“வேணாம் ம்மா…” என்றான் யோசிக்காமல்.
படபடக்கும் இதயத்துடன் மஹாலக்ஷ்மி மகனின் முகத்தை பார்த்தார், “ஏன் ப்பா நல்ல பொண்ணு தானே?”
“நல்ல பொண்ணு தான் ம்மா… ஆனா நான் அந்த பொண்ணுகிட்ட வார்த்தையை விட்டுட்டுட்டேன்” என திணறினான்.
அன்று அவளிடம் பேசியதை எல்லாம் கூறினான், ஆனால் அவளுக்கு தன் மேல் விருப்பம் இருந்ததை பற்றி தான் வார்த்தை விட்டதை தெரியாமல் கூட வெளியிடவில்லை.
“என்ன பண்ணி வச்சிருக்க கார்த்தி? இப்படியா ஒரு பொண்ணுகிட்ட பேசுறது? மரியாதையை எல்லாம் சொல்லி தானே உன்ன நாங்க வளத்தோம்? ஏற்கனவே வீட்டுக்கு எதுக்க பொண்ண எடுத்திருக்க கார்த்தி லவ் பண்ணானானு யாரும் கேட்டா என்ன சொல்றது தெரியாம முழிச்சிட்டு இருக்கோம். இதுல நீ புது பிரச்சனைய இழுத்து வச்சிருக்க கார்த்தி” அன்னை கண்ணில் தெரிந்த அதிருப்த்தி அவனை குறுக செய்தது.
“எப்பவும் வீட்டுக்கு வர்ற பொண்ணு ரெண்டு நாளா வராதப்பவே நான் யோசிச்சிருக்கணும். என் மகன் மேல இருந்த நம்பிக்கைல தப்பா எதையும் யோசிக்கல” என்றார் மேலும்.
“குறும்பு இருக்குற அதே அளவு தெளிவும் வைஷ்ணவிகிட்ட இருக்கும் கார்த்தி. அந்த பொண்ணு சொல்றத அப்டியே கேட்டு செய்ற அளவு நானும் உன்னோட அப்பாவும் புத்தி கெட்டு போய்டல. ஒரு தடவைக்கு நூறு தடவ யோசிச்சு தான் உன்கிட்ட உண்மைய மறைச்சது, அதுக்காக எங்களையும் உன்னோட வாழ்க்கைல வரவே வேணாம்னு சொல்லிடுவியா?”
உஷ்ண பார்வை மகனுக்கு தந்தவர் எழுந்து செல்ல, அவர் கை பிடித்து, “சரி மா” என்றான் அன்னை கண் பார்க்காமல்.
புருவத்தை தூக்கியவர், “எதுக்கு சரி? உன் வாழ்க்கைல நாங்க வர கூடாதுன்னா?”
“ம்மா” கார்த்தியின் முகம் மேலும் வாடியது, “உங்க விருப்பம் எதுவோ அதையே பண்ணுங்க”
முழு மனதோடு தான் சம்மதம் கூறுகிறானா என்ற சந்தேகம் வர, “இங்க பாரு ப்பா… காலம் எல்லாம் ஒண்ணா சேர்ந்தது வாழ போறது நீயும் அந்த பொண்ணும் தான். நீ பேசுன வார்த்தை தந்த குற்ற உணர்ச்சில சம்மதிக்கிறதா இருந்தா கண்டிப்பா வேணாம் தம்பி. பரிதாபத்துலையோ கடமைக்காவோ உருவாகிற உறவு என்னைக்கும் நீடிக்காது” கண்டிப்புடன் கூறினார்.
“பரிதாபத்துல மன்னிப்பு கேக்கலாம் கல்யாணம் பண்ணிக்க முடியாது ம்மா”
மகனின் எண்ணம் புரிய வந்த மகிழ்ச்சியை கட்டுப்படுத்தி, “நீ சரின்னு சொல்லிட்ட, நீ பேசுன பேச்சுக்கு வைஷ்ணவி என்ன சொல்லுறான்னு பாக்கலாம்” என்றார் சற்று கோபத்துடன்.
“ம்மா எனக்காக ஒரே ஒரு ஹெல்ப் மட்டும் பண்ணுங்க” கண்கள் சுருங்கி அன்னையிடம் கெஞ்சினான், “நான் வைஷ்ணவிகிட்ட பேசணும்”
*****************
கழுத்து வலி நிச்சயம் வந்தேவிடும் என்னும் அளவிற்கு முகத்தை ஜன்னல் பக்கம் திருப்பி அமர்ந்தவள் தான் வீட்டிலிருந்து கிளம்பிய பொழுது தொட்டு இப்பொழுது மலை ஏறும் நேரம் கூட வலது பக்கம் திருப்பவே இல்லை.
மகனிடம் மாலை பேசியவர் அன்று இரவே மருமகளுக்கு அழைத்து கார்த்தியின் செயல்களுக்கு மன்னிப்பை வேண்டியவர் அவனுடைய சம்மதத்தையும் கூறிவிட, “வேணாம் உங்க பையன்னுக்கு வேற பொண்ணு பாருங்க” என்றாள் இறங்கி போன குரலில்.
