டிங் டாங் Love – 5
ஒரு வாரம் சென்றிருந்தது வீட்டின் விசேஷம் முடிந்து வீட்டில் பொருட்கள் அனைத்தும் ஒருவாறு சேர்க்க வேண்டிய இடத்தில் ஒதுக்கியும் வைத்துவிட்டனர்.
செங்கோட்டை வந்த இரண்டே நாளில் கடமை அழைக்கத் தலைமை ஆசிரியராகப் பள்ளியில் சேர்ந்தவருக்கு மாலை என்ன… மரியாதை என்ன… மனிதன் மகிழ்ச்சியில் திளைத்தே வீடு வந்து சேர்ந்தார். வீட்டிற்கு வந்து மனைவி மக்களிடம் நடந்தவற்றை எல்லாம் சிறு பிள்ளை போல் பகிர்ந்துகொண்டவரைப் பார்த்து மகாலட்சுமிக்குப் பூரிப்பு தாங்க இயலவில்லை கண்ணீரைக் கூட வரவழைத்தது.
“இந்த மரியாதை எவ்வளவு நல்லா இருக்கு தெரியுமா மா? வெறும் வாத்தியாரா இருந்து சேவை செஞ்ச எனக்கு இவ்வளவு மரியாதை எல்லாம் கிடைக்கும்னு நினைக்கவே இல்ல…” கட்டுக்கடங்கா மகிழ்ச்சி அவரிடம்.
“உன்னோட உழைப்புக்கும் நேர்மைக்கும் கெடச்ச மரியாதை ராசா இது” சுப்பிரமணியத்தின் அன்னை மகனைப் பார்த்து பெருமிதமாகப் பாராட்டினார்.
மகாலட்சுமிக்கும் இந்த ஊர் பிடித்துப்போக இயற்கையோடு ஒன்றி இயற்கை குணம் மாறாமல் குணத்திலும் இருக்கும் உற்றார்கள் கிடைத்ததில் அவருக்கு இன்னும் மகிழ்ச்சி. மகேஸ்வரியின் அறிமுகம் கிடைக்க மகேஸ்வரி மஹாலக்ஷ்மியை அழைத்துச் சென்று அருகில் இருக்கும் சில மளிகைக் கடைகள், சந்தை, பால் வியாபாரிகள் என அவருக்குத் தெரிந்ததை அனைத்தும் காட்டி அருகில் இருக்கும் சில வீட்டினருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தார்.
இதை விட இல்லத்தரசிகளுக்கு என்ன வேன்டும்? மனதில் இருக்கும் பாரத்தை உடன் பிறவா சகோதரியாய் நினைத்துப் பேசப் பெண்கள், குப்பையைக் கொட்ட வரும் சமயங்களில் சில கிசுகிசுப்புகள் என மகாலட்சுமிக்கு இந்த கிராமத்து வாழ்க்கை சீக்கிரமே தொற்றிக்கொண்டது.
“ரொம்ப தேங்க்ஸ் வைஷ்ணவி மா” என்றார் மஹேஸ்வரியிடம்.
“இருக்கட்டும் சஹானா மா… இதுக்கும் மேல உங்களுக்கு ஏதாவது வேணும்னா வைஷ்ணவி கிட்ட கேளுங்க… என்ன விட, இவங்க அப்பாவை விட அவளுக்குத் தான் இந்த ஊர் அத்துப்படி” புகழ்ச்சியிலும் மகளைக் கிண்டல் தான் செய்தார் அவர்.
அதே சுபத்திரை தான் தன்னை போல் வீட்டில் பொழுது போகாமல் வெட்டியாய் இருக்கும் சுபத்ராவை அழைத்துக்கொண்டு ஷெர்லினுடன் ஊர் சுற்றச் சென்று விடுவாள். வெளியில் சுற்றச் சாக்காய் வந்தது சுபத்ராவின் வரவு. அன்னை கேட்டால் சுபத்ராவை கை காட்டிவிடுவாள்.
