வெற்றிச்செல்வன் கோபமாகச் செந்தாமரையைத் தேடிச் செல்ல… அவளோ வெகு நிதானமாக இவனை எதிர் கொண்டாள். அச்சம் எல்லாம் மனதிற்குள் தான். அதுவும் அவன் அதட்டிய நேரம் மட்டுமே! அதற்காக தன் சுயத்தை எந்த நேரத்திலும் விட்டுத்தர அவள் தயாராக இருக்க மாட்டாள்.
அவள் நின்றிருந்த தோரணையே வித்தியாசமாகப் பட, அதை ஆராய்ந்தாலும், “எதுக்கு அப்பத்தா கிட்ட உண்மையைச் சொன்ன?” என்று பொரிந்தான்.
புடவை முந்தானையை இடையைச் சுற்றி முன் விட்டபடி, அதன் மேலேயே கைகளை மார்பின் குறுக்கே காட்டியபடி அவனை அளவிட்டுக் கொண்டு நின்றுந்தவள், இன்னும் நிதானமாகத் தனது வலக்கரத்தை உயர்த்தி மேலிருந்து கீழாக இழுத்தாள்.
ஒன்றும் புரியாமல் அவன் பார்க்க, “சத்தம் கம்மியா பேசணும். புரியுதா?” என்று அவனுக்குக் கட்டளையிட்டாள்.
அவளது அதட்டலில் அவன் முறைக்க, “இங்க எதுக்கு வந்தீங்க, பாட்டிக்கு தெரியாம என்கிட்ட பேச தானே? அப்போ கத்தறதால என்ன பிரயோஜனம்?” என்றாள் வெகு நிதானமாக.
‘உப்… இவளோட…’ என மூச்சுக் காற்றை வெளியிட்டவன், “சரி அப்பத்தா கிட்ட ஏன் உண்மையை சொன்னேன்னு சொல்லு” என்றான் நிதானமாக.
“எனக்கு தோணுச்சு. சொன்னேன்” என்றாள் பதிலுக்கு. அவள் செய்தது சரியே என்னும் பாவனையில் அவள் பேசியது அவனுக்கு எரிச்சலைத் தந்தது.
“அதெப்படி? நம்ம ரெண்டு பேரு சம்மந்தப்பட்ட விஷயம். உனக்கு தோணுச்சுன்னா, என்கிட்ட கேட்காம நீ சொல்லிடுவியா?” வெற்றிச்செல்வனின் பார்வை கூர்மை பெற, வார்த்தைகள் அழுத்தமாக வந்து விழுந்தது.
‘சரியாகத்தான் சொல்கிறான்’ என்று தோன்றியதால் செந்தாமரையால் வேகமாகப் பதில் கூற முடியவில்லை.
சிறிது நேரம் மௌனம் காத்தவள், சட்டென்று பொறி தட்ட, “கல்யாணம் கூட நம்ம ரெண்டு பேரு சம்மந்தப்பட்ட விஷயம் தான். என்கிட்ட கேட்டுத் தான் முடிவெடுத்தீங்களா?” என்று அவனை மடக்கினாள்.
தன்னிடம் சண்டைக்கு நிற்பவளின் செய்கை வழக்கம்போல அவனை ஈர்த்தது. அவளது பின்வாங்காத எதிர்ப்பேச்சை மனதிற்குள் மெச்சிக் கொண்டான். அதை இம்மியும் வெளிப்படுத்திக் கொள்ளாமல், “கூடக் கூட பேசி சமாளிக்க வேண்டாம். இனி இப்படி உளறினா…” என்று ஒற்றை விரல் நீட்டி எச்சரிக்கை விடுத்தான்.
“என்னை மிரட்டற வேலை எல்லாம் வேணாம்” என்று அவளும் சிலுப்பினாள். நீ மிரட்டினால் நான் பயந்துவிடுவேனா என்பது போல அவளது பார்வையில் அலட்சியம் வேறு.
“என்ன கொஞ்ச நேரத்துக்கு முன்ன நீ பயந்ததை, நான் கவனிக்கலைன்னு நினைக்கிறியா? இப்போ என்னமோ ரொம்ப தைரியம் மாதிரி காட்டிக்கிற” என்றான் அவளது விழிகளை ஊடுருவி. சிறிது நேரம் முன்பு இவனது அதட்டலில், அவளது முகத்தில் தெரிந்த அதிர்வையும், மெல்லிய நடுக்கத்தையும் அவன் கவனித்திருந்தான். இப்பொழுது எதிர்ப்பதமாக அவள் நடந்து கொள்ளவும் சமயம் பார்த்துச் சொல்லிக் காட்டினான்.
