“அத பத்தி கவலை வேணாம் கார்த்தி. இது ஹோட்டல், நீங்க ரெனோவேஷன் பண்ணிட்டே இருக்கனும், அதுக்கு ஏன் நாம இப்பயே இவ்ளோ செலவு பண்ணனும்? ஒரு பத்து வருஷம் நீங்க எந்த செலவும் பண்ண தேவை இருக்காத மாதிரி பாத்துக்கலாம்”
இருவரும் மாறி மாறி பேசிக்கொண்டே செல்ல தன்னை பார்க்கவே போவதில்லை என்று தானே முன் வந்தாள் வைஷ்ணவி, “சார் இத செக் பண்ணுங்க” தான் மடி கணினியில் வரைந்திருந்த படத்தை அவன் முன் நீட்டினாள்.
“வெயிட் பண்ணு வைஷ்ணவி, வந்து செக் பண்றேன்”
“இல்ல இப்பயே செக் பண்ணுங்க அப்ப தான் என்னால அடுத்த டிசைன் போட முடியும்”
“நீங்க செக் பண்ணிட்டு வாங்க சார் நான் வெயிட் பண்றேன்” கார்த்தி கூறவும் அவள் நீட்டியதை சரி பார்த்தவன் திருத்தங்களை கூறி வைஷ்ணவியை அனுப்பி வைத்து மீண்டும் கார்த்தி அருகில் வந்து நின்றான்.
“எங்க கார்த்தி உங்களுக்கு இந்த பொண்ணுங்க சிக்குனாங்க?” சிரித்துக்கொண்டே கேட்டான் சுந்தர்.
“ஏன் சார் வேலை ஒழுங்கா தெரியலையா?” ஒரு அக்கரையில் அவர்கள் சேர்த்தது தவறாகிவிட்டதோ என்ற சுணக்கம் வந்தது கார்த்தியின் கண்களில்.
“வேலை தெரிஞ்சு யாரும் வேலை பாக்க ஆரமிக்கிறதில்ல கார்த்தி. ஆனா இவங்களுக்கு சின்ன சின்ன விசியம் கூட சொல்லி குடுக்க வேண்டி இருக்கே”
“உங்களுக்கு ஒத்து வரலைனா பக்குவமா சொல்லி நிறுத்திடுங்க சார்”
“இல்ல கார்த்தி, நான் அதுக்கு சொல்லல. எல்லாமே தெரிஞ்சவங்க தான் எல்லாருக்கும் வேணும்னா அப்ப நானே இந்நேரம் உருவாகியிருக்க மாட்டேன். என்ன இவங்க ரெண்டு பேரும் வாய் கொஞ்சம் அதிகம், படிக்கிறப்பையும் விளையாட்டா இருந்துட்டாங்க. சீரியஸ்நெஸ் இல்ல… சரியாகிடும்”
ஆமோதிப்பாய் கார்த்தியும் தலையை ஆட்டி வைஷ்ணவியை பார்க்க அவள் முகத்தில் என்றும் இல்லாத ஏதோ ஒரு சோகம் இருந்ததோ? துறுதுறுப்பும் குறைந்திருந்தது.
மதியம் தான் பார்த்த பொழுது கூட ஒரு துள்ளல் இருந்ததே அவள் விழிகளில்… ஆராய்ச்சியுடன் அவளை உன்னிப்பாய் அளந்தது அவன் கண்கள்.
அடுத்த ஒரு மணி நேரம் பொதுவான பேச்சுகளோடும் கட்டுமானத்தை பற்றிய பேச்சுகளோடும் கடக்க மாலை ஆரை தாண்டி இருந்தது நேரம்.
“சரி கார்த்தி நான் கொஞ்சம் மணல் விசயமா வெளிய போக வேண்டிய வேலை இருக்கு. நாளைக்கு பாக்கலாம்”
சுந்தர் சார்லெசையும் தன்னோடு அழைத்து கிளம்ப, செல்லும் பொழுது வைஷ்ணவியிடம் வீட்டிற்கு கிளம்புமாறு கூறி சென்றான். ஆனாலும் அசராமல் வேலையை தொடர்ந்துகொண்டே இருந்தவளை, மொத்த வேலையையும் சென்று பார்த்து வந்த கார்த்தி கண்டுகொண்டான். சென்று பேசவும் தயக்கம் ஆனால் வேலையாட்கள் அனைவரும் கை கால்களை அலம்பி கிளம்ப தயாராக இருந்தனர்.
