அறையில் இருந்த ஆடவன் தன்னை நோக்கி வருவதை உணர்த்தவளின் இதயம் படபடவென்று அடித்துக் கொண்டு, வருகின்றது இன்னார்தாம் என்பதை, அவன் மேனியில் இருந்து வந்த பிரத்யோக வாசனை அவளுக்கு உணர்த்தியது.
இருந்தாலும், திரும்பிப் பார்த்து, தன் சந்தேகம் தீரவேண்டும் என்ற ஊந்துதல் அவளிடம் இருந்தாலும், தன் முதுகு தெரியாமல், கதவின் மேல் ஓட்டிக்கொண்டு நின்றவள், தன் ஊந்துதலை பலவந்தமாக அடக்கிக்கொண்டு, சிலையைப் போல் அசையாமல் நின்று கொண்டிருந்தாள் சுதர்சனா.
அவள் அருகே மெல்ல மெல்ல எட்டுக்களை வைத்து வந்து கொண்டிருந்தது, சக்ரா தான். அவன் சுதர்சனாவின் அருகில் வந்து நின்றான். அப்போதும் அவள் அவனை திரும்பி பார்க்கவில்லை.
சில கணங்கள் அப்படியே இருந்தவன், அவள் முகத்துக்கு நேராக, தன் மேற்சட்டையை கழட்டி நீட்டினான்.
ஆனால் அதை வாங்காதவள், இப்போது தான் திரும்பி அவன் முகத்தைப் பார்த்தாள்.
அவள் நினைத்தது போலவே சக்ரா தான் நின்றுகொண்டிருந்தான். அவனைப் பார்த்தும் ஒரு வித ஆசுவாசம் பெண்ணவள் நெஞ்சில் எழுந்தது என்னவோ சில கணங்கள் தான்.
பின் தன் முகத்தை கோபமாக வைத்துக் கொண்டவள், “உன் உதவி எனக்கு தேவை இல்லை.” என்று சொல்லிவிட்டு வேகமாக தன் கைப்பையில் இருந்து, இன்னொரு ஜீன்ஸ் ஓவர்கோர்ட்டை எடுத்து அணிந்துவிட்டு, அவனை ஒருமுறை முறைத்து விட்டு அங்கிருந்து வெளியேறினாள்.
அவள் சமயோஜித புத்திக்கூர்மையைப் பார்த்து, வீர சௌந்தரியம் குடிகொண்டு தேஜஸுடன் விளங்கிய சக்ராவின் நவ யௌவன முகத்தில் லேசாக புன்னகை அரும்பியது.
கோபத்துடன் வெளியே வந்தவளைப் பிடித்துக் கொண்டாள் மாலினி. அவளின் பாதி தங்கை. ரவிக்கும் உமாவுக்கும் பிறந்தவள்.
“அக்கா…” என்று பாசத்துடன் தன்னை கட்டி அணைத்த தன் தங்கையைப் பார்த்ததும், அவள் கோபம் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் பறந்து விட்டது.
அவளை தானும் அணைத்து விடுவித்தவள், “இன்று என் தங்கையின் மகிழ்ச்சிக்கு காரணம் என்னவோ!.” என்று கேட்ட வண்ணம், அதற்கேற்ப அபிநயம் பிடித்தாள்.
அவள் மொழி கேட்டு கன்னம் சிவந்தவள், “நாளை எனக்கும், அவருக்கும் நிச்சயதார்த்தம்.” என்றாள் வெட்கப்பட்டுக் கொண்டே.
இதைக் கேட்ட சுதர்சனாவின் முகத்தில் புன்னகை அரும்பியது. “தாத்தா என்னிடம் சொல்லவே இல்லை… வாழ்த்துக்கள் மாலி.” என்றாள் குதுகலமாக.
“இன்று காலை தான் அத்தையும், மாமாவும் முடிவு செய்து அம்மாவிடமும், அப்பாவிடமும் கூறினார்கள்.” என்று கண்களில் புன்னகையுடன் கூறினாள் மாலினி.
என்னதான் மாற்றான் தாயாக இருந்தாலும், இருவரும் உடன் பிறந்த அக்கா தங்கையைப் போலவே பழகி வந்தனர். ஒற்றையாக இருந்த சுதர்சனாவிற்கு, தனக்கும் ஒரு தங்கையாக வந்த மாலினியை சிறுவயதில் இருந்தே பிடிக்கும். இதில் அவள் தாய் அமலாவிற்கு விருப்பம் இல்லை என்றாலும், அவர் சுதர்சனாவை தடுக்க மாட்டார்.
