கொடைக்கானல் குளிருக்கு கைகளை பரபரவென தேய்த்துவிட்டுக்கொண்டு அமர்ந்திருந்தனர் சங்கவியும் ரோஷினியும்.
“எனக்கு ரொம்ப பயமா இருக்கு” வார்த்தையில் மட்டுமல்லாமல் பயம் சங்கவியின் முகத்திலும் வெளிப்படையாய் தெரிந்தது. அவள் வாய்விட்டு சொல்லிவிட்டாள், ரோஷினி சொல்லாமல் உள்ளுக்குள் வைத்துக்கொண்டிருக்கிறாள் அவ்வளவு தான் வித்தியாசம். ஒருவருக்கொருவர் குறையாத பயம் அதிகமாய் இருந்தது.
“ரோஷி… வீட்டுக்கு போனா மாட்டிப்போமோ?” சங்கவி பீதியுடன் கேட்க, “அதெல்லாம் மாட்ட மாட்டோம்… நம்ம கொடைகானல்ல இருக்கிறது அவங்களுக்கு எப்படி தெரியுமாம்?” என்றாள் ரோஷினி.
“இருந்தாலும் பயமா இருக்குடி! உன் அண்ணன் சரியான கழுகு!”
“ப்ச்… இப்ப எதுக்கு அவனை நியாபகப்படுத்துற? அவன் சென்னைல இருந்து வர இன்னும் மூனு மாசம் ஆகும்! அதெல்லாம் பக்காவா ப்ளான் போட்டு தானே அவன் இல்லாதப்போ எஸ் ஆகிருக்கோம்?” சற்றே எரிச்சலாய் கேட்டாள் ரோஷினி.
“அவர் இங்க இல்லன்னா என்ன? அவர் கண்ணு எல்லா பக்கமும் இருக்கும்!” பாராட்டாக சொல்லாமல் பயத்துடன் தான் சொன்னாள் சங்கவி.
“ஏன்டி நீ பயந்து என்னையும் பயப்படுத்துற?” ரோஷினி கடுப்பாக, “ஏதோ ஒரு அசட்டு தைரியத்துல கிளம்பி வந்துட்டோம்! கைல இருந்த காசும் காலி! இப்போ வீட்டுக்கு போனா மாட்டிப்போமாங்குறதை விட, அரியர் எக்ஸாம் பீஸ் எப்படி கட்டப்போறோம்? அதான் பயமா இருக்கு! ஒரூபாவா ரெண்டுரூபாவா? சுளையா எட்டாயிரம்! எப்படி பொறட்டுறது?” புலம்ப ஆரம்பித்தாள் சங்கவி.
ரோஷினி யோசனையாய் அமர்ந்திருக்க, “எந்த தைரியத்துலடி கிளம்பி வந்தோம்?” என மீண்டும் ஆரம்பித்தாள் சங்கவி.
“ஐயோ கொஞ்சம் சும்மா இரு சங்கவி!”
“எப்படி சும்மா இருக்கிறது? கடைசி வருஷ செமெஸ்டர் டி… இத விட்டா அப்பறம் அவ்ளோதான்! நான் அப்போவே சொன்னேன்’ல? இந்த வீட்டுக்கு தெரியாம ஊர் சுத்துற ப்ளான் எல்லாம் வேண்டாம்ன்னு… நீதான் கேட்கவே இல்லை! எனக்கும் ஆசைக்காட்டி இழுத்துட்டு வந்துட்ட… இப்ப பாரு எப்படி மாட்டிக்கிட்டு முழிக்குறோம்ன்னு…” தவறெல்லாம் ரோஷினி மீது என்பதை போல சங்கவி பேச,
“அடிப்பாவி! நாக்குல நரம்பு இல்லாம பேசாத! வீட்டுல ரொம்ப கெடுபிடி… எங்கயும் விட மாட்டேங்குறாங்க… ஜெயிலு மாறி இருக்கு! இந்த ‘செம்’ முடிஞ்சுட்டா அப்பறம் வீட்டோடவே வச்சுடுவானுங்க! கொஞ்ச நாள்ல கல்யாணமும் பேச ஆரம்பிப்பாங்க! எனக்கு சுதந்திரமே இல்ல, எங்கயாவது ப்ரீயா சுத்தனும்ன்னு ஆசையா இருக்கு, அது நடக்காமையே போய்டுமோன்னு பயமா இருக்கு… உன்னை கெஞ்சி கேக்குறேன்… ஒரு ரெண்டு நாளுக்கு எங்கயாவது என்னை கூட்டிட்டு போயேன்!” கடகடவென சொன்ன ரோஷினி,
“இந்த வசனமெல்லாம் யார் சொன்னதுன்னு நியாபகம் இருக்கா?” என்றாள் கோபமாய்.