கார்த்திக் கடந்த நான்கு நாட்களாக மதுரையில் ஏதோ வேலை இருப்பதாகக் கூறிவிட்டு அங்கையே தாங்கிக்கொள்ள இன்று மதியம் இரண்டரை போலத் தான் வீடு வந்து சேர்ந்திருந்தான்.
வந்தவன் உணவைக் கூட உண்ணாமல், “கார் வெளிய நிக்கிதுமா அப்பாவை உள்ள எடுத்து வைக்க சொல்லிடுங்க… எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு நான் தூங்க போறேன்” என்று மாடி நோக்கிச் சென்றுவிட்டான். மாடியில் ஏறி அறைக் கதவைத் திறக்கும் நேரம் எதிர் வீட்டின் மாடியைப் பார்த்தவன் அங்கு ஆள் இல்லை என்று அறிந்த பின்னரே நிம்மதியாக உறங்கினான்.
மாலை மணி ஆரை தொட இன்னும் பத்து நிமிடங்களே இருக்க அது வரை கைப்பேசியில் படம் பார்த்துக்கொண்டிருந்த வைஷ்ணவி வேக வேகமாக எழுந்து குளித்து ராமர் பச்சை நிற பாவாடை, சிகப்பு நிற தாவணியும் மாற்றி வந்தவள் வெளியில் இருக்கும் சில்லென்ற காற்றில் கூந்தல் பறக்கக் காயவைத்து, தலை வாரிப் பட்டு தாவணி மொத்த படிக்கட்டையும் சுத்தம் செய்யத் தாய்க்கு வேலையே வைக்காமல் வந்தாள்.
“மகேஷ் மம்மி” வைஷ்ணவி கத்திக்கொண்டே அடுக்களைக்குள் நுழைந்தாள்.
“எதுக்குடி இப்டி பரபரப்பு? சப்பரம் இன்னும் ஆரமிக்கல” அவள் கையில் அவன் விரும்பி குடிக்கும் இஞ்சி காபியைத் திணித்து பிரிட்ஜில் வைத்திருந்த மல்லிகை சரத்தை எடுத்து வைத்துவிட்டார்.
“வேற நல்ல தாவணியைப் போட வேண்டியது தான?” இதுவும் அழகாக தான் இருந்தது ஆனாலும் இதை சில முறை வெளியில் போட்டு சென்றது உண்டு.
“நானும் அந்த மஞ்ச தாவணி தான்மா போடணும்னு நெனச்சேன். இந்த ஷெரூ கேட்டுட்டு அதையே அப்ப நானும் போடுறேன்னு சொல்றா… அது தான் இத போட்டேன்”
குடித்த காபி கோப்பையை சிங்கில் போட்டு “மா பட்டாசு எங்க இருக்கு?” கீழிருந்த அன்னை தந்தையின் அறையில் துழாவினாள்.
“உன் ரூம்ல தான் இருக்கும். ஷெல்ப்ப களைச்சு வச்சனா நீ தான் வந்து வேலைய பாக்கணும் இப்பயே சொல்லிட்டேன்” எச்சரிக்கையாய் வந்தது அன்னையின் குரல்.
“உன் பையன் களைச்சு வச்சிருந்தா மட்டும் நீயே அடுக்கி வக்கிர? பொம்பள புள்ளன்னா எனக்கு வேற ரூல்ஸா?”
“அப்ப நீ சப்பரம் பாக்க போகல?”
தலையில் அடித்து, “ஐயோ அத மறந்துட்டேன் பாரு… ரெண்டு ராக்கெட், பேன்சி இதுக்காகவே எடுத்து வச்சேன்” தன்னுடைய அறைக்கு விரைந்தவள் ஷெர்லின் எண்ணிற்கு அழைத்து இன்னும் ஐந்து நிம்மதில் இருக்குமாறு எச்சரிக்கையும் வைத்தாள்.
சரியாக பத்து நிமிடங்களில் வந்த ஷெர்லின் மூச்சு வாங்க, “அடியே மேனாமினுக்கி மஞ்ச கலர் தாவணி போடுறேன்னு சொல்லிட்டு இத போட்டுட்டு நிக்கிற?”
