“இந்த பையனுக்கு என்ன ஆச்சோ தெரியலையே?” புலம்பிக் கொண்டே சந்திரா தோசை வார்த்துக் கொண்டிருந்தார். அவன் திருவனந்தபுரத்திற்கு மாற்றல் கேட்டிருக்கிறான் என்பதே அவரின் புலம்பலுக்கு காரணம்.
“அம்மா! நான் ரிபு வீட்டுக்கு போயிட்டு அப்படியே ஆபிஸ் போறேன் மா”
“ரிபுவை பார்க்கப் போறியா? அதானே பார்த்தேன். இரண்டு வாரமா அந்த பக்கமே போகலியே. என்ன அதிசயம்னு நினைச்சேன்!” அவர் குரலில் ஒரு சலிப்பு.
சந்திராவும் பாகீரதியும் நெருங்கிய தோழிகள் தான். இரு குடும்பமும் ஒன்றாய் பழகிய குடும்பம் தான். ரிபு என்றால் அவருக்கும் பிரியம் தான். இருந்தாலும் எங்கே தன் மகன் ரிபுவை காதலிக்கிறேன் என்று வந்து நின்று விடுவானோ என்று அவர் மனம் உள்ளுக்குள் அடித்துக் கொண்டது. அவ்வபோது அவனிடம் ஜாடைமாடையாய் அதை பற்றி பேசி தெரிந்துக் கொள்வார்.
ரிபுவை அவருக்கு பிடித்தாலும், அவளின் செயல்பாடுகள் வீட்டு மருமகள் என்ற அவரது வரையறைக்குள் அடங்காது போனதே அதற்கு காரணம். அதுவுமில்லாமல் இரண்டு வாரங்களாய் மகன் முகமே சரியில்லாததும், அவன் வேலை மாறுதல் கேட்டதும் ரிபுவால் தானோ என்ற சந்தேகம் அவர் மனதை உறுத்திக்கொண்டிருந்தது.
“அம்மா! தயவுசெஞ்சு என் கடுப்பை கிளப்பாதீங்க”
“இப்போ நான் என்ன சொல்லிட்டேன்னு நீ இப்படி கத்துற? இரண்டு வாரமா நீ அங்க போகவே இல்லையே, இப்போ என்ன திடீருன்னு யோசிச்சேன்”
“ஏய்! அவனே இப்போ தான் போறேன்னு நிக்குறான். இவ வேற, கூறு கெட்டவ. நீ போ தம்பி. பாவம் புள்ளை இரண்டு வாரமா எப்படி காலேஜ் போச்சோ?” மகாலிங்கம் ரிபு பக்கம் அனுதாபம் கூட்ட, அமிழ்தினியன் வாய்க்குள் முனகினான், “ஆமா அவ குழந்தை, அவளை பாத்துக்கிறதுக்கு மட்டும் தான் என்னை பெத்து விட்டுருக்கீங்களாக்கும்!!!”
அவன் சென்றதும், “ஏங்க உங்களுக்கு கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா?”
“இல்லை, இருந்திருந்தா உன்னை கட்டியிருப்பேனா?”
“அது இந்த அறுபது வயசுல யோசிச்சு என்ன பிரயோஜனம்?!”
“யோசிக்க வேண்டிய நேரத்துல யோசிக்காம விட்டுட்டேனே! இப்ப மட்டும் எனக்கு என்ன கட்டையாம்?”
“இதோ உங்களை விட்டு எக்ஸ்ட்ரா மூணு அடிக்கு இருக்குதே இந்த தொந்தியும், கண்ணாடி போடுற அளவுக்கு கண் கூசுதே இந்த சொட்டையும் தான் கட்டை”
“ஆமா இந்த கட்டையை பத்தி பேச வந்த இவ என்னமோ நாட்டுக்கட்டை பாரு”
“புள்ளை இப்ப தான் உருப்பட போகுதுன்னு நான் கொஞ்சம் ஆறுதலா இருந்தேன். இந்தா கிளம்பிட்டான் அவ பின்னாடி”
“ஏய்! அது நம்ம வீட்டு புள்ளை மா”
“நம்ம வீட்டு பொண்ணா வேணா ஏத்துக்கிறேன். நம்ம வீட்டு மருமகளா ஏத்துக்கனும்னா கஷ்டம் தான்”
“அது தகப்பன் இல்லாம வளர்ந்த பொண்ணு. பாகீரதியும் ஓடிட்டே இருந்துட்டா. பெத்தவங்க அரவனைப்பு இல்லாம போனது தான் அந்த புள்ளை இப்படி இருக்குது. நம்ம தம்பியால மட்டும் தான் அந்த புள்ளையை ஒரு வழிக்கு கொண்டு வர முடியும். வேற யாருக்கு கட்டி வச்சாலும் கஷ்டம் தான்”
“நான் ஒன்னு கேக்குறேன் அதுக்கு பதில் சொல்லுங்க. இதே அவங்களுக்கு ஒரு தறுதலை பையனும், நமக்கு ஒரு பொண்ணும் இருந்து, நம்ம பொண்ணை கட்டி வச்சா தான் அந்த புள்ளை திருந்தும்னு நினைச்சு கட்டிக் கொடுக்க முடியுமா?”