திருதிருவென விழித்த சங்கவி, “நான் அப்படி தான் சொல்லுவேன்! நம்ம குடும்பத்துக்கு இதெல்லாம் சரி வராதுன்னு நீதானே எனக்கு புத்தி சொல்லிருக்கணும்” என்று கேட்க, அப்படியே அதிர்ந்து வாயை பொத்திக்கொண்டு அவளை பார்த்தாள் ரோஷினி.
“எங்கண்ணன் அப்போவே சொல்லும் டி… நீ ஒரு சரியான பச்சோந்தி… உன்கூட எல்லாம் கூட்டு சேரக்கூடாதுன்னு… கேட்டேனா நானு? பொறந்ததுல இருந்து கூடவே சுத்துறேன்! எப்படி நாக்கு கூசாம பேசுறா பாரு”
“என்னது நான் பச்சோந்தி’யா? அப்போ உங்கண்ணன் ரொம்ப யோக்கியமோ?” சங்கவி சிலிர்த்துக்கொண்டு வர,
“அதெல்லாம் எனக்கு தெரியாது… ஆனா அவன் உன்னவிட மோசம் இல்ல” என்றுவிட, சங்கவியின் முகம் தொங்கிப்போனது.
சிறுது நேரம் இருவருமே பேசிக்கொள்ளவில்லை.
சங்கவியின் ஆசைக்காக இருவரின் வீட்டு பெரியவர்களிடமும் நான்கு நாட்கள் கல்லூரியிலேயே தங்கியிருந்து வரப்போகும் பரிட்சைக்கு படிக்கப்போவதாக ரோஷினி தான் பேசியிருந்தாள்.
‘நான்கு நாட்கள் வீட்டுக்கு கூட வராமல் ஒன்றும் படிக்க தேவையே இல்லை’ என இருவீட்டினரும் ஒன்று போல சொல்லிவிட, ஏற்கனவே பல பரிட்சைகளில் கோட்டை விட்டிருந்த இருவரும், இந்த கடைசி வாய்ப்பை பயன்படுத்தவில்லை என்றால் இத்தனை வருடம் கட்டிய பணமும் வீணாக, டிகிரியும் கிடைக்காது என்று அழுது புலம்ப, இறுதியாய் சற்று இறங்கி வந்தவர்கள், வாத்தியாரிடம் பேச வேண்டும் என்றனர்.
இதையெல்லாம் ஏற்கனவே யோசித்து ஆள் ரெடி செய்து வைத்திருந்த ரோஷினி, வாத்தியாரை போல அவரை பேச வைத்து எப்படியோ நான்கு நாட்களுக்கு அனுமதி வாங்கிக்கொண்டு சங்கவியோடு கிளம்பி கொடைக்கானல் வந்து சேர்ந்தாள்.
கையில் பரிட்சைக்கு கட்டவேண்டிய பணமும் இருக்க, ஊரை விட்டு வெளியே வந்திராத இருவரும் வெகு உற்சாகமாய் சுற்ற ஆரம்பித்திருந்தனர். எட்டாயிரம் எட்டு ருபாய் போல கரைய ஆரம்பித்தது. கொடைக்கானல் தாலுக்காவை அடுத்த பூம்பாறை கிராமம் தான் அவர்கள் சொந்த ஊர் என்றாலும் பிறந்ததில் இருந்து ஒரு முறை கூட அவர்கள் இங்கே வந்ததே இல்லை. அதனால் தலை கால் புரியாத சந்தோஷம்.
எல்லாம் இரண்டு நாட்கள் தான்! பின்னே கையிருப்பு கரைந்ததும், வீட்டு நியாபகம் வர அடிவயிற்றில் பயப்பந்து உருள ஆரம்பித்தது.
