“மருமவளே… உண்மைய நான் கண்டு புடிச்சதும் பேச்ச மாத்துறா” மருமகளிடம் அவர் குறைபாட வைஷ்ணவி எழுந்து சமையலறை முன்னே இருந்த திட்டில் கிண்ணத்தை வைத்து,
“த்தை எனக்கு வர்ற கோவத்துக்கு உங்க மாமியார் கழுத்துல இருக்க செயின திருடிட்டு ஓடிடுவேன் சொல்லி வச்சுக்கோங்க. நா வர்றேன்” மாமியாரிடம் பார்வையை தன்னவனுக்கு மாற்றி வெளியில் சென்றுவிட்டாள்.
“பாத்தியா பாத்தியா அப்பயும் என் சங்கிலி மேல கண்ணு போடுறா”
மீண்டும் சேர்மத்தாய் வைஷ்ணவியை குறை சொல்ல கார்த்திக்கு தான் வந்ததிலிருந்து செல்லும் வரை வைஷ்ணவி தன் மேல் விடாமல் செலுத்தும் பார்வையில் மூச்சே முட்டியது.
அவளை நெருங்க விடவும் மனம் இல்லை, தள்ளி வைக்கவும் மனம் இல்லாமல் குழப்பத்தில் உழன்றது ஆணின் மனம். தன்னுடைய அறைக்கு சென்றவன் தேவையான பொருட்களை எல்லாம் தன்னுடைய பையினுள் எடுத்து வைத்துக்கொண்டிருந்த நேரம் மஹாலக்ஷ்மி அவனுடைய அறைக்கு வந்து அவனிடம் டிபன் பாக்ஸ் ஒன்றை கொடுத்தார்.
“எல்லாத்தையும் எடுத்து வச்சுட்டியா ப்பா?”
“இல்ல மா இன்னும் ஷூ, சாக்ஸ் எல்லாம் வைக்கணும்” என்றவன் கையிலிருந்த டிபன் பாக்ஸை திறந்து பார்த்தான்.
“என்ன மா நீங்களும் ரசமலாய் செஞ்சீங்களா?”
“இல்ல கார்த்தி வைஷ்ணவி தான் நீ நல்லா இருக்குனு சொன்னன்னு இன்னும் கொஞ்சம் குடுத்துட்டு போனா”
வைஷ்ணவியை பற்றிய நல்ல எண்ணங்களை அவனுள் விதைக்க மஹாலக்ஷ்மி செய்யவில்லை, மகன் விரும்பி உண்பதை பார்த்து அவரே செய்ய வேண்டும் என்று எண்ணியது தான் அதற்குள் வைஷ்ணவி வந்து கொடுத்து செல்ல அதை எடுத்துக்கொண்டு மகனுக்கு உடன் உதவி செய்ய வந்துவிட்டார் மேலே.
மெத்தைக்கு அருகில் இருந்த இருவர் அமரும் சோபா இருக்க அதில் அமர்ந்தவன் கண்கள் அன்னை தன்னை கவனிக்கவில்லை என்பதை உறுதி செய்து ஜன்னல் வழியாக வைஷ்ணவியின் வீட்டு மாடியை பார்த்தான். வைஷ்ணவி அறை கதவு மூடியிருந்தது.
“ஆதார் எல்லாம் தேவையா கார்த்தி?”
அன்னையை பார்த்தவன், “ஆமா ம்மா மறந்துட்டேன். எடுத்து வைக்கணும்”
எழுந்து சென்று எடுத்து அன்னை கையில் கொடுத்து, “என்னோட வால்ட்ல வச்சிடுங்க ம்மா” என்று மீண்டும் ஜன்னல் அருகே நின்றான், இந்த முறை கண்கள் மொத்த வீட்டையும் அளந்த சமயம் வீட்டின் வாயிலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் ஒரு இருக்கையில் அமர்ந்திருந்தாள்.
“பிரஷ், பேஸ்ட், சோப்பு எல்லாம் எடுத்தாச்சா ப்பா?”
“ம்ம் வச்சிட்டேன் ம்மா” அன்னைக்கு பதில் தந்துகொண்டே ரசமலாயை உண்டான்.
