“ம்ச் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம இதென்ன எதிர் கேள்வி கேக்குற? கெட்ட பழக்கம் இதெல்லாம்.” பேனாவாலே யாழன் கரத்தில் இரண்டடி போட்டாள் யாழினி.
நாற்காலியில் சரிந்து அமர்ந்தவன் இரு கரத்தையும் தலைக்குப் பின் கோர்த்து சாவகாசமாய் அவளுடன் பேச்சை தொடர்ந்தான், “அப்படியென்ன கேள்வி மேடம்?”
“உன்னோட சேவிங்ஸ் என்னனு கேட்டேன்டா…”
“அது தெரிஞ்சு நீ என்ன பண்ண போற?”
“ம்ச் சொல்லுடா… எவ்ளோ சேவிங்ஸ் இருக்குனு தெரிஞ்சாதான் எவ்ளோ லோன் எடுக்கலாம்னு முடிவு பண்ண முடியும். என்கிட்ட ஒரு இருபது தேறும்ன்னு நினைக்குறேன்.” என்ற தங்கையின் பதிலை கேட்டதும் நிமிர்ந்து விழிப்புடன் அமர்ந்தான் யாழன்.
அதுவரை சுற்றத்தை கவனியாது செய்தித்தாளில் முகத்தை நுழைத்திருந்த அவளின் தந்தை முத்துவும் நிமிர்ந்து தன் மக்கள் மீது கவனம் பதித்தார்.
“எதுக்கு லோன் எடுக்க போற?” அழுத்தமான கேள்வியாய் வந்தது யாழனிடமிருந்து. அவன் குரலில் மறைந்திருந்த மிரட்டல் தொனியை கவனியாதவள், மனதில் கட்டி வைத்திருக்கும் ஆசைக் கோட்டையை செயல்பாட்டிற்கு கொண்டு வரும் உத்வேகத்தில் தன் திட்டத்தை ஆவலாய் பகிர்ந்தாள்.
“வேற எதுக்கு? வீடு வாங்கணும்ல! நம்மகிட்ட எவ்ளோ இருக்குனு தெரிஞ்சாதான் எவ்ளோ லோன் போடணும், தோராயமா எவ்ளோ பட்ஜெட்ல வீடு பார்க்கலாம்னு டிசைட் பண்ண முடியும். நான் வீட்டு லோன் எடுத்தா வட்டி கம்மி சோ நான் ஹோம் லோன் எடுக்குறேன் நீ பர்சனல் லோன் எடு.”
“என்ன பேசிட்டு இருக்க நீ? புரிஞ்சுதான் பேசுறியா?” யாழனின குரல் உயர்ந்தது.
“இவ்ளோ தெளிவா பேசுறேன், புரியாம பேசுறேன்னு சொல்ற?” தான் சொல்வதை அவன் ஏற்கவில்லை என்ற கடுப்பு அவளிடம் மெல்ல எட்டிப்பார்த்தது.
“நாளைக்கு கல்யாணம் ஆகி இன்னொரு வீட்டுக்கு போகப்போற பொண்ணு… லோன் போடப்போறேன்னு சாதாரணமா சொல்ற? எல்லா விஷயத்தையும் புரிஞ்சிக்கிற பக்குவம் வந்துடுச்சுனு நாங்க நினைச்சிட்டு இருக்கோம். நீ என்ன இப்படி பேசிட்டு இருக்க?” அதுவரை தங்கையை கடிந்தவன் தந்தை புறம் பார்வையையும் கவனத்தையும் திருப்பி,
“இதுக்குத்தான் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிங்க. கல்யாணம் பண்ணிடலாம்னு போன வருஷமே சொன்னேன். நீங்கதான் கேக்கல… இப்போ பாருங்க என்ன பேசுறோம்னு புரியாம பேசுறா… இன்னும் பொறுப்பு வரல. நிதர்சனம் புரியல.”
உதிரம் பகிர்ந்து ஒரே கருவறையில் வளர்ந்த தன் தமையன் இப்படியொரு பிற்போக்குத்தனமான எண்ணங்களுடன் இருப்பான் என்று எண்ணியிருக்கவில்லை அக்காரிகை. தன்னை போலவே இருப்பான். தன் போலவே சிந்திப்பான். எண்ணங்கள் யாவும் ஒன்றாய் ஒற்றுமையாய் இருக்கும் என்று வேற்றுமை பாராது அவனைப் பற்றி மனதில் ஏற்றி வைத்திருந்த பிம்பம் சில்லுசில்லாக சிதற, தன் முன் நடந்தேறும் விவாதங்களை அதிர்வுடன் நோக்கினாள் அவ்வீட்டு கடைக்குட்டி.
