நீலம் கொண்ட
கண்ணும் நேசம் கொண்ட
நெஞ்சும் காலம்தோறும்
என்னை சேரும் கண்மணி
பூவை இங்கு சூடும்
பூவும் பொட்டும் யாவும்
மன்னன் எந்தன் பேரை
கூறும் பொன்மணி
காலை மாலை
ராத்திரி காதல் கொண்ட
பூங்கொடி ஆணை போடலாம்
அதில் நீயும் ஆடலாம்
என்றும் அதிரடியாக துவங்கும் அவன் காலை இன்று அவன் மனதை வருடம் இளையராஜாவின் இசையில் நீந்த இதமான மன நிலையோடு தான் கண்களை திறந்தான். தலையை திருப்பி வைஷ்ணவி அறையை ஜன்னல் வழியாக கண்டான்.
வழக்கம் போல ஒலியின் வீரியம் குறையவில்லை, அந்த மொத்த தெருவுக்கும் கேட்கும்படி தான் இருந்தது ஆனால் மெல்லிய இசையும், யேசுதாஸ், சித்ரா இருவரின் குரலில் குயில்களின் ராகமாகவே ஒலித்தது.
வா வா
அன்பே அன்பே
காதல் நெஞ்சே
நெஞ்சே
வைஷ்ணவி இரவு உடையில் அடங்காமல் பரந்த கூந்தலை கொண்டையிட்டு மாடியை குச்சி விளக்கமாறை வைத்து சுத்தம் செய்துகொண்டிருந்தாள்.
“அந்த செடிக்கு பின்னாடி இருக்குறதெலாம் நல்லா தூத்துவிடு. என்ன வேலை செஞ்சாலும் உன் கூட ஒரு ஆள் இருந்ததே இருக்கணுமா?”
காலையிலே அன்னையின் அழகிய சொற்களை கேட்டுக்கொண்டே வேலை செய்திருந்த வைஷ்ணவி முகத்தில் எப்பொழுதும் இருக்கும் எரிச்சல் இல்லை.
அன்னை சொல்லியவை யாவையும் முகம் சுளிக்காமல் செவ்வனே செய்பவளாய் பார்த்து மஹேஸ்வரிக்கே அதிகாரம் தூள் பறந்தது. வேலை செய்தவள் தலையை தூக்கி அன்னையை சில நொடிகள் கண் சிமிட்டாமல் பார்த்தாள்.
“ஏன் மா இன்னைக்கு நீ அழகா இருக்கியே” மகளின் கேள்வியில் செய்த வேலை கூட அப்படியே நின்றது மஹேஸ்வரிக்கு.
வைஷ்ணவியோ மேலும், “நீ மட்டும் இல்ல மா… நம்ம வீடு செடி, நம்ம ஊரு மலை எல்லாமே இப்போ எல்லாம் எனக்கு அழகா தெரியாதே ம்மா” கண்களை மூடி புருவத்தை தேய்த்தவன் இதழ்களில் இருந்த விரிந்த புன்னகையே அவள் எதை கூற வருகிறாள் என்று புரிந்துவிட்டது.
‘என்ன டிசைனோ இந்த பொண்ணு’ குழப்பத்துடன் கேட்டவன் அதரங்களில் இன்னும் இதழ் மறையா புன்னகை.
நாளை இரவு சென்னை கிளம்ப வேண்டும் அவன்.
நேற்றே சுந்தரை பார்த்து அவன் பொறுப்பில் கட்டிடத்தை மொத்தமாய் ஒப்படைத்து பல நிமிடங்கள் பேசி தான் வந்தான். இன்றும் நாளையும் குடும்பத்தினருடன் இருக்க திட்டமிட்டு அத்தனை வேலைகளையும் நேற்றே முடித்துவிட்டான். தினம் ஒரு பாட்டு வைஷ்ணவியின் எழுதப்படாத விதி.
இன்னும் வெளியில் பாட்டின் ஓசை கேட்க அந்த பாடலை காதில் வாங்கியபடியே குளியலறை சென்றவன் தன்னுடைய கடமை அனைத்தையும் முடித்து வெளியில் வந்த பொழுது வைஷ்ணவி வீடு மாடி நிசப்தத்தை அமைதியோடு இருந்தது.