“அடடே வாங்க கிளியோபாட்ரா… இந்தாங்க இந்த ராக்கெட்டை புடிங்க… அந்த மூலைல ஒரு கலர் பாட்டில் இருக்கும் அதுல இத சொருகி வை, நான் கீழ போய் தீப்பெட்டி எடுத்துட்டு வர்றேன்… சரியா கோவில்ல பட்டாசு வக்கிரப்ப இங்க நாமளும் வைக்கணும்”
“அடியேய் என்ன பெத்த ஜீவன் அங்க கூப்பிட கூப்பிட ஓடி வந்தேன் நீ என்னனா பட்டாசு வைக்கணும்னு நிக்கிற?”
“பாட்டில் தேடி வைக்கல உன் வாயில வச்சு தான் ராக்கெட் விடுவேன். எப்படி வசதி”
‘இவ செஞ்சாலும் செய்வா’ அமைதியாக ஷெர்லின் தனக்குக் கொடுத்த வேலையைச் செய்யத் துவங்கிவிட்டாள்.
ஷெர்லின் பாட்டிலைத் தேடி எடுப்பதற்குள் தீப்பெட்டியை எடுத்து வந்த வைஷ்ணவி அவசர அவசரமாகப் பட்டாசை வைக்கச் சரியாக சில தெருக்கள் தள்ளியிருந்த தேவாலயத்தில் இருந்தும் நாட்டுப் பட்டாசு சத்தம் காதுகளைக் கிழித்தது.
“போதும்டி வா” ஷெர்லின் பேசுவதற்கு முன் வைஷ்ணவி இன்னொரு ராக்கெட்டை வைக்க, அவள் எழுந்து செல்லும் பொழுது பாவாடை தட்டி அந்த பாட்டில் நிலத்தில் சரிய, வைஷ்ணவி மீண்டும் நேராக வைக்கும் முன் அவர்கள் எதிர் வீட்டின் மாடிக்குச் சென்ற அதே நேரம் பட்டாசின் சத்தம் கேட்டு தன்னுடைய அறையிலிருந்து வெளி வந்த கார்த்திக்கின் சட்டையை உரசிச் சென்று வெடித்தது அந்த ராக்கெட்.
ராக்கெட் உரசிச் சென்றதில் சன்னமாய் அவன் சட்டையில் நெருப்பு பற்றிட அதிர்ந்தாள் வைஷ்ணவி, “ஐயோ…” பதட்டத்துடன் மாடியின் எல்லைக்கு வந்தவள் அவனைப் பயத்துடன் பார்க்க அதற்குள் அங்குச் சுதாரித்த கார்த்திக் வேகமாக அறைக்கு அருகிலிருந்த குழாயில் சட்டையைத் தண்ணீரில் காட்டினான்.
உடனே தீ அணிந்தாலும் அவன் வயிற்றுப் பகுதியில் சிறிய தீ காயம் உருவாகியிருந்தது. கார்த்திக் சட்டையைக் கழட்டியதும் அவன் அணிந்திருந்த வெள்ளை பனியனை தாண்டியும் தெரிந்த காயத்தைப் பார்த்தவள் உள்ளம் பதறியது.
தனக்குப் பின்னால் வந்து நின்ற ஷெர்லின், வைஷ்ணவியின் தோளில் கை வைத்து, “வலிக்குதான்னு கேளு வைஷு” பேச மறந்து நின்ற தோழிக்கு வார்த்தைகள் எடுத்துக்கொடுத்தாள்.
காயத்தை ஆராய்ந்தவன் தலையைத் தூக்கி வைஷ்ணவியைப் பார்த்து முறைக்க, அதில் மேலும் மனம் வாடியது, “என்ன முறைக்கிறீங்க?” குரல் நன்றாகவே கரகரத்தது.
“அட கைப்புள்ள இப்ப நீ மன்னிப்பு கேக்கணும்” ஷெர்லின் குரலில் அப்பட்டமாக குழப்பமும் பயமும் கலந்து நின்றது.
அவளைக் கண்டுகொள்ளாமல், “நான் என்னமோ வேணும்னே பண்ண மாதிரி இப்டி பாக்குறீங்க” மூக்கு விடைக்க கோவமாகப் பேசினாள்.
