இது வைஷ்ணவியே இல்லை, எதற்கும் அசராமல் இருப்பவளால் அவனை, அவன் எண்ணங்களை விட்டு இருக்க முடியவில்லை, மணிக்கொருமுறை அவன் நினைவுகள் அவளையும் அறியாமல் வந்து நின்றுவிடும். காலை எழும் நேரம் அவன் அறை தரிசனம், இரவு தன்னுடைய அறைக்கு செல்லும் பொழுது அவன் அறை தரிசனம் என அவனே நேரில் வந்து நின்றது போல் அவள் சிந்தனையை முற்றிலும் ஆக்ரமித்துவிட்டான்.
அதனாலேயே காலை கீழ் இறங்கினால் இரவு அவன் அறையை பார்க்காமல் கழுத்தை சுவற்றை நோக்கி திருப்பிக்கொண்டே, ‘திருடா திருடா…’ அவனை திட்டிவிடுவாள் செல்லும் வழி எங்கும்.
“வைஷ்ணவி… அதெல்லாம் விட்ரலாம். என் மேலையும் தப்பு இருக்கு. அதே நேரம் நீங்க பண்ணது சரியான்னு யோசிச்சீங்களா?”
“ஏன் யோசிக்கல? நாடு கடந்து, கடல் கடந்து தனக்கு அனுபவம் வேணும்னு போனவர், போறப்ப எப்படி நிம்மதியா போனாரோ, அதே நிம்மதி அங்க இருக்குற நேரம் எல்லாம் இருக்கணும்னு நான் ஆசை பட்டேன். இது தப்பாயா?” பதமாக பேச துவங்கியவள் அவனை திரும்பி எகிறிக்கொண்டு நின்றாள் இறுதியில்.
ஒரு அடி பின்னே சென்றவன் சுற்றிலும் கவனித்தான். வாரத்தின் இடைப்பட்ட நாள் என்பதால் அதிகம் கூட்டம் இல்லை. அதிலும் இவர்கள் நிற்பது அவனுடைய வாகனத்திற்கு பின்பு இருந்த இடைவேளையில்.
“தப்பில்ல, எனக்கு என்ன நடக்குதுன்னு தெரிஞ்சிருந்தா போதுமே… அத தானே நான் சொல்றேன். உன்ன நம்பி உன் பொறுப்புல விட்டது, உனக்கு அத பத்தி என்னன்னே தெரியல, இதுல மொத்தமா உங்கிட்ட பணத்தை முடக்கி நஷ்டப்பட சொல்றியா-னு கேக்குறான் என் பார்ட்னர். என்ன பதில் சொல்லுவேன் நான்?”
“டேய் கூறுகெட்டவனே… பிரச்சனை தான் எதுவும் இல்லையேடா… அவ்வளவு அக்கறை இருந்தா டெய்லி வந்து செங்கலை தூக்கிவிட்டு, சிமெண்ட் கலக்கி கட்டட வேலைய பாக்கலாம்ல?-னு நாக புடுங்குற மாதிரி கேள்வி கேக்காமயா வந்திங்க?” தன்னையும் மறந்து அவனிடம் பேசியவன் மேல வைஷ்ணவிக்கு கோவம் வர அவளை பார்த்து வாய் விட்டு மனதார சிரித்தான்.
அவனை உதட்டை சுளித்து முறைத்தவளிடம், “உன்ன மாதிரி எல்லாம் எனக்கு பேச வராது” என்றான் அதே சிரிப்போடு.
‘என்ன இன்னைக்கு இவன் சிரிப்பே சரியில்ல… ஒரு வேலை என் மேல அது… ச்ச ச்ச இருக்காது இருக்காது… சமையல் மானஸ்தன்’ என்றது மனம்.
“இதுக்கெல்லாம் கிளாஸா வச்சு நடத்துவாங்க?” மஹாலக்ஷ்மி வந்துவிட மாட்டாரா என்று கோவிலை எட்டி பார்த்தாள்.