இவளை தனியாக விட்டு செல்வதா என்ற நெருடல் மனதில். அவளோ இடத்தை விட்டு துளியும் நகரும் எண்ணம் இல்லாமல் இருந்தாள். பாதி இருட்ட துவங்கியிருந்தது, குற்றால காற்றும் சில்லென பட்டு உடலை கூச செய்தது.
மனம் கேட்காது அவளிடம் சென்றவன், “வீட்டுக்கு கிளம்புங்க வைஷ்ணவி” என்றான் தன்மையாக. அவன் வந்ததை அவன் வாசத்தை வைத்தே சில அடி தூரத்தில் உணர்ந்தவள் தெரியாமல் கூட தலையை உயர்த்தி பார்க்கவில்லை.
“எனக்கு வேலை இருக்கு. போய்க்கிறேன்” உடல் அசதியா இல்லை முதல் முறை மூளைக்கு அதிக வேலை கொடுத்ததோ ஏதோ ஒன்று அவளின் குரலில் சோர்வை தட்டியது.
“எல்லாரும் கெளம்பிட்டாங்கங்க இருட்ட ஆரமிச்சிடுச்சு”
“இருக்கட்டும் வாட்ச்மேன் இருக்கார் நான் பாத்துக்குறேன்” குனிந்த தலை நிமிரவில்லை.
அவனுக்கோ அவள் பிடிவாதத்தால் எரிச்சல் தான் வந்தது, திரும்பி அந்த காவலாளியை பார்த்தான். சந்தேகம் படும் படி அவர் இல்லை ஆனால் இரவு நெருங்கியதும் குளிருக்காக மதுவை அவர் அருந்துவது ஒரு நாள் தெரிந்து அவன் கண்டித்தது உண்டு. அவரை பற்றி தெரிந்தும் விட்டு சென்றால் ஒரு ஆண் பிள்ளைக்கு அழகில்லையே.
“அப்டி என்ன தலை போற வேலை” தன்னுடைய பொறுப்பில் அவள் இருப்பது போல் தானே கணக்கு?
“தலை போற வேலை தாங்க… ஒத்து வரலனா பக்குவமா சொல்லி நிறுத்திடுவாங்க… அதுக்கு நானே வேலை பாத்துடலாமே”
பெருமூச்சொன்றை விட்டு புருவத்தை ஒரு விறல் கொண்டு தேய்த்தவன் அந்த இடத்தை விட்டு அகன்றான். அவன் சென்றதை உணர்ந்தவள் தலையை தொக்கி வாசலை விட்டு வெளியில் செல்வதை வெறித்து பார்த்தாள்.
விளையாட்டு குணம் அதிகம் தான் ஆனால் சுந்தரிடம் அவன் பேசியதை கேட்டு வருத்தம் மேலோங்கியது. அதனால் தான் அவனை தலை தூக்கி கூட பார்க்கவில்லை வைஷ்ணவி. அவளது அன்னை வேறு அரை மணி நேரத்திற்கு முன்பே அழைத்து அவள் வரவை பற்றி விசாரித்தார்.
வருத்தத்தில் வேறு கைகள் தவறாக வேலை செய்ய தலையை பிடித்து அமர்த்திருந்தவள் கைபேசியை எடுத்து உற்சாகத்தை கொடுக்கும் ஒரு பாடலை போட்டு தலையை மேஜையில் கவிழ்ந்தாள்.
நெருப்பே சிக்கி
முக்கி நெருப்பே இதமா
ஒத்தடம் கொடுப்பேன்
மெதுவா சொக்கி சொக்கி
மயக்கி மடியில் படுப்பேன்
கைக்கு அருகில் சூடாக ஏதோ உணர்ந்தவள் தலையை தூக்கி பார்த்த பொழுது முன்னே ஆவி பறக்க ஒரு கண்ணாடி க்ளாசில் டீ வந்து நின்றது உடன் அவனும்.