“விளையாட்டுக்கும் ஒரு அளவு இருக்கு” அவள் முக மாற்றத்தில் நிதானமானவன் முகத்தைச் சாதாரணமாக வைத்துக் கண்டிப்பாய் கூறினான்.
“நான் தான் சொல்றேன்ல ராக்கெட்ட ஒன்னும் உங்க வீட்டுக்கு குறி வைக்கல… என்னோட தாவணி பட்டு பாட்டில் கீழ விழுந்து உங்க வீட்டுக்கு வந்துடுச்சு… ஏன் ஒரு வார்த்தை எப்படி நடந்துச்சுனு கேக்க மாட்டிங்களா? நேரடியா முறைக்கத் தான் செய்விங்களோ… நீங்க எப்ப ஊர்ல இருந்து வந்திங்கனே எனக்கு தெரியாது இதுல நான் எதுக்கு வேணும்னே இப்டி பண்ண போறேன்?” தன்னுடைய மனம் வாடுகிறது என்று தெரியாமலே தான் கலங்குவதை கூட அவள் கவனிக்கவில்லை.
பெண்ணின் வாட்டம் அவனை அமைதியாக்கினாலும் அவள் அஜாக்கிரதையை அப்படியே விடாமல் முகத்தை கோவமாக வைத்து அறைக்குள் சென்று மறைந்தான்.
அவன் அறைக் கதவை உஷ்ணமாகப் பார்த்துக்கொண்டே, “என்ன ரொம்ப தான் ஓவரா பன்றான்? பேசுனா பதில் சொல்ல முடியாதோ?”
“உன் ஜடைல ஒரு அணுகுண்டு கட்டி விட்டு கொளுத்திபோடுறேன்… அப்ப நீ இப்டி சிரிக்கிறியான்னு பாக்குறேன்”
தேவையில்லாத நேரத்தில் கவுண்டர் கொடுத்த தோழியைப் பார்த்து முறைத்தவள் அடுத்த நொடியே வாடிய முகத்துடன், “நான் சாரி கேக்கவே இல்லல?” என்றால் சோகமாக.
“அவன் போனதுக்கு அப்றம் யோசிச்சு என்ன பண்றது நிக்கிறப சண்டை போட்டுட்டு இருந்த… இப்ப முகத்தை உர்ருன்னு வச்சிட்டு இருந்தா ஒன்னும் பண்ண முடியாது… வா சப்பரம் பாக்க போகலாம்… அங்க வர்ற ரெண்டு பசங்கள சைட் அடிச்சிட்டே கலாய்ச்சா நார்மல் ஆகிடுவ” தோழியை கை பிடித்து இழுத்த ஷெர்லின் கைகள் அதற்குமேல் அவளை இழுக்க முடியவில்லை.
“என்னடி உனக்கு வேணும்?”
“எனக்கு மைன்ட் அப்செட்டா இருக்கு ஷெரூ நீ மட்டும் சப்பரம் பாக்க போறியா?”
“குறுக்குலயே ஏறி மிதிப்பேன்… ஒழுங்கா வந்துடு. உன்ன நம்பி தான் என் அண்ணன் கூட சண்டை போட்டுட்டு வந்தேன்”
இன்னமும் வைஷ்ணவி முகம் தெளிவில்லாமல் இருக்க, “ஹ்ம்ம் இந்த வாரம் திருநெல்வேலி லா காலேஜ் அலுமினி பசங்க எல்லாம் வர்றாங்கன்னு கேள்வி பட்டேன்… அப்ப நான் வர்றேன்” இழுத்தவளின் கை பிடித்து நிறுத்திய வைஷ்ணவியின் முகம் புன்னகை முகமாகியது.
திருநெல்வேலியில் தனியார் விடுதியில் தங்கி சேவியர் கல்லூரியில் வைஷ்ணவி, ஷெர்லின் இருவரும் படிக்க கல்லூரியிலிருந்து டவுன் பஸ்ஸை தான் நாட வேண்டிய நிலை. அதுவும் இன்பமாகவே இருக்க எப்பொழுதும் பேருந்து திருநெல்வேலி சட்டக் கல்லூரியை தாண்டி தான் செல்ல வேண்டும்.
