”விஷாலி மேடம் அறையில் இல்லை” என்று வேலைக்காரப் பெண் சொன்னதும் அருணும் தேவியும் பரபரப்பானார்கள்.
“நல்லா தேடிப் பார்த்தியா? பாத்ரூம்ல இருப்பா… நீ கவனிக்காம அவசரப்பட்டு வந்து சொல்லாத!”
அருண் அந்தப் பெண்ணை இலேசாய்க் கடிந்துகொள்வதைப் போலச் சொன்னான்.
“இரு நானே போய்ப் பார்த்துட்டு வரேன்…” என்று தேவி மாடியை நோக்கிச் சென்றாள்.
ஆனால் விக்ரம் எதுவும் பேசாமல் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் அமர்ந்தது அமர்ந்தபடியே இருந்தான்.
அவன் மனத்தில் ‘இப்போது வராகமிகிரர் இங்கிருந்தால் நன்றாக இருக்குமே’ என்ற எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது.
மாடிப்படியை நோக்கிச் சென்ற தேவி ஒரு கணம் நின்று விக்ரமைப் பார்த்தாள், அவன் அமைதியாக அமர்ந்திருப்பதைக் கண்டு தலையை ‘இல்லை’ என்பதைப் போல ஆட்டிவிட்டு அவள் விடுவிடுவென்று படிகளில் ஏறினாள்.
அருணும் அந்த வேலைக்காரப் பெண்ணைக் கடிந்தபடியே தேவியைத் தொடர்ந்தாள்.
“நான் எல்லா இடத்துலயும் பார்த்துட்டேன், சார், மேடம் நிச்சயமா இல்ல!” என்று தன் குரலை உயர்த்தி அருணுக்குப் பதில் சொன்னவாறே அந்தப் பணிப்பெண்ணும் அவர்களைத் தொடர்ந்தாள்.
விக்ரம் எதையும் கண்டுகொள்ளாமல் வராகமிகிரரை ஏறக்குறைய தியானித்தப்படி மெத்தை இருக்கையில் அமைதியாக அமர்ந்திருந்தான்.
தான் நினைத்தவுடன் அவர் இங்கே வந்துவிடுவார் என்று அவன் நம்பினான்.
விஷாலிக்கு என்ன ஆயிற்று? அந்தச் சகர்கள் அவளை என்ன செய்தார்கள்? தேவியிடம் அவள் ஏன் அப்படி மூர்க்கமாக நடந்துகொண்டாள்? இப்போது அவள் எங்கே மறைந்தாள்?
வராகமிகிரர் வந்தால் எல்லாக் கேள்விகளுக்கும் உடனே விடை கிடைத்துவிடும்!
‘மிகிரரே… ஏன் தாமதம்? உடனே வாருங்கள் இங்கே, என் வினாக்களுக்கு விடை பகர்ந்து செல்லுங்கள்…’
விக்ரமின் மனத்தில் ஒலித்த குரல் விக்ரமாதித்யரின் பாணியிலும் தொனியிலும் இருந்தது.
‘ஹா ஹா ஹா… வந்தனம் அரசே… தங்களின் காம்பீரக் குரலை மீண்டும் கேட்பதில் பேரானந்தம்! ஆனால், அடியேனைப் பொறுத்தருள வேண்டும், என்னால் இப்போது அங்கே உடனே வர இயலாத நிலை… தங்கள் மனத்தை அரிக்கும் வினாக்களையெல்லாம்விட முக்கியமான ஒரு வினாவிற்கான விடையைத் தேடி நானும் பட்டியும் இப்போது திரிந்துகொண்டிருக்கிறோம்…’
வராகமிகிரரின் குரல் விக்ரமின் மனத்திற்குள் கேட்டது. அவர்தான் பேசுகிறாரா, அல்லது இது நம் கற்பனையா என்று விக்ரம் சற்றுக் குழம்பினான். நாமாகக் கற்பனை செய்வதென்றால் இத்தனை விவரம் ஏன் தோன்ற வேண்டும் என்றும் தோன்றியது அவனுக்கு.
