தேவதச்சனான விசுவகர்மாவே பூலோகத்திற்கு வந்து, அழகான இந்த மாளிகையை உருவாக்கி இருப்பானோ, என்று பார்ப்பவர்கள் என்னும் வகையில் அமைந்திருந்தது, அந்த பிரம்மாண்ட பங்களா.
அதற்கு அழகு சேர்ப்பது போல, உள்ளே சித்திரங்கள், சிங்காரப் பதுமைகள் என்று ஆங்காங்கே மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் இருக்க, உள்ளே உட்புறமாக இருந்த நீச்சல் குளத்தில், ஒருவன் அதிவேகமாக நீச்சல் அடித்துக்கொண்டு இருந்தான்.
நீச்சல் குளத்தின் உள்ளே வண்ணமயமாக ஒளிர்ந்து கொண்டிருந்த விளக்குகளின் ஒளி பட்டு, நீரின் உள்ளே நீச்சல் அடித்துக் கொண்டிருந்த ஆடவனின் கட்டுமஸ்தான உடல் அழகை, ஒளிரவைத்தன.
பின், டால்பின் போல் துள்ளி வெளியே வந்தான். அவன் பங்கஜ மலர்ப்பாதங்கள், தரையில் அழுத்தமாக பதிந்தது. வஜுராயுதத்தை ஒத்த உருவத்தை உடையவனின் கைகள், அங்கே நீச்சல் குளத்தின் தடாகத்தில் இருந்த பூத்துவாலையை எடுத்தது.
அதை வைத்து, பேரொளி பொங்கும் தன் தேகத்தை துடைக்க ஆரம்பித்தான். ஆறடி இருக்கும் ஆடவனின், வட்ட கருவிழிகள், அருகே இருந்த செய்தித்தாளைப் பார்த்தது.
அதில், “தேவி நிறுவனத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும், இளம் தொழில் அதிபர் சக்ரா.” என்ற தலைப்பு செய்தியுடன் கீழே சக்ராவின் புகைப்படத்துடன் பிரசுரமாக்கப்பட்டு இருந்தது.
அதைப் பார்த்து, தன் வசிகரிக்கும் உதட்டை ஒரு பக்கமாக வளைத்து சிரித்தவன், “இது என் முதல் அத்தியாயம் மட்டுமே!.” என்று சொல்லிவிட்டு, நிச்சல் குளத்தை ஒட்டியவாறு அமைந்திருந்த தன் அறைக்குள் சென்றான்.
அந்த பிரம்மாண்ட அறை எங்கிலும், பணத்தின் செழுமை சற்று தூக்கலாகவே தெரிந்தது. அந்த அறையின் மையத்தில் உள்ள சுவற்றில் பெரியதாக மாட்டப்பட்டிருந்த புகைப்படத்திற்குள் அழகாக சிரித்துக் கொண்டிருந்தான். சின்ன வயது சக்ரா.
தன் பூத்துவாலையை, தன் அறையுடன் ஒட்டியவாறு இருந்த பால்கனியில் இருக்கும் கொடியில் போட்டவன், பின் அலுவலகம் செல்ல தயாரானான்.
வீட்டில் எத்தனை வேலையாட்கள் இருந்தாலும், அவன் வேலையை அவனே செய்வது தான் அவனுக்குப் பிடிக்கும்.
அவனது ஆளுமையே அவனுக்கு தனி கம்பிரத்தைக் கொடுத்தது. தொழிலில், அவன் காட்டும் முகம் ஒன்று என்றால், வீட்டில் அவன் காட்டும் முகமே வேறு.
ஆனால் கொஞ்சமும் பணசெருக்கு இல்லாமல், தன் தொழிலாளர்களின் பால் சகமனிதனாகவே நடந்து கொள்வான். அதே நேரம் அவனுக்கு எதிராக சூழ்ச்சி செய்தால், அவர்களை அழிக்கவும் தயங்கமாட்டான்.
வீட்டிலோ, தன் பெற்றோருக்கு அன்பு மகனாகவும், தன் தம்பி சிவாவிற்கு நல்ல நண்பனாகவும் இருந்தான்.
இருபதுகளில் இருப்பவன், தொழிலில், தன் எதிரிகளின் பலத்தையும், பலவீனத்தையும் நுணுகி அறியும் மதியூகியாக இருப்பதால் தான் அவனுக்கு இந்த வெற்றி சீக்கிரமாகவே கிடைத்தது எனலாம்.