“ஏன் எனக்கு கிளாஸ் எடுக்க மாட்டியா வைஷ்ணவி?” முகத்தை பாவமாக வைத்து பார்த்தவனை உன்னிப்பாக கவனித்த பொழுது தான் தன்னை ஒருமையில் அவன் அழைத்தது புரிந்தது.
“நான் அத்தைய பாக்க போறேன்” நடையை கட்ட முயன்றவளின் கை பிடித்து நிறுத்தினான்.
அவன் பிடித்ததில் திணறி போனவள் விலக முயன்று தோற்று தான் போனாள், “கைய விடுங்க” என்றாள்.
“விடுறேன். ஆனா அம்மாகிட்ட போய் சரி சொல்லு” என்றான் அவன்.
“எதுக்கு சரி?”
அவன் கையை உருவ முயன்று தோல்வியடைய அவன் ஒவ்வொரு விரல்களாய் எடுத்துவிட தீவிரமாக போராடிக்கொண்டிருந்தாள், அது முடியாமல் போக அவனிடமிருந்து திணறுவதை நிறுத்தி எப்படி இவ்வளவு கெட்டியாக பிடித்திருக்கிறான் என்ற போராடாமல் நின்று ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தாள். அவன் பதில் தராமல் போக தலை தூக்கி கார்த்தியை பார்க்க, அவனோ அவளை உறைந்த புன்னகையுடன் இருந்தான்.
“யாருயா நீ? உர்ருனு முகத்த வச்சிட்டு, ஜெல் தடவுன முடி மாதிரி வெரப்பா இருக்குமே கடலைமிட்டாய்… அவரு எங்க?”
“அவன சவூதில விட்டுட்டு வந்துருக்கேன்… இனி அவன இந்தியா கூட்டிட்டு வர்ற ஐடியா இல்ல”
தலையை ஆட்டினான், “சரி நீ இப்போ என்ன பண்றனா… உள்ள அம்மாகிட்ட போய், சமயலுக்கு காலம் எல்லாம் நான் கிளாஸ் எடுக்க போறேன்னு சொல்லு” என்றான் குறும்பாய்.
“நான் கல்யாணம் ஆகிட்டு என் மாமியார் வீட்டுக்கு போய்டுவேன். அப்போ உங்களுக்கெல்லாம் சொல்லி தர முடியாது. வேற ஆள பாருங்க” அந்த மக்கிற்கு அவன் கூறும் பொருள் புரியாமல் போனது.
“இனிமேல் வேற ஆள பாக்குற எண்ணமே இல்ல. காலம் எல்லாம் இந்த பஜாரி தான்-னு முடிவோட இருக்கேன்” அவள் நுனி மூக்கை ஒரு விறல் கொண்டு மெல்ல அழுத்தினான், “இதுக்கப்பறம் இந்த பஜாரியே சட்டையை புடிச்சு மிரட்டுனாலும் பயப்புட மாட்டேன்…” புருவத்தை உயர்த்தி, “என்ன சொல்றியா?” என்றான் மீசை துடிக்க சிரிப்போடு.
அவன் அதிரடியில் அதிர்ந்து நின்ற வைஷ்ணவிக்கு அவன் என்ன பேசினான் என்பதே புரியாமல் போனது, “ஆஹ்?” அவனுக்கே மீண்டும் கேள்வி சென்றது.
அவள் கையை விட்டு இலகுவாக பாண்ட் பாக்கெட்டில் ஒரு கையை விட்டு மற்றொரு கையை சிலுப்பி அடங்காமல் ஆடிய சிகையில் மற்றொரு கையை விட்டு அடக்கி வைத்தவன், “செங்கோட்டை பஜாரிய கல்யாணம் பண்ணி வாழ்க்கை தர போறேன்”
பாக்கெட்டிலிருந்து ஒரு சிறிய பெட்டியை அவள் பிரமித்து நின்ற பொழுதே கை பிடித்து அதில் பத்திரப்படுத்திவிட்டு, “நீ உள்ள போற வர அம்மா வெளிய வர மாட்டாங்க. போ” என அங்கிருந்து நகன்றான்.