‘தங்கள் கற்பனை அல்ல அரசே! நான் வராகமிகிரன்தான்… உங்களோடு மானசீகமாகப் பேசுகிறேன், இப்படி நாம் பேசிக்கொள்வது வழக்கந்தான்… சரி எனக்கு உத்தரவுகொடுங்கள், எமது தேடலைத் தொடர வேண்டும்… தங்கள் கேள்விகளில் ஒன்றுக்கு மட்டும் விடை சொல்லிவிடுகிறேன், மற்றவை தங்களுக்கே விரைவில் புலப்படும்… தங்கள் தங்கையாக இருக்கும் பதுமை எங்கும் மறைந்துவிடவில்லை, அவள் இப்போது உங்கள் வீட்டின் உத்தர தளத்தில்தான் இருக்கிறாள்…’
‘பதுமை! பதுமையா? விஷாலி யார், மிகிரரே?’
’அதைத் தாங்களே விரைவில் தெரிந்துகொள்வீர்கள், அரசே! இப்போது என்னைச் செல்லவிடுங்கள்… ஜெய் மாகாளி! ஜெயவிஜயீ பவ!’
‘மிகிரரே… மிகிரரே…’
பதில் வராது என்று விக்ரமிற்குத் தெரிந்தே இருந்தது. அவன் அப்படியே தியானத்தில் இருப்பவனைப் போல கண்களை மூடி அமர்ந்திருந்தான்.
“விக்ரம்… ஹே, விக்ரம்… என்ன ஆச்சு?”
தேவி வந்து அவனை உலுக்கினாள்.
“விஷாலியக் காணோம்னதும் அப்செட் ஆயிட்டியா? கவலைப்படாத, உடனே கண்டுபிடிச்சுடலாம்… நான் கண்ட்ரோல் ரூம்கு இன்ஃபார்ம் பண்றேன், நானும் சத்தீசும் போய்த் தேடுறோம்…”
அவன் அருகில் அமர்ந்து ஆறுதலாக அவன் தோளில் கை வைத்தவாறே சொன்னாள் தேவி.
விக்ரம் அவளைப் பார்த்து மெள்ளப் புன்னகைத்தான்.
“பதட்டப்படாத தேவி… எந்த ஆக்ஷனும் தேவையில்லை, விஷி எங்க இருக்கான்னு எனக்குத் தெரிஞ்சிடுச்சு, வா…”
என்றபடி அவன் சட்டென எழுந்துகொண்டான்.
[the_ad id=”6605″]
“எங்க?”
என்று கேட்ட தேவியைத் தன்னைத் தொடரும்படிச் செய்கை காட்டிவிட்டு மாடிப்படியை நோக்கி விறுவிறுவென்று சென்றான்.
“விஷி மேல இல்ல, நான் எல்லா ரூம்லயும் தேடிட்டேன்…”
என்றபடியே எதிர்புறம் இறங்கி வந்தான் அருண்.
“அவ ரூம்ல இல்ல, உத்தர தளத்துல இருக்கா…”
என்றபடி அவனைத் தாண்டி மேலேறினான் விக்ரம்.
“உத்ர… வாட்?”
தேவி கேட்க, அருண் தனக்குத் தெரியாது என்று தோளைக் குலுக்கிவிட்டு விக்ரமைக் கைக்காட்டினான்.
“மொட்ட மாடி மா… வா!”
என்று திரும்பிப் பார்க்காமலே அவளுக்குப் பதில் சொன்னபடிப் படிகளில் தாவித் தாவி ஏறினான் விக்ரம்.
முதல் தளத்தைக் கடந்து அவர்கள் மொட்டை மாடிக்குச் செல்லும் படிகளில் ஏறினர், மாடிக்கான கதவு பூட்டி இருந்தது. விக்ரம் வீட்டின் மேலாளரை அழைக்கும் முன்னரே ஒரு பணிப்பெண் மூச்சிரைத்தபடிச் சாவியோடு வந்து சேர்ந்தாள்.
