செந்தாமரைக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. திருமணத்திற்கு ஒப்புக்கொண்டதிலிருந்தே இதே உணர்வு தான். பரமேஸ்வரன் ஐயா, அவரின் நற்பெயருக்குக் களங்கம் என்பதே அப்பொழுது பிரதானமாக இருக்க, இப்பொழுது பெற்றோர், உற்றார், உறவினர் என அனைவரிடமிருந்தும் ஒதுங்கி இருக்கும் நேரத்தில் எப்படி திருமணம் என்பது மனதில் கலக்கத்தைத் தந்தது.
பெற்றவர்கள் சொல்பேச்சு கேட்காமல் வீட்டை விட்டு வருமளவு தைரியம் இருந்தது தான், ஆனால் அவர்கள் அறியாமல் திருமணம் செய்வதென்பது?
இப்பொழுது அவள் திருமணம் செய்து கொண்டால், அவள் வீட்டை விட்டு வெளியேறியதே காதலிப்பவனை மணப்பதற்குத் தான் என்றாகி விடாதா? ‘ஓடிப்போனவள்’ என்ற பெயர் வந்து விடாதா? என்ன செய்ய என்றே புரியவில்லை.
மனதின் கலக்கம் முகத்திலும் குடிகொண்டிருக்க, என்ன முயன்றும் இயல்பான மகிழ்வு முகத்தினில் தவழவில்லை. முயன்று வருவித்த புன்னகையோடு வந்தவர்களை இன்முகமாக வரவேற்றாள்.
அவளை யோசனையாகப் பார்த்தபடியே ராஜேஸ்வரி அம்மாள் வீட்டிற்குள் வந்தார். அவர்களுடன் வந்தவர்களை, “கொண்டு வந்த பொருளை எல்லாம் உள்ளே கொண்டு வந்து வையுங்க”, “நீ பொண்ணு தலையில பூ வெச்சு விடு” எனச் சிறு சிறு வேலைகளை ஏவியவர்,
“சரி நீங்க எல்லாம் வெளியில இருங்க. நானும் தம்பியும் பேசிட்டு வந்துடறோம்” என்று கூறி மற்றவர்களை வெளியே அனுப்பி வைத்தார்.
மூவர் மட்டும் கூடத்தில் இருக்க, “அவங்களுக்கு எல்லாம் காஃபி” என வெளிப்புறம் கைகாட்டி செந்தாமரை தயக்கமாக இழுத்தாள்.
“இப்போ தான் வீட்டுல சாப்பிட்டு வந்தோம் தாயி” என்று தன்மையாகப் பதில் தந்த ராஜேஸ்வரி அம்மாளைச் செந்தாமரை அதிசயமாகப் பார்த்தாள். இவர் பொரிந்து தள்ளுவாரோ, எங்கள் பேரனை வளைத்து விட்டாயா? என்பது போல எல்லாம் பேசுவாரோ என்றெல்லாம் சற்று உள்ளூர பயந்திருந்தாள். என்ன தான் பேரன் சமாதானம் செய்திருந்தாலும், அவனுக்காக வருவாராய் இருக்கும். அவன் அறியாமல் திட்டுவார், நிச்சயம் முகம் கொடுத்தது கூட பேச மாட்டார் என்றெல்லாம் நினைத்திருந்தவளுக்கு இந்த அணுகுமுறை அதிசயமாக இருந்தது.
[the_ad id=”6605″]
அவரோ அவளது பார்வையைக் கண்டு கொள்ளாமல், “உள்ள வா தாயி…” எனச் செந்தாமரையை மட்டும் தனியே அறைக்கு அழைத்துச் சென்றார். இவனைத் திரும்பிப் பார்த்துக் கொண்டே அவளும் அவரோடு சென்றாள்.
வெற்றிச்செல்வனுக்கு இருப்பே கொள்ளவில்லை. ‘செந்தாமரையின் முகமே இன்று சரியில்லை. மிகவும் வாட்டமாக தெரிகிறது. எதை நினைத்து அலட்டிக் கொண்டிருக்கிறாள் எனப் புரியவில்லையே’ என தவித்தான். மேலும், ‘இந்த அப்பத்தா வேறு தனியாகப் பேச அழைத்துச் செல்கிறாரே, அவளுக்கிருக்கும் மனநிலையில் எங்காவது அவர் கேட்கும் கேள்விக்கு எதையாவது உளறி வைத்து விடப்போகிறாள்’ என்று கலவரமாக வேறு இருந்தது.