முதல்முறையாய் மிகப்பெரிய தவறு செய்கிறார்கள். மாட்டிக்கொண்டால் கண்டிப்பாக எட்டாம் நாள் பாலு தான்! இதில் பணமும் வேறு இல்லை. அதோடு அவ்வளவு பெரிய தொகையை இன்னும் ஒரு வாரத்தில் கல்லூரியில் கட்ட வேண்டும்! திரும்ப வீட்டிலும் கேட்க முடியாது. கடன் கொடுக்குமளவு நட்பும் இல்லை.
தாங்கள் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு வெளியே ரிசெப்ஷன் அருகில் அமர்ந்து தான் இத்தனை நேர வாக்குவாதமும்.
நெடு நேரம் மௌனம் கலைத்து, “ரோஷி! என்னடி பண்ணப்போறோம்? பயமா இருக்கு” என்ற சங்கவியிடம், “கொஞ்சம் பொறு… யோசிப்போம்” என்றாள் ரோஷினி.
***
ஆஸ்திரேலியாவில் இருந்து கிளம்பிய விமானம் டெல்லியில் தரையிறங்க, அங்கிருந்து உள்நாட்டு விமானம் மூலம் மதுரை விமான நிலையத்தை வந்தடைந்த ஜேகோப், பிறகு ஒரு கால் டேக்சியில் திண்டுக்கல் நோக்கி பிரயாணத்தை துவங்கினான்.
எத்தனையோ நாடுகளுக்கு சென்று வந்தவனுக்கு இந்தியா ஏனோ மனதுக்கு நெருக்கமாய் இருந்தது. அவன் பார்த்த நாடுகளில் இருந்து ஒழுங்கோ, தூய்மையோ, நாகரீகமோ எதுவும் இங்கே சரிவர இல்லை என்றாலும், அங்கெல்லாம் தோன்றாத ஒருவித உணர்வு, அவனுக்கு இங்கே ஏற்பட, தன் தாய்மண்ணை ரசனையாய் பார்த்துக்கொண்டே வந்தான் அவன். இடையே ஒரு குட்டி உறக்கம்! மீண்டும் விழித்தபோது,
“சார்? வேர் கோயிங்?” என்று உடைந்த ஆங்கிலத்தில் பேச்சை ஆரம்பித்தான் ஓட்டுனர்.
லேசாக சிரித்தவன், “சுத்தி பாக்குற மாதிரி எதாவது இடம் இருந்தா அழைச்சுட்டு போங்க” என்று சொல்ல, கார் ஒரு நொடி ஓட்டுனரின் கையில் இருந்து நழுவி பின் சீராக, “வாட்? வாட் ஹேப்பென்ட்?” என்றான் ஜேகோப்.
டிரைவரோ, “தமிழ் தெரியுமா?” என்று ஆச்சர்யமாய் வினவ, பற்கள் தெரியாமல் சிரித்தவன், “நல்லா தெரியும்! அம்மா தமிழ்… அப்பா இங்க்லீஷ்” என்றான்.
“பாக்க வெள்ளைக்கார துரை கணக்கா இருக்கவும் எப்படிடா உங்ககிட்ட இங்கிலீஸ்ல பேசி சமாளிக்குறதுன்னு யோசிச்சுட்டு இருந்தேன்! நல்ல வேளை தம்பி, தமிழ்ல பேசி என் வயித்துல பாலை வார்த்தீங்க” நிம்மதியாய் அவர் சொல்ல இவனுக்கு சிரிப்பாய் இருந்தது.
“தமிழ் தெரியும்! ஆனா ரொம்ப வேகமா பேசுனா… யு க்நொவ்… அது கொஞ்சம்… புரிய கஷ்டம்” இதையே தடுமாறி தான் சொன்னான் ஜேகோப்.
“புரியுது புரியுது தம்பி”
ஜேகோப் ஜன்னல் வழியே வேடிக்கை பார்க்க, கண்ணாடி வழியே அவனை பார்த்த டிரைவர், “எப்படி தம்பி இவ்ளோ வெள்ளையா இருக்கீங்க வெளிநாட்டுக்காரங்க எல்லாம்?” என்றார் அவன் மீது ஒரு கண்ணை வைத்துக்கொண்டே.
