வெற்றிச்செல்வன் புருவங்கள் முடிச்சிட குழப்பமாக நிர்ம லா தேவி கூறியதைக் கேட்டவன், “அத்தை என்ன ஆச்சு?” என அவனும் தன் பங்கிற்கு உலுக்கினான்.
எப்பொழுதும் அவன் நுழையும் போது உரிமையாகச் சண்டை போட்டு, ஏன் இத்தனை நாட்களாக வரவில்லை என்று கேட்பவர், இன்று தவறு செய்த பிள்ளை போல விழித்தார்.
“என்ன பிரச்சனை அத்தை…”
“பாரு வெற்றி, நீயும் உங்க மாமா மாதிரி தான் பேசுவ தெரியும்! அதுக்காக… நாங்க செய்யறது எப்படி தப்பாகும்?” என்று படபடத்தார்.
‘போச்சு… அவன் ஏதாவது கேட்டானா? சரியான உளறுவாயி…’ மனைவியை மனதிற்குள் கடிந்து கொள்வதைத் தவிர, புருஷோத்தமனுக்கு வேறு வழி தெரியவில்லை! பரமேஸ்வரன் இறந்த பிறகு, கூட்டத்தின் முழு பொறுப்பும் நிர்மலாவிடம் வந்ததால், அவருக்குச் சற்று பதற்றம் வந்திருந்தது. இத்தனை பெரிய பொறுப்பைச் சமாளிக்கத் தெரியவில்லை! புருஷோத்தமனும் உதவ முடியாத நிலை! இப்பொழுது வெற்றி வேறு வந்திருக்கவும், அவன் ஏதோ கண்டு பிடித்துத் தான் வந்திருக்கிறான் என்பது போல… அனைத்தையும் உளறிக் கொட்டினார்.
மொத்தமாய் கேட்ட, வெற்றிக்குத் தலை கிறுகிறுத்தது… இத்தனை செய்கிறார்களா இவர்கள்? என்று ஆச்சரியப்பட்டுப் போனான்… மனைவி கூட எதையோ அரையும், குறையுமாக இணைத்துக் கண்டுபிடித்து விட்டாளே! என அந்த நேரத்திலும் மனதிற்குள் மனைவியைக் குறித்து பெருமை தான்! அருமை, பெருமை, ஆசை… இருந்தெல்லாம் என்ன பயன்? மனைவியை அருகில் வைத்துக் கொள்ளத் தெரியவில்லையே!
நிர்மலா பதற்றமாக இருக்க, வேறு வழியில்லாமல் வெற்றிச்செல்வன் அவர்களிடம் சற்று சமாதானமாகப் பேசி… இதைப்பற்றி பிறகு நிதானமாகப் பேசிக்கொள்ளலாம் என்று சொல்லி… வேறு பேச்சை பேசினான்.
“என்ன எதுவுமே சொல்லலை நீ…” என நிர்மலா கேட்க,
“இப்ப நீங்க ரொம்ப எமோஷனலா இருக்கீங்க… அதுனால மெதுவா பேசிக்கலாம் விடுங்க…” என வெற்றிச்செல்வன் கூற, அவனைச் சந்தேகமாகப் பார்த்தார்.
“கண்டிப்பா இதுல எனக்கு உடன்பாடு இல்லை அத்தை… நீங்க என்னைக் கூட்டு சேர்க்க பார்க்காதீங்க…” என அவன் சிரிப்புடனே கூற,
“ஆமாம், நீ ஒத்துப்பேன்னு வேற நான் நினைப்பேனாக்கும்…” என அவரும் நொடித்துக் கொண்டார்.
[the_ad id=”6605″]
“ஆனா, மாமா மாதிரி வேடிக்கை பார்க்கவும் மாட்டேன்… இது வேண்டாம்ன்னு தடுப்பேன்” என்று வெற்றி தீர்க்கமாகச் சொல்ல,
“டேய்… கஷ்டப்பட்டு ஆரம்பிச்சது டா…” என நிர்மலா பதறினார்.
“அதுனால என்ன அத்தை… சட்டத்திற்குப் புறம்பான விஷயம்! எப்ப வெளில தெரிஞ்சாலும் பாதிப்பு உங்களுக்கு மட்டுமில்லை! உங்களோட பசங்களுக்கும் சேர்த்துத் தான்!” அழுத்தம் திருத்தமாக வெற்றி கூற, பெரியவளின் முகம் வாடிவிட்டது.
