அவர் திட்டும் நேரத்திலே தன்னுடைய சாவியை எடுத்தவன், வாகனத்தின் சாவியை ஆணியில் மாட்டிவிட்டு சேர்மத்தாயின் அருகில் வந்தவன் அவர் கை பிடித்து, “உங்க பேத்தி இனி இப்டி உர்ருனு இருக்க மாட்டா… என் மேல நம்பிக்கை வச்சு நிம்மதியா படுங்க”
அவர் கையில் அழுத்தமாய் தன் மற்றொரு கையை வைத்து மூடியவன் வேகமாக படி ஏறி தன்னுடைய அறைக்குள் சென்றான்.
நேரமே வந்த காரணத்தால் வைஷ்ணவி தலையணையை அணைவாய் வைத்து உறக்கம் தழுவியிருக்க பூனை போல் சத்தமே போடாமல் மெத்தையில் வந்தமர்ந்த கார்த்தி மனைவியிடமிருந்து தலையணையை மெதுவாக எடுத்து தூரமாக எறிந்தான்.
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த வைஷ்ணவி உடலை அசைத்து மீண்டும் உறக்கத்திற்கு போக, கார்த்தி மெதுவாக அவள் உடலோடு தன் உடலை உரசும்படி மனைவியின் நெஞ்சத்தில் தன் முகத்தை பதித்து படுத்தான். பயணத்தின் பொழுது உடலில் இருந்த குளிர்ச்சி, அவள் மார்பில் தலை சாய்ந்த பொழுது காணாமல் சென்றது.
சூடேற்றிய அவள் உடலோடு இன்னும் ஒன்றிட எண்ணினாலும் மனைவி உறக்கம் கலைந்திடும் என அச்சத்தில் அசையாது அவன் இருக்க, நான்கு நாட்களாக சவரம் செய்யாத அவனுடைய ஒரு வார தாடி வைஷ்ணவியின் உடலை குத்தி உறக்கத்திலிருந்து எழுப்பியது.
லேசாக கண்களை திறந்து பார்த்தபொழுது கணவன் தெரிய தன்னையே அறியாமல் கண்ணீர் பெருக்கெடுத்தது.
‘எத்தனை அழைப்புகள், எத்தனை மன்னிப்பு செய்திகள் அனுப்பினேன் எதற்கும் பதிலே சொல்லாமல் இருந்துவிட்டு இப்பொழுது என்ன திடீர் பாசம்?’ என்ற கோவம் வர, பெண்ணவள் கணவனை தள்ளினாள்.
மனைவி விழித்ததை அறிந்தவன் இனி ஏது தடை என அவள் இடையின் அடியில் கை கொண்டு அவள் மொத்த உடலையும் தன் உடலோடு இன்னும் நெருக்கமாக அணைத்துக்கொண்டான். வைஷ்ணவி வேண்டும் என்றே அவனை தள்ளும் முயற்சியில் தீவிரமாக இருக்க, கார்த்தி அவளை விடுவதாக இல்லை, திமிரும் அவளின் நெஞ்சத்திலே ஆடையின் மேல் இதழ்களை பதிக்க உடல் நடுங்கி அடங்கினாள் அவனிடம்.
பெண்ணின் திமிறலை அடக்கியவனால் அவளது மன கசப்பை கரைக்க முடியவில்லை.
“போயா… நான் வேணாம்னு சொல்லி தான என் அப்பா வீட்டுக்கு போக சொன்ன? நீ வேணாம் எனக்கு போ…” அவன் தலையை பிடித்து துள்ளினாள் அழுகையோடு.
அவளது பலத்தில் தோற்றவனாய் தலையை தூக்கி அவள் முகம் பார்க்க, மொத்தமும் சிவந்து கண்களுக்கு கீழ் கருவளையம் படர்ந்திருந்தது. “போங்க…” கார்த்தியை வைஷ்ணவி மீண்டும் தன்னை விட்டு தள்ளும் முயற்சியில் தன் மேல் கிடந்த அவன் கை கட்டை அவிழ்க்கப்பார்த்தாள்.
அவனோ அதையே சாக்காக வைத்து அவளை கீழே இழுத்து அவள் முகத்தை தன்னுடைய முகத்திற்கு நேராக வைத்தான்.
“எதுக்கு என் பொண்டாட்டிக்கு மூக்கெல்லாம் இப்டி செவந்துருக்கு?” விசும்பும் அவள் முகத்தை ஒரு கையால் ஏந்தினான்.