அனைவரும் கூறுவது போல் இனிப்பு குறைவு தான், அதன் வடிவம் கூட அவனுக்கு சரியாக தோன்றவில்லை, ஆனால் அவள் கண்கள் அவனது வார்த்தைகளுக்கு ஆசையோடு காத்திருப்பதை பார்த்ததும் வார்த்தைகள் மொத்தமும் அவளுக்காக பேசியதை அவனால் கூட தடுக்க முடியவில்லை.
காலை கொடுத்ததை விட இப்பொழுது உண்ணும் பொழுது இனிப்பின் அளவு கூடி சரியாக இருந்தது, நட்ஸ் கூட அவனுக்காக அதிகம் போட்டிருப்பாள் போலும்.
ஆனால் கார்த்திக்கு பெரிய கேள்வி, எதற்காக இந்த பெண் தன்னை இவ்வளவு ஆசையாக பார்க்கிறாள்? எப்படி அவளுக்கு தன் மீது இப்படி ஒரு பிரியம் வந்தது? அவளுக்காக இதுவரை தான் எதுவும் செய்ததில்லையே…
அவனை மொத்தமாக குழப்பத்தில் ஆழ்த்தியிருந்த பெண்ணோ தனக்கு முன்னே அமர்ந்திருந்த அவளுடைய நாய்க்கு கையிலிருந்த ஒரு பிஸ்கட்டை போட போனவள் அதற்கு போக்கு காட்டி தன்னுடைய வாய்க்குள் போட்டுகொண்டாள். அந்த நாயோ பவ்யமாக அவள் முன் மண்டியிட்டு நாக்கை தொங்கப்போட்டு எதிர்பார்ப்புடன் அவளையே பார்த்து அமைத்திருந்தது.
மீண்டும் அதே மாதிரி நாய்க்கு பிஸ்கட்டை போடுவது போல் சென்று தன்னுடைய வாய்க்கு போட்டவள் காலியாக இருந்த கவரை நாயிடம் போட அது வைஷ்ணவியை பார்த்து குலைக்க துவங்கியது.
ஆனால் அவளோ அதற்கெல்லாம் அசராமல் அமைதியாக அடுத்த பாக்கெட்டை பிரித்தாள். கார்த்திக்கு சிரிப்பு வந்துவிட மீதம் இருந்த இரண்டு இனிப்பை உண்டு அவளை மீண்டும் ஒரு முறை பார்த்துவிட்டு அன்னையிடம் சென்றுவிட்டான்.
வந்தது கார்த்தி சவூதி செல்லும் நாளும். தன்னுடைய மொத்த பொருட்களையும் கீழே சென்று காரில் வைக்க அவனுடைய தந்தை அவனுக்கு உதவி செய்துகொண்டிருந்தார்.
மஹாலக்ஷ்மி மகனுக்கு கை பக்குவமாய் சில பொருட்களை எடுத்துக்கொடுக்க அனைத்தையும் சிரிப்போடு வாங்கி அடுக்கினான் வாகனத்தினுள்.
“போதும் ம்மா… அவன் எவ்ளோ தான் கொண்டு போவான்? ஆறு மாசம் தான. அவனுக்கு வேணும்கிறத அவனே சமைச்சு ப்ரஸ்ஸா சாப்பிடுவானா நீ குடுக்குறத சாப்புடுவானா?”
சுப்பிரமணி மனைவியை குற்றம் சொல்ல, “அம்மா செஞ்சது தான் ப்பா பர்ஸ்ட்” அன்னையை விட்டு கொடுக்காமல் பேசும் மகனை பார்த்து எப்பொழுதும் போலே பூரித்து போனார் மஹாலக்ஷ்மி.
இதை எல்லாம் மேலே இருந்து பார்த்துக்கொண்டிருந்த வைஷ்ணவியின் அருகில் நின்ற ஷெர்லின், “பேசாம டிக்கில ஒளிஞ்சுக்குறியா?” கேட்டாள் தீவிரமாக.
தோழியை பார்த்து சிரித்த வைஷ்ணவி, “அது எப்படிங்க பாப்பா இவ்ளோ கேவலமான ஐடியா எல்லாம் உங்களுக்கே வருது?”