‘ஆம்! பணையம் வைப்பது அவர்களின் எதிர்காலத்தையும் சேர்த்தல்லவா!’
“அத்தை அதுதான் அப்பறம் பேசிக்கலாம்ன்னு சொன்னேன்… இப்போதைக்கு பிரீயா விடுங்க… எனக்கு வேற ஒரு வேலை முடிக்க வேண்டியது இருக்கு. அதை முடிச்சதும் இதை பார்த்துக்கலாம்…” என்றான் தன்மையாகவே!
வேறு வழியின்றி பேச்சை ஒத்திப் போட்டார் நிர்மலா தேவி
வெற்றி புருஷோத்தமன் புறம் திரும்பி, “என்ன மாமா… இன்னைக்கு நீங்க வேலைக்குக் கிளம்பலையா?” என விசாரிக்க,
நிர்மலா, “அவருக்குக் கொஞ்சம் உடம்பு முடியலை. ரெண்டு நாளு லீவு போட்டிருக்காரு…” எனப் பதில் சொல்லியபடி, வேலையாள் கொண்டு வந்த பழச்சாற்றை வெற்றிக்குத் தந்தார்.
“என்ன ஆச்சு மாமா? திடீர்ன்னு.. என்கிட்டே சொல்லியிருக்கலாம் இல்லை..”
“மூச்சு திணறல் தான் பா… டாக்டரை பார்த்துட்டேன். ரெஸ்ட் எடுக்க சொன்னாரு. எடுத்துட்டு இருக்கேன். நத்திங் சீரியஸ்…” என்று புன்னகையோடு தான் பதில் தந்தார். அவரிடம் சோர்வு தெரிந்தது. ஆனால் அதிகம் இல்லை. (waltmassey.com)
“சரி மாமா உடம்பை கவனிச்சுக்கங்க. எது வேணும்னாலும் என்னை கூப்பிடுங்க”
“கண்டிப்பா… ஆமா நீ எக்ஸாம்க்கு பிரிபேர் பண்ணறியா…”
“வேற வழி புத்தகத்தை கட்டிட்டு தான் அழறேன்…” என்று வெளியில் சொன்னவன், மனதிற்குள், ‘அதான் அவ ஊருல போயி உக்காந்துட்டு இருக்காளே!’ என புலம்பினான்.
“ஏன் வெற்றி கல்யாணம் பண்ணி வெச்சது புத்தகத்தை கட்டிட்டு அழறதுக்கா?” என நிர்மலா கேலி பேச,
“அவ பஞ்சாபில் கொஞ்ச நாள் இருக்கணும்ன்னு பிரியப்பட்டா அத்தை. அங்க போயிருக்கா…” என்று சிரித்து வைத்தான்.
[the_ad id=”6605″]
அதன்பிறகு, சிறிது நேரம் பொதுவாகப் பேசிக்கொண்டிருக்க, வெற்றிச்செல்வன் தனக்குத் தேவையான விவரங்கள் கிடைக்குமா என்று அவர்களிடம் கேட்டுப் பார்த்தான். நல்லவேளையாக, அவர்களிடம் தான் மாரியப்பன் ஆதாரங்களைத் தந்திருந்தார். அந்த ஆதாரங்கள் தெளிவாக இருந்தது. கடைசியாகக் கடத்தி கொன்ற பெண்ணை குறித்த ஆதாரங்கள் அவை. அந்த பெண்ணை புதைக்கப்பட்ட இடத்தை பரமேஸ்வரன் கண்டுபிடித்திருந்தார். அது தொடர்பான விவரங்கள் அந்த கோப்பைகளில் இருந்தது.
அதை வைத்து மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்று வெற்றி பார்க்க வேண்டும். டிடெக்டிவ் குழுவினரோடு ஆலோசனை செய்து யோசித்தால், நல்ல யோசனையே வரும்!
மேலும் சிறிது நேரம் அங்கேயே இருந்தவன், வேலை இருப்பதாக அவர்களிடம் விடைபெற்றான். செல்லும்போது, நிர்மலாவிடம், “அத்தை அந்த வேலைகளை இப்போதைக்கு நிறுத்தி வைக்க சொல்லுங்க…” என்று மெல்லிய கண்டிப்புடன் கூறி விட்டுத் தான் போனான்.