அவன் கையை தட்டிவிட்டு பேசாமல் மீண்டும் கண்ணீர் பெருக்கெடுத்தது வைஷ்ணவிக்கு, “ப்ச்…” அவள் அழுகையை பொறுக்க முடியாதவன் மூக்கோடு அவள் மூக்கோடு தன் மூக்கை உரசி, “வேணாம்டா…” என்றான் கெஞ்சலாக.
மெல்ல மெல்ல துவங்கிய அழுகை கேவலாக மாற அவன் நெஞ்சில் அழுகையோடு குத்தினாள், “நீங்க வேணாம் எனக்கு… போங்க… எனக்கு உங்கள புடிக்கல…”
சிறு பிள்ளையாய் அழுகும் மனைவியை கனிந்த காதலோடு நோக்கியவன் அவள் இடையிலிருந்து கையை எடுத்து, “சரி அப்போ நான் கிளம்புறேன்” என சொல்லிய அடுத்த நொடி காலர் இல்லாத அவன் டீ-ஷர்ட்டை பற்றியவள் அவன் மூக்கை கடித்துவைத்தாள்.
“ஸ்ஸ் ஆஆ…” நிஜமாகவே அந்த எதிர்பாரா தாக்குதல் வலித்தது அவனுக்கு.
“வலிக்குதா? எனக்கும் அப்டி தானே வலிச்சிருக்கும் நீங்க என்ன விட்டு போனப்ப?” அழுகை பாதி கோவம் பாதியாய் கேட்ட மனையாட்டி அவன் நெஞ்சில் சாய்ந்து மனதில் இருந்த வருத்தத்தை எல்லாம் கண்ணீர் மூலம் அவனிடம் கொட்டித்தீர்க்க அவள் தலையை மென்மையாய் கோதினான் சமாதானம் செய்யும் நோக்கோடு.
நேரம் செல்ல செல்ல அவள் அழுகை நிற்கப்போவதில்லை என்றான பின்னர், “டேய் வைஷ்ணவி வேணாம்டா… நீ அழுகுறத பாக்க கஷ்டமா இருக்கு” கெஞ்சினான்.
“எனக்கு எவ்ளோ கஷ்டமா இருந்தது தெரியுமா?” அவனை உதறி தள்ளி படுத்தாள்.
“என்னடா…” என்றான் தவிப்பாக.
“அன்னைக்கு என்ன சொன்னிங்க? வீடு வீடா நான் போய் கல்யாணம் பண்ணி வைங்கன்னு சொன்னேனா? ஏன் உங்களுக்கு தெரியாதா நான் யார் வீட்டு படிய மிதிச்சேன்னு? நீங்க அப்டி சொன்னப்ப எவ்ளோ கஷ்டமா இருந்தது தெரியுமா? ஆனா உங்களுக்கு தான் நான் எப்படி இருந்தாலும் கவலையே இருக்காதுல? அஞ்சு நாள்ல ஒரு நாள்… ஒரு தடவ ஒரு மெசேஜ் பண்ணிங்களா?”
அவள் விசும்பல் அதிகமாக எழுந்து அமர்ந்தவன் மனைவி அருகில் செல்ல அவனை தள்ளிவிட்டு, “வராதீங்க பக்கத்துல… என்ன மிஸ் பண்ணிருப்பேன்னு நீங்க பீல் பண்ணது எல்லாம் போய் தானே கார்த்திக்?” உதடெல்லாம் வறண்டு விக்கல் வர துவங்கியது வைஷ்ணவிக்கு.
“நான் அப்டி சொல்லவே இல்லையே வைஷ்ணவிமா… உன் மேல கோவம் தான் அதுக்காக நீ வேணாம், உன்ன புடிக்கலைனு அர்த்தம் இல்லையே”
“இல்ல அதான் அர்த்தம். நீங்… நீங்க உண்மையாவே என் மேல… என் மேல அக்கறையோடு இருந்தா நான் கஷ்டப்பட்டு நம்ம கல்யாணத்த நடத்துனதுக்கு சந்தோசம் தானே பட்டிருக்கணும்? ஆனா… ஆனா நீங்க என்ன அம்மா வீட்டுல இருக்க சொல்றிங்க?”
அவளை நெருங்கி வந்து நின்றான், “நீ தானே வைஷ்ணவி வர்றேன்னு சொன்ன?”