மந்திரித்த பொம்மை போல் அவன கூறியதும் கோவிலினுள் மீண்டும் செல்ல கொடிமரத்திற்கு முன்பே அமர்ந்திருந்தார் மஹாலக்ஷ்மி. அவர் அருகே சென்று அமர்ந்தவள்,
“என்ன உங்க பையன் ஒரு விளையாட்டுக்கு பேசுறாருனு பாத்தா கைய புடிச்சு இழுக்குறாரு, கட்டிக்கோன்னு சொல்றாரு… என்ன அப்பாவி பிள்ளையை கூட்டிட்டு வந்து குடும்பமா கடத்த பாக்குறீங்களா? ஜேம்ஸ் பாண்ட் தெரியும்ல? கேஸ் போட்டா ஆயுசுக்கும் ஜெயில் தான்… லாடம் கட்டிடுவார்” பயத்திலே மிரட்டினாள்.
அவளை பார்த்த மஹாலக்ஷ்மி மனம் நிறைந்த சிரிப்போடு, “அவனுக்கு உன்ன எப்படியும் புடிச்சிருடா…”
“புடிச்சனால தான் அவரோட வழக்கைலயே வராத-னு சொன்னாரா?” அங்கலாய்த்தாள் சோர்வாக.
“உன்ன அப்டி கஷ்ட படுத்திட்ட காரணத்துல தான் அவன் இந்தியா வந்ததே…” – மஹாலக்ஷ்மி
“இந்த கதை தானே வேணாம்னு சொல்றது. உங்க பையன் என்ன பாக்க… அங்க இருந்து ரெண்டு நாள் ட்ராவல் பண்ணி வருவாரா? ஐஸ் வைக்கலாம் அதுக்குன்னு அண்டார்டிகா கடல்ல தூக்கி போட்டா உருக மாட்டேன், உயிர் தான் போகும்”
அவள் காதை திருகியவர், “கோவில்ல வச்சு நல்ல வார்த்தை பேசுறியா?” கடிந்தார்.
“ஆ… ஆ… அப்ப ஹைவேஸ் நடுல நின்னு சொன்னா எனக்கு ஒன்னுமாகாதா? ஆஆ… வலிக்கிது த்தை…” கத்தினாள்.
காதை விட்டவர், “இந்த வாய் தான் என் பையன உன் பக்கம் திரும்ப வச்சிருக்கும்…” முறைப்படி விட்டு சிரித்தார், “அவன் என் பையன் வைஷுமா… அவன் எந்த நேரத்துல எப்படி இருப்பான். எந்த மாதிரி யோசிப்பான்னு எனக்கு தெரியாதா?” என்றவர் மேலும்,
“பிரச்னைய எல்லாம் போன் பண்ணியே சமாளிச்சிடுவான் என் கார்த்தி. ஆனா உன்ன பேசுனது மனச கொடஞ்சிருக்கும். அதான் பறந்து வந்துட்டான்”
“என்ன ஏமாத்துறிங்க” அவர் கூறுவது போல் இருந்தால் மொத்தமும் மறந்து ஓடி சென்று அவனை அணைக்கும் ஏக்கம் அவள் மனதில் இருந்தது வைஷ்ணவியின் கண்களிலே தெரிந்தது.
“நான் ஏன் ஏமாத்தணும்… நீயே அவன கல்யாணம் பண்ணி தெரிஞ்சுக்கோ” கண்ணடித்தார் மருமகளிடம்.
முகம் செவ்வானமாய் செம்மையுற, கைகளில் அவன் தந்த பெட்டியை கெட்டியாக பிடித்தவள், மஹாலக்ஷ்மி முகம் பார்த்து, “அவர் என்ன பேசுனத்துக்கு பழி வாங்குவேன் பரவல்லயா?”