கம்பிரமாக கோர்ட் சூட்டில் கிளம்பி கீழே வந்தான் சக்ரா. அப்போது, அவனுடன் வந்து இணைந்து கொண்ட சிவா, “அண்ணா, நாளை நம் வீட்டில் வைத்தே தேவி நிறுவனத்தின் எண்பதாவது ஆண்டுவிழாவைக் கொண்டாட ஏற்பாடு செய்திருக்கின்றார் நம் தந்தை.” என்றான் செய்தியாக.
படியில் இறங்கிக் கொண்டிருந்த சக்ரா, அவன் மொழி கேட்டு, வெறுமனே தன் தலையை மட்டும் ஆட்டிக்கொண்டான். அவன் அதிகம் பேச மாட்டான். ஆனால் அவன் தம்பியோ, அப்படியே அவனுக்கு நேரெதிர்.
“ஆனால் அதனுடன் சேர்ந்து உன் நிச்சயதார்த்தமும் நடக்கப்போகின்றது.” என்று சிவா சொன்னதும் தான் தாமதம், நடந்து கொண்டிருந்தவன், அதே இடத்தில் தேங்கி நின்றது, சில கணங்கள் மட்டும் தான்.
பின் அதிர்ச்சியில் இருந்து தன்னை மீட்டு எடுத்து, “அடுத்த வாரம் தானே சொன்னார்கள்?.” என்று நான்கு வார்த்தைகளில் வினாவினான்.
“ஆமாம் அண்ணா, ஆனால் இன்று காலை ரவி மாமா, அம்மாவிடம் என்ன பேசினார் என்பது தெரியவில்லை. உடனே நம் அம்மா இந்த முடிவை எடுத்துவிட்டார்.” என்றான் தகவலாக.
அருணகிரி, இந்த நிச்சயதார்த்தத்திற்கு ஒத்துக்கொள்ளாத இந்த சூழ்நிலையில், உமாவின் திட்டத்தின் மூலம், தன் தங்கை வேதாவிற்கு அழைத்து பேசி, இந்த முடிவை அவசரமாக எடுத்து இருந்தார் ரவி.
“சரி.” என்று தன் தலையை ஆட்டிக்கொண்ட சக்ரா, வேறு எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை. ஆனால் சிவாவிற்குத் தான் அந்த பொறுமை பறந்து ஓடியது.
அதன் வெளிப்பாடாக, “காதல் இல்லாத திருமணம் சாத்தியம் தானா அண்ணா….. எதற்கும் உன் முடிவை மறுபரிசிலனை செய்து பார்.” என்று சொன்ன சிவாவை, திருநோக்கம் செய்த சக்ரா, “வாழ்க்கையில் ஒருவரின் காதல் மட்டுமே இருவருக்கும் போதுமானதாக இருக்கும். காதலிப்பது ஒரு சுகம் என்றால் காதலிக்கப்படுவதில் இன்னொரு சுகம் உள்ளது. மாலினி என்னை மிகவும் நேசிக்கின்றாள்.” என்றான் முகத்தில் புன்னகை அரும்ப.
சக்ராவின் பேச்சை சிவாவின் மனது ஏற்றுக்கொள்ளவில்லை. அவன் மனதில் ஓர் வேதனை!. அதை அப்படியே சக்ராவிடம் சமர்ப்பித்தான்.
“நீங்கள் சொல்வது சில நேரங்களில் சரி வரும் அண்ணா. ஆனால் வாழ்க்கை முழுவதும் அது சாத்தியப்படுமா?.” என்ற கேள்விக்குறியுடன் நிறுத்தினான்.
அவன் தோள்களைச் சுற்றி தன் கையைப் போட்டவன், நடந்தபடியே, “எனக்கு என் வாழ்க்கைத் துணையைப் பற்றி பெரியதாக எந்த வித ஆசையும் இல்லை சிவா. ஆனால் எனக்கு மனைவியாக வருபவளை, கடவுள் எனக்காக தேர்ந்தேடுக்கப்பட்ட பெண்ணாக நான் பார்க்கின்றேன். திருமணத்திற்குப் பிறகு தான், அங்கே ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் அழகான காதல் உருவாகின்றது. நான் என் மனைவியை மிகவும் நேசிப்பேன்.” என்று திருவாய் மலர்ந்தான்.
“அப்போது கூட, ‘நான் மாலினியை நேசிப்பேன்.’ என்று உன் வாயில் இருந்து வரவில்லை அண்ணா.” என்று வருத்தத்தோடு கூறினான்.
சக்ரா, கலகலவென்று சிரித்து, “இப்போது, மாலினியின் அன்பு மட்டுமே எங்கள் இருவருக்கும் போதுமானதாக இருக்கும் சிவா. ஆனால் கண்டிப்பாக திருமணத்திற்குப் பிறகு, அவளையும் விட, நான் அதிகம் நேசிப்பேன். ஆனால் மாலினி என் மனைவியானால் மட்டுமே இது சாத்தியம்.” என மொழிந்தான்.
