இசைப்பதை நிறுத்திய சக்ரா, அப்போது தான் தன் கையில் வழிந்த குருதியைக் கண்டான்.
சொல்லமுடியாத மனக் குழப்பத்தில் ஆழ்ந்து இருந்தவன், மோதிரத்தை சனாவின் விரலில் மாட்டியதும், அதை திரும்ப அவள் மாலினியின் கையில் தன்னை மாட்ட சொல்லியதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
பெண்களுக்கு மட்டும் தான் தாலி மேல் உணர்வுகள் உள்ளது என்று யார் சொன்னது?. சக்ராவுக்கும் அவன் கட்டிய தாலி மேல் அதிக உணர்வு இருந்தது. அது தான் பின்னாளில் காதலாக மாறியது.
தன் காற்சட்டைப் பையில் இருந்து தாலியை எடுத்தவன், வைத்த கண் வாங்காமல் அதையே பார்த்துக் கொண்டிருந்தான்.
நெஞ்செல்லாம் இனம் புரியாத தவிப்பு ஒன்று அவனை ஆட்கொண்டிருந்தது. சனாவின் மகிழ்ச்சிக்கான காரணம் அவனுக்கு புரியவில்லை.
அவன் கையில் ஏற்பட்ட காயம், அவனுக்கு வலியை தரவில்லை. ஆனால் அவன் மனதில் ஏற்பட்ட காயம் ஆழமாக அவனுக்கு வலியை தந்தது.
அறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்தான். அவன் கைகள் தன்னைப் போல் தன் அலைபேசியைத் தேடி செல்ல, அவன் அழைத்தது என்னவோ சனாவிற்கு தான்.
தன்னை நோக்கி உயர் வேகத்தில் லாரி ஒன்று வருவதை உணராதவள், தன் உரிமைக்கான சாவி கிடைத்து விட்ட மகிழ்ச்சியில் சாலையில் பயணித்துக் கொண்டிருந்தாள், அப்போது தான் அவளுக்கு சக்ராவிடம் இருந்து அலைபேசி அழைப்பு வந்தது.
ஆனால் அவள் வண்டி ஓட்டும் கவனத்தில் அதை எடுக்கவில்லை. விடாமல் தொடர்ந்து அழைத்துக் கொண்டே இருந்த அலைபேசியின் ஓசை அவளுக்கு எரிச்சலை ஏற்படுத்த, தன் வண்டியை ஓரம் கட்டியவள், அழைப்பது யார் என்று எடுத்து பார்த்தாள்.
அதைப் பார்த்தவுடன் அழைப்பது ருத்ரா என்பதனை உணர்ந்து கொண்டவள், முகத்தை சுழித்தபடி, “இவனுக்கு வேறு வேலையே இல்லை.” என்று அவள் வாய்விட்டு சொல்லும் போதே, அந்த கனரக வாகனம் அவளை நெருங்கி இருந்தது.
சக்ராவின் அழைப்பைப் பார்த்ததும் அவளது மண்டை சூடானது. அப்போது தான் தனக்கு இடப்புறமாக இருந்த இருந்த இரவு நேர உணவு விடுதியைப் பார்த்தாள்.
ஏதோ தன் மனது தன்னை நோக்கி அங்கே இழுக்க, அலைபேசியை மட்டும் எடுத்து காதில் வைத்தவாறு, “உனக்கு என்ன வேண்டும் சக்ரா?.” என்று கேட்டு இரண்டு அடி தான் எடுத்து வைத்திருந்திருப்பாள், அதற்குள் ஒரு லாரி அவளின் வாகனத்தில் அதிவேகமாக மோதி, அதை தூக்கி எரிந்து நிக்காமல் சென்றது.
அவள் கண் மூடி திறக்கும் நேரத்தில் இது அனைத்தும் நடந்து முடிந்திருந்தது.
இடி முழக்கம் நிற்பது போலவே சட்டென்று அவளது கோப முகத்தில் பயம் சூழ்ந்தது. அதிர்ச்சியில் அவளது நாவும் வறண்டது. அவள் வண்டியோ சுக்கு நூறாக தெறித்து விழுந்தது.
அந்தப்பக்கம் இருந்த சக்ரா, “சனா…..” என்று மெதுவாக பதற்றத்துடன் அழைக்க, “சக்ரா…..” என்று திக்கித்திணறி வந்தன அவள் வார்த்தைகள்.