“கொஞ்ச நேரம் முன்னாடி சவூதிக்கு டிக்கெட் புக் பண்ணி தர சொன்ன உங்ககிட்ட இருந்து தான் பீப்பா வந்துச்சு” – ஷெர்லின்
“ஏதோ சமையல் கூட போகணும்ங்கிற ஒரு ஆசைல சொல்லிட்டேன் பாப்பா” அசடு வழிந்தாள் வைஷ்ணவி
“ம்ம்ம். சரி பேசுவியா அவர்கிட்ட?” – ஷெர்லின்
“அதெல்லாம் டெய்லி நைட்ல இருந்து விடிய விடிய ஒரே சாட்டிங் தான்” – வைஷ்ணவி
“விடிய விடியவா? நைட் நான் மெசேஜ் பண்ணப்ப ஆப்லைன் காமிச்சதே மாப்பிள்ளை”
குழப்பமாய் ஷெர்லின் கேட்க, “மெசேஜா? கனவுல பேசுவேன் மாமா” இதை சொல்லும் பொழுதும் வைஷ்ணவிக்கு முகத்தில் பெருமை தான்.
“டெய்லி ஒவ்வொரு இடத்துக்கு போவோம்… ஒவ்வொரு நாட்டுக்கெல்லாம் போயிருக்கோம். ஹனிமூன்க்கு பாளி-கு போகலாம்னு பேசி வச்சிருக்கோம்”
வெட்கப்படும் தோழியை பார்த்து எரிச்சலடைந்த ஷெர்லின், “ஏய் ஏய்… விஷத்தை கூட தாடி எனக்கு… ஆனா இந்த வெட்கம் மட்டும் பட்டு தொலையாத. ஆகாத கல்யாணத்துக்கு ஹனிமூன் ஒரு கேடு. சரி அவர்கிட்ட பேசுனியா?”
“என்ன பேசணும்?” – வைஷ்ணவி
“ஆறு மாசம் உன் ஆள பாக்க போறதில்லடி மனசு ஆறுதலுக்கு ரெண்டு வார்த்தை கூட பேசலையா?” எரிச்சலடைந்தாள் ஷெர்லின்.
“அதான் கண்ணாலேயே ஆறு மாசத்துக்கு சேத்து பாத்துட்டேனே” கண்கள் ஆசையாக கீழே நின்றவனை வருடியது.
“நீ இப்டியே காதல் வசனம் பேசிட்டு இரு, அவரு ஏதாவது ஒரு வெள்ள கார புள்ளைய கூட்டிட்டு வந்து நிக்க போறாரு. அப்றம் அம்மானாலும் வராது ஆத்தானாலும் வராது” – ஷெர்லின்
“ரெண்டும் ஒன்னு தான்டி. அங்க பாரு” கார்த்தியை காட்டினாள். அவன் தந்தை ஏதோ கூற அமைதியாக கையை பின்னால் கட்டி தலையை தலையை ஆட்டி நின்றான்.
“பாத்தியா என் ஆள… அப்பா சொல்றதுக்கெலாம் தலையை தலையை ஆட்டிட்டு இருக்கான். இந்த பையன் பெத்தவங்க பேச்ச கேக்குற ஆளு. அவர் பின்னாடி லூசு மாதிரி சுத்துற என்கிட்டயே ஒரு லைன் முழுசா பேசுனதில்ல. தெரியாத ஊர்ல, மொழி புரியாத ஒரு பொண்ணுகிட்ட பேசி, உசார் பண்ற அளவு என் ஆள் உஷாரான ஆள் இல்ல… தோ தோ அங்க பாரு”
முகம் கொள்ளா புன்னகையுடன், “பாத்தியா அந்த முடிக்குள்ள கைய விட்டு தலையை சீவுறப்ப எவ்ளோ அழகா இருக்கார்ல.. ச்ச லக்கி பிங்கர்ஸ்” சுவற்றில் கை வலிக்காமல் ஒரு மெல்லிய அடியை வைத்து தன்னுடைய அதிருப்தியை தெரிவித்தாள்.