அவளோ அதிலெல்லாம் சிறிதும் அலட்டிக் கொள்ளாமல், “பயமா? எனக்கா? ரொம்ப தப்பு. திடீர்ன்னு மேலே இருந்து ஒரு பொருள் விழுது. அதுனால ரொம்ப சத்தம் வருதுன்னா நமக்கு ஒரு அதிர்வு தோணும் இல்லை. அந்த மாதிரி தான், நீங்க கத்தவும் அப்படி தோணுச்சு. அதுக்கு பேரு பயம் இல்லை” என்று விளக்கம் தந்தாள்.
[the_ad id=”6605″]
இதுபோன்ற விளக்கத்தை அவன் எதிர்பார்க்கவில்லை. எவ்வளவு அழகாகப் பேசி சமாளிக்கிறாள் இவளிடம் பேசி ஜெயிக்க முடியுமா என்று தோன்றியது. மென்மையாகச் சிரித்தவன், அவளைப் பார்வையால் வருடியபடி நெருங்கினான்.
ஏற்கனவே சமையல் மேடை மீது சாய்ந்துகொண்டு நின்றிருந்தபடியால் சட்டென்று பின்னோக்கி நகர முடியாமல், “என்ன? என்ன?” என்றாள் பதற்றமாக. அதற்குள் அவளுக்கு வெகு அருகாமையில் வந்திருந்தான்.
என்னவோ சொல்ல வாயெடுத்தவளின் அடுத்த வார்த்தை அவனது இதழ்களுக்குள் கரைந்து கவிதை எழுதிக் கொண்டிருந்தது.
தடுக்க தோன்றாமல், தடுக்க எந்த புலன்களும் ஒத்துழைக்காமல், இளகி ஒன்றி இருந்தவளின் காது மடல்களில், “எனக்குப் பொதுவா கல்யாணத்துல விருப்பமே இல்லை. வீட்டுல சண்டையே இதை வெச்சு தான் வரும். என் அம்மா என்கிட்ட பேசாம, சாப்பிடாம கூட இருந்திருக்காங்க. ஆனா நான் எதுக்காகவும் அசைஞ்சு கொடுத்ததில்லை. ஆனா, உன்னை பிடிக்கவும் ஏன்னு கூட புரியாம குழம்பி இருக்கேன். ஆனா உன் திமிரில்லாத இயல்பான தைரியம், அகங்காரம், அலட்டல் இல்லாத துணிவு, உன்னோட பேச்சு சாமர்த்தியம், என்னை ரசிச்சு பார்த்துட்டு அதை மறைச்சு வெக்கிற செய்கைன்னு… உன்னை நினைச்சா ஒவ்வொரு விஷயமும்… என்ன சொல்ல மனசுக்குள்ள ரொம்ப தித்திப்பா நிறைஞ்சு இருக்கு” என்று அவளை அணைத்திருந்த இதத்தில், மென்குரலில் கூறினான்.
‘என்ன நான் திருட்டு சைட் அடிச்சது தெரியுமா?’ என்னும் தடுமாற்றத்தில் தயக்கமாக அவனை ஏறிட,
அவளது நெற்றியில் செல்லமாய் முட்டியவன், “நீ சொல்லற மாதிரி… நான் ஊர்த்தலைவர்… என்னை நீ ஆர்வமா கவனிக்கிறது கூடவா எனக்குப் புரியாது?” புருவத்தை ஏற்றி இறக்கி அவன் கேட்க,
அப்பொழுது தான் நெருக்கமே உரைத்தது. அவசரமாக அவனைத் தள்ளிவிட விழைய, அது அவளால் முடியுமா என்ன?
“என்ன?” என்றான் குறும்பு புன்னகையுடன். இவனுக்கு இதெல்லாம் வருமா என்றிருந்தது அவளுக்கு.