“குட்!”
என்றபடி விக்ரம் அவளிடமிருந்து சாவியை வாங்கிக் கதவைத் திறந்தான்.
அந்த வீட்டின் மாடிக்கு அவர்கள் யாரும் வந்ததே இல்லை. அந்த வீட்டிற்கு மாடி ஒன்று இருக்கிறது என்றே தெரியாது அவர்களுக்கு!
துணி காயப்போட, வற்றல் உலர்த்த, வேலை நேரத்தில் யாருக்கும் தெரியாமல் புகைப்பிடிக்க, சல்லாபிக்க என்று வீட்டின் வேலையாட்கள்தான் அடிக்கடி அந்த மொட்டை மாடிக்கு வருவர். தேவைப்படாத நேரத்தில் பாதுகாப்பிற்காக மொட்டை மாடிக்கான கதவைப் பூட்டியேதான் வைத்திருப்பார்கள்.
அவர்கள் கதைவைத் திறந்துகொண்டு மொட்டை மாடிக்கு வந்ததும் அதன் விசாலத்தன்மை அவர்களை இலேசாக வியக்க வைத்தது. வீடு எவ்வளவு பெரியது என்பதை அங்குதான் உணர முடிந்தது. நான்கு மூலைகளிலும் பெரிய பெரிய சிமெண்ட்டு தண்ணீர் தொட்டி வைக்கப்பட்டிருந்தன. ஒரு மூலையில் சிற அறைகள் கூட இருந்தன. அவற்றில் என்ன இருக்கிறது என்று அவர்கள் அப்போது கவலைப்படவில்லை.
விஷாலியைத் தேடிக் கண்களை மொட்டைமாடி எங்கும் அலையவிட்டனர்.
இரவின் இருட்டும், சுற்றுப்புற கட்டடங்களின் வெளிச்சமுமாகக் கலந்து அரைகுறையாக இருந்த வெளிச்சத்தில் விஷாலியைக் கண்டுபிடிக்க சில நொடிகள் ஆனது அவர்களுக்கு.
அவள் கதவிற்கு எதிர்புறம் இருந்த தண்ணீர்த்தொட்டியின் மீது நன்றாகச் சம்மணமிட்டு அமர்ந்திருந்தாள்.
“ஹே, விஷி… இங்க என்ன பண்ற நீ? கீழகீழ விழுந்தேன்னா என்ன ஆகும்!”
தேவி பதட்டத்துடன் அவளருகில் சென்று அழைத்தாள்.
“ஆமா, விஷி… ஏன் இப்படிலாம் பண்ற நீ? இறங்கு வா…”
என்றபடி அருண் அருகில் சென்று தண்ணீர்த்தொட்டியோடு இருந்த ஏணியில் ஏறப்போனான்.
“நில்! யார் நீ? உஜ்ஜைனி பேரரசர், கல்வியிலும் வீரத்திலும் நீதியிலும் சிறந்த விக்ரமாதித்யர் அமர்ந்து ஆண்ட சிம்மாசனத்தில் ஏற உனக்கென்ன தகுதி உள்ளது?”
என்று விஷாலி அருணைப் பார்த்து நாடகத் தொனியில் கேட்டாள்.
தேவியும் அருணும் ஒன்றும் புரியாமல் விக்ரமைப் பார்த்தார்கள்.
அவன் ’இருங்கள்’ என்று கைக்காட்டிவிட்டு அருகில் வந்தான்,
“விஷாலி, இறங்கி வா, வீட்டுக்குள்ள போய் பேசுவோம்…”
என்று கனிவான குரலில் சொன்னான்.
“விக்ரம், இந்த மொட்ட மாடி ரொம்ப அழகா இருக்குல? நாம ஏன் இங்க வரதே இல்ல? இனிமே தெனமும் சாயங்காலம் இங்க வருவோம், சரியா?”