அவள் சொல்லாத வார்த்தைகளை எல்லாம் உணர்ந்தவன், அவள் ஏதோ பிரச்சனையில் இருக்கின்றாள் என்பதனை உணர்ந்து வேகமாக தன் கார் சாவியை எடுத்துக் கொண்டு, “நீ எங்கே இருக்கின்றாய் சனா….” என்று அவசரமாக கேட்டுக் கொண்டே, தன் மகிழுந்தில் ஏறினான்.
“நான்….” என்றவள் தான் இருக்கும் இடத்தை திக்கியபடியே சொன்னாள்.
“நீ பயப்படாதே! இதோ நான் வந்துவிடுகின்றேன்.” என்று சொல்லிவிட்டு உயர் வேகத்தில் தன் மகிழுந்தை எடுத்தான்.
‘சனா அங்கே இருக்கின்றாள்…. அவளுக்கு என்ன பிரச்சனை…’ என்று நினைத்தபடி வந்தவன் கரங்கள் தன்னைப் போல வண்டியை ஓட்ட, அவனது நெஞ்சம் முழுவதிலும் ஏதோ ஒரு அழுத்தம் அழுத்தி, அவனது முகத்தை கடினமாக்கியது.
அவனது ஒவ்வொரு அசைவும் ‘சனா சனா…’ என்று அவளது பெயரையே உச்சரித்துக் கொண்டிருந்தது.
அவள் சொன்ன இடத்திற்கு எப்படி வந்தான் என்றே தெரியவில்லை. ஆள் நடமாட்டம் இல்லாத அந்த இடத்தில் ஒரே ஒரு இரவு நேர விடுதி மட்டும் இருந்தது.
அதன் உள்ளே இருந்தவள், சக்ராவின் தலை தெரிந்ததைப் பார்த்து வேகமாக ஓடி வந்து அவனை அணைத்துக் கொண்டாள்.
அவள் நலமாக இருப்பதை தன் கண்களால் கண்டு கொண்ட பிறகு தான் அவனது மனது லேசானது. அதன் பிறகு தான் அவன் யோசிக்க ஆரம்பித்தான்.
‘இதென்ன விந்தை?. என்னை வேண்டாம் என்று சொன்னவள், இப்போதோ அணைக்கின்றாள்!. சனாவிற்கு என்ன பிரச்சனை!.’ என்று மறுபடியும் அவளது நலனில் வந்து நின்றது அவனின் மனது.
அணைப்பில் இருந்து அவளை விடுவித்தவன், அவளை தலையில் இருந்து கால் வரை ஆராய்ந்து, “என்னாச்சி சனா… உன் முகமெல்லாம் ஏன் வியர்த்து இருக்கின்றது?. உனக்கு என்ன பிரச்சனை?” என்றான் அவள் கன்னங்களைப் பற்றியபடி.
தனக்கு நடக்கவிருந்த பெரும் ஆபத்தில் இருந்து மீண்டவள், சக்ராவின் குரலில் வந்த அக்கறையையும், அவன் கண்களில் தெரிந்த அன்பையும் பார்த்தவளுக்கு, மனது லேசானது போல் இருந்தது.
“நீ இருக்கும் போது எனக்கு என்ன பிரச்சனை சக்ரா?.” என்று அவளது குரலை கிசுகிசுப்பாக்கிக் கூற.
சக்ராவோ அவள் மொழி கேட்டு தன் உடலில் மின்சாரம் பாய்வதைப் போல உணர்ந்தான். அவள் பேச்சு தந்த தைரியத்தில், ‘நான் உனக்காக இருக்கின்றேன்.’ என்பதாய், குனிந்து அவள் கன்னத்தில் அழுத்தமாக தன் இதழைப் பதித்தான்.
தான் என்ன பேசுகின்றோம் என்பதை உணராமலே பேசிக்கொண்டிருந்தவள், அவன் இதழ் ஒற்றலில் தான் சுயத்திற்கு வந்தாள்.
அதில் அவள் மூளையில் மின்சாரம் தாக்க, வேகமாக அவனை விலக்கிவிட்டவள், தன் வண்டி தூக்கி எறியப்பட்டிருந்த இடத்தை நோக்கி ஓடினாள்.
சக்ராவும் ஒன்றும் புரியாமல் அவள் பின்னே ஓடினான். பழிவாங்க காத்துக்கொண்டிருக்கும் இச்சாதாரி நாகம் போல, அந்த லாரி திரும்பவும் சனாவை நோக்கி வந்தது.
உருக்குலைந்து கிடந்த வண்டியின் அருகிலையே தான், அவளது கைப்பையும் கிடந்தது.
அதில் தானே, அவள் மாலினியிடம் இருந்து வாங்கிய கழுத்து சங்கிலி இருந்தது. அதை எடுக்கவே அவள் ஓடினாள்.