அவளுக்காக இல்லாவிட்டாலும், அவனுடைய அப்பத்தா எப்பொழுது வேண்டுமானாலும் வரும் அபாயம் இருப்பதால் சற்று விலகி நின்றான். இந்த கோலத்தில் இவர்களைப் பார்த்தால், அதிர்ச்சியில் அவர்களுக்கு மயக்கம் கூட வந்துவிடும் என்று தோன்றியது. பின்னே கோபமாய், வீராவேசமாய் வந்தவன் செய்யும் காரியமா இது? அவனுக்கே அவனது செய்கை சிரிப்பை வரவைத்தது.
அவளை விட்டு விலகியவன் வெகு தீவிரமான முகபாவத்தோடு, “ம்ப்ச் உன்கிட்ட ஒரு விஷயத்தைக் கேட்க மறந்துட்டேன்” என்று சொல்ல,
என்ன என்று அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.
“இல்லை ஊர்த்தலைவர் முத்தமெல்லாம் கொடுக்கலாமா?” எனச் சற்று நெருங்கி வந்து, குரலை தழைத்து அவன் கேட்க, செய்வதையும் செய்துவிட்டு கேள்வி வேறா என்றிருந்தது.
அவளுக்கு வந்த கோபத்தில் அவனது முடியைப் பிடித்திருந்தாள். அதை நன்கு ஆட்டி, “உனக்கு எத்தனை கொழுப்பு?” என புசு புசுவென மூச்சு வாங்கியபடி கேட்க,
அவனது கள்ளப்பார்வை அவளை இன்னும் ஆத்திரப்படுத்தியது. கைக்கு வாகாக எட்டிய தோசைக்கரண்டியை எடுத்து வலித்தும் வலிக்காதது போல அவனை அடிக்க,
அவளது சிறுபிள்ளைத்தனமான செய்கையில் சிரிப்பு வந்தாலும் மனதிற்குள் கட்டுப்படுத்திக் கொண்டு நின்று கொண்டிருந்தான்.
சென்றவர்கள் வெகுநேரமாகக் காணவில்லையே, அதிகம் திட்டிவிட்டானோ என்னும் தவிப்போடு ராஜேஸ்வரி அம்மாள் வெளியில் வர, அவர் பார்த்தது இந்த காட்சியைத் தான்.
[the_ad id=”6605″]
அதிர்ச்சியாக அவர் நிற்க, அவரை முதலில் கவனித்தது செந்தாமரை தான். வெற்றிச்செல்வன் அவருக்கு முதுகு காட்டி நின்றிருந்ததால் அவனுக்கு தெரியவில்லை.
அவசரமாக வெற்றிச்செல்வனை விலக்கி, செந்தாமரை சமையலறை விட்டு வேகமாக வெளியேற, என்னவென்று புரியாமல் அவன் குழப்பமாக திரும்பிப் பார்த்தான்.
பாட்டி நின்ற தோற்றத்தை வைத்தே, தான் அடிவாங்கியதைப் பார்த்து விட்டார் எனப் புரிய, அவன் சங்கடமாக நெளிய, அவள் விளக்கம் சொல்ல விரைந்திருந்தாள்.
“அது… பாட்டி…” என்று செந்தாமரை திக்கித்திணற,
‘பாவம் அப்பத்தா… வேப்பிலை தான் அடிக்கணும்’ என்று வெற்றிச்செல்வன் மனதிற்குள் தனது வீரமான, கம்பீரமான அப்பத்தாவிற்கு விபூதியை அடிக்கும் காட்சியை உருவகப்படுத்திக் கொண்டு சிரித்தான்.
‘நம்ம பிழைப்பு இவனுக்கு சிரிப்பா இருக்கா… இவனை நல்லா மொத்தியிருக்கணும். இன்னொரு சான்ஸ் கிடைக்காமயா போகும்’ என மனதிற்குள் பொரிந்தவள், அவனைப் பார்த்து முறைத்தாள்.
அவனோ அவளை இம்மியும் கண்டு கொள்ளாமல், “கிளம்பலாமா அப்பத்தா?” என்று கேட்க,
அவளுக்கு முதன்முறையாய் வந்துவிட்டு எதுவும் சாப்பிடாமல் செல்கிறார்களே என்றிருந்தது. “அது… பாட்டி டீ மட்டுமாச்சும் வைக்கவா? எதுவும் சாப்பிடாம போறீங்க” என்று சங்கடமாகக் கூறியவளைப் பார்த்துத் தெளிந்த ராஜேஸ்வரி அம்மாள்,
“அவனுக்கு நீ தான் பொருத்தமா இருப்ப” என்று புன்னகையாய் ஆசி கூறிவிட்டு, “டீ கொண்டு வா” என்றார்.