தினமும் உன்ன
உன்ன நினைச்சு உடம்பு
குச்சியா இளச்சேன் கனவில்
எட்டி எட்டி பார்த்தேன் அதனால்
பொளைச்சேன்
அவனையே அவள் பார்வை வெறிக்க அவளுக்கு எதிரில் ஒரு நாற்காலியை இழுத்து அமர்ந்து அவள் முன்னாள் இன்னும் அந்த டீ கோப்பையை தள்ளி வைத்தான் பருகுமாறு. அவனையும் அவன் தந்த டீயையும் பார்த்தவள் அதை எடுக்க கூட முன் வரவில்லை.
“குடிங்க வைஷ்ணவி” என்றான் மென்மையாக.
தலையை சிலுப்பியவள் அவன் குரலுக்கு மயங்காமல் வீறாப்பாக தன்னுடைய பையை எடுத்து அதிலிருந்த பத்து ரூபாய் தாளை அவன் முன்னே வைத்தாள். இதை தான் வாங்காமல் அவள் தேநீரை பருக போவதில்லை என்றறிந்தவன் அவள் கொடுத்த பணத்தை எடுத்துக்கொண்டான்.
குளிருக்கு இதமாக கையில் வந்த அந்த குவளையை இரண்டு கைகள் கொண்டு அணைத்துக்கொண்டாள் வைஷ்ணவி. இருவருக்கும் இடையில் மௌனமே வியாபிக்க கார்த்தி கண்களோ தன்னுடைய கைபேசிக்கு இடம் மாறியது.
மேலே மட்டும் கூரை இருக்க எட்டு திசையிலிருந்து வந்த குற்றால காற்றின் இதம் உடலில் மோதி செல்லும் நொடி ஒவ்வொன்றும் மேலே குற்றால சாரல் வீசும் பிரமை.
கனியே கனியே என் நாவில்
உந்தன் ருசியே ருசியே
விரலோடு விரல்கள்
நெருங்கிடவே நகத்தோடு
நடனம் தொடங்கும்
பாடல் வரிகளின் அர்த்தம் ஏற்கனவே மனம் சஞ்சலத்தில் இருந்தவள் இதயத்தில் கல்லை எரிந்தது போல் குழப்பிவிட வேகமாக பாட்டை நிறுத்தி வைத்து அவனை பார்க்க, அவனோ சஞ்சலமே இல்லாமல் தெளிவாக கையிலிருந்த கருவியில் மூழ்கியிருந்தான்.
காற்றில் பறந்த தன்னுடைய கற்றை முடியை வைஷ்ணவி காதின் ஓரம் நிறுத்தி வைக்க, அவனும் சிலுப்பி நின்ற அவன் கேசத்தை ஐவிரல் கொண்டு பின்னே தள்ள அவன் விறல் சென்ற தடயம் அடுத்த காற்றில் மறந்து போனது.
கண்கள் அப்படியே அவள் முகத்திற்கு வர, ‘இன்னும் கொஞ்சம் கலரா அழகா இருந்தா துல்கர் சல்மான் தான்… இந்த தாடி இன்னும் இன்னும் கொஞ்சம் வச்சு ஒரு கூலர்ஸ் போட்டா நீ ப்ரேமம் நிவின் பாலி தான்யா சமையல் காரரே’
தேநீரை பருகி முடித்து வெறும் க்ளாஸை தான் சிரமப்பட்டு உறிஞ்சிக்கொண்டிருக்கிறோம் என்று கூட தெரியாமல் அவனுள் தொலைத்திருந்தாள் அந்த வாயாடி.
திடீரென திரும்ப அவனுடைய கருமை நிற கண்கள் தன்னை சந்தித்த நொடி இதயத்தின் ஓட்டத்தை கண் மூடி சமணம் செய்தவளிடம் மீண்டும் பேசினான் அவன், “இன்னும் ஒன்னு வாங்கி வரவா?”
அவன் பேச்சில் தான் க்ளாஸை கவனித்தவள் அதை கீழே வைத்து வேண்டாம் என்று தலையை ஆட்டினாள். அவளின் மௌனத்தை விபரீதமாகவே கார்த்தியால் எண்ண தோன்றியது.
ஆனால் தவறு தன் மேல் இல்லை என்பதையும் அவனால் அவளிடம் விட்டுக்கொடுக்க முடியவில்லை.
“இன்ஜினீயர்கிட்ட பேசுனது தப்பு இல்லையே” கைபேசியை பாக்கெட்டில் நுழைத்துக்கொண்டே அவளிடம் கேட்டான்.