“ஏன் ஒருமாதிரி இருக்க தாயி. என்னை பார்த்தா பயமா இருக்கா?” என்று தன்மையாகவே ராஜேஸ்வரி கேட்க, இல்லை என மறுப்பாகத் தலையசைத்தாள்.
“பிறகு என்ன யோசனை?”
“எதுவும் இல்லைங்க… நான் நல்லா தான் இருக்கேன்…” என சமாளிப்பாகக் கூறியவள், அவரை அழைக்கும் முறை தெரியாமல் விழித்தாள்.
அதை புரிந்து கொண்டவரோ, “பாட்டி, அம்மச்சின்னு உனக்கு எப்படி பிரியமோ அப்படி கூப்பிடு” என்று கூறியதும் இவளுக்கு மீண்டும் ஆச்சரியம் தான். எப்படி முன்பின் தெரியாத பெண்ணை பாட்டியும், பேரனும் மருமகளாக ஏற்றுக்கொள்ள சம்மதிக்கின்றனர் என்று ஆச்சரியமாக இருந்தது. அதிலும் இத்தனை வசதியானவர்கள்.
“சரிங்க பாட்டி” என்றாள் மென்குரலில். பெண்ணை பார்த்தால் பணத்திற்காகவோ, பகைக்காகவோ வந்தவள் போலப் பாட்டிக்குத் தோன்றவில்லை.
அவளை அளவிட்டவாறே, “உன்னை பெத்தவங்க எங்க இருக்காங்க?” என்று கேட்டார்.
அவர்களை எண்ணித் தான் வெகுநேரமாகக் கலங்கிக் கொண்டிருந்தபடியால், இந்த கேள்வியில் செந்தாமரைக்குக் கண்கள் கலங்கும் போல இருந்தது.
“என்னம்மா? எதுவும் பிரச்சனையா?” என்று பெரியவள் கேட்கவும்,
“அவங்க சொன்னதை என்னால செய்ய முடியலை பாட்டி. நான் சொன்னதையும் அவங்க நம்பலை. இக்கட்டான சூழல். அங்கிருந்து வர மாதிரி ஆயிடுச்சு” என்றாள் கண்ணீருடன்.
அதற்குள் இருப்பு கொள்ளாமல் தவித்த வெற்றிச்செல்வனும், “அப்பத்தா…” என்றபடி அறைக்குள் பிரவேசித்தான். செந்தாமரை அழுது கொண்டிருந்ததைப் பார்த்தவனுக்கு என்ன ஏதென்றே புரியவில்லை. தயக்கமாக அவளையே பார்த்தபடி நிற்க,
“நீ புறப்படறதுன்னா புறப்படு பா. நான் கொஞ்ச நேரம் பேசிட்டு வரேன்” என்று அவனுக்கு ராஜேஸ்வரி அம்மாள் பதில் கூறினார்.
அதில் விழித்தவன், “எதுவும் அவசரம் இல்லை அப்பத்தா, நானும் உங்களோட இருக்கவா?” என்று தயக்கமாகக் கேட்டான்.
“என்ன கண்ணு? நான் நிதானமா, பக்குவமா தான் பேசிட்டு இருக்கேன். நீ எதுக்கு இப்படி வரிஞ்சு கட்டிட்டு வர”
“ஒன்னும் இல்லை அப்பத்தா” என்றவனின் பார்வை அவள் மீதே இருந்தது.
“அழாதே மா. அவனும் வருந்தறான் பாரு” என்று அவளிடம் கூறியவர், “பெத்தவங்களை பத்தி கேட்டேன். அதுக்கு அழுகை” என அவனுக்கு விளக்கம் தந்தார்.
இருவரின் முகமும் தெளிவாக இல்லை. காதலிப்பவர்கள் என்று கூறும்படியும் இல்லை. ஒருவித அந்நியத்தன்மையை ராஜேஸ்வரி அம்மாவால் உணர முடிந்தது. ‘நம்ம பேரன் மீது இருக்கும் பாசத்தில் அவசரப்பட்டு விட்டோமோ?’ என்று மனம் உறுத்தியது.
“உங்க ரெண்டு பேரு முகத்தை பார்த்தா, ஏதோ மறைக்கிற மாதிரி தான் தோணுது” என்று ஜாடையாகக் கேட்டுப் பார்க்கவும், செந்தாமரையின் முகம் வெளுத்தது.