அந்த நாட்களில் தான் வைஷ்ணவி எதேச்சையாக பார்த்தாள் அவனை. சிவந்த நிறம், அளவான உடற்கட்டு வெள்ளை சட்டையை மணிக்கட்டு வரை மடித்து கல்லூரி தோழர்களுடன் பேசியபடியே தலையை கோதிக்கொண்டே பேருந்தில் ஏறினான்… முதல் பார்வையிலே வசீகரித்தவனை பெண்ணுக்கு பிடித்துப்போனது… தினமும் அந்த நேரத்தை கணக்கு செய்தே அதே பேருந்தில் வர துவங்கினாள்.
“என்னடி லவ் பண்றியா?”
சந்தேகமாய் தன்னை பார்த்து முறைத்து கேள்வி எழுப்பிய தோழியை அசட்டை சிரிப்போடு, “காலத்துக்கும் சைட் மட்டும் தான்” அது தான் உண்மையும் கூட.
“ஹே அவன் நடையை பாரேன்” என்று வைஷ்ணவி துவங்கினாள், அதை பார்த்து “ம்ம்ம் வெள்ள பன்னி ரேம்ப் வாக் போற மாதிரி இருக்கு” ஷெர்லின் முடிப்பாள்.
“செல்லக்குட்டி அவன் தலையை சிலுப்பி முடிய கோதுரத பாரேன்” வைஷ்ணவி ரசித்தாள், “டோராக்கு ஆம்பள கெட்டப் போட்ருக்கான்” ஷெர்லின் வெறுப்பாள்.
“ச்ச என்ன சிரிப்பு என்ன சிரிப்பு” பூரிக்கும் வைஷ்ணவியை பார்த்து, “ஆத்தா நீ சிரிக்காத ஆத்தா… பையன கூட்டிப்போய் வேப்பிலை அடிக்கணும் போலிருக்கு” சின்ன கவுன்ட்டர் கவுண்டமணியாக மாறி புலம்பினாள்.
“ச்ச ராசன கெட்டவ”
உண்மையில் அவன் அழகாய் தான் இருந்தான் ஆனால் வைஷ்ணவியை கலாய்ப்பதற்கே ஷெர்லின் அவ்வழிகளை கையாண்டாள். கல்லூரி முடிந்ததும் அவன் கண்ணிலே படாமல் போக இப்பொழுது அதை சரியாக பயன்படுத்திக்கொண்டாள்.
ஆனாலும் சந்தேகம் வர, “அது எப்படி லா காலேஜ் அலுமினி மெம்பெர்ஸ் வாரங்கனு உனக்கு தெரியும்? அதுவும் அவன்?”
“அவனுக தான் ஏதோ இந்த வருஷம் அன்னதானம் குடுக்குறானுகளாம் என் பக்கத்து வீடு பையன் சொன்னான். வரியா வரியா?”
ஆப்ஷனே கொடுக்காமல் ஷெர்லின் நிற்க, “இன்னைக்கு போய் ஒரு ஹாண்ட் ஷேக், ஹலோ ரெண்டும் சொல்றோம். நீ ஹெல்ப் பண்ற” மறைமுக சம்மதம் கிடைத்தது.
இவளை விட்டால் இன்னும் பேசிக்கொண்டே செல்வாள் என்று புரிந்து ஷெர்லின் கீழே இறங்க, “மாமா… ஒரே ஒரு பேன்சி மட்டும் வச்சிட்டு வரட்டுமா?” வைஷ்ணவிக்கு பதிலாய் அவள் காலடியில் செருப்பு வந்து விழுந்தது.
உடனே அதை அறையினுள் பத்திரப்படுத்தி வந்தவள் எதிர் வீட்டு மாடியை பார்த்துக்கொண்டே கீழ் இறங்கினாள்.