“ஏன் தோழி எங்க கல்யாணத்துக்கு என்ன கிப்ட் தருவ?” – வைஷ்ணவி
“ரெண்டு பண்ணி வாங்கி தர்றேன். ஜோடியா சேந்து மேயுங்க” – ஷெர்லின்
“அடடே… வெள்ள பண்ணி வாங்கி குடுடி” கேவலமான ஒரு வேண்டுகோளை வைத்த தோழியை என்ன கூறுவதென்று தெரியாமல் தலையில் அடித்துக்கொண்டாள்.
கீழே நேரம் ஆனதும் பாட்டி, சகோதரியிடம் விடைபெறுவதாக கூறிய கார்த்தி அன்னையிடம் வரும் பொழுது அவர் கண்ணில் இருந்த கண்ணீரை பார்த்தவன், “ம்மா..” என செல்ல சிணுங்கலோடு அன்னையை அனைத்தவன், “ஆறு மாசம் நிமிசத்துல ஓடிடும்”
அழுகையோடு தலையை ஆடியவர் முகத்தை பார்த்து, “சிரிச்சிட்டே வழி அனுப்பி வைங்க ம்மா”
கண்ணீரை துடைத்து சிரித்தவாறு, “ஆறு மாசத்துக்கு முன்னாடியே வேலை முடிஞ்சாலும் வந்துடனும் சொல்லிட்டேன்” சரி என தலையை ஆட்டி உறுதி தந்தான்.
“அப்றம் கார்த்தி வைஷ்ணவி அன்னைக்கு விளையாட்டுக்கு சென்ட் கேட்டுச்சு. முடிஞ்சா வாங்கிட்டு வா”
“சரி மா… என் அம்மா கேட்டு நான் நோ சொல்லுவேனா?” கண்கள் சாதாரணமாக பார்ப்பது போல் வைஷ்ணவி வீட்டு மாடியை பார்த்தான். வைஷ்ணவி.
“கார்த்தி கெளம்பலாமா?” தந்தை கை கடிகாரத்தை பார்த்து மகளை அழைத்தார்.
“ப்பா ஒரு நிமிஷம் சார்ஜ்ர் மறந்துட்டேன்” என்றவன் வேகமாக படிகளில் ஏறும் பொழுதே அவளை பார்த்துக்கொண்டே ஏற, “என்னமோ நடக்காதே… மர்மமா இருக்குதே” பாடலை முணுமுணுத்தவாறே சூசகமாக அங்கிருந்து நழுவினாள் ஷெர்லின்.
அறைக்குள் சென்றவன் உடனே வெளியில் வந்து ச்சார் ஒன்றை எடுத்து போட்டு அறையின் மேல் இருந்த ஸ்லாபில் மின்விளக்கோடு சேர்த்து ஒரு புதிய WindChime ஒன்றை கட்டிவிட்டு வைஷ்ணவியை பார்த்தான்.
ஏற்கனவே தன்னை பார்த்துக்கொண்டே படிகளில் ஏறியவனின் விழிகளில் இருந்து மீள முடியாமல் தவித்தவளுக்கு அவனின் இதழ்கடையோராம் தெரிந்த சிரிப்பில் சொக்கி தான் போனாள் பெண். நாற்காலியை அறைக்குள் போட்டு வந்தவன் நின்று வைஷ்ணவியை பார்த்து சிரிப்பை காட்டாமல் தலையை அசைக்க, மௌனமாய் வைஷ்ணவியின் தலையும் ஆடியது.
ஒரு அடி படியில் கால் வைத்த கார்த்தியை நிறுத்தியது அவள் வார்த்தை, “கார்த்திக்…” அவள் அழைப்பில் அவன் பார்க்க, “ஆல் தி பெஸ்ட்” என்றாள்.
மென்னகையோடு தலையை ஆட்டி அவள் வாழ்த்தை ஏற்றவன் இறங்கி கீழே சென்றுவிட்டான். அடுத்த பத்து நிமிடத்தில் அவன் வாகனம் அந்த தெருவை விட்டு கண்ணில் இருந்து மறைந்த பின்னர் தான் வைஷ்ணவிக்கு அவன் அந்த மணியை(windchime) மாட்டியதன் அர்த்தம் புரிந்தும் புரியாமலும் தவித்து போனாள்.