அலைபேசியில் பேச முடியாத காரணத்தால் நாளை பண்பொழி திருமலை முருகன் கோவிலுக்கு வந்தே ஆக வேண்டும் என்று கூறியவர் இன்று காலை அவளுக்காக கீழே காத்திருந்தார்.
தாமதமாக எழுந்தவள் காலை உணவை கூட உண்ணாமல் மஹாலக்ஷ்மி காத்திருப்பதை பார்த்து ஓடி வந்தாள் அன்னையிடம் வாசலில் நின்றே சொல்லிவிட்டு. அடர் அரக்கு நிற முழு கை குர்த்தாவும் அதே நிற பாண்ட் அணிந்து, கருப்பு நிற பிரிண்டெட் துப்பட்டா என அவள் நிறத்திற்கு அந்த உடை இன்னும் எடுப்பாய் இருந்தது.
“கிளம்பலாம் த்தை” என நடந்தவளை நிறுத்தியவர் முன்பு தன்னுடைய காரினை நிறுத்தினான் கார்த்தி. அவளை பார்த்துக்கொண்டே முன் கதவினை எக்கி திறந்துவிட்டான்.
“இங்க இருக்க ஊருக்கு ஏன் வண்டி? வாங்க நாம பஸ்ல போகலாம் இல்லனா ஷேர் ஆட்டோ புடிக்கலாம்” அவனை முற்றிலும் தவிர்த்துவிட முயன்றாள்.
“எனக்கு முட்டி வலி வைஷு மா. வா வண்டிலேயே போய்டலாம்” என அவளை வம்படியாக வண்டியில் ஏற்றிக்கொண்டு, இதோ அந்த விசாலமான வாகனம் நிறுத்துமிடத்தில் வண்டியை நிறுத்தினான்.
கதவை திறந்து இறங்கிய வைஷ்ணவிக்கு ஒரு பக்கமாக கழுத்து சுளுக்கியது போல் சில நொடிகள் வலித்தது. கண்ணாடி வழியாக பின்னிருக்கையில் அமர்த்திருந்தவளை அடிக்கடி பார்த்தவன் இப்பொழுது கழுத்தை அப்படி இப்படி என உருட்டி சரி செய்தவளை விரிந்த புன்னகையுடன் பார்த்தான்.
“தம்பி நீ உள்ள வர்றியா?” என்றார் மகனின் கவனத்தை களைத்து.
“இல்ல ம்மா நீங்க போய்ட்டு வாங்க” என வெளியிலேயே நின்றுவிட்டான்.
கனமான மனதுடன் இறைவனின் வழிபாட்டை முடித்து பொதுவான பேச்சுகளோடு வெளியில் வந்த மஹாலக்ஷ்மியை சந்தேகத்துடன் பார்த்தாள்.
காலை ஒன்பதை நேரம் தாண்டியிருக்க வெளியில் அதிகம் தெரியவில்லை.
கோவிலை விட்டு வெளியில் வந்தவுடனே ஆடி மாசத்தை போலே காற்று சுழன்றடித்து வீசியது. மூன்று நாட்கள் உடலில் இருந்த இறுக்கம், மனசோர்வு சற்று தாழ்ந்த எண்ணம்.
வாகனத்தை நெருங்கி வந்ததும், “ஸ்ஸ்… இந்த கோவில்ல இருக்க ஐயர்கிட்ட கார்த்தி பேர்ல பூஜை பண்ணுற விசயத்த பத்தி பேசணும்னு நெனச்சிருக்கேன்”
அவள் கையில் கூடையையும் கோவில் பிரசாதத்தையும் கொடுத்து, “இத கார்த்திக்கிட்ட குடுத்துட்டுடா. நான் ஐயர்ட்ட பேசிட்டு வர்றேன்”
உள்ளே சென்றவரையும், தூரத்தில் வாகனத்தில் சாய்ந்து நின்று தன்னையே பார்ப்பவனையும் மாறி மாறி முறைத்து கார்த்தியை நோக்கியே நடந்தாள்.
பின் கதவை கார்த்தி திறந்து விட, கையிலிருந்த கூடையை வைத்து அவனை பார்க்காமல் வலது கையிலிருந்த திருநீறை அவனிடம் நீட்டினாள். “என்னங்க இது?” எடுக்காமல் சீண்டினான்.
பதில் சொல்லாமல் திரும்பி அவனை பார்க்கவும் இல்லை, “எதுவும் சொன்னிங்களா? எனக்கு கேக்கல” என்றான் விடாமல்.
அவள் ஏதாவது திட்டி, சண்டை கூட போட்டிடலாம், இப்டி மௌனமாய் இருப்பது தான் ஆக பெரிய மெனவுளைச்சலாய் இருந்தது கார்த்திக்கு. கை வலிக்க கையை குறுக்கினாள்.