முகத்தில் மகிழ்ச்சியோடு தேவாலயத்திற்கு வந்தவள் அங்கு மின்னிய விளக்குகளின் வெளிச்சத்திலும் காதை கிழிக்கும் வாணவேடிக்கைகளின் ஒலியிலும் தன்னையே மறந்து ரசித்துக்கொண்டிருந்தாள். சிறிது நேரத்தில் அவளின் பள்ளி காலத்து தோழிகள், இளசுகள் என ஒரு பெரிய கூட்டமே ஒரு பெரிய பந்தலுக்கடியில் கூட அதன் பிறகு அளப்பறைக்கு பஞ்சமில்லாமல் நேரமும் கடந்தது.
“கா என்ன வீட்டுல மாப்பிள்ளை எதுவும் பாத்துட்டாங்களா என்ன?” அந்த கூட்டத்தில் கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கும் ஒருவன் வைஷ்ணவியை பார்த்து கேட்க,
“இல்லையடா ஏன் கேக்குற?”
“இல்ல நீ இந்த ஒரு வாரமா வீட்டை விட்டு பெருசா வெளிய வர்றதில்லன்னு கேள்வி பட்டேன்” கொக்கி போட்டு நிறுத்தினான் அவன்.
“அது… அது வந்துடா எங்க வீட்டுக்கு எதுத்த வீட்டுல ஒருத்தவங்க புதுசா குடி வந்துருக்காங்க… அங்க ஒருத்தன் முழியே சரியில்ல… திருட்டுபயனு பாத்தாலே தெரியுது. அது தான் வீட்டை பாத்துக்குறது நம்ம பொறுப்புல?” ஷெர்லின் வைஷ்ணவி கையை சுரண்ட அவள் கையை தட்டிவிட்டாள்.
“அங்க ஹெட்மாஸ்டர் இருக்காருன்னு சொன்னாங்க… டீச்சர் வீட்டுல திருட்டு பயலா?” இன்னொருவன் ஆசிரியப்பட்டான்.
“அடேய் நீ இன்னும் இந்த உலகத்தை பத்தி புரிஞ்சுக்கல… இந்த பையன் சரியான கேடிடா… பார்வையே சரியில்ல போறப்ப வர்றப்ப எல்லாம் வீட்டையே நோட்டம் விட்டுட்டு இருக்கான், அதுமட்டுமில்லடா அன்னைக்கு சாப்புட போனோம் அவங்க வீட்டுக்கு…”
ஷெர்லின் சுரண்ட சுரண்ட அதை எதையும் கண்டுகொள்ளும் மனநிலையில் இல்லை அதனால் தானே, “கார்த்திக் அண்ணா என்ன தனியா இருக்கீங்க…”
அப்பொழுது தான் சுரண்டலின் அர்த்தம் புரிந்து வைஷ்ணவி வேகமாக திரும்ப அங்கு இவர்களுக்கு பின்னால் தான் கார்த்திக் ஒரு இருக்கையில் அமர்த்துக்கொண்டிருந்தான், கையில் கைபேசியுடன்.
“இல்லமா ப்ரண்ட் போன் பேச போயிருக்கான்” ஷெர்லினுக்கு பதில் கூறியவன் பார்வை வைஷ்ணவியை தீயாய் முறைத்து மீண்டது.
‘போச்சு… இந்த அய்யனார் சிலை இனி இப்டியே மொறச்சிட்டே சுத்துவான்’ மனதில் புலம்பினாலும் பயத்தை வெளியில் காட்டாமல் ஒரு ஸ்நேக புன்னகை ஒன்றையும் அவனிடம் கொடுத்தாள்.
“ஓஓ சரி ண்ணா. உங்களுக்கு எப்படி இங்க ப்ரண்ட் அதுக்குள்ள கெடைச்சாங்க?”
“அவன் தென்காசி”
“ஓ கூட படிச்சவங்களா?”
“ம்ம்ம் ஆமா மா”
“சுபி எங்க ண்ணா கானம்?” பேச்சை வளர்ந்துகொண்டே சென்ற தோழியை வெட்டவா குத்தவா என்று பார்த்துக்கொண்டிருந்தாள் வைஷ்னவி.