வேறு வழியின்றி நிர்மலாவும் தலையை உருட்டினார். ஏனெனில், அங்குக் காவல் பணிக்கு இருக்கும் வீரர்களின் எதிர்காலமும் இதில் அடங்கியிருக்கிறதே! வெற்றி அதை சுட்டிக்காட்டிய பிறகு, நிர்மலாவிற்கு கொஞ்சம் பயம் தொற்றிக் கொண்டது. ஆகவே, முதல்முறை பின்வாங்குவது குறித்து யோசிக்கலானார்.
பஞ்சாப் சென்ற செந்தாமரைக்கு உலகமே கசந்தது. என்னவோ அவளுக்கு எதிலுமே நாட்டம் இல்லை! கணவன் எப்படி அவ்வாறு சொல்லலாம் என்னும் சிந்தனையே அவளை முடக்க போதுமானதாக இருந்தது.
வெற்றிக்கும் மனைவியின் நினைவு இருக்கிறது தான்! ஆனால், அதற்கும் முன்னிலையில், சந்தன பாண்டியை அழிக்கும் வேலைகள் அவனை இழுத்துக் கொண்டது. கூடவே, மனைவி தன்னை சந்தேகப்பட்ட கோபம் வேறு அடங்க மறுத்தது. அவளாக உணரட்டும் என்னும் வீம்பும், அவனை அவளிடம் பேசவே விடவில்லை!
இப்படியாக வெற்றி சந்தன பாண்டியை அழிக்கும் விஷயத்தில் மும்மரமாக இருக்க, செந்தாமரை எதிலும் ஒன்ற முடியாமல் திணறிக் கொண்டிருந்தாள்.
ஒருவழியாக வெற்றி, டிடெக்டிவ் நிறுவனத்தினரிடம் கலந்து பேசி, ஒரு திட்டத்தை முடிவு செய்திருந்தான்.
வெற்றியின் ஏற்பாட்டின் படி, சந்தன பாண்டியின் தோட்டத்தைத் தோண்ட வைப்பதற்காக, அங்கு வேண்டுமென்றே ஒரு பிரசித்தி பெற்ற பழங்கால கோயில் சிலையை மண்ணிலிருந்து வெளியே தெரிவது போல வைத்து, தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு வீடியோ ஆதாரம் மூலம் தகவல் கிடைக்கும்படி செய்து விட்டான்.
அந்த வேலையைச் செய்து முடிக்கத் தான் மிகுந்த சிரமமாகப் போய்விட்டது. பல இடையூறுகளைத் தாண்டி எப்படியோ சாதித்து விட்டான்!
கோயில் சிலைக்குத் தான், பாழடைந்த கோயிலில் இருந்து வெகுவாக சிதிலமடைந்த சிலையை திருட வேண்டியதாய் போயிற்று! அதில் அவனுக்கு மனம் வெகுவாக உறுத்தியதால், அந்த கோயில் சீரமைப்பு பணியை தன் தலைமையில் ஏற்றுக் கொண்டான்.
அந்த வீடியோ ஆதாரம் போதாதா… அவ்விடத்தைத் தோண்ட, சந்தன பாண்டி என்ன தடுத்தும்… எத்தனை செல்வாக்கை உபயோகப்படுத்தியும் அது வேலைக்கு ஆகவில்லை. தொல்பொருள் ஆராய்ச்சி குழுவினர், சந்தன பாண்டியின் இடத்தை தோண்ட தொடங்கி விட்டனர். ஆனால் தோண்டியவர்களுக்கு அகப்பட்டது எல்லாம் இளம் பெண்களின் சடலங்கள்… விவகாரம் பெரிதானது.
இந்த நேரத்தில், தன்னிடம் இருக்கும் சந்தன பாண்டி பெண்களிடம் தவறாக நடந்து கொள்வது போலிருக்கும் வீடியோக்களை வெளியே கசிய விட்டான் வெற்றி.
விஷயம் நன்கு சூடு பிடித்தது. பத்திரிகை, டீவி, வலைத்தளங்கள் அனைத்திலும் விஷயம் நன்கு பரவி, விவாதத்திற்கும், கண்டனத்திற்கும் உள்ளானது. சந்தன பாண்டியின் குடும்பத்தினருக்கே பயங்கர அதிருப்தி! இப்படியா, பெண்களை அனுபவிப்பதோடு நில்லாமல்… தோட்டத்திலேயே கொன்று புதைப்பான் என்று கோபம் கொண்டனர்.