“நான் பிரச்சனையை தீர்கிறதுக்கான வாதத்தை பேசுறேன். நீ விதண்டாவாதம் பேசுற”
“விதண்டாவாதம் பண்ணலை, நம்ம புள்ளை வாழ்க்கை வீணாயிட கூடாதே வாதம் பண்றேன்”
“நீயும் நானும் பேசி ஒன்னும் ஆக போறதில்லை. கடவுள் என்ன யோசிச்சு வச்சிருக்கார் பார்ப்போம். வாழ்க்கை எங்க நம்மளை இழுக்குதோ அங்கே போவோம், நாமளா எதுவும் மாத்த வேண்டாம்”
“என்னவோ நான் அந்த பாட்டியை தான் நம்பி இருக்கேன்”
“பாட்டியா? யாரு ரிபு பாட்டியா? வராங்களா என்ன?”
“ஆமா இன்னைக்கு வராங்களாம். அவங்க வந்து இவங்க ரெண்டு பேரையும் வெட்டி விட்டுட்டு தான் மறுவேலை பார்ப்பாங்க”
சந்திரா, பாட்டியின் மேல் உறுதியாக நம்பிக்கை கொண்டவராக அடுத்த வேலையே பார்க்கச் செல்ல, அங்கே ரிபு ஷேடோவிடமிருந்து வந்த செய்தியை படித்துக் கொண்டிருந்தாள். இரண்டு வாரங்களாக அமிழ்தினியன் அவளுடன் பேசாதது அவளை வெகுவாக அலைக்கழித்தது!!
“வாழ்க்கையில நம்ம கூட பயணம் செய்வபவர்கள் சிலர். நமக்காக மட்டுமே பயணம் செய்பவர்கள் சிலர். அப்படி உனக்காக உன்னோடு பயணிப்பவன் உன்னோட அதிப்பா. அது புரியாம அவனுக்கு நீ செஞ்சது செஞ்சிட்டு இருக்கிறது தப்பு. உடனே போய் மன்னிப்பு கேளு”
அவள் அலைபேசியில் ஷேடோ ஆன்லைனில் இருப்பதாகக் காட்ட, ஷேடோவின் அந்த செய்தியை படித்துக் கொண்டிருந்த திரிபுரசுந்தரி கோபத்தில் தன் அலைபேசியை மெத்தையின் மீது எறிந்த விட்டு குளிக்கச் சென்றாள், “நான் ஏன் மன்னிப்பு கேட்கனும்? அப்படி நான் என்ன செஞ்சிட்டேன்?” எல்லோரிடமும் அவ்வபோது எட்டி பார்க்கும் ‘அடம் பிடித்த கழுதை’, அது தான் ஈகோ, அவளிடம் சற்று தூக்கலாகவே எட்டி பார்த்தது
பாகீரதி அவசர அவசரமாக சமையல் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார். பக்கத்திலேயே அலைபேசியை வைத்துக் கொண்டு கல்லூரியில் பார்க்க வேண்டிய சில முக்கிய வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தார். மெடிக்கல் லீவ் முடிந்து அவர் வேலைக்கு சென்று ஒரு வாரம் ஆயிற்று. வீட்டு வேலைகள் அனைத்தையும் அவரே செய்ய ஆரம்பித்துவிட்டார். பின்னே வேறு யார் செய்வது?
எவ்வளவு நாட்கள் இனியனின் தாயார் சந்திராவை சார்ந்து இருப்பது. வீட்டில் வயது வந்த பிள்ளைகள் இருவர் இருந்தும் ஒரு பயனும் இல்லை. ரிபு சமையலறை பக்கம் கூட வருவது கிடையாது.அபியோ பெரும்பாலும் வீட்டிலேயே இருப்பது இல்லை. ரிபுவின் பொறுப்பின்மை பற்றி பாகீரதி அறிந்திருந்தாலும், தன் இரண்டாவது மகன் அபி எப்படியாவது தலையெடுத்து விடுவான், பொறுப்புடன் நடந்து கொள்வான் என்று எண்ணியிருக்க, வளர வளர அவனின் போக்கே புரியாத புதிராகி போனது. ரொம்ப அமைதியான பிள்ளை என்று எல்லோரிடமும் பெருமையாய் சொல்லி கொண்டிருந்த பாகீரதிக்கு அந்த அமைதியே எதிர்வினையாகி போனது.