சமையலறையில் நந்தி போல நின்றிருந்தவனைக் கண்களை உருட்டி மிரட்டி வெளியேறும்படி சொல்ல, அவன் இவளை ரசனையாகப் பார்த்தபடி வெளியேறினான். ‘ம்ப்ச் இவன் பார்வையே சரியில்லை. நாம சும்மா இலை தழையை பறிக்கிறோம்னு சொல்லிட்டு இவனை வேவு பார்த்தோம். அப்போ ஏதோ ஸ்மார்ட்டா இருக்கானேன்னு சைட் அடிச்சா… பிராடு எப்படியோ கண்டு பிடிச்சுடுச்சு. எத்தனை நாள் கவனிச்சான் தெரியலையே. நாம வேற கன்னாப்பின்னான்னு இவனை சைட் அடிச்சு வெச்சிருக்கோம்’ என மனதிற்குள் புலம்பியபடியே தேநீர் தயாரித்தவள்,
[the_ad id=”6605″]
“பாட்டி சர்க்கரை நார்மல் அளவுதானே?” என்று மூத்தவளிடம் உறுதி படுத்துக்கொண்டாள்.
பாட்டிக்கு, வெற்றிக்கும் தேநீர் தந்துவிட்டு, வெளிப்புறம் எட்டி, “அண்ணா வாங்க டீ வெச்சிருக்கேன்” என்றழைத்தாள்.
“பரவாயில்லை மா” எனத் தயக்கமாக வீரமணி மறுக்க,
“வாங்கண்ணா முதல்முறை வந்திருக்கீங்க” எனச் செந்தாமரை அழைத்த விதத்தில் மேற்கொண்டு மறுக்கத் தோன்றாமல் மூவரும் வந்தார்கள்.
அவர்கள் மூவருக்கும் தேநீரைத் தந்து, அனைவருக்கும் அவள் செய்த கேசரியையும் தந்தாள்.
வெற்றிச்செல்வன், “எதுக்கு இது அதான் ஏற்கனவே ஸ்வீட் தந்துட்டியே!” என வம்பிழுத்தபடி பெற்றுக்கொள்ள, அவளுக்குப் பதற்றமானது. ‘எல்லோர் முன்னாலும்… கடவுளே… இவரோட…’ என நொந்துபோனாள்.
ராஜேஸ்வரி அம்மாளுக்குத் தரும்போது, “இதெல்லாம் எப்போ மா செஞ்ச?” என்று ஆச்சரியமாகக் கேட்டார்.
“காலையில பாட்டி”
“உனக்கெதுக்குமா சிரமம்?”
“நான் தனியா தானே பாட்டி இருக்கேன். என்னைப் பார்க்க யாரு வர போறாங்க. ஏதோ நீங்க வரவும் செய்திருக்கேன்” என அவருக்கு மட்டும் கேட்குமாறு இன்முகமாகப் பதில் கூற, மூத்தவளின் மனம் கவலை கொண்டது.
இளம்பெண் பெற்றோரை விட்டு, அதுவும் அவர்களிடம் சண்டை போட்டு விலகி வந்து தனியாக இருப்பது எத்தனை சிரமம்? ஏதோ இந்த ஊருக்கு வந்ததால் பரவாயில்லை. வேறு எங்கேனும் சென்றிருந்தால்? தவறாக ஏதேனும் நடந்திருந்தால்? இவளைப் பெற்றவர்கள் எங்கெல்லாம் இவளைத் தேடுகிறார்களா? எவ்வளவு கவலைப் படுகிறார்களோ? என்று ராஜேஸ்வரி அம்மாளின் மனம் கலக்கம் கொண்டது.
அதிலும் இந்த சூழ்நிலையிலும் பிறர் அறியா வண்ணம், இன்முகமாக… பதிலை தனக்கு மட்டும் கேட்குமாறு சொல்கிறாள்.
இத்தனை குணமான பெண்ணுக்கு வீட்டினரோடு என்ன தயக்கம், சண்டை? ஏதாவது விரைவில் செய்து சரிசெய்ய வேண்டும் என்று முடிவெடுத்தார்.