அவளும் அவனை சாதாரணமாக பார்த்து, “சரிங்க தப்பு இல்ல” என்றாள்.
“அப்றம் ஏன் இப்டி இருக்கீங்க? நான் பேசுனா என் முகத்தை கூட பாக்க மாட்டிக்கிறீங்க?”
“வேலையா இருந்தேன் கார்த்திக். வாங்குற சம்பளத்துக்காவது உழைச்சா தானே சாப்பாடு ஒடம்புல ஒட்டும்?” தான் பேசியது அவளை பாதித்துள்ளது என்பதை புரிந்தவன் ஆசுவாசமாக மூச்சை விட்டு,
“உங்க இடத்துல என் தங்கச்சி இருந்தாலும் இதையே தான் நான் சொல்லிருப்பேங்க” உண்மையை தான் கூறினான் அவனும்.
“சரிங்க கார்த்திக். நீங்க நேர்மையானவங்க நியாயமானவங்க தான். ஆனா ஒன்னு மட்டும் புரிஞ்சுக்கோங்க இது நீங்க படிச்சா படிப்பு இல்ல, எல்லாத்தையும் ப்ராக்டிகலா செய்றதுக்கு. மார்க் மட்டுமே முக்கியம்ன்னு படிச்சிட்டோம். படத்துல இருந்ததுக்கும் இங்க பாக்குற வேலைக்கும் மலையளவு வித்யாசம் இருக்கு”
அவளை இடையிட்டவன், “எனக்கு புரியுது வைஷ்ணவி…”
“இல்ல கார்த்திக் உங்களுக்கு புரியல. என் அப்பா வாங்கி குடுத்த வேலையோ, இல்ல நானே தேடி தேடி வாங்கிருந்தாவோ இவ்ளோ கஷ்ட பட்டு வேலை பாக்க மாட்டேன். எனக்கு வேலை பாக்கவே புடிக்காது. உங்க பேர் கெட்டு போக கூடாதுன்னு தான் வேலை பாக்குறேன்”
பேசிய பிறகு தான் இதை இவனிடம் சொல்ல வேண்டுமா என்ற கோவம் தன் மேல் வந்தது.
அவனோ அதை கூட பெரிதாக எண்ணவில்லை, “ஆனா எல்லாரும் சுந்தர் மாதிரி இருக்க மாட்டாங்கங்க, அத தான் சொல்ல வர்றேன்” வாடியது அவன் முகமும்.
இவன் தன்னிடம் வந்து பேச வேண்டும் என்று தானே கார்த்தி கூறியதை பெரிதாக எடுக்காவிட்டாலும் வருந்துவது போல் நடித்த வைஷ்ணவிக்கு இதற்கும் மேல் அவனை கஷ்டப்படுத்த பிடிக்கவில்லை.
“ஏது அந்த யானை வண்டிக்காரனையா நல்லவன்னு சொல்றிங்க?”
“யானை வண்டிக்காரனா?” அதிரிச்சியில் இருந்தாலும் அவன் இதழோரம் சிரிப்பு இருந்தது.
“ஆமா உங்க இன்ஜினீயர் தான்”
“நல்லவருங்க அவர்”
“எங்க உங்க நல்லவர காசே வாங்காம இந்த ப்ராஜெக்ட் முடிச்சு தர சொல்லுங்க பாப்போம்”
“பைத்தியக்காரன் கூட அப்டி பண்ண மாட்டான்”
“பைத்தியம் பண்ண மாட்டான் ஆனா நல்லவன் பண்ணணுமே”
சிரிப்போடு எழுந்தவன், “தெரியாம சொல்லிட்டேன்” என்றான். “மதியம் நான் உங்கள ஹர்ட் பண்ணிட்டேனா?”
மேஜையில் இருந்த தன்னுடைய வண்டி சாவியை எடுத்தவன், “இல்லங்க” என்றான் உண்மையாக.
மேலும், “இன்னும் எவ்ளோ நேரம் வேலை இருக்கு?” கேள்வி கேட்டான்.
“காவலுக்கு இருக்க தான் கேக்குறிகளோ?” அவன் கேள்விக்கு மறு கேள்வி தான் அவளிடம்.
“இருந்து தானே ஆகணும்” என்றான் அவனும் அவளை தன்னுடைய பொறுப்பில் முழுதாய் எடுத்துக்கொண்டு.