“ஒரு வேளை அவள் உன் மனைவி ஆகவில்லை என்றால்!.” என்று கேட்ட சிவாவை தன் விழி உயர்த்திப் பார்த்தவன், “மாலினி கண்டிப்பாக என் மனைவியாவாள் என்று நான் எப்போது சொன்னேன்!. அவள் என் மனைவியானால் பார்க்கலாம்.” என்று புதிராக பேசிவிட்டு, முன்னே நடந்தான்.
‘இவன் என்ன பேசுகின்றான்! அவளை நீ காதலிக்கின்றாயா இல்லையா என கேட்டதுக்கு, அளந்து அளந்து பேசுபவன் இவ்வளவு பேச்சை பேசிவிட்டு செல்கின்றான்.’ என மனதினுள் புலம்பியபடி அதே இடத்திலையே தேங்கி நின்றான் சிவா.
சக்ரா நினைப்பது போல ஒருவர் காதல் மட்டுமே இருவருக்கும் போதுமா?. மாலினிக்கு இவன் மேல் தோன்றிய காதல், இவனுக்கு மட்டும் ஏன் அவள் மீது தோன்றவில்லை?.
கீழே வந்து, உணவு மேஜையில் சென்று அமர்ந்தான் சக்ரா. அதுவரை தன் கணவனுக்கு பரிமாறிக் கொண்டு இருந்த வேதா, சக்ரா அமர்ந்ததைப் பார்த்ததும், அவனுக்கும் பரிமாற ஆரம்பித்தார்.
அதுவரை உண்டு கொண்டிருந்த சுந்தர், தன் மகனைப் பார்த்து, “சிவா உன்னிடம் அனைத்தையும் சொல்லி இருப்பான் என் நினைக்கின்றேன்.” என்றதும், மெல்ல தன் தலையை ஆட்டிக் கொண்டவன், “எனக்கு எதுவென்றாலும் சரி தான் அப்பா.” என்று அவன் திருவாய் மலர்ந்ததும், பெற்றோர்கள் மனதில் பூரிப்பு.
அவன் தாய் வேதா, இதை உடனே தன் நாத்தியிடம் சொல்ல, தன் அலைபேசியை எடுத்தார்.
தன் பெற்றோர் முகத்தில் வந்த மகிழ்ச்சியைக் கண்டு ஆடவனின் முகமும் ஒளிர்ந்தது. இதை எல்லாம் பார்த்தபடியே, சக்ராவின் அருகே இருந்த இருக்கையில் வந்து அமர்ந்தவன், “கல்யாணத்திற்குப் பிறகு தான் காதல் தொடங்கும், என்ற உன் சூட்சமம் எவ்வாறு இருக்கும், என்று பார்க்க நான் ஆவலாக இருக்கின்றேன்.” என சக்ராவின் காதுகளில் முணுமுணுத்தான்.
அவன் மொழி கேட்டு பல்லைக் கடித்தவன், “இன்று மீட்டிங் உள்ளது. வேகமாக கிளம்பி வா….” என்று சொல்லிவிட்டு எழுந்தவன், தன் மகிழுந்தை எடுத்துக்கொண்டு தேவி நிறுவனம் நோக்கி பயணமானான்.
அவன் மகிழுந்து சரியாக நிறுவனத்தின் உள்ளே நுழையும்போது தான் சுதர்சனா தன் மகிழுந்தில் இருந்து இறங்கிக்கொண்டிருந்தாள்.
தன் மகிழுந்தில் இருந்து இறங்கியவன், தன் வேக எட்டுக்களை வைத்து அவளைத் தாண்டி செல்லும் போது, அவள் மேல் இருந்து வந்த பூமணம் மேவிவரும் வாசமிகு தென்றலாய் தேனிசை தாங்கி வந்து, அவன் நாசியில் நுழைந்தது.
அது அவனை சில கணங்கள், அவனை இன்பபுரிக்கு இழுத்துச் சென்றது. தன் பக்கவாட்டுப் பக்கமாக நடந்து வந்தவளை, அவனையே அறியாமல் ரசனையுடன் பார்க்க ஆரம்பித்தன அவன் கண்கள்.
ஏதோ ஒரு ஊந்துதலில், அவன் விழிகள் தன் பால் இருப்பதை உணர்ந்த பெண்ணவள், அவனை பார்க்கும் போது, அவனது முகம், அவளை ஒரு வித முகசுழிப்புடன் பார்த்துவிட்டு, பின் வேகமாக அவளைக் கடந்து செல்வது தெரிந்தது.