கைபையில் இருந்து அவள் சங்கிலியை எடுக்கும் போதே, அதி விரைவாக அவள் மீது மோத வந்த லாரியை சக்ரா கண்டுவிட்டான்.
சிறிதும் தாமதிக்காமல் அவள் இடுப்போடு அணைத்து தூக்கி சாலையின் ஓரத்தில் அவளோடு சேர்ந்து விழுந்திருந்தான்.
இரண்டாவது முறையாக சனா காப்பாற்றப்பட்டு இருந்தாள். சனாவை மோத வந்துவிட்டு, நிக்காமல் சென்ற லாரியைப் பார்த்தவனின் முகம் சுருங்கியது.
நம்பர் ப்ளேட் இல்லாமல் செல்லும் லாரியைப் பார்த்தவன், இது கொலை முயற்சி தான் என்பதனை உணர்ந்ததும், சனாவின் மீதான அவனது பிடி இறுகியது.
அந்த இடத்தில் இருப்பது ஆபத்து என்பதனை உணர்ந்தவன், வேகமாக அவளை எழுப்பி தன் மகிழுந்தில் ஏற்றி அங்கிருந்து பறந்து சென்றான்.
சனாவோ இன்னும் அந்த பதற்றத்தில் இருந்து மீளவில்லை. திக் பிரம்மை பிடித்தது போல், தன் நெஞ்சில் கைவைத்தபடி அமர்ந்திருந்தாள்.
வேகமாக தன் மகிழுந்தை இயக்கியவன், அடிக்கொரு தரம் தன்னை யாரேனும் தொடர்ந்து வருகின்றார்களா என்று மகிழுந்தின் கண்ணாடி வழியே பார்த்துக் கொண்டே வந்தான்.
அவனுக்கும் அதிக பதற்றம் இருந்ததனால், தற்சமயம் பாதுகாப்பான இடத்தை நோக்கி சென்று கொண்டிருந்தான்.
சனாவின் வீடு இருக்கும் சாலையில், மரங்கள் அடர்ந்து இருக்கும் பகுதியில், சென்று தன் வாகனத்தை நிறுத்தியவன் அப்போது தான் சனாவைப் பார்த்தான்.
எப்போதும் நிமிர்வான தோற்றத்தில் கம்பீரமாக இருக்கும் சனாவை, முகமெல்லாம் வியர்த்து போய் பயத்துடன் இருக்கையுடன் ஒன்றிப்போய் அமர்ந்திருக்கும் நிலையைப் பார்த்து உடைந்து போனான்.
அவள் தோள்களை அவன் பற்றியதும், அவனை இறுக்கமாக அணைத்து அழ ஆரம்பித்துவிட்டாள் பெண்ணவள்.
மனிதராய்ப் பிறந்த அனைவருக்கும் பயம் இருப்பது சகஜம் தான். இரண்டு முறை உயிர் தப்பிய சனாவின் இதயம் இன்னும் படபடவென்று வேகமாக துடித்துக் கொண்டே தான் இருந்தது.
சக்ராவை அணைத்ததும் தான் அது ஒருநிலை பெற்றது. ஆறுதலாக அவள் முதுகை அவன் வருட, சில கணங்கள் கழித்து, அவனை விலக்கியவள், தன் பயத்தை மறைத்து, “நான் வீட்டிற்கு செல்லவேண்டும்.” என்றாள் முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு.
“சரி போகலாம். நீ நன்றாக தானே இருக்கின்றாய்?.” என்று கேட்டவன் கண்கள் அவள் தேகத்தை ஆராய்ந்தது.
அதில் சென்ற கோபம் திரும்பவும் வரப்பெற்றவளாக, “என் தங்கைக்கு கணவனாக வரப்போகின்றாய் சக்ரா…. இதுபோல் பார்ப்பதை முதலில் நிறுத்து.” என்று சொல்லி வேறு பக்கமாக திரும்பி கொண்டாள்.
அவள் மொழி கேட்டு தமது நிலைகுலைந்த நெஞ்சைத் திடப்படுத்திக்கொண்டு கனிவு ததும்பிய கண்களால் சனாவை நோக்கியவன், “பின் எதற்காக என்னைப் பார்த்ததும் ஓடி வந்து அணைத்தாய்?. உரிமை இருப்பதால் தானே!.”
“அது ஒரு விபத்து.” என்றாள் ஒற்றை வரியில்.
அவள் மொழி கேட்டு பல்லைக் கடித்தவன், அவன் கையைப் பற்றி தன்னை நோக்கி இழுத்து, “எதை விபத்து என்று சொல்கின்றாய்! என்னை அணைத்ததையா?.” என்று ஆக்ரோஷமான குரலில் கேட்க.