என்றபடியே விஷாலி கீழே இறங்கி வந்தாள்.
தேவிக்கும் அருணிற்கும் ஒன்றும் புரியாமல் மண்டையே வெடித்துவிடும் போலிருந்தது.
விக்ரம் புன்னகை மாறாமல் இறங்கி வந்தவளின் கையை மெள்ளப் பிடித்துக்கொண்டான்.
“வரலாம் வரலாம், பட், நாங்க நாளைக்குத் தஞ்சாவூர் போறோமே… நீ எப்படி, தஞ்சாவூர் வரியா, இல்ல இங்க இருந்து மொட்டை மாடிக்கு வந்துப் போகப் போறியா?”
என்று அவளைப் பார்த்துக் கிண்டலாகக் கேட்டான்.
[the_ad id=”6605″]
“த்தோடா… கொஞ்சம் கேப் கிடைச்சா போதுமே, என்னைக் கழட்டிவிட்டுப் போகப் பிளான் பண்ணுவீங்களே… நான் இல்லாம நீங்க எங்கயும் போகக் கூடாது!”
என்று விஷாலி மூவரையுமே பார்த்துத் தன் சுட்டுவிரலால் கொஞ்சலாக மிரட்டியபடியே சொன்னாள்.
“சரி வா, இப்ப கீழ போவோம்…”
என்று விக்ரம் அவளை இழுத்துக்கொண்டு கதவை நோக்கிச் சென்றான்.
“டேய், என்னடா நடக்குது இங்க? அண்ணனும் தங்கையும் சேர்ந்து நம்மளை லூசாக்கிடுவாங்க போல?”
என்று தேவி அருணைப் பார்த்து அலுப்பாகக் கேட்டாள்.
“ஒன்னும் மட்டும் நிச்சயம், இவளை வெச்சுக்கிட்டு நாம தஞ்சாவூர்ல படாதபாடு படப் போறோம்…”
என்று அருணும் அவளுக்குப் பதில் சொன்னபடியே விக்ரமைத் தொடர்ந்தான்.
அவர்கள் கீழே வந்தபின் சற்று நேரம் தஞ்சாவூர் போவதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர்.
இரவுணவிற்குப் பின் விக்ரமும் அருணும் அலுவலக வேலைகளைப் பார்க்கத் தொடங்க, உடைகளை எடுத்து வைக்கத் தனக்கு உதவ வரும்படி விஷாலி கேட்டதற்குச் சோர்வாக இருக்கிறது என்று கூறி தேவி மறுத்துவிட இருவரும் உறங்கச் செல்வதாகச் சொல்லிவிட்டு அவரவர் அறைக்குச் சென்றனர்.
“விஷிக்கு என்ன ஆச்சுனு உனக்கு தெரியுமா, விக்ரம்?”
அருண் தன் மடிக்கணினியை நோண்டியபடியே கேட்டான்.
“முழுசாத் தெரியல, வராகமிகிரரைக் கேட்டேன், அவரும் சரியா பதில் சொல்லாம போயிட்டாரு!”
என்று தோள்களைக் குலுக்கியபடிச் சொல்லிவிட்டு விக்ரமும் தன் மடிக்கணினியில் ஆழ்ந்தான்.
“வராகமிகிரரா? அவர் எப்ப வந்தாரு?”
அருண் வியப்பாகக் கேட்டான்.
“நேர்ல வரல… மானசீகமா பேசினாரு!”
“மானசீகமா? யு மீன் டெலிபதி மாதிரியா?”
“ஆமா!”
“வாவ்! அப்படிலாம் பேச முடியுமா உன்னால? எங்க என்கிட்டயும் பேசு பார்க்கலாம்…”
என்ற படி அருண் கண்களை மூடிக்கொண்டு நிமிர்ந்து அமர்ந்தான்.