“ஆமா கோவம் தான், சண்டை தான். என் பொண்டாட்டி என்ன எப்படி கஷ்டப்பட்டு கல்யாணம் பண்ணிட்டானு அவ வாயால கேட்டா இந்நேரம் வானத்துக்கும் பூமிக்கும் குதிச்சிருப்பேன். இதுவே வேற ஒருத்தர் மூலியமா என் காதுக்கு வந்த நியூஸ் கோவமா, ஹர்ட் பண்ற மாதிரி வார்த்தையோடல வந்துருக்கு… அப்போ அதே கோவத்தை உன்கிட்ட நான் காட்டுறதுல என்ன தப்பு?”
“நீங்க கோவத்தை காட்டல கார்த்திக், வெறுப்ப தான் காட்டுனீங்க. அன்னைக்கு பைக்ல உங்க கூட வந்தப்ப நமக்குள்ள இருந்த அந்த கேப் மனச கடைஞ்சது… அதான் உங்கள புடிச்சா என் கைய தட்டிவிட்டிங்க”
ஒவ்வொரு தவறை சுட்டிக்காட்டும் பொழுதும் அவள் கண்களில் இருந்த தவிப்பும் வேதனையும் கார்த்தியின் நெஞ்சை கிழித்தது, “அது நீ என்ன அடிச்சதுக்கான ஈகோ டா மா… இப்போ அதை எல்லாம் தூக்கி எறிஞ்சிட்டு வந்துருக்கேன்” சரணடைந்து நின்றான்.
பெண்ணவள் விடும் எண்ணத்திலா இருந்தாள்? மீண்டும் மீண்டும் அவன் கைகள் அவளை அள்ளி அணைக்க வந்தது, “அது என்ன என் வீட்டுக்கு போக சொன்னிங்க?” அவனிடமிருந்து மீண்டும் திமிறி சற்று தள்ளி நின்றாள்.
“ஆமா அது உன் வீடு தான், இது நம்ம வீடு” அவனை வைஷ்ணவி முறைத்த அந்த சில நொடியில் அவள் கையை பற்றி தன் நெஞ்சோடு அணைத்து நிறுத்தினான்.
“விடுங்க… விடுங்க” இலகுவாக அணிந்திருந்த அந்த பேப்பரை ஒத்த டீ-ஷர்ட் அவன் கைகளின் அழுத்தத்தை நேரடியாக அவள் உடலில் உணர வைத்தது.
“பட்டி உன் மேல கோவத்துல இருந்தாங்க வைஷு அதான், அங்க போக சொன்னேன்”
“ஓ என்ன காப்பாத்திட்டதா எண்ணமோ? நமக்குள்ள ஆயிரம் சண்டை இருந்தாலும் நீங்க என் பக்கத்துல நின்னுருந்தா அன்னைக்கு என்ன பாத்து அத்தையையும் மாமாவையும் நான் கைக்குள்ள போட்டு கல்யாணம் பண்ணேன்னு சொன்னாங்க, அது மட்டுமா? இந்த வீட்டுக்கு வாரிசை என்னால தர முடியுமான்னு கேட்டப்ப…”
கோவத்தின் மூலம் சென்றிருந்த அழுகை மீண்டும் வைஷ்ணவியோடு ஒட்டிக்கொள்ள முகத்தை மூடி தரையில் சரிந்தவளை கைகளில் அள்ளியவன் அறைக்கதவை திறந்து காற்றோட்டமாய் மெத்தையில் அமர்ந்து மனைவியை மடியில் வைத்தான்.
“ஷ்… ஷ்… வேணாம்டா” சில நிமிட போராட்டத்திற்கு பிறகு மனைவி அழுகை குறைந்தது கார்த்தியின் தொடர்ந்த கெஞ்சலில்.
“சாரி வைஷ்ணவி… என்ன பாரு” அவள் மாட்டேன் என தலையை அசைக்க,
“சாரி”
“…”
“சாரி”
“…”
“சாரி டா” அவன் அழுத்தமாய் கூற அவளும் இன்னும் அழுத்தமாய் தலையை ஆட்டினாள்.
“அடிச்சுக்கோ” அவன் கூறுவதை நம்ப முடியாமல் அவனை திடுக்கிட்டு பார்த்தாள்.
“என்ன மன்னிக்கிற வர கோவம் தீர அடிச்சுக்கோ வைஷ்ணவி” விழி விரித்து நின்றாள். அவள் கையை எடுத்து கன்னத்தில் வைத்து, “அடிச்சுக்கோ” என்றான் மீண்டும்.