சந்தன பாண்டி, தனது அண்ணன் தம்பியுடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகிறான். மற்ற இருவருக்கும் இவனைப் போன்று பெண் சகவாசம் எல்லாம் நாட்டம் இல்லை! அதிலேயே அவர்களுக்குள் ஏற்கனவே மனக்கசப்பு. இப்பொழுது அரசியலில் நிற்க வாய்ப்பு கிடைக்கும் நேரம், இப்படி இழுத்து வைத்து விட்டானே! எனக் கடுங்கோபம் கொண்டனர்.
சத்தமில்லாமல் சகோதரர்களால் வீட்டில் திட்டம் தீட்டப்பட்டது. அதன்படி, சந்தன பாண்டியை ஒரு தோப்பு வீட்டில் பதுங்கியிருக்க அண்ணனும், தம்பியும் ஆலோசனை வழங்க, அங்கு அவனைக் கொன்று… தற்கொலை டிராமா அரங்கேற்றுவதற்கான அனைத்து திட்டங்களையும் தயாராக வைத்திருந்தனர்.
அது தெரியாத, சந்தன பாண்டி உடன் பிறப்புகளின் பேச்சைக் கேட்டு, யாரிடமும் சொல்லாமல் அந்த வீட்டில் பதுங்க, இங்கே அவனின் அண்ணனும், தம்பியும் அவனது செய்கையைக் கடுமையாகக் கண்டித்து பேட்டி தந்தனர்.
[the_ad id=”6605″]
கட்சித் தலைமையிடம் ஏற்கனவே கலந்தாலோசித்து முடிவு செய்ததால், இந்தமுறை தேர்தலில் நிற்க வாய்ப்பு குறைவாக இருந்த போதிலும், அடுத்த முறை இவர்கள் இருவரில் யாரேனும் ஒருவருக்கு வாய்ப்பு தருவதாகச் சொல்லியிருந்தார்கள். இவர்கள் குடும்பத்தில் வாரி இறைத்த பணம் அந்தளவு! ஆகவே, சீட்டு எப்படியும் உறுதி தான்! என்ன சந்தன பாண்டி செய்து வைத்த வேலையால் தற்போதைக்கு இல்லை!
இவ்வாறாகச் சந்தன பாண்டியின் சகாப்தத்தை முடிக்க வெற்றிக்கு சில நாட்கள் ஆனது. சொந்த குடும்பமே சந்தன பாண்டியைக் கௌரவக் கொலை செய்ததை வெற்றி அறிந்திருக்கவில்லை. மாரியப்பன் விபத்து போலத் தற்கொலை செய்து கொண்டான். இவன் நேரடியாகவே தற்கொலை செய்து கொண்டான் போல என்று தான் நினைத்திருந்தான்.
எதற்காக, எந்த காரியத்திற்காகச் சேலத்திற்கு வந்தானோ அந்த வேலையை வெற்றிச்செல்வன் வெற்றிகரமாக முடித்து விட்டான். தன் தந்தையை அழித்தவர்கள் அழிந்திருந்தார்கள். அனைத்தையும் அவன் எண்ணம் போல முடித்த பிறகும், மனைவியின் நினைவு உடனடியாக ஆக்கிரமிக்காமல், புருஷோத்தமன் வீட்டிற்குச் சென்று, அவர்கள் இருவரிடமும் கலந்தாலோசித்து… சிம்லாவில் இருக்கும் சிலரையும் தொடர்பு கொண்டு பேசி… அந்த இயக்கத்தை நடத்துவது போதும் என்பதை வலியுறுத்தினான்.
மனம் சங்கடமாக உணர்ந்த போதும், வெற்றி எடுத்துக் கூறிய விஷயங்கள் அனைத்தும் சரியானதாக இருக்க, அனைவரும் ஒருமனதாக ஒப்புக் கொண்டனர். அங்கிருப்பவர்களை, எப்படி தடயமின்றி வெளியேற்ற வேண்டும் என்பது குறித்தும், அவர்களிடம் கடத்தப்பட்டதன் உண்மை காரணத்தை சொல்லி விடும்படியும் வெற்றி ஆலோசனை வழங்கினான்.
மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்று வெற்றி திட்டங்களைச் சொல்ல, அதை ஏற்று நடக்க அனைவரும் சம்மதித்தனர். இத்தனை நாட்கள் தன்னிச்சையாக, சட்டத்திற்கு புறம்பாக இயங்கி வந்த இயக்கத்திற்கு வெற்றியால் ஒரு முடிவு வந்திருந்தது.