மறுநாள் சென்னையில் ஒரு முக்கியமான திருமண நிகழ்ச்சி நடைபெற இருப்பதால் மதியமே கார்த்தியின் மொத்த குடும்பமும் கிளம்பியது, மஹாலக்ஷ்மி வைஷ்ணவியை அழைக்க அவன் வராமல் தான் மட்டும் வர விருப்பமில்லை என்பதை மறைத்து,
“இப்ப மட்டும் நான் இங்க இல்லனா ஷெர்லின் என்னை என்ன செய்வான்னே தெரியல த்த…” என சிரிப்போடு சொல்ல, அவரும் சரி என்று வைஷ்ணவியை வற்புறுத்தாமல் சேர்மத்தாயை மட்டும் பார்த்துக்கொள்ளுமாறு கூறி சென்றார்.
இரவு உணவை தயாரித்து சுட சுட இருந்த ரவை தோசையை சேர்மத்தாயின் அறைக்கு எடுத்து சென்றாள். மகன் அன்று திட்டியதிலிருந்து வைஷ்ணவியிடம் பேசாதிருந்தவர் இன்றும் அவளிடம் பேசாமல் மெத்தையிலமர்ந்து வழக்கத்தை மாற்றாமல் நாடகத்தில் கண்ணை வைத்திருந்தார்.
“என்ன பாட்டி ரொம்ப தான் மூஞ்சிய தூக்கி வச்சுகுறிக?” சிறு பிள்ளை போல முகத்தை வெட்டி மீண்டும் வேலையில் இறங்கியவரை பார்க்க சிரிப்பு தான் வந்தது வைஷ்ணவிக்கு.
“சரி என்கிட்ட பேச வேணாம், உங்களுக்கு கடலை சட்னி, சாம்பார் வச்சிருக்கேன் போதுமா இல்ல தேங்காய் சட்னி போடவா?” – வைஷ்ணவி
“ஹ்ம்ம் போதும் போதும்” என்றவர் கண்கள் தட்டில் ரவை தோசையை பரிமாறும் வைஷ்ணவியை பார்த்தது.
தான் பேசியதை பொருட்படுத்தாமல் இன்முகத்தோடு ஹாட்பாக்சில் இருந்த தோசையை வைத்தவள் சுட சுட இருந்த சாம்பாரை அவர் விரும்புவது போல் தோசை முழுதும் ஊற்றி, அதன் மேல் கெட்டியாக அரைத்த சட்னியை ஊற்றி அவர் கையில் கொடுத்தாள்.
அமைதியாக அவர் அருகில் அமர்ந்தபடியே உடன் சேர்ந்து தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டே அவருக்கு தேவையானவற்றை வைத்து முதியவர் உண்டு முடிக்கும் வரை கவனித்துக்கொண்டாள். பிறகு உணவை சமயலறையில் வைத்துவிட்டு சென்றுவிடுவாள் என்று சேர்மத்தாய் நினைத்திருக்க வைஷ்ணவியோ வந்து மீண்டும் அவர் அருகில் அமர்ந்துகொண்டாள் கைபேசியுடன்.
தொலைக்காட்சியில் ஒரு கண்ணும் மறு கண் பேத்தியின் மீதும் அவர் வைத்திருக்க, சில நிமிடங்களில் கைபேசியை முன்னிருந்த சிறிய டீபாயில் வைத்துவிட்டு மௌனமாய் இருந்தாள். அவளை கவனிக்காமல் நாடகத்தில் கவனம் செய்திருந்த நேரம் திடீரென பேத்தி தன்னுடைய மடியில் வலிக்காமல் படுத்தவளை எதிர்பார்க்கவே இல்லை.
அவளை ஒரு வார்த்தை கூட சொல்லவும் முடியவில்லை, அவரும் கவனித்துக்கொண்டே தானே இருக்கிறார் கலையே இல்லாத அவள் முகத்தை. மொத்த வீடையும் இரண்டாக்குபவள் இப்பொழுதோ அமைதியின் திருவுருவமாய்…
சில நிமிடங்கள் கடந்தது, வைஷ்ணவி கண்ணிலிருந்து நிற்காமல் கண்ணீர் வர, “ஏனுங் அம்மனி என்ன இது? என்ன ஆகிப்போச்சுன்னு இப்டி கண்ண கசக்கிபோடுறிங்க?” அவருக்கே பதட்டமானது அவள் இந்த புது பரிமாற்றம்.
“என்ன மன்னிச்சிடுங்க கெழவி… எனக்கு அவரை ரொம்ப புடிக்கும், அதான் இப்டி எல்லாம் பண்ணேன்… எத்தனை தடவ வேணும்னாலும் உங்ககிட்ட சாரி கேக்குறேன் ஆனா அவரை என்கிட்ட பேச மட்டும் சொல்றிங்களா?என்கிட்ட பேசவே மாட்டிக்கிறாங்க… ரொம்ப கஷ்டமா இருக்கு, அழுகையா வருது நீங்க சொன்னா அவரு கேப்பாரு”
தேம்பி தேம்பி அழுகும் பேத்தியை பார்த்து அவருடைய குற்றவுணர்ச்சி இன்னும் அதிகரித்தது. பேரன் மேல் இப்படி பாசத்தை வைத்திருக்கும் பெண்ணையோ வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசிவிட்டோம் என மனம் வாட்டியது.