அவசியமான பேச்சை தவிர, சொந்த பேச்சுகள் என்பதே அந்நியரிடம் இருக்காது என்ற லோகத்தில் பிறந்து வளர்ந்தவனுக்கு, இப்படி பார்த்து சிறிது நேரத்தில் பேச்சை வாஞ்சையுடன் ஆரம்பிக்கும் ஆட்களை பார்க்க வியப்பாய் இருந்தது.
அவன் அமைதியாய் இருப்பதை பார்த்தவர், “ரொம்ப ரகசியம் போலிருக்கே தம்பி! சொல்ல கூடாதோ?” என்றார். அதற்கும் சிரிக்கத்தான் செய்தான் ஜேகோப்.
“எல்லாத்துக்கும் சிரிப்பு தான் போல” என்றவர், “இங்க என்ன வேலை தம்பி? சொந்தக்காரங்க இருக்காங்களா? இல்ல சும்மா சுத்தி பார்க்கவா?” என்றார்.
அவருக்கு ஏதாவது பேசியே ஆகவேண்டும் போல!
“ரிலேட்டிவ்ஸ் இருக்காங்க… பட் எனக்கு கொஞ்சம் ரிலேக்ஸ் பண்ணனும்!” எனும்போதே அவன் டெல்லியில் வாங்கியிருந்த இந்திய எண்ணுக்கு முதல் சர்வதேச அழைப்பு வந்தது.
ஓட்டுனரிடம், “எக்ஸ்க்யூஸ் மீ” என்றவன், “ஹாய் டேட்” என்றான் போனில்.
“டேட் இல்ல… மாம்! எங்கடா இருக்க? வீட்டுக்கு போயிட்டியா?” என்றவர் குரலில் துள்ளலும் பரபரப்பும் போட்டிப்போட்டது.
“நோ மாம்! ஆன் தி வே டு திண்டிகுல்!” என்றிட, மறுப்பக்கம் கலகலவென சிரித்தார் தேவகி. கேட்டுக்கொண்டிருந்த டிரைவரும் கூட சிரிக்க, “டிட் ஐ மிஸ்ப்ரொனவுன்ஸ் இட்?” என சரியாய் கேட்டான் ஜேகோப்.
“ஆமா… திண்டிகுல் இல்ல… திண்டுக்கல்!” என்று தேவகி சொல்ல, “ஸ்பெல்லிங் நான் சொன்ன மாதிரி தான் இருந்துச்சு” என்றான் அவன் சிறுப்பிள்ளை போல.
“அத விடு! சீக்கிரமா வீட்டுக்கு போ! எனக்கு போனதும் வீடியோ கால் பண்ணு” என்று சொல்ல, இந்த பக்கம் டிரைவர், “தம்பி, கொடைக்கானல் போலாமா? அருமையான டூரிஸ்ட் இடம்… எல்லாரும் இங்க தான் சுத்தி பாக்க வருவாங்க” என்றிட, “ஓகே, போங்க” என்றுவிட்டான் ஜேகோப்.
கேட்டுக்கொண்டிருந்த தேவகி பதைபதைப்புடன், “டேய் வீட்டுக்கு போலையா?” என்று கத்த, “கூல் மாம்! டூ டேஸ் ரிலேக்ஸ் பண்ணிட்டு போறேன்” என்றான் இவன்.
“ரிச்சர்ட் இவனை பாருங்க” அருகே இருந்த கணவரிடம் கைபேசி மாறியது.
“வாட் இஸ் யுவர் ப்ளான் பப்பூ? இஸ் எவ்ரிதிங் ஓகே?” ரிச்சர்ட் பேச, “எஸ் டேட்! ஜஸ்ட் வான்ன ரிலேக்ஸ் மைசெல்ப்! போற வீட்டுல எந்த மாதிரி எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்கும்ன்னு தெரியல! பர்ஸ்ட் டைம் இந்தியா வரேன்… கொஞ்சம் நல்ல மெமரீஸ் கெயின் பண்ணலாம்ன்னு நினைக்குறேன்… கரெக்ட் மீ இப் ஐம் ராங்… ஆர் எல்ஸ் கரெக்ட் யுவர் வைஃப்…” கிண்டலாய் அவன் சொல்லி முடிக்க,
“ஐ வில் கோ வித் தி லேட்டர்” (இரண்டாவதாய் சொன்னதை செய்கிறேன்) என்று சிரித்த ரிச்சர்ட், “டேக் கேர்” என்று வைத்துவிட்டார். அடுத்து அங்கே அன்னை மிஞ்ச, தந்தை கெஞ்ச, பிறகு சற்றே மிஞ்ச என என்ன நடக்கும் என்று ஜேகோப்’பிற்கு தெரிந்ததால், இதழில் உறைந்த புன்னகையுடன் வேடிக்கையை தொடர்ந்தான்.
