தேர்வு எழுதியவர்கள் போஸ்டிங் கிடைத்துச் செல்ல… புதியவர்கள் இவர்கள் இடத்திற்கு வர… எனத் தங்கு தடையின்றி இயங்குவதைப் போல உருவாக்கப் பட்டிருக்கும் அமைப்பு.
தெளிவான திட்டமிடுதலில் உருவாக்கப் பட்டது தான் இந்த கூட்டம்! உருவாக்கியவர்களின் எண்ணப்படியே தங்கு தடையின்றி பயணித்தும் கொண்டிருந்தது.
“உங்க கவலை உங்களுக்கு…” என்று ஜுனியர்களை கலாய்த்தான் போஸ்டிங் கிடைத்தவன்.
[the_ad id=”6605″]
“போங்க சீனியர்… முதல்ல எங்களை கவனிங்க… எங்க எல்லாருக்கும் பீட்பேக் சொல்லுங்க… இன்னும் என்ன இம்ப்ரூவ் பண்ணனும் சொல்லுங்க…” என அடம் செய்தான் அவன்.
“அடேய்… இன்னைக்கு கூட கடமையைச் செய்ய சொல்லிடுவ போலயே! இதோ இவனுங்க எல்லாம் தண்டமா தான் இருக்கானுங்க. இவனுங்க சொல்லுவாங்க. இப்ப ஐயா வேலைக்கு போறதை பத்தி யோசிக்கணும்” என அவன் பிகு செய்ய, அவனது முகத்தில் இதற்கு முன்பிருந்த வருத்தத் தோரணை, சற்று மறைந்திருந்தது.
“பாத்தியா… என்னவோ… உங்களை விட்டு இருக்கவே முடியாதுன்னு பாட்டு பாடிட்டு… இப்ப நமக்கு வேலை வெட்டி இல்லைன்னு எம்புட்டு அழகா சொல்லறான் பாரு…” என முறைத்தான் ஒருவன்.
“பார்த்தீங்களா… திரும்பவும் உங்க பஞ்சாயத்துக்கே போயிட்டீங்க… எங்களுக்கு இப்படியா சீனியர்ஸ் அமையணும். அன்னைக்கு ஒரு சூப்பர் சீனியர் வந்திருந்தாரே… எத்தனை பொறுப்பா…” என்று மீண்டும் ஜுனியர் பையன் வம்பு வளர்க்க அனைவருக்கும் சிரிப்பு.
“அவருகிட்ட மாட்டியிருந்தா இப்படிச் சொல்ல மாட்டடா. மனுஷன் ப்ராக்டிஸ் தரேன்னு நொங்கெடுத்துடுவாரு” என எச்சரிக்கையாகச் சொன்னார்கள்.
அப்பொழுதும் விடாமல், “ஏமாத்த பாக்கறீங்களா…?” என நாடக பாணியில் நெஞ்சில் கைவைத்து வலியைக் கட்டுப்படுத்திப் பேசுபவன் போல வம்பு பேசினான்.
“அச்ச்சோ… நீ இவ்வளவு ஆர்வமா இருக்கேன்னு தெரியாம போச்சே… இல்லாட்டி அவரு வரும்போது உனக்கு ஒரு ஸ்பெஷல் செஷன் வெக்க சொல்லி இருப்போமே!” என்று கூறியது தான் தாமதம், ஜுனியர் உடனே சரண்டர் ஆகி விட்டான்.
“அச்சோ சீனியர்…நீங்க வேற, அவரு செம டெரர்ரா இருந்தாரு… நான் ஏதோ விளையாட்டுக்கு பேசிட்டு இருந்தேன். நீங்க இப்படிக் கோர்த்து விட பார்க்கறீங்களே!” என உடனடியாக ஜகா வாங்கினான்.
“இல்லை இல்லை நீ ஆசைப்பட்டுட்ட… அட்லீஸ்ட் அவருகிட்ட சொல்லி ஆன்லைன் செஷனாவது வைக்க சொல்லணும்” என் அப்பொழுதும் வம்பிழுக்க,
“அச்சோ ஆளை விடுங்க. தெரியாம சொல்லிட்டேன்” என அந்தர் பல்டி அடித்து விட்டான்.
“அப்படி வா வழிக்கு…” எனச் சொல்லிச் சிரிக்க, அந்த சிரிப்பில் மற்றவர்களும் இணைந்து கொண்டனர்.
இங்கு சில தினங்கள் முன்பு வந்து சென்றது.., சாட்சாத் செந்தாமரை பார்த்து… வெற்றியிடம் சண்டையிட்ட… அவர்களின் திருமணத்திற்கு வருகை தந்த அதே நபர் தான்!