அதைப் பார்த்த சுதர்சனாவின் கோபம் பல்கிப்பெருகியது, இப்போது இருக்கும் நிலையில், அவள் வாழ்க்கையில் வெறுக்கும் ஒரே ஆள், யாரென்றால், சாட்சாத் அது சக்ரா தான்.
அனைவரிடமும் அன்பு செலுத்தும் சக்ரா. இவளைப் பார்த்ததும், ஏளனமாக முகத்தை வைத்துக்கொள்வான் இல்லையேல் நெருஞ்ச முள்ளாய் குத்தும் வார்த்தைகளை அவள் மேல் அள்ளிவீசுவான். அவன் ஏன் அவ்வாறு செய்கின்றான் என்பது அவனுக்கே வெளிச்சம்.
அவள் இந்த நிறுவனத்திற்குள் எப்போது காலடி எடுத்து வைத்தாலோ, அப்போது இருந்து இது தான் நடந்து கொண்டிருக்கின்றது.
அவன் பார்வையில் சில கணங்கள் அவள் முகம் தளர்ந்தாலும், ‘இந்த நிறுவனத்தில் எனக்கும் முழு உரிமையும் உள்ளது. நீ பாட்டிற்கு பார்த்துக்கொள்.’ என்று நினைத்தவளாக அடுத்த நிமிடமே புத்துணர்வு பெற்றவள் போல உள்ளே வந்தாள்.
அவளுக்காகவே காத்துக் கொண்டிருந்தவர் போல, சுதர்சனாவை வரவேற்றார் அருணகிரி. அப்படியே தன் மனைவியை உரித்து வைத்தது போல் இருக்கும், தன் மூத்த பேத்தி மேல் அவருக்கு தனிப்பாசம் உண்டு.
சுதர்சனா இங்கு வந்திருப்பது கூட தன் தாத்தாவிற்காக தான். வீர சௌந்தர்யம் குடி கொண்டு தேஜசுடன் கருணை வடிவாக விளங்கிய அருணகிரி முகத்தில் அவளைப் பார்த்ததும், புன்னகை அரும்பியது.
ஆனால் சுதர்சனாவோ அவரைப் பார்த்து, தன் முகத்தை திருப்பிக் கொண்டு, தன் இடது பக்கமாக இருந்த சுவற்றை பார்த்தபடி, “நான் உங்கள் மேல் கோபமாக இருகின்றேன் தாத்தா.” என மொழிந்தாள்.
அவள் மொழி கேட்டு சிரித்தவர், “என் மேல் என்ன கோபம்டா சனா.” என்றார் அன்பொழுக.
“நீங்கள் ஏன் மாலினி திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை.” என்றாள் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு.
“அந்த கழுதை உன்னிடம் சொன்னாளா?. நீ இருக்கும் போது அவளுக்கு என்ன அவசரம்?.” என்று கேட்டவர் முகத்தில் இப்போது கோபரேகைகள் ஓடிக்கொண்டு இருந்தன.
“மச்… என் வாழ்க்கையில் தான் காதல் கல்யாணம் என்ற அத்தியாயங்கள் எதுவும் கிடையாதென்று உங்களுக்கு முன்பே சொல்லிவிட்டேனே தாத்தா.” என்றாள் பல்லைக்கடித்தபடி.
அதற்கு பெரியவர் எதுவோ உரைக்க வருவதற்குள், அவரின் காரியதரசி ஒருவன், அவரிடம் கையெழுத்து வாங்க சில கோப்புகளை நீட்டினான்.
இது தான் சாக்கென்று அங்கிருந்து நழுவினாள் சுதர்சனா. மீட்டிங் நடக்கும் அறைக்குள் வந்தவள், அங்கே ஒரு ஆடவன் மட்டும் திரும்பி நின்று எதுவோ செய்வதைப் பார்த்து, வெளியே செல்லப்போனாள்.
அப்போது அவள் உடையின் வலது பக்க, கைப்பகுதி அறைக்கதவில் மாட்டி இருந்த கைபிடியில் மாட்டிவிட்டது. அது தெரியாமல் அவள் இழுத்த வேகத்தில், கையில் இருந்து முதுகுப்பக்கம் வரை கிழிந்து, அவள் முதுகை அப்பட்டமாக காட்டியது.
அதில் விதிர்விதிர்த்துப் போய்விட்டாள் பெண்ணவள். அப்போது அங்கிருக்கும் ஆடவனின் காலடி சத்தம், அவளை நோக்கி வருவது, அவள் காதுகளில் விழுந்து, அவளின் இதயம் படபடக்க ஆரம்பித்தது.