வேகமாக கையை உறுவிக்கொண்டாள், கண்ணீர் கூட சட்டென நின்றது, விக்கலும் கூட.
“அடிக்கிறது தப்பு” என்றாள் அப்பாவியாக.
சிரித்தான் கார்த்திக், “பொண்டாட்டி அடிச்சா தப்பில்ல” எனவும் கோரமான எண்ணம் உதித்தது, “தப்பில்ல?”
இது தான் சாக்கென அவன் தாடையை பற்றி பற்கள் பதியுமளவு அவன் கன்னத்தில் கடித்துவைத்தாள். கைகளை இறுகமூடி வலியை பொறுத்தவன் கண்கள் கூட கலங்கியது. தண்டனையை தாராளமாய் கொடுத்து மனம் நிம்மதியடைந்த பிறகே அவனை விட்டு விலகி, கண் கலங்கி நின்ற கணவன் முகம் பார்த்து சிரித்தாள் கலகலவென.
“நான் பண்ண தப்புக்கு தண்டனை கெடைச்சிடுச்சு… நீ பண்ண தப்புக்கு என்ன தண்டனை?” இப்பொழுது கோவம் அவன் கண்களில் இருந்தது.
வைஷ்ணவியின் சிரிப்பு மாறவே இல்லை, “நான் என்ன தப்பு பண்ணேன்?” சண்டைக்கு வந்தாள்.
மனைவியின் இடையில் அழுத்தத்தை கூட்டி, “ஏய் என்ன தப்பு பண்ணியா?” இன்னும் கோவமாய், “எதுக்கு சுபத்ரா மனசுல உன் அண்ணனை பத்தி ஆசைய வளர்த்து விடுற?” என்றான்.
“நான் தப்பு பண்ணல… உங்கள கல்யாணம் பண்ணது ஆகட்டும், என் நாத்தனார என்னோட அண்ணியா மாத்திக்க நினைச்சது ஆகட்டும் நான் தப்பு பண்ணவே இல்ல” அழுத்தமாய் கணவனை நேருக்கு நேர் பார்த்து அவனுக்கு ஈடான முறைப்புடன் சவால்விட்டாள்.
“உன் அண்ணன் வேற ஒரு பொண்ண லவ் பன்றான் வைஷ்ணவி” மனைவியின் முகத்தை பார்த்தான்.
அதிர்ச்சியை எதிர்பார்த்த விழிகளுக்கு ஏமாற்றம், “மனசுல ஒருத்திய வச்சிட்டு என் தங்கச்சிக்கு எல்லாம் உன் அண்ணனை கல்யாணம் பண்ணி வைக்க முடியாது”
“தெரியுமே…” என்றாள் சாதாரணமாக, “என் அண்ணனோட மொத்த ஜாதகமும் என் கைல இருக்கும்”
“தெரிஞ்சும் ஏன் இந்த வேலை? இது தான் உன் மேல நான் கோவப்பட்ட மெயின் ரீசன்” அவள் சட்டையின் அடியில் கையை கொண்டு சென்றவன் நறுக்கென கிள்ளி வைத்தான்.
“யோவ் சமயலு…” வலி தாங்க முடியாமல் வைஷ்ணவி கத்தினாள்.
“என்ன சமயலு? தெரிஞ்சும் நீ பண்ணது தப்பு தானே?”
“இல்ல. என் அண்ணன் ஒரு கிறுக்கன். நீங்க இங்க வந்தப்ப நான் உங்கள பாக்குறதுக்கு முன்னாடி அவன் சுபிய வளச்சு வளச்சு சைட் அடிச்சான். நடுல ஒரு லூசு வந்துச்சு. அந்த லூசு மேல இவனுக்கு ஒரு சின்ன க்ரிஷ். அந்த பொண்ணு இவன பாத்து ரெண்டு தடவ சிரிச்ச ஒடனே இவன் லவ்ன்னு நினைச்சிட்டு இருக்கான். ஆனா அவ சரியான கேடி கார்த்திக். வருசத்துக்கு ஒருத்தன்கூட சுத்துவா, வேற ஒருத்தன் பெட்டரா கிடைச்சா இவன விட்டு ஓடிருவா.