பல கொண்டைஊசி வளைவுகளில் வண்டி ஏற ஆரம்பித்தது. லாவகமாய் டிரைவர் ஓட்டுவதிலேயே அவரது அனுபவம் அவனுக்கு தெரிந்துவிட, “நல்ல ஹோட்டல்ல நிறுத்துங்க!” என்றான் அவரிடம்.
சற்று நேரத்திலேயே ஒரு மூன்று நட்சத்திர ஹோட்டல் முன்னே கார் நின்றது. தாராளமான புன்னகையுடன், அவர் சொன்னதை விட கூடுதலாகவே பணத்தை கொடுத்துவிட்டு தன் உடமைகளோடு ஹோட்டலுக்கு நுழைந்தவன், குறுக்கே நின்ற ஆட்களிடம், “எக்ஸ்க்யூஸ் மீ…” என்று சொல்ல, அனிச்சையாய் திரும்பிய பெண்கள் அவனுக்கு வழிவிட, உள்ளே ரிசெப்ஷனில் சென்று நின்றான் ஜேகோப்.
சங்கவி வாயை பிளந்து, “ஹே ஆளு செம்மையா இருக்கான்’ல?” என்று சொல்ல, “ஆமா! வெளிநாட்டுக்காரன் போல” என்றாள் ரோஷினி. அவர்களுக்கு சற்றே அருகே தான் அவன் இருந்ததால் அவர்கள் பேசியது தெள்ளதெளிவாய் அவன் செவிகளை அடைந்து, சிறு புன்னகையை பரிசாக்கியது.
ரிசெப்ஷனிஸ்ட்டிடம், பெயர், அடையாள அட்டை எல்லாம் காட்டி விபரம் சொன்னாலும் அவன் காதுகள் இயல்பாய் இவர்கள் பக்கமும் சாய்ந்து தான் இருந்தது.
“சார், ரூம் நம்பர் த்ரீ நாட் ஃபோர்” என்ற பெண் சாவியை கொடுக்க, சங்கவியோ, “ஏய் நமக்கு பக்கத்து ரூமு டி” என்றாள் உற்சாகமாய்.
“அதுக்கென்ன இப்போ?” ரோஷினி கடுகடுக்க, “ப்ச் சும்மா சொன்னேன்!” என்றவளிடம், “நமக்கு இருக்க தலைவலில சைட் அடிக்குற மூட் எல்லாம் இல்லடி எனக்கு” என்று ரோஷினி சொன்னதும் தான் தற்காலிகமாய் மறந்து போயிருந்த அவர்கள் பிரச்சனை கூட நியாபகம் வந்தது அவளுக்கு. மீண்டும் தொங்கிப்போனது முகம்.
சங்கவி, “இப்ப என்னடி பண்றது?”
ரோஷினி, “இப்படியே உட்காந்து மட்டும் என்ன செய்யப்போறோம்? வா ரூமுக்கு போலாம்” என எழுந்துக்கொண்டு லிப்ட்டின் அருகே செல்ல, அவர்களுக்கு முன்னே அங்கே காத்திருந்தான் ஜேகோப். இருவரை கண்டதும் சிநேகமாய் அவன் சிரிக்க, திக்கென்றானது இருவருக்கும்.
“பாரு நீ வழிஞ்சது அவனுக்கு தெரிஞ்சுடுச்சு! அதான் சிரிக்குறான்… இருக்குற பிரச்சனைல புதுசா எதையும் இழுத்து விட்டுடாத சங்கவி சொல்லிட்டேன்” வெகு கோபமாய் சின்ன குரலில் அவள் அதட்ட, ‘ஒரு ஸ்மைல்’க்கு இப்படியா?’ என்று தான் நினைத்தான் ஜேகோப்.