தன் தாதாவிற்காக, இன்னும் தன் அன்னையை வஞ்சித்த, அந்த வீட்டிற்கு சென்று கொண்டு தான் இருக்கின்றாள். அதற்காக அவள் தந்தை மீது பாசம் என்று நினைத்துவிடக்கூடாது. ரவியை எங்கேனும் பார்க்க நேரிட்டால், அவரை கண்டுகொள்ளவே மாட்டாள். அவரும் தன் மகள் என்னும் அக்கறையை அவளிடம் காட்டமாட்டார்.
ஆனால் தன் உரிமையை எங்கும் விட்டுக்கொடுத்துவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கின்றாள் சுதர்சனா.
“நாம் இன்று ஷாப்பிங் செல்வோமா அக்கா!.” என்று ஆர்வம் பொங்க கேட்டாள்.
அப்போது தான் தன் வேலைகள் அனைத்தும், சுதர்சனாவின் கண்முன்னே அணிவகுத்து நிற்க ஆரம்பித்தது. அதை முன்னிட்டு, “இன்று என்னால் முடியாது மாலி.” என்றாள் மறுப்பாக.
“அதெல்லாம் போகலாம். எனக்காக இதை கூட செய்ய மாட்டீர்களா?.” என்று செல்லமாய் கோவித்துக் கொண்டாள்.
அவள் மொழி கேட்டு, “இல்லை மாலி, இன்று ஒரு கிளையன்ட்டை நான் சந்திக்க செல்லவேண்டும். நாம் நாளை செல்லலாமா?” என்று அன்புடன் வினாவினாள். மாலினி மீது மிகவும் பாசம் வைத்திருந்தாள் சுதர்சனா. தவறு செய்தது, தன் தந்தை தானே!. இந்த சிறுபெண் என்ன செய்தாள், என்பது அவளின் எண்ணம். ஆனால் இப்படி தான் நினைத்தது தவறோ, என பின்னாளின் சுதர்சனா எண்ணும் காலம் வெகுதொலைவில் இல்லை.
“அக்கா… ப்ளீஸ்…” என்று குழைந்தாள். மாலினியின் நலிந்த முகத்தைப் பார்த்து, “சரி. அப்படி என்றால், இப்போது மீட்டிங் முடிந்தவுடன் நாம் செல்லலாம்.” என்றாள் யோசனையாக.
அதற்கு உடனே ஒத்துக் கொண்ட மாலினி, “சரி அக்கா…” என்று சிரித்துக் கொண்டே ஓடியவளைப் பார்க்க, சிறுபெண் போலவே சுதர்சனாவின் கண்களுக்குத் தெரிந்தாள்.
அவள் சென்ற திசையைப் பார்த்துக் கொண்டிருந்தவள் முன் தோன்றினான் சக்ரா. அதுவரை சிரித்த முகமாய் நின்று இருந்த சுதர்சனாவின் முகமோ, அவனைப் பார்த்து இறுகியது.
அவளை மேல் இருந்து கீழாக பார்த்தவன், “இலவச உணவு கொடுத்தால், எங்கு வேண்டுமானாலும் அலங்கரித்துக் கொண்டு வந்துவிடுவாயா?.” என்று நக்கல் தொணிக்கும் குரலில் வினாவினான்.
அவன் பார்வைக்கு கொஞ்சமும் சளைக்காமல், அவன் பார்வைக்கு எதிர் பார்வை பார்த்தவள், “ஆமாம் அப்படித்தான். அதில் கூட எனக்கு உரிமை இருக்கின்றது. அதில் உனக்கு என்ன பிரச்சனை?.” என்றாள் அசால்ட்டாக.
அவள் முகம் பொழிவாக இருந்தாலும், அவள் வதனம் சோர்வுடன் இருப்பதைக் கண்டுகொண்டவன், சுதர்சனாவின் முகம் நோக்கி, “உனக்கு உரிமை இருக்கின்றதா?. நான் கூட உனக்கு உரிமை உள்ளவன் தான்.” என்றதும், நெருப்பை அள்ளி அவள் மீது வீசியது போன்ற எண்ணம் அவளுள் ஏற்பட்டது.
தொடர்ந்து பேசியவன், “இப்போது எதற்காக மகிழ்ச்சியாக இருப்பதைப் போல நடிக்கின்றாய்!. நீ சோர்வாக இருப்பதை ஊடுகதிர் இல்லாமலையே என் கண்களுக்குத் தெரிகின்றது சனா… அப்படி என்றால் இது காதல் தானே!” என மதிமயங்கும் காந்தக் குரலில் கேட்டான். அவனுக்கு இதுபோல் எல்லாம் பேச வருமா என்பது போல் இருந்தது அவனின் குரல்.