“உங்களுக்கு கஷ்டம் வேணாம். நானும் கிளம்புறேன்” தன்னுடைய பொருட்கள் அனைத்தையும் எடுத்து பையில் வைத்தவள் வாசலை நோக்கி நடக்க அவளுடைய வாகனம் இல்லாததை கவனித்தான் கார்த்தி. “ஸ்கூட்டி இல்லையா?” என்றான் அவளிடம்.
“இல்ல ஷெர்லின்க்கு ஒரு எமெர்ஜென்சி சோ அவளுக்கு குடுத்து அனுப்பிட்டேன்” எதுவும் பேசாமல் யோசனையாய் நின்றான் அவளையே பார்த்து.
“என்ன யோசனை? உங்க வண்டிய தர போறிங்களா?” சிரித்தாள் அவன் விரிந்த கண்களை பார்த்து.
இல்லை என்று தலையை ஆட்டியவன் சுற்றமும் ஒரு முறை பார்த்துவிட்டு வாகனத்தை எடுத்து வர, வைஷ்ணவி பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடக்க துவங்கியிருந்தாள்.
சைட்டை விட்டு சில மீட்டர் தூரங்கள் இருந்த இடத்தை அவள் அடையும் வர, சைட்டின் வாசலில் நின்று பார்த்தவன் அவள் பேருந்து ஏறும் வரை அங்கேயே நின்றான். எதேச்சையாக திரும்பியவளுக்கு அங்கேயே நின்ற கார்த்தி தெரிய, ஏதாவது வேலை இருக்குமென நினைத்து பேருந்தில் ஏறி முன்னாள் கண்டக்டர் இருக்கைக்கு பின் இருக்கையில் அமர்ந்துகொண்டாள்.
பேருந்து கார்த்தி நின்ற இடத்தை நெருங்கிய பொழுது இன்னும் அவன் அங்கு தான் நிற்கின்றானா என்று பார்க்க பேருந்தை பார்த்துக்கொண்டே வாகனத்தை உயிர்பிப்பது தெரிந்தது.
பேருந்து அவன் இருக்கும் இடத்தை அடையுமுன்னே சென்ற கார்த்தி பேருந்தின் வேகத்திற்கு ஈடாக செலுத்த குற்றாலத்தை தாண்டி சென்ற பேருந்து ஹை வேயில் சற்று வேகத்தை கூட்ட, தன்னுடைய வண்டியின் கண்ணாடியை சரி செய்தவன் பின்னே வந்த பேருந்தை அடிக்கடி பார்த்துக்கொண்டே இருப்பதை ஜன்னல் வழியாக கண்டவள் கண்கள் ஆசையில் விரிந்தது.
தனக்காகவா இவன் இதை செய்கிறான் என்று சுகமாய் பேருந்து கம்பியில் தலை சாய்த்து காற்றில் பறந்த தன்னுடைய சிகையின் அட்டகாசம் தாங்காமல் ஹெல்மெட்டை எடுத்து தலையில் மாட்டிக்கொண்டே வாகனத்தை செலுத்தியவனை சிரிப்புடன் பார்த்தாள்.
செங்கோட்டை வந்தும் வீட்டிற்கு வந்தவன் வீட்டிற்குள் செல்லாமல் வாசலிலேயே நின்ற மகனிடம், “என்ன கார்த்தி வெளியவே நிக்கிற?” – என மஹாலக்ஷ்மி கேட்க,
“ஒரு முக்கியமான கால் பேசணும் ம்மா. வரேன்” என்று வெளியிலேயே நின்றான்.
அன்னை உள்ளே சென்றதும் பார்ட்னராக சேரவிருக்கும் தன்னுடைய நண்பனுக்கு அழைத்து நடக்கும் வேலைகளையும் அது சார்ந்த தகவலையும் கூறிக்கொண்டிருந்தவன் தங்கள் வீட்டை தாண்டி செல்லும் வைஷ்ணவியை பார்த்ததும் வீட்டிற்குள் செல்ல, அவன் செயலை கண்டுகொண்டவள் குழம்பிய மனதுடன் தன்னுடைய வீட்டிற்குள் நுழைந்தாள்.
அமைதியாக வந்து சோபாவில் அமர்ந்து ஆழ்ந்த சிந்தனையில் இருக்கும் மகளை ஆச்சிரியமாக பார்த்த மஹேஸ்வரி மகளின் முகத்தை தூக்கி பார்த்தார்.