அவன் முகம் அவள் முகத்தில் படாமல் பட, அதில் தடுமாறியவள், “இல்லை…. அது…. நான் என்னை இடிக்க வந்த வாகனத்தை கூறினேன்.” என்று சொல்லி அமைதியானாள்.
அப்போது தான் அதன் நியாபகம் சக்ராவிற்கு வந்து, அவள் மேல் இருந்த தன் பிடியை இலகுவாக்கி, “இது விபத்து போன்று தெரியவில்லை சனா. இதைப்பற்றி நான் எஸ்பியிடம் பேசுகின்றேன். சாலையில் எங்கேனும் இருக்கும் கண்காணிப்பு கேமெராவில் அந்த லாரி பதிவாகி இருக்கலாம்.” என்றதும் தான், ‘தன்னை கொலை செய்ய யார் துடிக்கின்றனர்!.’ என்று யோசிக்க ஆரம்பித்தாள்.
“இனி நீ எங்கும் தனியாக வரக்கூடாது. உன் பாதுக்காப்புக்கு என் ஆட்கள் இருவரை அனுப்புகின்றேன்.” என்று அவன் அடுக்க.
அதில் கோபம் கொண்டவள், “உன் அக்கறை எனக்கு தேவை இல்லை சக்ரா. உன் லிமிட்டை தாண்டாதே!” என்று அவள் ஒட்டாத தன்மையினை அவள் இதழ் மட்டும் தான் சொல்லிக் கொண்டிருந்தன, ஆனால் அவள் கண்களோ அவன் கண்ணோடு கண்கள் கலந்து வேறு கதை பேசியது.
அது அப்பட்டமாக சக்ராவின் கண்களுக்கு தெரிய இதழோரம் சிரித்துக்கொண்டவன், “உன் வாய் தான் பிடிக்கவில்லை என்று கூறுகின்றது சனா….” என்று சொன்னவனுக்கு அப்போது தான் ஒன்று நியாபகம் வந்தது.
“முதல் தடவையே அந்த லாரி உன்னை கொல்ல வந்திருக்கின்றது. அப்படி இருந்தும் இரண்டாவது தடவையாக எதற்காக சாலையில் சென்றாய்?. உனக்கு ஏதவாது ஆகியிருந்தால்?.” என்றவன் இப்போது கண்களில் கனலை காண்பித்தான்.
“அதான் ஒன்றும் ஆகவில்லையே!.” என்று கூறி தன் உள்ளங்கையை திறந்தவள், அதில் இருந்த சங்கிலியைப் பார்த்து பெருமூச்சு விட்டாள்.
சக்ராவும் அதைப் பார்த்தவனின் முகத்தில், ஆத்திரம், கோபம், பயம் என்று அனைத்து விதமான பாவனையையும் காட்டினான்.
அவள் கையில் இருந்த சங்கிலியை வெடுக்கென்று பற்றியவன், “இதை எடுக்க தான், உன் உயிரையும் பொருட்படுத்தாமல் ஓடி சென்றாயா?.” என்று பல்லைக்கடித்தபடி இறுகிய குரலில் கேட்டான்.
அவள் கையில் இருந்த சங்கிலியை பறிக்க நினைத்து அவனிடம் போராடியவள், “அதை கொடு சக்ரா…” என்றாள் ஆவேசமாக.
அதை தன் காற்சட்டைப்பையில் போட்டுவிட்டு, சனாவின் கண்களைப் பார்த்து, “நான் நினைப்பது போல் நீ அதை தேடவில்லையே!.” என்று மெல்லிய குரலில், ஒரு வித பயத்துடன் கேட்டான்.
அவன் எதை சொல்லவருகின்றான் என்பதனை நன்றாக உணர்ந்தவள், “நீ நினைப்பது சரி தான் சக்ரா. நான் அதைத்தான் தேடுகின்றேன்.” என்று திமிராக வந்தன அவள் பதில்.
உடனே சக்ராவிடம் நிசப்தம் குடிகொண்டது, ‘இல்லை.’ என்பது போல் தன் தலையை இருப்பக்கமாக ஆட்டியவன், “நீ சுதர்சன சக்கரத்தையா தேடுகின்றாய்?.” என்று இப்போது அழுத்தம் திருத்தமான குரலில் கேட்டான்.
கண்களில் ஒளி மின்ன, “ஆம். அது எனக்கு சேர வேண்டிய பொக்கிஷம். அதை நான் அடையாமல் விடமாட்டேன்.” என்று வெறிபிடித்தவள் போல் கத்தினாள்.