கீழே இறங்கி வந்தவன் இலகுவான த்ரீ பை போர்த் பாண்ட் அணிந்து வெள்ளை நிற பனியன் மட்டும் அணிந்திருந்தான். நேராக சமையலறை சென்று அன்னைக்கு உதவ போக, அவர் மகளை சமையலறை பக்கமே விடவில்லை. அவனுக்கு பிடித்த உணவு வகைகளை பார்த்து பார்த்து சமைத்து வைத்தார்.
சகோதரி சுபத்ராவுக்கு கூட பொறாமையாக தான் இருந்தது, “இதுக்காக ஆவது நானும் ஒரு ஆறு மாசம் பாரின் போகணும் ம்மா” என்றாள்.
“இப்போ கூட ஒன்னுமில்ல வர்றியா டா என் கூட?”
சகோதரன் பாசமாய் கேட்க உடனே அன்னை முந்திக்கொண்டார், “போ ப்பா நீ போறதும் இல்லாம என் பேச்சு துணைக்கு இருக்க இந்த புள்ளையையும் கூட்டிட்டு போக போறியா?”
“இந்த கதை தானே வேணாம்ங்கிறது… நான் இருந்தாலும் வைஷ்ணவி ஷெர்லின் வந்துட்டா என்ன மறந்துடுறது, இதுல நான் இருந்தா என்ன இல்லனா என்ன? நல்ல வேலை வைஷ்ணவி உங்க மருமகளா இல்ல”
சுபத்ராவின் புலம்பலை கேட்டு கார்த்திக்கு எக்கு தப்பாக புரையேற உள்ளுக்குள் சிரித்துக்கொண்டே மஹாலக்ஷ்மி அவன் தலையை தட்டிவிட்டு தண்ணீரை அவன் கையில் கொடுத்தார்.
“மெதுவா சாப்புடு ப்பா. பாரு கண்ணே கலங்கிடுச்சு”
அவன் முதுகை தடவினார், “அங்க போய் நல்ல சத்தானதா சாப்புடனும் ப்பா…”
“ஆமாங்க ராசா நல்ல பழமா சாப்புடனும்ங்க சொல்லிட்டேன்” முதிய பெண்மணி தன்னுடைய பங்கிற்கு அறிவுரை கூறினார்.
“ஆமா இவுக மைசூரு மஹாராணி… இவுக சொன்னதை அப்புடியே கேட்டுடனுமாகும்?” கையில் ஒரு கிண்ணத்தோடு உள்ளே வந்த வைஷ்ணவி மாமியாரிடம் அதை கொடுத்து, சேர்மத்தாய் அருகே அமர்ந்துகொண்டாள்.
“என்ன சத்தாகிறதுக்கே உன் ஆத்தா உன்ன வளத்து போட்ருக்காஹலா?” அவள் முகத்தை பார்த்து முறைத்தார் விளையாட்டாக.
“அப்டின்னு தான் வச்சுக்கோயேன் மட்…” மாமியார் பக்கம் திரும்பி, “சரி த்தை… சாப்பிட்டு பாத்து சொல்லுங்க நானே செஞ்சேன்” மஹாலக்ஷ்மி அந்த கிண்ணத்தை திறந்து பார்த்தார். ரசமலாய்… பாதாம், பிஸ்தா, குங்குமப்பூ மேலே தாராளமாய் தூவி பாலில் ஊறி பார்க்கவே சுவைக்க தூண்டியது.
“அழகா இருக்கு வைஷ்ணவி ம்மா… கார்த்திக்கு ரசமலாய் ரொம்ப புடிக்கும்” உடனே மகனுக்கு சென்று ஒரு சிறிய கிண்ணத்தில் இரண்டை வைத்து தன்னுடைய அத்தைக்கும் ஒன்றை கொடுத்து மீதம் இருந்ததில் மகளும் தானும் உண்டனர். கார்த்தி இட்லியை அமைதியாக சாப்பிட இன்னும் இனிப்பை எடுக்கவில்லை.