அபி பாகீரதியிடமோ, ரிபுவிடமோ பேசுவதே மிகவும் அரிது. ‘போயிட்டு வரேன், சாப்பாடு வேண்டாம், வேணும், கிளம்பிட்டேன்’ இது மட்டுமே அவன் பெரும்பாலும் பேசும் வார்த்தைகள் ஆகும், பாகீரதி அவனருகில் அமர்ந்து கல்லூரி பற்றியோ, அவன் நண்பர்கள் பற்றியோ பேச்சு கொடுத்து பார்ப்பார். ‘ம்ம், ஆமா’ என்பதை தவிர வேறு பதில் அவருக்கு கிடைக்காது. அதற்கு மேலும் குடைந்தால் அங்கிருந்து நழுவி விடுவான்.
இன்று கூட ஊரிலிருந்து ஷண்முகநாதனின் தாயார் வரவிருக்கிறார். பாகீரதிக்கு அறுவை சிகிச்சை நடந்த நேரம் அவர் காசியில் இருந்தார். இன்று அவளைக் காண வருகிறார். கொஞ்சம் பழமைவாதி. நடைமுறைகள், கட்டுப்பாடுகள் என்று சில அளவுகோல்கள் வைத்திருப்பவர், அளவில்லாமல் பாசம் காட்டுவார்.
அமிழ்தினியனை தான் உதவிக்கு அழைத்திருந்தார் பாகீரதி, அவனும் வந்து நின்றான்.
“எத்தனை மணிக்கு மா செக் அப்? மருத்துவர் மூன்றாவது வாரம் அவரை பரிசோதனைக்கு வர சொல்லியிருக்க, அதற்கு கிளம்பிக் கொண்டிருந்தார்
“பத்து மணிக்கு, செக் அப் முடிச்சிட்டு நான் வரேன். அதுக்குள்ள பாட்டி வர மாட்டங்கன்னு நினைக்கிறேன். வந்தா கொஞ்சம் பார்த்துக்கோ இனியா. டிபன் எல்லாம் ரெடி பண்ணிட்டேன்”
“இன்னைக்கு ஒரு நாள் லீவ் போடுறது தானே மா?”
“இல்லை இனியா! அடுத்த வாரம் ஒரு செமினார் வருது. அதுக்கு ப்ரிபேர் செய்யணும். வேலை நிறைய கிடக்குது. பாட்டியையும், ரிபுவையும் நினைச்சாலே பயமா இருக்குது. அபி வேற ஏதோ ஸ்பெஷல் கிளாஸ் இருக்குதுன்னு விடியக்காலமே கிளம்பி போனான். ப்ராபர்ட்டி டேக்ஸ் கட்ட இன்னைக்கு தான் கடைசி நாள். ஒவ்வொரு வருஷமும் கரெக்டா கட்டிடுடுவேன், இந்த தடவை ஆப்பரேஷன் அது இதுன்னு விட்டு போச்சு. இது போன வருஷம் கட்டின ரிசிப்ட் இதை பார்த்து கொஞ்சம் கட்டிடுறியா?”
“நான் பார்த்துக்குறேன். ஹாஸ்பிடல்க்கு கூட வரட்டுமா?”
“வேண்டாம் டா நான் பார்த்துக்குறேன்”
அவசரமாய் மருத்துமவமனைக்கு கிளம்பிச் செல்லும் அவரை பார்க்க அமிழ்தினியனுக்கு ஒரு பக்கம் பாவமாகவும், ஒரு பக்கம் கோபமாகவும் வந்தது. எல்லாம் இவர் கொடுத்த இடம் தான் இன்று ரிபுவும், அபியும் இவ்வளவு தூரம் அடங்காமல் நிற்பது.
ஐந்து வயதிற்குள் பழகும் எந்தவொரு பழக்கமும் நம் வாழ்நாள் பழக்கமாகி விடும் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. சிறு வயதில் தந்தை ஷண்முகநாதன் செல்லம் கொடுத்து வளர்த்தது ஒரு பக்கம். தந்தையின் இழப்பு வேறு சேர்ந்து கொள்ள, பாகீரதி ரிபுவை மாற்றும் வகை தெரியாது தவித்தார். பொருளாதார ரீதியில் கணவரின் இல்லாமையை இட்டு நிரப்ப, பாகீரதி வேலை வேலையென்று ஓடிக் கொண்டே இருந்தார்.