“டேய்… வேலையப் பாருடா… நாளைக்குக் காலைல நாம மறுபடிக் கிளம்பனும்… அதுக்குள்ள இந்த வேலையலாம் முடிக்கலேனா நம்ம ஜி.எம். கோச்சுப்பாரு…”
என்றபடி விக்ரம் அருகில் இருந்த ஒரு நாட்குறிப்பேட்டை எடுத்து அருணின் மீது எறிந்தான்.
“இதெல்லாம் சும்மா ஃபார்மாலிட்டிதான், நாம இல்லேனாலே பாஸ்கரன் சார் எல்லா கம்பெனியையும் ஒழுங்கா பார்த்துப்பாரு! சரி, விஷாலிக்கு என்ன ஆச்சு, வராகமிகிரர் என்ன சொன்னார்?”
அருண் மீண்டும் ஆர்வமாகக் கேட்டான்.
“அதான் அவரு ஒன்னும் சொல்லாமலே போயிட்டார்னு சொன்னேனே… விஷாலி ஏதோ ஒரு பதுமை, அது மட்டும் தெரியுது…”
“பதுமை? விக்ரமாதித்யரோட சிம்மாசனத்துல வரிசையா முப்பத்திரெண்டு இருக்கும்னு சொன்னாங்களே, அதுவா?”
“அதேதான், அந்த முப்பத்திரெண்டுல இவ யாருனு சரியாத் தெரியல…”
விக்ரம் ஆழ்ந்த சிந்தனையோடு பதில் சொன்னான்.
“உனக்கு அந்த முப்பத்திரண்டு பதுமையையும் ஞாபகம் இருக்கா, விக்ரம்?”
“முழுசா இல்ல, ஏதோ ஒன்னு ரெண்டு பேரு அப்பப்ப ஞாபகம் வருது!”
“ரத்னாங்கி?”
“ம்ம்… அதுவும் ஒரு பதுமைதான்…”
“அதுதான அழிஞ்சு போச்சுனு விஷாலி கத்தினா? நினைவிருக்கா?”
“ம்ம்…”
விக்ரம் மீண்டும் யோசித்தபடியே பதில் தந்தான்.
“அப்ப, இவ யாரு? அவளையே கேட்டுடுவோமா?”
“வேணா அருண், அவ யாரா இருந்தாலும், விஷி இப்ப ஏதோ குழப்பத்துல இருக்கா, அதான் ஒரு மாதிரி நடந்துக்குறா… மே பி, அவ ஒரு பதுமைன்ற விஷயம் இப்பதான் அவளுக்குத் தெரிய ஆரம்பிச்சிருக்குப் போல, எனக்கே இன்னும் நாந்தான் விக்ரமாதித்யர்ன்ற உணர்வு முழுசா வரல, அவளுக்கு எப்படி இருக்கும்னு என்னால புரிஞ்சுக்க முடியுது… லெட் அஸ் லீவ் ஹர் அலோன்…”
“ஆமா விக்ரம், எனக்கும் புரியுது… என்கிட்ட கூட ஒரு வாள் இருக்கு, சிம்மத்துவஜன் அமரசிம்மன்ற பேரு என் மண்டைக்குள்ள சுத்திக்கிட்டே இருக்கு… அந்த வாளக் கைல எடுத்தா ஜிவ்வுனு இருக்கு… இட்ஸ் டாஸ்லிங்!”
என்று அருண் தலையைச் சிலுப்பிக்கொண்டான்.
“சரி, தஞ்சாவூர்ல எங்க தங்கப் போறோம்?”
விக்ரம் கேட்டதும் அவர்கள் பேச்சு திசைமாறி மறுபடி தஞ்சை செல்வதற்கான திட்டமிடலில் இறங்கினார்கள்.
மறுநாள் காலை அவர்களது பட்டாளம் இரண்டு மகிழுந்துகளில் சென்னை விமான நிலையம் நோக்கிச் சென்றது.