“என்ன மா?” என்றாள் அவரின் செயலில் சந்தேகமாக.
“பஸ்ல வர்றப்ப பேய் எதுவும் புடிச்சிடுச்சாடி… இவ்ளோ அமைதியா இருக்கியே நீ”
“ஆமா உன் மாமியா தான் என் ஒடம்புல ஏறிடுச்சு. வா வந்து கால் அமுக்கி விடு” அன்னையை சீண்ட காலை முன்னே இருந்த டீபாயில் நீட்டி வைத்தாள்.
“மாமியார் கொடுமை கூட பத்து வருஷம் தான்டி அனுபவிச்சேன். ஆனா உன் கொடுமையை இருவது வருசத்துக்கும் மேல அனுபவிச்சிட்டு இருக்கேன்… எப்ப தான் விடிவுகாலம் வருமோ”
மகளை வசைபாடிக்கொண்டே அவள் கையில் கேரட், பீன்ஸ் கொடுத்தார், “நறுக்கி தா” என சமையலறை உள்ளே நுழைந்துகொண்டார் மஹேஸ்வரி.
மெதுவாக தானும் சென்றவள், “ஏன் மா… நீயும் அப்பாவும் லவ் மேரேஜ் தான?”
“ஆமா அது இப்போ என்ன? கதை கேட்டுட்டு வேலைய என் கிட்ட தட்டிவிட யோசிக்காத” அன்னையின் எச்சரிக்கையை ஏற்று காயை நறுக்கியவள்,
“அப்போ நாங்க லவ் பண்ணாலும் நீ எதுவும் சொல்ல மாட்டியா?” மகளின் கேள்வியில் மஹேஸ்வரிக்கு சிரிப்பு தாங்கவில்லை.
சிரித்துக்கொண்டே, “ஏண்டி உனக்கு காமெடி எல்லாம் வருமா?” அவர் சிரிப்பில் கடுப்பானவள் கால்களை தரையில் உதைத்து,
“சீரியசா கேக்குறேன் ம்மா”
“பொண்ணு யாரு?” சகோதரனை வைத்து தான் கேட்டுக்கொண்டிருக்கிறாள் என்றெண்ணி மகளை பார்த்தார்.
“பொண்ணா?” குழம்பியவள், “பையன் யாருன்னு கேளு மா” என்றாள் வைஷ்ணவி.
“பையன் யாருனு மட்டும் சொல்லு…”
“நீயே கல்யாணம் பண்ணி வச்சிடுவியா?” அன்னையை குறுக்கிட்டு ஆர்வமாய் கேட்டாள் வைஷ்ணவி.
“ச்ச ச்ச… அந்த பையன நாடு கடத்தி வேற ஊருக்கு அனுப்பிடுவேன். ஒரு அப்பாவி பையன் வாழ்க்கையை காப்பாத்துன புண்ணியம் எனக்கு கிடைக்கும்ல?”
காண்டானவள் அன்னையின் கன்னத்தை இரு கைகள் வைத்து நசுக்கி, “நீ எல்லாம் ஒரு தாயா? ஆஹ்? தாயா நீ? என்ன பெத்த பேய். என் ஆச்சி பெத்த பேய்”
மகளின் கையிலே கரண்டியை வைத்து இரண்டு அடி போட்டவர், “கை எடுடி வலிக்கிது” இன்னும் இரண்டு அடி கிடைக்க,
“இரு இரு உனக்கும் உன் புருஷனுக்கும் டிவோர்ஸ் வாங்கி தரல நான் வைஷ்ணவி இல்ல”
கோவமாக தன்னுடைய பையை எடுத்து நடந்தவளை பார்த்து, “கோமாளி” என்று அன்னை திட்டும் வார்த்தைகள் காற்றில் தான் கரைந்தது.
மொக்கையா தானே இருக்கு? எனக்கே தெரியுதுங்க… இனி கார்த்திக், வைஷ்ணவி சீன்ஸ் அதிகம் கொண்டு வர ட்ரை பண்றேன். படிச்சிட்டு மறக்காம கமெண்ட் பண்ணிடுங்க. அடுத்த அத்தியாயம் வேகமா குடுக்க ட்ரை பண்றேன்.