ஆரம்ப பள்ளி ஒன்றில் ஆசிரியராக ஆரம்பித்து இப்பொழுது பல்கழைகழக விரிவுரையாளராக வேலை செய்யும் அளவுக்கு தன்னை உயர்த்தி, பிள்ளைகள் வேண்டுமென்று கேட்கும்முன்னரே அவர்கள் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து, நல்ல படிப்பு வழங்கி என்று ஓடிக்கொண்டே இருந்தவர் எங்கோ ஓரிடத்தில் நின்று திரும்பி தன் பிள்ளைகளை பார்த்திருந்தால் அவர்களுக்கு தேவையானது பொருளாதார சார்பு மட்டுமல்ல அவர்களுக்கு தேவை உறவுகுள்ளான சார்பு என்பது புரிந்திருக்கும். ஒரு வயதுக்கு மேல் திசைமாறிய அவர்களை பற்றி புலம்ப மட்டுமே அவரால் முடிந்தது.
இந்த விஷயத்தில் ‘நீ பிள்ளைகளை இப்படி வளர்த்திருக்க வேண்டும், அப்படி வளர்த்திருக்க வேண்டுமென்று இலவச அறிவுரை வழங்க ஒரு கூட்டமே தயாராய் இருந்தது. தந்தை இல்லாமல் சிங்கிள் பேரன்டாக பிள்ளைகளை வளர்க்கும் அவருக்கு இந்த அறிவுரைகள் கூடுதல் குற்றவுணர்ச்சியை அளித்தது. அறிவுரை கூறும் கூட்டம் யாரும் வாழ்வில் கூட வரப்போவதில்லையே!!
சிறிது நேரத்தில் ஆன்லைனில் ப்ராபர்ட்டி டேக்ஸ் கட்டி முடித்தவன், ஆதாருடன் மின் இணைப்பை இணைக்கும் வேலையை பார்க்க ஆரம்பித்தான். குளித்து விட்டு கல்லூரி செல்ல தயாராகி வந்த திரிபுரசுந்தரி அமிழ்தினியனை பார்த்தாள். இரண்டு வாரங்களாய் அவனை பாராதது, பேசாதது எல்லாம் சேர்ந்து அவனை அங்கே பார்த்த ஆர்வத்தில் “அதிப்பா” என்றபடி ஓடி வந்து அவன் தோளில் கைப்போட்டு நெருங்கி அமர்ந்தாள். விவரிக்க முடியாத ஒரு பெரும் ஆறுதல் அந்த அணைப்பிலே தெரிந்தது. அந்த நிமிடம் அவன் பேசினால் போதும், வேறெதுவும் வேண்டாம். ஒரு மன்னிப்பென்ன ஆயிரம் மன்னிப்புக்கு அவள் மனம் தயாராயிருந்தது. அவள் மனம் பேசிய வார்த்தைகள் அவள் கை அணைப்பிலே புரிந்தாலும், அவன் பொறுமையாய் அவள் கைகளை விலக்கிவிட்டு பக்கத்து இருக்கையில் அமர்ந்தான்.
“அதிப்பா? எப்போ வந்த?”
“இப்போ தான்”
“என்னை காலேஜ்ல டிராப் பண்றியா?” அவள் குரல் ஆதுரமாய் ஒலித்தது, சரியென்று விட மாட்டானா என்ற பெரும் ஏக்கம் தொக்கி நின்றது. அவனறியாததா என்ன?
“இவ்ளோ நாள் எப்படி போனியோ அப்படியே இன்னைக்கும் போ”
“இவ்வளவு நாள் நான் பைக் டேக்சில (Bike Taxi) தான் போனேன் தெரியுமா?
அப்படி சொன்னால் அவன் இளகுவான் என்று நினைத்தே சொன்னாள்.
“ரொம்ப நல்லது. இனிமேயும் அப்படியே போ. கேப் விட அது சேப்ட்டி தான். கிளம்புறதுக்கு முன்னாடி தினம் அம்மாக்கு உன்னோட டிரைவர் டீட்டெயில்ஸ் மெசேஜ் பண்ணிடு”
சட்டென்று அவள் கண்கள் கலங்கியது. என்ன செய்து இவனை மறுபடியும் பேச வைப்பது என்று அவளுக்கு புரியவில்லை. ஆனால் எதை செய்தேனும் அவனை பேச வைக்க வேண்டுமென்று மட்டும் தோணியது, “ரொம்ப தான் பண்றான்” மனதிற்குள் அவனை அர்ச்சித்தவாறு விடுவிடுவென்று உள்ளே சென்று ஒரு மினி ஸ்கர்ட் போட்டுக் கொண்டு வந்து நின்றாள். எல்லாம் அவனை பேச வைக்கும் முயற்சி தான். அவளுக்கு அறிவுரை கூற பேசுவான் தானே?!