முன்னால் சென்ற வண்டியை அருணே ஓட்டினான். அதில் விக்ரம், விஷாலி, தேவி, தேவராசு ஆகியோரும் கூடுதலாய் இரண்டு புதிய காவலரும் இருந்தனர்.
பின்னால் வந்த வண்டியில் சத்தீசும் மேலும் ஆறு புதிய காவலர்களும் இருந்தனர்.
காவலர்கள் அனைவருமே ஆயுதச் சண்டையிலும் கைச்சண்டையிலும் நன்கு தேர்ச்சி பெற்றவர்கள். தேவி சிறப்பாகத் தேர்வு செய்து இவர்களை வரவழைத்திருந்தாள். எட்டு பேரில் இருவர் தலைமைக்காவலர் (head constable) நிலையிலும் அறுவர் அடிப்படைக் காவலர் (constable) நிலையிலும் இருப்பவர்கள். அவர்களை நான்கு நான்கு பேராக இரண்டு அணியாக்கி சத்தீசும் தேவராசும் ஒவ்வொரு அணிக்கும் பொறுப்பு என்று தேவி நியமித்திருந்தாள். இவர்களின் கதையும் (!?) இவர்கள் எதிர்கொள்ளும் எதிரிகளைப் பற்றியும் காலையில் புறப்படும் முன் தேவராசு அவர்களுக்கு விளக்கியிருந்தார். அவர்களில் சிலர் அவற்றை நம்பவில்லை என்பது அவர்களின் முகத்தில் தெரிந்தது, அவர்கள் எடுத்துச் சென்ற வாள் ஈட்டி முதலிய ஆயுதங்களையும் பார்த்துச் சிலர் தமக்குள்ளேயே கிண்டலாக நகைத்தனர், சமயம் வருகையில் தெரிந்துகொள்வார்கள் என்று தேவராசு மனத்திற்குள் எண்ணி நகைத்துக்கொண்டார்.
இவர்களுக்கான தனிப்பட்ட விமானம் காத்திருந்தது. தேவியின் புண்ணியத்தில் விமானத்தின் அருகேவரை செல்வதற்கு இவர்களின் மகிழுந்து அனுமதிக்கப்பட்டிருந்தது. இவர்கள் வண்டியைவிட்டு இறங்கி விமானத்தை நோக்கிச் செல்ல, உள்ளே ஏறுவதற்கு முன் விமானத்தின் வலவனையும் பணியாட்களையும் விக்ரமிற்கும் தேவிக்கும் அறிமுகம் செய்துவைத்தனர்.
விமானத்தில் திருச்சிராப்பள்ளி சென்று, அங்கேயிருந்து மறுபடி மகிழுந்தில் தஞ்சாவூரை அடைய வேண்டும்.
மொத்தம் இரண்டரை மணி நேரப் பயணம். இவர்கள் அனைவரும் தஞ்சையை அடையும்போது நேரம் காலை 11.30.
தஞ்சை பெரியகோயிலுக்கு அருகிலேயே ஒரு ஐந்து நட்சத்திர தங்கும் விடுதியை ஏற்பாடு செய்திருந்தான் அருண்.
அவரவர் தத்தமது அறைகளுக்குச் சென்று புத்துணர்வு பெற்று, உடைமாற்றிக்கொண்டு மதிய உணவிற்காக மீண்டும் ஒன்று கூடினர்.
தஞ்சையில் எங்கெல்லாம் செல்லலாம் என்று பேசியபடியே விஷாலி உணவை உட்கொண்டாள்.
மற்ற யாரும் அவ்வளவாயப் பேசவில்லை. உணவிற்குப் பின் மீண்டும் அறைக்குச் சென்று சற்று ஓய்வெடுத்துவிட்டு மாலை பெரிய கோயிலுக்குச் செல்வதாகத் திட்டம் போட்டனர்.
அருண் முன்பே கோயிலில் சிறப்பு பூசைக்கு ஏற்பாடு செய்திருந்தான்.