“திருநெல்வேலி வரைக்கும் அம்மாகூட போயிருக்கா”
சரியாக கார்த்திக்கின் நண்பன் வர, “ஓகே ண்ணா… மறக்காம அங்க அன்னதான சாப்பாடு வாங்கி சாப்பிடுங்க… செம்மயா இருக்கும்”
நிற்க இடமில்லாமல் கூட்டம் அலைமோதும் இந்த நெரிசலில் சென்றா உண்ணவுண்ண வேண்டும் என்று எண்ணம் தோன்றிட, “இருக்கட்டும்மா அடுத்த தடவ சாப்ட்டுக்குறேன்” இருக்கையிலிருந்து எழுந்து நண்பனிடம் தலை அசைக்க இருவரும் அவ்விடத்தை விட்டு அகன்றனர்.
“ஏண்டி அவன்ட இப்டி பேசிட்டே இருக்க? அவன் என்ன பாத்து முறைக்கிறான்”
“நீ பண்ணி வச்சிருக்க வேலைக்கு நானா இருந்தேன் சப்பரம் சக்கரத்தை உன் வாயிலேயே ஏத்திருப்பேன்… அவரா இருக்க போய் அமைதியா விடுறாரு”
உதட்டை சுளித்து கார்த்திக் சென்ற திசை பார்க்க அங்கு அவன் அடிபட்ட இடத்தை பிடித்து முகம் சுருங்கி நிற்க அவன் நண்பன் கார்திக்க்கை குழப்பமாய் கேள்வியெழுப்பி கொண்டிருந்தான். பார்த்த உடனே வைஷ்ணவி புரிந்துகொண்டாள் எவரோ பலமாக அவனை இடித்திருப்பார்கள் என்று.
அடித்து பிடித்து இடத்திலிருந்து எழுந்த வைஷ்ணவி, “ஒரு நூறு ரூபா குடு” கேட்கவில்லை ஆணை தான் வந்தது.
“என்னடி துட்ட குடுத்து வச்ச மாதிரி கேக்குற?”
“ரெண்டு வாரம் முன்னாடி தொண்டை வரண்டுருச்சு ஒரு ஐஸ் கிரீம் வாங்கி தா-னு சொன்னவை ஹோட்டல் குள்ள போனதும் பிரியாணி, கிரில் சிக்கன், தந்தூரி, ஷாவர்மா-னு வெளுத்து வாங்குனப்ப என்கிட்ட காசு குடுத்தா வச்சிருந்த?”
கப் சிப் என வாயை அடைத்து கையில் இருநூறு ருபாய் தாளை வைத்தாள் ஷெர்லின், “அப்பாலே போ சாத்தானே” விரட்டிவிட்டாள்.
மொத்த வீதியையும் சுற்றியவளுக்கு மருந்தகம் எதுவும் கண்ணில் படாமல் போக நடந்தே மெயின் மார்க்கெட் இருக்குமிடத்திற்கு சென்று தீ காயத்திற்கு களிம்பு ஒன்றை வாங்கி கார்த்திக் வீட்டிற்கு செல்லும் முன் அவன் கையில் ஒப்படைக்க வேண்டும் என்று ஏதேனும் ஆட்டோவை புடிக்கலாம் சென்று பார்த்தால், கோவில் திருவிழா நடைபெறுவதால் குறிப்பிட்ட இடத்திற்கு மேல் இரு சக்கர வாகனங்களை தவிர எதற்கும் அனுமதி இல்லை.
அதனால் நடந்தே தேவாலயம் இருக்கும் இடத்திற்கு வந்து அங்கும் இங்கும் கார்த்திகை தேடினாள். ஷெர்லின் கைபேசிக்கு அழைத்து அவனை கேட்க அவளிடமும் சாதகமான பதில் வரவில்லை. மீண்டும் அன்னதானம் நடக்கும் இடத்திற்கு சென்று பார்க்க அங்கு வைஷ்ணவி ஆசையாய் பார்க்க வந்த சட்ட கல்லூரி மாணவன் பரபரப்பாக பந்தி பரிமாறிக்கொண்டிருந்தான். வேலை மும்முரத்தில் இருந்தாலும் வைஷ்ணவியை பார்த்துவிட்டவன் அசையாது நின்றான்.