கையை கீழ் வழியாக கார்த்தி பிடிக்க, வைஷ்ணவிக்கு உடலில் ஒரு நொடி மின்சாரம் பாய்ந்து உயர் ரத்த அழுத்தம் உருவான மாயை. அடி வயிற்றில் புதைத்திருந்த ஆசைகள் எல்லாம் ஒரே ஸ்பரிச தீண்டலில் மீண்டும் உயிர் பெற்றது போல் அவளின் உணர்ச்சிகளை கிளர்ந்தெழுப்பிவிட்டான். திடுக்கிட்டு கையை அவன் பிடியிலிருந்து இழுக்க முயல, அவள் கையை கெட்டியாக கார்த்தி பிடித்தான், தன்னை விரிந்த விழிகளுடன் பார்வையிட்டே நின்றவளை கண்டுகொள்ளாமல் திருநீறை எடுத்து நெற்றியில் வைத்து,
“சரியா வச்சிருக்கேனாங்க?” என்றான். அவன் கையை வெடுக்கென விட்டு முதுகு காட்டி நின்றுவிட்டாள்.
அவளின் மௌனத்தை புரிந்தவன் அவள் முன் சென்று நின்று சாக்லேட் பார் ஒன்றை நீட்டினான். வைஷ்ணவி தன் முன் நிற்பவனை முறைத்து, “என்ன லஞ்சம் குடுக்குறீங்களா?” என்றாள் அவனிடம் கேள்வியாக.
கார்த்தியின் உடல் தளர்ந்தது, “நீங்க காலைல சாப்புடாம வந்திங்கனு தான் வைஷ்ணவி குடுத்தேன். உங்ககிட்ட நான் ஏன் லஞ்சமா குடுக்கணும்?” அவள் முகம் பார்த்து ஏற்றுக்கொள்வாளா என்ற ஆசையுடன் நின்றான்.
“எனக்கு வேணாம்” ஒரே வார்த்தையில் மறுத்துவிட்டாள்.
அவன் குரல் கேட்டாலே அன்று தன்னிடம் பேசியது தான் வைஷ்ணவிக்கு நினைவில் வந்தது. அவன் உடன் நிற்க நிற்க மனதில் இருந்த இறுக்கம் எல்லாம் கட்டவிழ்ந்து உணர்ச்சிகள் உடைப்பெடுத்து சிதற தயாராக காத்திருந்தது.
“என் மேல இருக்க கோவத்துல தானே நீங்க இப்டி பண்றீங்க?” தலை சாய்த்து பார்த்து, “சாரி வைஷ்ணவி. ரொம்ப எமோஷன்ல இருந்தேன். அதான் வார்த்தை என்னையும் மீறி வந்துடுச்சு” தன்னிலை விளக்கம் கொடுத்தான்.
“என்கிட்ட எல்லாம் நீங்க சாரி கேக்குற அளவு நமக்குள்ள என்ன இருக்கு?” அந்நியமாய் இருந்தது அவள் பேச்சு.
ஆழ்ந்து மூச்சை இழுத்து, “ஏதோ மாதிரி பேசாத வைஷ்ணவி. ரொம்ப கில்டியா இருக்கு” ஒருமையில் தன்னை அவன் அழைத்து கலங்கிய அவள் மனதில் பதியவில்லை.
“நீங்க கில்டியா இருக்க தேவையில்லை. எல்லா தப்பும் என் மேல தான். தகுதியே இல்லாம உங்க கூட என்னோட லைப்ப ஷேர் பண்ணனும்னு நெனச்சேன்”
“வைஷ்ணவி… அப்டி எல்லாம் ஒன்னுமில்ல. ஏன் இந்த தேவ இல்லாத பேச்சு?”
இல்லை என தலையை ஆட்டினாள், “இப்ப தான் சரியா பேசுறேன் போல. நான் உங்கள கம்பெல் பண்ணி என் மேல பிரியத்தை வர வைக்கணும்னு என்னைக்குமே நினைக்கல, அதே நேரம் ஏதோ ஒரு வகைல உங்களுக்கு என்ன புடிக்கும் அதுனால தான் நான் உங்கள துரத்தி டிஸ்டர்ப் பண்ண நேரமெல்லாம் ஒன்னும் சொல்லல-னு”
சிரிப்போடு தலையில் அடித்தவள் கண்ணிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது, “பைத்தியம். பைத்தியம் தான் நானு”
அவனை விட்டு சற்று தூரம் கண்ணீரை மறைக்க நடந்தவள் அந்த சாலையின் ஓரத்தில் இருந்த விளிம்பில் நின்று கீழே பச்சை நிறத்தை நிலத்தில் தூவியது போல் மினுமினுப்பான காட்சியளித்த அவளுடைய ஊரையும், கால்களில் சக்கரத்தை கட்டி ஓடிக்கொண்டிருக்கும் மேகத்தையும் பார்த்து தன்னை ஆசுவாசப்படுத்தி முயன்றாள்.