அவன் மொழி கேட்டு அதிர்ந்து விழித்தவள், “நீ என் தங்கையின் கணவன் ஆகப் போகின்றவன் சக்ரா. இப்போது எப்படி இருக்கின்றாயோ அப்படியே இரு. முன்பு போல் என்னிடம் காதல் வசனம் பேசாதே!.” என்று சொல்லிவிட்டு அங்கிருக்கும் மீட்டிங் அறைக்குள் நுழைந்தாள்.
ஆம் முன்பு பேசியவன் தான். ஆனால் இப்போதோ, அவளைப் பார்த்தாலே, தன் சொற்களால் அவள் மீது நெருப்பை அள்ளிக்கொட்டுகின்றான்.
அவள் சென்ற திசையை பார்த்துக் கொண்டிருந்தவன், பின் முதுகில், தன் கையை வைத்துத் திருப்பினான் சிவா.
தன் தம்பியின், பேயறைந்த தோற்றத்தைக் கண்டு, “மீட்டிங் நடக்கப்போகின்றது. இங்கே நின்று ஏன் என் முகத்தைப் பார்த்துக் கொண்டு இருகின்றாய்!. உள்ளே போ…” என்று குரலை உயர்த்தாமல், அதே நேரம் அழுத்தமாகவும் வெளிவந்தன அவனது வார்த்தைகள்.
சுதர்சனாவிடம் தன் அண்ணன் பேசிய பேச்சுக்களை ஒன்று விடாமல் கேட்ட சிவா, மனதில் தோன்றிய குழப்பத்துடன் அங்கிருந்து அகன்றான்.
உள்ளே வந்து தனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்த சுதர்சனாவின் மனதில் ஆயிரம் எண்ணங்கள் ஒரே நேரத்தில் பயணித்தன. ஆனால் சில நேரங்களில் மீட்டிங் ஆரம்பமானதும், அது அனைத்தையும் மூட்டை கட்டி வைத்து, நடப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தாள்.
அருணகிரி தான் முதலில் பேச ஆரம்பித்தார். அவரைத் தொடர்ந்து முக்கிய உறுப்பினர்கள் ஒவ்வொருவராக எழுந்து பேச ஆரம்பித்தனர். வழக்கம் போல் அனைத்தையும் கேட்டுக்கொண்டாள் சுதர்சனா.
சக்ராவின் முறை வர, அவனோ முன்பு கைப்பற்றிய ப்ராஜெக்ட் விஷயமாக பேச ஆரம்பித்தான். அவன் பேசும் போது சிவாவின் கண்களோ, அவன் முகத்தையும், சுதர்சனாவின் முகத்தையும் ஆராய்ந்து கொண்டு இருந்தது.
ஆனால் இருவர் முகமும் மிக சாதரணமாக இருப்பதைப் பார்த்து, திரும்பவும் குழம்ப ஆரம்பித்தான்.
மீட்டிங் முடிந்ததும், உறுப்பினர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இப்போது குடும்பத்து ஆள் மட்டுமே இருந்தனர். மீட்டிங் முடிந்தாலும், குடும்பத்தினர் அனைவரும் இருக்க வேண்டும் என்பது, அருணகிரியின் எழுதப்படாத சட்டம்.
அங்கே இப்போது சக்ராவின் குடும்பமும், அருணகிரி குடும்பத்தில், அவரது மகன், மாலினி மற்றும் சுதர்சனா மட்டுமே அமர்ந்திருந்தனர்.
தன் தொண்டையை கரகரத்தபடியே, தன் மகள் வேதாவை ஏறிட்ட அருணகிரி, “நாளை நிச்சயதார்த்தம் என்று இப்போது சொல்கின்றாய்!. என்னிடம் கேட்காமல் நீயே முடிவை எடுப்பாயா?.” என்றார் கோபமாக.
அதற்கு வேதா எதுவோ சொல்லவருவதற்குள் தன் இருக்கையில் இருந்து எழுந்த சுதர்சனா, “எனக்கு வேலை இருகின்றது தாத்தா… நான் வருகின்றேன்.” என்று சொல்லிவிட்டு, அவர் தலையை ஆட்டியதும், வேகமாக வெளியேறினாள்.
அவள் செல்வதைப் பார்த்து, “பெரியவர்கள் பேசும் போது கொஞ்சமும் மரியாதை இல்லை.” என்று தான் பேசும்போது அவள் நடுவில் பேசியதை வைத்து, தன் வாய்க்குளே முணுமுணுத்துக்கொண்டார் வேதா. அது அச்சுப்பிசங்காமல் அருணகிரியின் காதை அடைந்தது.
“மற்றவர்களை பழிப்பதை விட்டொழிந்து, முதலில் உன்னிடம் இருந்து அதை துவங்கு வேதா…” என்றார் கடினமான குரலில்.