சரி என்றார் சிரிப்போடு, “அவர் உங்க பையன்… சரினு சொல்றிங்க?” “புருஷன் பொண்டாட்டிக்குள்ள ஆயிரம் இருக்கும். அதுல நான் வர மாட்டேன் ப்பா” என மேலும் சிரித்தார்.
மேலும் வைஷ்ணவிக்கு வெட்கம் வர, “நான் கார்ல இருக்கேன்” என விறு விறுவென வெளியில் ஓடினாள்.
இல்லம் திரும்பும் பொழுது வைஷ்ணவி மன பாரம் எல்லாம் காற்றொரு காற்றாக கரைந்தது நிறைந்த மனதுடன் பயணித்தது. இல்லம் வந்ததும் அவனையே, மஹாலக்ஷ்மியையோ பார்க்கும் எண்ணம் இல்லை, அவன் கொடுத்த முதல் பரிசை ஆவலாய், ஆசையாய் பிரித்து பார்க்க தன்னுடைய அறைக்கு ஓடினாள்.
கட்டிலில் அமர்ந்து பிரித்தாள், கையில் வீடியோ ரெகார்ட் ஓடிக்கொண்டிருந்தது… நினைவலைகளை சேமிக்க… திறந்து பார்த்தாள், மெல்லிய தங்க சங்கிலி ஒன்றும் அதில் இதய வடிவில் அழகிய சின்ன டாலர் ஒன்றும் இருந்தது.
ஆசையாய் கண்ணாடி முன்பு சென்று தன்னுடைய கழுத்தில் அணிந்தவள் அப்படியும் இப்படியும் திரும்பி பார்த்துக்கொண்டாள். பின் பல கோணங்களில் நின்று செலஃபீ எடுத்து ரசித்துக்கொண்டாள்.
கதவை திறந்து மெல்ல தலையை மட்டும் வெளியில் விட்டு அவன் வீட்டு மாடியை பார்க்க, அறைக்கு வெளியில் கார்த்தி நின்றிருந்தது அவளுக்காக என தெரிந்தது.
கழுத்திலிருந்ததை அவிழ்த்து அதை ஒரு புகைபடமெடுத்து அந்த புகைப்படத்தோடு,
‘எனக்கு செட் ஆகல… ?’ என வாட்ஸ்ஆப்பில் அனுப்பி தலையை அறைக்கு வெளியில் விட்டு அவனுடைய எதிர்வினையை பார்த்தாள். அவன் முகம் வாடியிருந்தது.
‘போட்டு பாத்தா தானே தெரியும் ?’ – கார்த்தி
‘போட்டு பாத்து தான் சொன்னது’ – வைஷ்ணவி
‘நான் பாக்கலயே. வெளிய தான் நிக்கிறேன்’
அவன் ஏக்கம் புரிந்தவள் வேகமாக தலையை சரி செய்து முகத்தை கண்ணாடியில் பார்த்து திருப்த்தி ஆனதும் சங்கிலியை கழுத்தில் அணிந்து வெளியில் வந்தவள் விருப்பமே இல்லாமல் அதை வந்து நிற்பது போல் நின்றாள் முகத்தை தூக்கி வைத்து. வைஷ்ணவியை பார்த்தவன் மெச்சும் பார்வையோடு குறுந்செய்தியை தட்டிவிட்டான்.
‘நல்லா தானே இருக்கு. உனக்கு அழகா இருக்கே ?’
‘நல்லா தான் இருக்கு, ஆனா எனக்கு நாய் டாலர் தான் புடிக்கும் ??’ என்ற குறுந்செய்தியை அனுப்பிவிட்டு கழுத்தை வெட்டி சென்றவேளை அடக்க முடியாத சிரிப்போடு கடந்தான் கார்த்திக்.
அவளுடைய விருப்பத்தை அவள் கண்களை பார்த்தே புரிந்துகொண்டான் அவளுடைய கடலைமிட்டாய். அந்த கண்களை விடவா அவள் கதை பேசிவிட போகிறாள்?
How is the chapter? Comments, please…
Kadhai pora flow ok ah? Any changes I need to do?