“அதெல்லாம் எதுவும் இல்லை அப்பத்தா” என்று அவசரமாக வெற்றிச்செல்வன் மறுத்தான். இருவரின் செய்கையையும் ராஜேஸ்வரி அம்மாள் கவனித்து விட்டார்.
பிறகு இயல்பாக, “அந்த புள்ளை வீட்டுல முறைப்படி பேசணுமே ப்பா. உன் அம்மா, தம்பி கிட்டேயும் சொல்லணும். யாருகிட்டேயும் ஏற்கனவே கல்யாணம் முடிஞ்சதுன்னு சொல்ல வேணாம். உனக்கு விருப்பம்ங்கிற மாதிரி கல்யாண பேச்சை புதுசா தொடங்கலாம் சரி தான?” எனக் கூற,
இருவரும் ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்த்தபடி இருந்தனர். என்ன சொல்ல எனத் தெரியாமல். பாட்டியின் குழப்பம் அதிகரித்தது.
“ரெண்டு பேருக்கும் என்ன தயக்கம்?”
“அது அப்பத்தா, அம்மா, தம்பி என் மேல கோபமா இருக்காங்க”
“உன்மேல தான? வீட்டுக்கு பெரியவ நான் பேசறேன்”
“அவங்க வீட்டுல, அவ விருப்பம் போலப் பேசி முடிவெடுங்க அப்பத்தா” என்றான் தட்டிக் கழிக்கும் விதமாக.
“இது முறையா பேசற மாதிரி இல்லையே கண்ணு”
“அது அப்பத்தா, அது… அவ சூழல்…” என்று மென்று விழுங்கினான்.
[the_ad id=”6605″]
“உன் அப்பா, அம்மா எங்க இருக்காங்க தாயி” என்று செந்தாமரையிடம் கேட்டார்.
“அந்தியூர்’ல பாட்டி”
“நீ எதுனால இங்க வந்த?”
“அங்கே பிரச்சனையானதும், உங்க மகனை நம்பி இங்க வந்தேன் பாட்டி. அவர் தான் எனக்கு அடைக்கலம் தருவாருன்னு தோணுச்சு” இருந்த மனக்கலக்கத்தில் உண்மையை கூறிவிட்டாள்.
“மகனா?” என்று பெரியவள் யோசனையாக இழுக்கவும்,
“பாருங்க அப்பத்தா பேரனை மகன்னு சொல்லறா? நீங்க எனக்குப் பாட்டி மாதிரி இல்லாம அம்மா மாதிரி இளமையா இருக்கீங்களாம்” என்று பாட்டியிடம் சமாளிக்கிறேன் பேர்வழி என எதையோ உளறிக் கொட்டியவன், செந்தாமரையை முறைத்துப் பார்த்தான்.
வந்ததிலிருந்தே எதுவுமே சரியாகப் படவில்லை பெரியவளுக்கு. “கண்ணு… ரெண்டு பேரும் உண்மையா இல்லை” என்று உடைத்துக் கூறிவிட, இருவருமே விழித்தனர்.
இருவரும் மறுப்பு எதுவும் கூறாததால், “என்ன பிரச்சனை?”
“அதெல்லாம்… எதுவும் இல்லை அப்பத்தா” என்று அவசர அவசரமாகச் சொதப்புகிறோம் எனப் புரிந்தும் திணறியபடி கூறினான்.
“என்மேல நம்பிக்கை இல்லையா? என்கிட்ட மறைக்க என்ன அவசியம்” என்று கூறி பெருமூச்சு விட்டவருக்கு முகமே விழுந்து விட்டது.
வயதில் மூத்தவர், இத்தனை தன்மையாக நடந்து கொள்கிறார் என்பதிலேயே நெஞ்சுருகி போயிருந்தது செந்தாமரைக்கு. இப்பொழுது கலங்கி, தவிப்பாய் வேறு இருக்கவும் உண்மையைச் சொல்லாமல் மறைக்க அவளுக்கு மனமே இல்லை. அதோடு பேரனின் மீது எத்தனை நம்பிக்கை, பிரியம், நன்மதிப்பு வைத்திருப்பார் அதைப் போய் எங்கள் பொய்யான திருமணத்தின் மூலம் கலைப்பதா என்ற எண்ணமும் எழ, வெற்றிச்செல்வனின் மனநிலை புரியாமல், புரிந்து கொள்ளவும் முயற்சிக்காமல் உண்மையைச் சொல்லத் தீர்மானித்து விட்டாள்.
“அது… பாட்டி எங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலை. நான் இவரை விரும்பியும் இந்த ஊருக்கு வரலை” என்று உண்மையைச் சொல்லிவிட்டாள்.