‘கல்யாணத்துக்கும் பொறுப்புக்கும் என்னடா சம்பந்தம்?’ என்று மனதிற்குள் பொறுமலும் சேர்ந்துகொண்டது யாழினியிடத்தில்.
“இப்படி பட்டுனு பேசாத யாழன்.” மகளின் முகச்சுருக்கத்தை கவனித்த முத்து மகனை தடுக்க, அவன் ஓய்வதாய் இல்லை.
“அவளை எதுவும் சொல்லக்கூடாதுன்னு என் வாயை அடக்கி அடக்கிதான் இவ உலக நடப்பு தெரியாம இருக்கா. நாளைக்கு இவதானப்பா கஷ்டப்படுவா அது புரியுதா உங்களுக்கு? நம்மள மாதிரியே எல்லாரும் இருந்திட மாட்டாங்க.”
“என்ன உலக நடப்பு தெரியாம இருக்கேன் இப்போ? நானும் வேலைக்கு போறேன் வெளியில் எல்லார் கூடவும் பழகுறேன். எனக்கும் எல்லாம் தெரியும். சும்மா பொறுப்பு பருப்புனு பேசிட்டு இருக்க… பொறுப்பா இருக்கிறதாலதான் நமக்குனு ஒரு இடம் வாங்க நினைக்கிறேன்.” என்று இடைபுகுந்து கத்தினாள் யாழினி.
“யாழி கோவப்படாத நான் பேசுறேன்.” என்று குறுக்கிட்ட முத்து யாழனிடன், “இப்போ எதுக்கு இதெல்லாம் பேசுற? அவ கேட்ட கேள்விக்கு பதில் சொல்றதை விட்டுட்டு எதுக்கு தேவை இல்லாத பேச்சு?” முத்து மகனை முடக்கப்பார்க்க, அதை சவாலாய் எதிர்கொண்டவன் ஏளனமாய்,
“ஓ… சரி! அப்போ நீங்க சொல்லுங்க. இப்போ மேடம் ஹோம் லோன் போட்டா குறைஞ்சது இன்னும் பத்து வருஷத்துக்கு மேல ஆகும் அதை அடைக்க. அதுவரைக்கும் அவளால தொடர்ந்து லோன் கட்ட முடியுமா? இல்லை அவளோட புகுந்த வீட்ல லோன் கட்ட ஒத்துப்பாங்கன்னு உங்களால உத்திரவாதம் கொடுக்க முடியுமா? அப்படியே ஒத்துக்கிட்டாலும் அந்த வீட்ல நாம இருக்க முடியுமா?
நல்லவங்களா இருந்தா நம்ம விஷயத்துகுள்ள வரமாட்டாங்க இல்லை வேணும்னே வம்பு பேசுறவங்களா இருந்தா கலகம் பண்ணி நிம்மதி இல்லாம ஆக்கிடுவாங்க. வீட்டை பாகம் பிரிச்சு பங்கு கேப்பாங்க. வாங்க போற ஒத்தை வீட்டை எப்படி பங்கு போடுவீங்க? வித்து பணத்தை தான் பிரிச்சிக்கிற மாதிரி இருக்கும். இதெல்லாம் தேவையா? கல்யாணம் ஆகட்டும் அவளும் அவ புருஷனும் சேர்ந்து வீடு வாங்குறதா இருந்தா நானே என்கிட்ட இருக்குற மொத்த பணத்தையும் தரேன். அதை விட்டுட்டு இப்போ யோசிக்காம லோன் போட்டு ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால்னு யோசிக்காம வைக்க முடியாது.” கேள்வியில் துவங்கி தன் முடிவில் வந்து நிறுத்தினான் யாழன்.