மின்தூக்கி வந்துவிட, தன் உடமைகளோடு உள்ளே நுழைந்தான் அவன். அவன் போனதும் சங்கவி உள்ளே செல்லப்போக, அவளை இழுத்த ரோஷினி, “அவன் மட்டும் தான் இருக்கான்… நீ பாட்டுக்கு போற?” என்று கடிந்தாள்.
அதை கேட்ட ஜேகோப்’க்கு ‘வாட்? நான் இருந்தா என்ன?’ என்றுதான் தோன்றியது. அதே நேரத்தில் ஒரு சிப்பந்தி, “சார் ஹெல்பர்” என்று ஜேகோபின் அருகே சென்று நின்றுக்கொண்டான். இப்போது இரு ஆண்கள் இருக்க, அதில் ஒருவன் அங்குள்ள ஊழியன் என்பதால், சங்கவியின் கரத்தை பற்றிக்கொண்டு லிப்டுக்குள் சென்றாள் ரோஷினி.
மூன்றாம் தளத்துக்கு பயணித்தது மின்தூக்கி.
தளம் வந்ததும் அவன் உடமைகளோடு சிப்பந்தி வெளியேற அவனை தொடர்ந்து வெளியேறப்போன ஜேகோப், அதே நேரம் வெளியேற வந்த ரோஷினியின் தோள்களில் தெரியாமல் முட்டிவிட, “ஓ.. சாரி!” என்றான் அவன் உடனே…!
தன் முட்டை விழிகளை உருட்டி முறைத்து பார்த்தவளோ, “இடிக்குறதுக்குன்னே வெளிநாட்டுல இருந்து வந்துடுவானுங்க போல!” என்று சொல்லிவிட்டு போக, அதிர்ந்து நின்றான் அவன்.
முன்பின் தெரியாவனிடம் எதற்கு இத்தனை கடுமை என்று புரியவில்லை அவனுக்கு. ரோஷினியும் சங்கவியும் அறைக்குள் சென்று நுழையும் வரை பார்த்துக்கொண்டிருந்தான்.
“சார், எனி ஹெல்ப்?” அறைக்குள் அத்தனையும் வைத்துவிட்டு வெளியே வந்தவன் கேட்க, “நத்திங்” என்ற ஜேகோப் அவன் கரத்தில் ஒரு நூறு ரூபாய் தாளை கொடுத்துவிட்டு அறைக்குள் சென்று முடங்கினான்.
அவள் திட்டியது, முறைத்தது எல்லாம் தாண்டி… அந்த முகம்… வெகு பரிட்சயம் போல இருந்தது அவனுக்கு! சிறுது நேரம் அவனை மீறி அதே யோசனையில் அவன் இருக்க, திடீரென பளிச்சிட்டது.
போனை எடுத்து அன்னைக்கு அழைத்தான். உர்ரென ‘ஹலோ’ சொன்னவரிடம், “உங்க அண்ணன் பொண்ணு போட்டோ குடுங்க” என்று கேட்க, உடனே ‘ஈஈ’ மோடுக்கு போனவரோ, “பார்த்தியா? எங்க ஊரு மண்ணை மிதிச்சதுமே உனக்கு மாமன் பொண்ணு மேல பாசம் வந்துடுச்சு!” என்றார் அவர்.
“மாம்மி! நான் இன்னும் ஷூ கூட கழட்டல! அப்பறம் எப்படி மிதிப்பேன்?” என்று கடித்தவன், பிடிவாதமாய் போட்டோ கேட்க, அவனை லைனில் வைத்துக்கொண்டே அனுப்பி வைத்தார் தேவகி.
எதிர்ப்பார்ப்புடன் எடுத்து பார்த்தவனது எண்ணம் பொய்க்கவில்லை. அவனது மாமன் மகளே தான் அது…!
“மாம்… உங்க அண்ணன் பொண்ணு பேரென்ன?” என்று கேட்க,
“சங்கவி!” என்றார் தேவகி.
‘சங்கவி’ சொல்லிப்பார்த்தான்…!