அவள் செய்கைகள் புரிந்து, மனதிற்குள் சிரித்துக் கொண்டான். பாட்டி இன்று வரப்போவது அவளுக்கு தெரியாதே? தெரிந்தால் இந்த உடையை போட மாட்டாளே?!
சற்று நேரத்தில் அபி வர, அவன் கண்கள் சிவந்து சோர்ந்து தெரிந்தது. இனியனை அவன் அங்கு எதிர்பார்க்கவில்லை.
“என் போன் சுவிட்ச் ஆப் ஆக போகுது. நான் சார்ஜ் போட்டுட்டு அப்புறமா தரேன்” வேகவேகமாக உள்ளே சென்று கதவை தாளிட்டுக் கொண்டவனை யோசனையுடன் பார்த்தான் அமிழ்தினியன். ரிபு மூலம் அபி பற்றி அவனறிந்த தகவல்கள் சரியானது தானா என்றறிய அவனுக்கு சில சான்றுகள் தேவைப்பட்டது. அபி அவன் அலைபேசியை தராதது அவன் சந்தேகத்தை உறுதிபடுத்தியது!!
ஆதாருடன் மின் இணைப்பை இணைத்துக் கொண்டிருந்தவன், அபியை அழைத்தான். அவன் மறுபடியும் அலைபேசியை கேட்டால் என்ன செய்வதென்று பயம் அவன் முகத்தில் அப்பட்டமாய் தெரிந்தது. “அபி பெஸ்காம் (Bescom – Karnataka Electricity Board) அக்கவுன்ட் நம்பர் சொல்லு. அதை ஆதார் கூட இணைக்கணும்”
“நம்பர் தெரியாதே!!”
“சரி போன மாசம் கட்டின பில் எடுத்துட்டு வா. அதுல பார்த்துக்கலாம்”
“பில்?? அது எங்க இருக்கும்னு தெரியலையே? அம்மா தான் கட்டுவாங்க, அவங்களுக்கு தான் தெரியும்”
“அவங்க ஆதார் கார்ட் அவங்க கிட்ட தானே இருக்கும், எனக்கெப்படி தெரியும்?”
“சரி, இந்த வீட்டுக்கு மாசா மாசம் எவ்ளோ கரென்ட் பில் வருது, மளிகை எவ்வளோ செலவாகுது, வேற என்னேன்ன சேவிங்ஸ் அம்மா கட்டுறாங்க. எந்த பேங்ல அக்கவுன்ட் இருக்குது? ப்ராபர்ட்டி டேக்ஸ், தண்ணி பில் இது ஏதாவது தெரியுமா?”
“நல்லா கேளு அதிப்பா. ஆம்பளை புள்ளையா பொறுப்பா ஏதாவது பண்றானா?! சரியான தண்டம்” ரிபு முந்திக்கொண்டு அபியை திட்ட,
“ஏன் இதெல்லாம் ஆம்பளை புள்ளை தான் பார்க்கணும்னு ஏதாவது சட்டம் இருக்குதா என்ன? மத்ததெல்லாம் மட்டும் பெண்களுக்கு சம உரிமை வேணும்னு கேட்கிறல, இதுல சம உரிமை எங்க போச்சு? ஏன் இதெல்லாம் நீ தெரிஞ்சு வச்சிக்கலை? எல்லா வேலையும் அந்த ஒத்த மனுஷி தானே பார்க்கிறாங்க? அவங்க சம்பாதிக்கிற காசு மட்டும் வேணும், ஆனால் வீட்டு பொறுப்பு வேண்டாம். அப்படி தானே?”
இவன் பேசுவதை கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தார் ரிபுவின் பாட்டி கிருஷ்ணவேணி! அமிழ்தினியன், ரிபு வாழ்க்கையின் சூத்திரதாரி!!!
பாட்டியை பார்த்த ரிபுவும், அபியும் ‘இவரா’ என்ற ரீதியில் அதிர்ந்து நிற்க, அவரை அழைத்ததே அமிழ்தினியன் தான் என்பது இருவரும் அறியாததே!!!