“இந்த எந்திரிங்க அம்மணி…” அதட்டி எழுப்பி அவள் கன்னம் துடைத்து, “இது என்ன சின்ன புள்ள கணக்கா கண்ண கசக்கிப்போட்டு? உங்கிட்ட பேசாம உன்ர வீட்டுக்கார் எங்க போகிற போறான்? நீ சாப்பிடலள?”
சுருங்கிய முகத்துடன் இல்லை என்றவளை மிரட்டி உன்ன வைத்தார் அருகிலே அமர்ந்து, “அம்மணி இந்த கெழவி சொன்னதை மனசுல இருந்து தூக்கிபோட்டுடுங்க… ஏதோ ஒரு கோவத்துல சொல்லிப்போட்டேன், வயசாகுதுல?” என்றவரை பார்த்து மனதார சிரித்து,
“மன்னிச்சுப்போட்டேன் கெழவி, சரி நான் தூங்க போறேன்” என தங்கள் அறையினுள் தஞ்சம் புகுந்துவிட்டாள்.
மறு பக்கம் மாலையிலிருந்து மனைவியின் எண்ணங்களில் தலை வலி பெற்ற கார்த்தி மாலை பொழுதிலே இல்லம் வந்து படுக்கையில் சரிந்தான். அவள் அருகில் இருந்த பொழுது புரிந்துகொள்ளாத காதல், புகைப்படமாக மட்டுமே சுவற்றில் சிரித்துக்கொண்டிருக்கும் பொழுது புரிந்தது.
கேட்டு ரசித்த பாடல்கள் எல்லாம் வாழ்க்கையோடு ஒற்றுப்போனது. சோகத்தை மறக்க ராகத்தில் மூழ்கி ராகமும் அவளை இழுக்க என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தான் அவன். பிரிவு நடத்திய பாடங்கள் பல அதில் தனிமை கண்ணீரை பரிசளித்தது வெளியே காட்டிக்கொடுக்காமல் தன் கண்ணீரை உரிந்த தலையணையை இன்னும் நெஞ்சோடு இறுக்கமாக அணைத்தாயிற்று.
அவள் இல்லாத இடம் சூனியமாய் தெரிந்தது. தலை வலி மாத்திரையை போட்டும் உறக்கம் அருகில் கூட நெருங்கவில்லை. அரைகுறையாய் போடும் அவள் டீ அந்த நொடி தேவைப்பட்டது.
“வைஷு மா…” என அனத்தியவன் இன்னும் இன்னும் தலையணையை கட்டிக்கொண்டான்.
சரியாக கைபேசி சினுங்க அவன் பாட்டியிடமிருந்து அழைப்பு வரவும் ஹலோ என்று கூட சொல்ல விடவில்லை அவனை.
“என்றா நினைச்சிட்டு இருக்க உன்ர மனசுல? என்ர பேத்தியை ஏண்டா அழுக வக்கிர?”
“பாட்டி…”
“பேசாத சொல்லிப்போட்டேன்… அந்த சின்ன புள்ளைய அழுக போட்டு நீ சந்தோசமா அங்க ஊர் அலைஞ்சிட்டு இருக்கியா? ஒழுங்கா என்ர பேதிக்கிட்ட பேசிப்போடு இல்லனா உன்ர வண்டி சக்கரத்துல காத்து இருக்காது சொல்லிப்போட்டேன்” அவனை பேசவிடாமல் கோவமாய் இணைப்பை அனைத்துவிட்டார்.
அவனுக்கும் முதியவர் பேசியதில் எதுவுமே கேட்கவில்லை மனைவி அழுகிறாள் என்பதை தவிர்த்து. மணியை பார்த்தான் இரவு ஒன்பதை தாண்டியிருந்தது.
ஏற்கனவே பாடாய் படும் மனதை அடக்க வழி தெரியாமல் தவித்தவனுக்கு விடை மனைவியாய் தெரிய இருவரின் வேதனையையும் தீர்க்க யோசிக்காமல் வீட்டை விட்டு தன்னுடைய ராயல் என்பீல்ட்டில் செங்கோட்டைக்கு பறந்தான்.
இல்லம் வந்ததும் பூட்டியிருந்த கேட்டை திறவாமல் ஏறி குதித்தவன் மாடியில் உள்ள தன்னுடைய அறையை சாவியில்லாமல் எப்படி திறப்பது என யோசித்தே சில நிமிடங்கள் கடக்க, தண்ணீர் அருந்த வந்த பொழுது வீட்டின் வெளியில் நிழலாடுவதை பார்த்து சந்தேகமாய் ஜன்னல் வழி வாசலை பார்த்த சேர்மத்தாய், பேரன் தான் வந்துள்ளான் என தெரிந்து கதவை திறக்க, அரவம் கேட்டு முதியவரை கவிழ்ந்த தலையுடன் உள்ளே சென்றான் தன்னுடைய அறையின் சாவியை எடுக்க.
“என்னம்லே உன்ர புத்தி வேலை செய்றத நிறுத்திப்போடுச்சோ? யார் என்ன சொன்னாலும் ஒடனே பொஞ்சாதிய திட்டிபோட்டு வீட்டுக்கு அனுப்பி வச்சிருக்க?” என்றார் கோவமாக.