இதை தன் தந்தை இனி விடமாட்டார் என்பதை அறிந்த வேதா, அவரின் பேச்சை மாற்றும் விதமாக, “பையனுக்கும் பொண்ணுக்கும் பிடித்திருக்கின்றது அப்பா. இதில் உங்கள் சம்மதம் தேவை இல்லை என்று நினைக்கின்றேன்.” என்றார் ஆளுமையான குரலில். அதற்கு உடனே தன் மகன் ரவியை முறைத்துப் பார்த்தவர், “இதற்கு நீ ஏதேனும் கூற வருகின்றாயா?.” என்று கேட்டார்.
“நான் முன்பே சொன்னது தான் அப்பா…” என்று சொல்லிவிட்டு அமைதியானார் ரவி.
தன் இருபிள்ளைகளை நம்பி இனி பிரயோஜனம் இல்லை என்பதை உணர்ந்த அருணகிரி, தன் மகளின் கணவன் சுந்தரிடம், “நீங்கள் சொல்லுங்கள் மாப்பிள்ளை. மூத்த பெண் இருக்க இளைய பெண்ணிற்கு எவ்வாறு திருமணம் பேசுவது?.” என்றார் ஆதங்கமாக.
“அதை நான் முன்பே யோசித்தேன் மாமா. சுதர்சனா மிகவும் நல்ல பெண்.” என்றதும் அவர் மனைவின் முகத்தில் அவ்வளவு சினம். கடுகைப்போட்டால் வெடித்துவிடும் போல, அவ்வாறு இருந்தது அவரின் முகம்.
தொடர்ந்து பேசிய சுந்தர், “சுதர்சனா போல் ஒரு பெண் எனக்கு மருமகளாக வரவேண்டும் என்பது என் எண்ணம். அதனால் என் மகன் சிவாவுக்கு உங்கள் பேத்தி சுதர்சனாவை உங்களிடம் பெண் கேட்கின்றேன். நீங்கள் என்ன சொல்கின்றீர்கள் மாமா…” என்று கேட்டார்.
அவர் மொழி கேட்டு அங்கிருந்த அனைவருக்கும் அதிர்ச்சி. அப்போது தான், அதிகம் யோசிக்கும் தன் மூளையை மூட்டை கட்டிவைத்துவிட்டு, தன் முன்னே வைக்கப்பட்டு இருந்த ஐஸ்கிரீமை கபளீகரம் செய்துகொண்டிருந்த சிவா, தன் தந்தையின் வாய்மொழியாக, தன் பெயர் உச்சரிப்பைக் கேட்டு நிமிர்ந்தவன், சக்ரா தன்னை முறைத்துக்கொண்டு இருப்பதைப் பார்த்து, ஒன்றும் தெரியாமல் குழம்பினான்.
வேதாவோ ஆத்திரமாக, “இதற்கு நான் சம்மதிக்க மாட்டேன்.” என்று கத்தினார்.
“பெண்ணுக்கும், பையனுக்கும் பிடித்திருந்தால் இந்த திருமணம் நிச்சயம் நடக்கும் வேதா. இதில் உன் சம்மதம் தேவை இல்லை.” என்று சொல்லி தன் மனைவிக்கு திருப்பி கொடுத்தார் சுந்தர்.
தன் மனைவி எது செய்தாலும், கண்டுகொள்ளாமல் செல்லும் கணவர் அவர் அல்ல. தன் கணவன் பேச்சில் கப்சிப் ஆனார் வேதா.
அருணகிரி மனம் கணிந்தவராய் அன்பு ததும்பிய குரலில், “நீங்கள் என்னிடம் கேட்டது மிக்க மகிழ்ச்சி மாப்பிள்ளை. நான் நிச்சயம் இதைப் பற்றி அமலாவிடமும், சனாவிடமும் பேசுகின்றேன்.” என்றார்.
எதுவும் தெரியாமல் முழித்துக் கொண்டிருந்த தன் மகனைப் பார்த்த சுந்தர், “உனக்கு இதில் விருப்பம் தானே சிவா.” என்று கேட்க.
இங்கே என்ன நடக்கின்றது என்பதை அறியாத சிவாவோ, ‘அச்சோ இவரு எதைக் கேட்கின்றார்!. எதைக் கேட்கிறார் என்று திரும்ப கேட்டால் எனக்கு தான் வசவு விழும். சும்மா தலையை ஆட்டிவைப்போம்.’ என்ற நினைப்பில், அவர் கேட்டதற்கு ஏதுவாக ‘விருப்பம் தான் அப்பா…” என்று சொல்லி சிரித்தான்.
அதில் சுந்தருக்கும், அருணகிரிக்கும் மனநிறைவானது. ஆனால் சக்ராவோ, அவனை கொன்று போடும் ஆத்திரத்தில் பார்த்துக் கொண்டிருந்தான்.