மகனுக்கும் மகளுக்கும் இடையில் யாருக்கு பேசுவது என்று புரியாமல் முத்து விழிக்க, மைனா மகனை முறைத்தவண்ணம்,
“நமக்குனு ஒரு வீடு வாங்குற ஆசையில யாழி கேட்டா அதுக்கு ஏன் நீ இவ்ளோ பேசுற? கல்யாணம் ஆனா அவ நம்ம வீட்டு பொண்ணு இல்லைனு ஆயிடுமா? அவளுக்கு கடைசி வரைக்கும் இங்க எல்லா உரிமையும் இருக்கு.”
“உரிமை இல்லைனு யார் சொன்னா இப்போ? நமக்குன்னு வாங்கணும்னு நினைக்கிறது எல்லாம் சரிதான் ஆனா அது நடைமுறைக்கு சாத்தியமாகணுமே! நம்ம சேர்ந்து இன்னைக்கு வீடு வாங்கிட்டு நாளைக்கு எனக்கா உனக்கான்னு பங்கு போடுற நிலை வந்தா நல்லா இருக்காதுமா… என்னோட பார்ட்னர் அண்ட் அவளோட பார்ட்னர் ரெண்டு பேருமே இதையெல்லாம் புரிஞ்சுக்கணும்னு இப்போவே நாம எதிர்பார்க்க முடியுமா என்ன? அதான் வேண்டாம்னு சொல்றேன்.”
“என்ன பங்கு அதுஇதுனு பேசிட்டு போயிட்டே இருக்க? நான் வாங்கணும்னு நினைச்சது நமக்குன்னு ஒரு வீடு. அதுல என் வீடு உன் வீடுன்னு எல்லாம் கிடையாது. அது நம்ம வீடு. பத்திரம் பதிவு பண்ணும் போது ஒன்னு அம்மா பேருல பண்ணலாம் இல்லைனா அப்பா பேருல பண்ணலாம்.” என்று வெகுண்டெழுந்தாள் யாழினி.
அதற்கும் அசையாத யாழன் தான் சொல்வது சரி என்ற எண்ணத்தில் தீர்க்கமாய் வாயாடினான், “நான் சொன்னது சரிங்குறத ப்ரூப் பண்ற யாழி. அப்பா அம்மா பேருல வீடு வாங்குனா எதிர்காலத்துல உன்னால உன் குடும்பத்தை எதிர்த்துக்கிட்டு லோன் கட்ட முடியுமான்னு உறுதியா தெரியாத போது எப்படி நீ சொல்றதை நான் ஏத்துக்க முடியும்?”
“அவளால கட்ட முடியலைன்னா நீ கட்ட மாட்டியா?” பட்டென்று கேட்டார் மைனா.
“நான் மாட்டேன்னு சொல்லவே இல்லையே.”
“அப்புறம் எதுக்கு இவ்ளோ வாக்குவாதம்? அவ கேக்கும் போதே ஒத்துக்கிட்டா குறைஞ்சா போயிருவ?” என்று மைனாதான் மகனை குட்டினார்.
“அவள் சொன்னாங்குறதுக்காக கண்ணை மூடிட்டு எல்லாத்தையும் யோசிக்காம முடிவெடுக்க முடியாது. ஒரு விஷயத்துல இறங்குறோம்னா அதுல இருக்குற சாதக பாதகத்தை அலசி ஆராய்ஞ்சு பாத்துதான் இறங்குனும். நாளைக்கு அவளுக்கும் பிரச்சனை வந்துடக்கூடாது நானும் சிக்கல்ல மாட்டிட்டு முழிக்குற நிலைமை வேண்டாம்… எதை செஞ்சாலும் பிளான் பண்ணி பண்ணனும்.” என்று வடிவேலு பாணியில் முடிக்க, யாழனை வெறிகொண்டு பார்த்துவைத்தாள் யாழினி.
பேச்சில் இடைபுகாது பிள்ளைகளின் முகத்தை கவனித்துக்கொண்டிருந்த முத்து அமைதியை கலைத்த வண்ணம் மகனிடம்,
“இப்பதான் எல்லாம் கிளியர் ஆயிடுச்சே… யாழிமா கேட்டதுக்கு பதில் சொல்லு. பேசி ரெண்டு பேரும் ஒரு முடிவுக்கு வாங்க. அப்புறம் என்ன பண்ணலாம் எது சரி வரும்னு நான் பாக்குறேன்.” என்றவர் தொனியில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் இன்னும் தன் வசம் தான் என்பதை அழுந்த பதிய வைத்தார். ஆனால் தந்தையும் தனக்கு சாதகமாக பேசுகிறார் என்று எண்ணிய யாழினி உடன்பிறந்தவனை சரிகட்டினால் அனைத்தும் சரியாகிவிடும் என்று நம்பிக்கையில்,
“இனிமேலாவது ஒழுங்கா பேச கத்துக்கடா… வீட்ல ரெண்டு பேருமே எனக்குத்தான் சப்போர்ட்.”