வெளிச்சத்தோடே கோயிலைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்பதால் மாலை நான்கு மணிக்கெல்லாம் அங்கிருக்கும்படி சென்றனர்.
[the_ad id=”6605″]
சோழர்களின், ஏன் தமிழக வரலாற்றின் உச்சமாகத் திகழ்ந்த இராசராச சோழன் கட்டிய அந்த மாபெரும் கலைச்செல்வத்தை ஆசை தீரச் சுற்றிப் பார்த்தனர். எத்தனை முறை பார்த்தாலும், எங்கிருந்து பார்த்தாலும் அந்த விமானத்தின் காட்சி அலுக்கவே அலுக்காது போல எனத் தோன்றியது அவர்களுக்கு.
விஷாலி கோயிலின் ஒவ்வொரு அங்குலத்தையும் தன் புகைப்படக் கருவியில் சுழியம்-ஒன்றின் கோவைகளாகப் பதுக்கிக்கொண்டாள்!
“சரி, டைம் ஆகுது, சந்நிதிக்குப் போலாம் வாங்க, ஐஞ்சரை மணிக்கு அபிஷேகம் ஆகும்னு குருக்கள் சொன்னார்…”
அருண் அவர்களை சந்நிதிக்குள் விரட்டிச் சென்றான்.
பெரிய கோயிலுக்கு ஏற்ற பெருவுடையாராக உள்ளே வீற்றிருந்த அந்த மாபெரும் இலிங்கத்தை வியப்புடன் வணங்கி, இதோ இதே இடத்தில்தானே தமிழ் வரலாற்றின் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத அந்த மாபெரும் சோழப் பேரரசனும் நின்று இதோ இதே இலிங்கத்தைத்தானே வணங்கியிருப்பான் என்று எண்ணி அவர்களின் உடலில் புளகம் பூத்தது.
பலவகை அபிடேகங்கள் முடிந்து, திரைமூடி சுவாமிக்கு அலங்காரம் செய்வித்து மீண்டும் திரையைத் திறந்து குருக்கள் பெரிய தீபாராதனை காட்டினார்…
‘ஆஹா… சபாஷ் ராஜராஜ… எவ்வளவு பெரிய சாதனை செய்துள்ளாய்… உனக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆண்ட எனக்கு இது போல ஒன்றும் தோன்றாமல் போய்விட்டதே… என் புகழ் வெறும் கதைகளாகத்தான் உலவுகின்றது, ஆனால் உன் புகழ், உன் கீர்த்தி, உன் சரித்திரம்… இதோ எத்தனை கம்பீரமாய், எவ்வளவு அழகாய், எத்தனை உறுதியோடு கல்லில் நிலைபெற்று நிற்கிறது… எனக்கு இப்படித் தோன்றாமல் போய்விட்டதே!’
“அதனால் என்ன மகாராஜா? அதான் மாகாளி உங்களுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்திருக்கிறாளே? இப்போது உலகை வென்று இதைவிட பெரிதாய் ஒரு கோயில் கட்டிவிட்டால் போகிறது!”
விக்ரமின் மனத்தில் ஓடிய எண்ணத்திற்குப் பதில் போலக் கேட்ட அந்தக் குரலை நோக்கி விக்ரம் திரும்ப, அங்கே குருக்கள் கொடுத்துவிட்ட பிரசாதத் தட்டுடன் இவனை நோக்கிப் புன்னகைத்தபடி நின்றிருந்தான் அந்த அந்தண இளைஞன்.
விக்ரம் ஏதும் பேசாமல் அவனை நோக்கி ‘நீ?’ என்பதைப் போல தன் வலது கை ஆள்காட்டி விரலை மெள்ள நீட்ட, அவன் முகத்தில் இருந்த புன்னகை பெரிதாக மலர்ந்தது.
தேவியும் அருணும் விக்ரமைப் பார்க்க, விக்ரமின் முகத்தில் இருந்த கேள்வி நீங்கி புன்னகை மலர்ந்தது,
“பட்டா!”
தொடரும்…