இதை இவள் உடைத்துச் சொல்லி விடுவாள் என்பதைச் சற்றும் எதிர்பார்க்காத வெற்றிச்செல்வன், “செந்தாமரை…” என்று அதட்டியிருந்தான்.
[the_ad id=”6605″]
அந்த குரலில் பயந்து மிரண்டு விட்டாள். இயல்பிலேயே ஓரளவு தைரியமான பெண் தான் என்றாலும், அவனது சினத்தில், அதட்டலில் அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.
“வெற்றி…” என அவனை அடக்கினார் ராஜேஸ்வரி அம்மாள்.
கூடவே, “நீ வெளில இரு” என்றும் சேர்த்துக் கூற,
“மன்னிச்சுடுங்க அப்பத்தா. இனி இது விஷயமா எதுவும் பேச வேண்டாம். இது எங்களோட தனிப்பட்ட விஷயம். இதை யாருக்கிட்டயும் பகிர்ந்துக்க எனக்கு விருப்பமில்லை. புரிஞ்சுக்கங்க பிளீஸ்” என்று அவனது வழக்கமான பாணியில் கூறிவிட்டான்.
இதுபோன்ற பேச்சு வழக்குகள் இருவருக்குமிடையே இயல்பு தான். இப்படி மனதில் பட்டதை நேரடியாகச் சொல்லிவிடுவது அவன் வளர்ந்த முறை. இது பாட்டிக்கும் தெரியும் என்பதால் அவன் சொல்ல வருவதைப் புரிந்து கொள்வார்.
ஆனால், செந்தாமரைக்கு அப்படி அல்லவே! அவள் வளர்ந்த சூழலில் இது மரியாதைக் குறைவான பேச்சு. முகத்தினில் அடித்தாற்போல செய்கை.
“என்ன நீங்க பெரியவங்க கிட்ட மரியாதை இல்லாம?” என்று மென்மையான குரலில் கண்டிப்பு காட்டியவள், “பாட்டி மன்னிச்சுடுங்க” என்று வருத்தம் தெரிவித்தாள்.
அவளது அறியாமையைக் கண்டு சிரிக்கத் தோன்றியது பெரியவளுக்கு. அவளது தாடையைப் பாசமாக வருடி, “அவன் மனசுல பட்டதை வெளியில சொல்லிடுவான் மா. நாங்க வழக்கமா பேசிக்கிறதே இப்படித்தான்” என்று சமாதானம் கூறினார்.
[the_ad id=”6605″]
தலையை மட்டும் அசைத்துக் கொண்டாள். அவன் இன்னமும் கோபமாய் தன்னையே பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதை அவனைப் பார்க்காமலேயே புரிந்து கொள்ள முடிந்தது.
‘கோப வந்தா எனக்கென்ன?’ என வீராப்பாய் நினைத்தாலும் மனம் சற்று பயந்து தான் போயிருந்தது.
மனதிற்குள்,
‘அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்ப தில்லையே!
இச்சகத்து ளொரெலாம் எதிர்த்து நின்ற போதிலும்,
அச்சமில்லை, அச்சமில்லை அச்சமென்பதில்லையே!
துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதினும்,
அச்சமில்லை, அச்சமில்லை அச்சமென்பதில்லையே!’
என்ற பாடலை பாடி அச்சத்தை விரட்ட நினைத்தாள்.
இன்பமோ, துன்பமோ, தவிப்போ, வேதனையோ அனைத்திற்கும் பாரதியை துணைக்கழைப்பதே அவளது வாடிக்கை.
அவளது சிந்தனையைக் கலைத்தவன், “அப்பத்தாவுக்குக் குடிக்க எதுவும் கொண்டு வா” என்று அனுப்பி வைத்தான்.
அவள் பின்னோடே செல்லவிருந்தவனைத் தடுக்க முடியாது எனப் புரிந்தும், “கண்ணு, சின்ன பொண்ணு. இப்போ கோபத்துல எதுவும் பேசிடாத” என்று ராஜேஸ்வரி அம்மாள் தடுக்க பார்க்க,
அவனோ அலட்சியமாய், சிறு தலையசைப்பைக் கடமைக்காக தந்தவன், அவளைத் தேடி சமையலறைக்குச் சென்றிருந்தான். ‘இவனை விட்டுட்டு தனியா வந்திருக்கணும்’ எனத் தாமதமாகத் தோன்றியது பாட்டிக்கு.