போன மாசம் தான் அவளை பத்தி தெரிஞ்சிட்டு பீல் பண்ணிட்டு இருக்கான். அவனை பொறுத்தவரை இது மண்ணாங்கட்டி லவ். அந்த லவ் போன ஒடனே சுபிய எப்படி பாக்குறதுன்னு முகத்தை தூக்கி வச்சிட்டே சுத்துறான். இன்னும் ரெண்டு மூணு மாசம் மட்டும் தடவை கிடைச்சா போதும் சுபிய புரிஞ்சு அவ பின்னாடி சுத்துவான் அந்த தெண்டம்”
வைஷ்ணவி பேசுவதை வியப்பாக கேட்டவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை, “உன் அண்ணன் தெளிவில்லாம இருக்கான் வைஷ்ணவி, தனக்கு என்ன வேணும், யார் மேல ஈர்ப்பு இருக்கு, யார் மேல ஆசை இருக்குன்னு தெரியாம இருகவன எப்படி சுபத்ராக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடியும்?”
“ஏன் நீங்க என்ன கல்யாணம் பண்ணப்ப ஆசை, காதல் எல்லாம் இருந்தா பண்ணீங்க?” உதட்டை சுளித்து முறைத்தாள்.
சுளித்த அவள் இதழ்களை கெட்டியாக பிடித்தவன், “காதல் இல்லனு சொல்லு, ஆசை இல்லனு உனக்கு தெரியுமா?” வேகமாக கார்த்திக் கூறி அவள் இதழ்களில் தன்னுடைய பார்வையை பதித்தான்.
“அத நீங்க தான் சொல்லணும்” என்றாள் வெட்கத்தை அடக்கி. “அஞ்சு நாள் நீ இல்லாம கார்த்தி கார்த்தியாவே இல்லடா” சிரித்தான் அவள் கண்களை பார்த்து சரசமாக.
குறுகுறுவென பார்க்கும் அவன் கண்களை மூடியவள் மெல்ல அவன் பக்கம் சாய்ந்து தான் கொடுத்த பல் தடத்தில் இதழ் பதித்து எடுக்க, அவள் கையை விலக்கிவிட்டு, “இது எதுக்கு?” சிரிப்பு அவனிடம் மனைவியின் கண்களில் தெரிந்த எல்லையில்லா காதலில்.
“கடிச்சேன்ல…” வெட்கத்தோடு கூறினாள் வைஷ்ணவி.
கள்ள சிரிப்போடு மனைவியின் சட்டையினுள் கார்த்தி கை விட, கண்களை மூடி அவன் தொடுகையை அனுபவித்தவளிடம், “நானும் உன்ன கில்லுனேன்ல டா… அப்போ நானும் மருந்து போடவா?”
மனைவி காதில் சரசம் பேசியவனின் கழுத்தோடு தன் கையை மாலையாக்கி அவன் கழுத்தில் முகம் புதைத்து சில நிமிடங்களை வைஷ்ணவி கடக்க, அவள் கைகளும், இதழ்களும் எல்லை மீறி பயணிக்க துவங்கிய சமயம் கார்த்தி கைகள் தரும் எல்லையற்ற சீண்டலில் கிறங்கி தவித்தாள்.
“நான் உங்கள சந்தோசமா பாத்துக்குறேனா கார்த்திக்?” என்றவள் கேள்விக்கு?” தன் முகம் பார்த்து கேள்வி எழுப்பியவளுக்கு வார்த்தைகளால் பதில் கொடுக்காமல் அவள் நெற்றி மீது இதழ் ஒற்றி அவன் நேசத்தை கூறினான்.
“கார்த்திக்…”
வைஷ்ணவி நெகிழ்ச்சியில் கரைய, தன்னுடைய பெயரை ரசித்து சொல்லும் அந்த இதழ்களை சிறை செய்து ஆசை தீர தேடலை துவங்கி பொக்கிஷத்தின் எல்லையை கண்டறிய முடியாமல் மயங்கி சரிந்தான் அவள் அன்பில்.
இரவெல்லாம் ஓயாமல் அவன் ஆசை தீர்த்தவளின் ஓய்வு ஓய்ந்திடுமோ என்று உறக்கம் தழுவல் எழாமல் ரசித்து பார்த்திருந்தான், தன்னை பைத்தியமாக காதலித்தவளை… தன்னை காதலுக்கு பித்தாகியவளை.
பிடித்தவனுக்கு பிடிக்கவில்லை என்றால் என்ன? காலம் உருக, அன்பு பெறுக,
காலம் கனிய, பிடிக்க வைத்துவிடும் காதல்…