“வைஷு நெஜமாவே நீ தான் செஞ்சியா?” – சுபத்ரா
“கடைல வாங்கிருப்பா” – சேர்மத்தாய்
“ஆமா என்ன கடைக்கு கூட்டிட்டு போய் வாங்கி கொடுத்ததே நீங்க தானே. சரியா தான் சொல்றிக”
வைஷ்ணவியின் பதிலில் சிரித்த சுபத்ரா, “நல்லா இருக்கு வைஷு ஆனா என்ன ஸ்வீட் தான் கம்மியா இருக்கு” எங்க மஹேஸ்வரியும் ஆமாம் என்று தலையை ஆடினார்.
“இன்னும் ரெண்டு ஸ்பூன் ஜீனி போட்ருந்தா சரியா இருந்துருக்கும்டா… ஏன் கார்த்தி?” மகனை உன்ன வைக்க அவனையும் இழுத்தார் அன்னை.
அமைதியாக ஒன்றை எடுத்து உண்டவன் அடுத்த ஒன்றையும் பொறுமையாக பாலில் சிந்தியிருந்த நட்ஸ் அனைத்தையும் ரசமலாய் மீது எடுத்து வைத்து காத்திருக்க இங்கு வைஷ்ணவிக்கு தான் பொறுமை காற்றில் பறந்தது. விட்டால் சென்று அவனுக்கு ஊட்டியே விட்ருப்பாள்.
மஹேஸ்வரி கூட அதே தான் கூறினார் ஆனால் அவன் வாயால் நல்லதோ கேட்டதோ அவனிடமிருந்து கேட்க ஆசை வைஷ்ணவிக்கு.
“நல்லா இருக்கு ம்மா…” என்றவன், “இந்த ஸ்வீட் தான் சரியா வரும். திகட்டாம இன்னும் ரெண்டு மூணு கூட சாப்பிடலாம்” கார்த்தியின் பார்வை தப்பி தவறி கூட வைஷ்ணவி பக்கம் செல்லவில்லை.
அன்னையை பார்த்தே பதில் கூறியவன் மீதம் இருந்த ஒன்றையும் எடுத்து ருசித்து உண்ண வைஷ்ணவியால் மகிழ்ச்சியை கட்டுப்படுத்தவே முடியவில்லை. மனத்தினுள்ளே அடக்கி வைத்து அவனையே கண் சிமிட்டாமல் உள் வாங்கிக்கொண்டிருந்தாள்.
“என்ற பேரன் உன்ர மனசு கஷ்டப்பட்டு போக கூடாதுன்னு அப்டி சொல்லி போட்ருப்பான்… உடனே ரொம்ப சந்தோச பட்டுக்கவேண்டாம்”
வைஷ்ணவியை பார்த்து முதியவர் சொல்ல, “அன்னைக்கு பிரியாணிக்கு குறை சொன்னப்ப மட்டும் உன்ர பேரன் சொன்னது சரியா இருந்ததோ” இவளும் விடாமல் வம்பு வளர்க்க துவங்கினாள்.
“இன்னைக்கு அவன் ஊருக்கு போற சந்தோஷத்துல அப்டி சொல்லிட்டான்” – சேர்மத்தாய்.
“இவ்ளோ பேசுறியே இத எப்படி செய்றதுன்னு சொல்லு பாப்போம்” – வைஷ்ணவி
“என்னத்த பெருசா செஞ்சிட போறிங்க மைதா மாவை விட்ட வேற என்ன தெரிஞ்சிடும் உங்களுக்கு” அழுத்துக்கொண்ட தன்னுடைய பாட்டியின் பேச்சில் வாய் விட்டு சத்தமாய் சிரித்தனர் அனைவரும் வைஷ்ணவியை தவிர.
“கெழவி நீ எல்லாம் என்ன குறை சொல்றதுக்கே லாய்க்கி இல்லாத ஆளு. ஸ்வீட் சாப்பிடாம, நாடகத்தை பாத்துட்டே வெத்தலையை போட்டோமான்னு இரு சொல்லிட்டேன்” கடுப்புடன் வைஷ்ணவி அவர் கையிலிருந்த கிண்ணத்தை பிடிங்கினாள்.