“நான் எல்லாம் சரியாதான் பேசுறேன். நீதான் இன்னும் நிறைய புரிஞ்சிக்க வேண்டியதிருக்கு. போக போக எல்லாம் விளங்கும்.”
“எனக்கு அட்வைஸ் பண்றதை விட்டுட்டு உன்கிட்ட எவ்ளோ பணம் இருக்குனு சொன்னா நான் என் வேலையை பாத்துத்துட்டு போயிட்டே இருப்பேன்.”
கனவை மெய்யாக்க தன் வீட்டிலே இவ்வளவு மெனக்கெட வேண்டியதிருக்கும் என்று எண்ணியிருக்கவில்லை யாழினி. மனது சற்று பின்னடைந்து சோர்வுற, இந்த பேச்சை இத்தோடு நிறுத்தினால் போதுமென்று இருந்தது அவளுக்கு. அவள் எண்ணம் படித்தது போல் பதில் உரைத்தான் யாழன்.
“என்கிட்ட ஒரு பத்து இருக்கும். பர்சனல் லோன் எடுத்துக்கலாம். நான் என் பிரெண்ட்ஸ் கிட்ட சொல்லி வைக்குறேன். நாலைஞ்சு இடம் பாத்தாதான் நமக்கு எந்த மாதிரி தேவைப்படும்னு கெஸ் பண்ண முடியும். தண்ணி பிரச்சனை போக்குவரத்து, அத்தியாவசிய வசதி எல்லாம் எப்படி இருக்குனு விசாரிச்சு பைனல் பண்ணனும்.”
“என்னது பத்தா? அஞ்சு வருசமா வேலைக்கு போற நானே இருபதுகிட்ட சேர்த்து வச்சி இருக்கேன். நீ எட்டு வருஷமா போற இவ்ளோ தான் இருக்குனு சொல்ற? என்னைவிட சம்பளம் நிறைய வாங்குறதான?” பேச்சை விரைந்து முடித்துவிட வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் யாழனின் பதில் தங்கையை சந்தேகிக்க வைத்தது.
“உனக்கென்னமா நீ வாங்குற சம்பளத்தை அப்படியே கொண்டுவந்து கொடுத்தா நீயே வச்சிக்கோமான்னு திருப்பி குடுத்துடுவாங்க… அதுமட்டுமா உன் வண்டிக்கு பெட்ரோல் போட, நீ ஷாப்பிங் பண்ண, சுவிக்கி ஆர்டர் போட்டா கேஷ் ஆன் டெலிவரி மட்டும்தான்னு உன் எல்லா செலவுக்கும் நம்ம பெத்த அம்மா தனியா காசு குடுக்குது… அதெல்லாம் யாரோடதுன்னு உன் அன்னாவை கேட்டுப்பாரு அப்புறம் புரியும் என் சேவிங்ஸ் கம்மியான ரகசியம்.” என்று அங்கலாய்த்தான் யாழன்.
அவன் அங்கலாய்ப்பிலும் நியாயம் இருக்கத்தான் செய்தது. தங்களுக்கு பின் பெண்பிள்ளை தன் தேவைகளுக்கென யாரையும் சார்ந்திராது இருந்திட வேண்டும் என்ற எண்ணத்தில் அவள் ஊதியத்தை என்றும் வாங்கியதில்லை அவள் பெற்றோர். அவள் வங்கிக்கணக்கில் இருக்கட்டும் என்றுவிட்டனர். அதோடு அப்பணம் அவளுக்கு பாதுகாப்பையும் அளிக்கும் என்ற நம்பிக்கை வேறு அவர்களிடம். இப்போது வீடு வாங்கும் அவளது கனவு அதை கேள்விக்குறியாக்கும் நிலையில் இருக்க, முத்து என்ன முடிவெடுப்பார் என்ற கவலை யாழனிடம் மட்டுமே இருந்தது.