டிங் டாங் – 6.1
ஞாயிற்று கிழமை மதிய உணவை முடித்து உறங்க சென்ற பெற்றோரையும் பாட்டியையும் பிடித்து அமர வைத்து தன்னுடைய அறைக்குள் மகன் சென்று கால் மணி நேரத்திற்கும் மேல் ஆகிவிட்டது. சேர்மதாய்க்கு உறக்கம் கண்ணை திறக்க விடாமல் வைத்தது வயோதிகத்தை காரணத்தால்.
“என்ன மகா எதுக்கு நம்மள இங்க இருக்க சொல்லிட்டு எங்கனயோ அவன் போய்ட்டான்” சுப்பிரமணி புரியாமல் மனைவியிடம் கேள்வி எழுப்பினார்.
“தெரியலைங்க… நீங்க இருங்க அவன் வர்றதுக்குள்ள நான் ரெண்டு பாத்திரத்தை கழுவி வச்சிட்டு வர்றேன்” இல்லத்தரசி கடமையை செவ்வனே செய்ய துவங்கினார்.
“ஆமா உன்ர பொண்டாட்டிக்கு சாமான் செட்டு, பாத்திரம் தொலக்குறது தான் எந்நேரமும் வேலை… இவளுக்கு உன்ன கட்டி வைக்காம சமையல்கட்ட கட்டி வச்சுபுற்றுக்கணும் சுப்பிரமணி… சொன்னாலும் கேட்கவும் மாட்டா… ஏத்தா மடார்ன்னு முடிச்சிட்டு வா… பேரபுள்ள வரமுன்ன”
எப்பொழுது பார்த்தாலும் சமையலறை தான் மஹாலக்ஷ்மியின் வாசம். மூன்று வேளை வித விதமான உணவு, இடையில் மாலை ஆறு மணி போல் சிற்றுண்டி வேறு குடும்பத்தினரின் விருப்பத்தை பார்த்து செய்வார். அதனாலே தான் பொறுக்காமல் மாமியார் மருமகளை அழைத்தது.
“சரிங்க அத்தை” உள்ளிருந்து வந்தது பதில். சோபாவிற்கு நேர் எதிரில் இருந்த மூங்கில் ஊஞ்சலில் கைபேசியை பார்த்துக்கொண்டிருந்த மக்களிடம், “சுபத்ரா உனக்கு என்னனு தெரியுமா?” மகளையும் விடாமல் ஆர்வமாய் கேட்டார் சுப்பிரமணி.
கைபேசியிலிருந்து கண்ணை எடுத்து தந்தையை பார்த்தவள், “அப்பா எனக்கு அநேகமா அண்ணா பொய் சொல்றான்னு நெனக்கிறேன். மல்லாக்க படுத்து தூங்கிட்டு இருப்பான். மேல பாத்துட்டு வரட்டுமா?”
உறுதியாய் இல்லை என்று தலையை அசைத்தார் சுப்பிரமணி, மகனை பற்றி நன்கு தெரியும் அவருக்கு, பொறுப்புணர்வு, நிதானம், எதையும் யோசித்து செய்யும் குணம் அதிகம் உடையவன்… இது போன்ற சிறு பிள்ளை போல் எல்லாம் விளையாட மாட்டான்.
“வருவான்” என்றவர் சோபாவில் தலையை சாய்த்து கண்ணை மூடி அமர, சிறிது நேரத்தில் தன்னுடைய லேப்டாப், ஒரு பை, மற்றும் இன்னொரு கையில் பல கோப்புகளை எடுத்து வந்து தந்தை முன் ஒரு நாற்காலியை போட்டு அமர்ந்தான்.
அன்னை இல்லை என்பதை உணர்ந்து சமயலறையில் எட்டி பார்த்து, “மா முக்கியமான விசியம்மா கொஞ்ச நேரம் வாங்களேன்” மகன் அழைக்க உடனே அனைத்தையும் வைத்துவிட்டு, சேலை முந்தானையில் கையை துடைத்து கணவன் அருகில் வந்தமர்த்தவர் பார்வை அவன் வைத்திருந்த அத்தனை பொருட்கள் மீதும் பட்டது.
“கார்த்தி என்னப்பா ஏதாவது படிக்கச் போறியா?” சிரிப்புடன், “இல்ல மா. சொல்றேன்” என்றவன் அந்த கருப்பு சீட் கண்டைனர் திறந்து ஒரு பெரிய பேப்பரை எடுத்து குடும்பத்தினர் மீது விரித்து வைத்தான்.
அதை பார்த்ததுமே சுப்பிரமணிக்கு புரிந்தது, “என்ன தம்பி ஏதாவது பில்டிங் பிளான் மாதிரி இருக்கு”
“ஆமா பா…”
“யாரோட வீட்டு பிளான் தம்பி இது? இது எதுக்கு இங்க கொண்டு வந்துருக்க?”
“வீட்டு பிளான் இல்ல பா. இது நம்ம ஹோட்டல்”
“நீ புதுசா வேலை பாக்க போற கடையா சாமி?” சேர்மத்தாய் பேரனிடம் கேட்டார்.
“இல்ல பாட்டி, நான் யார் கிட்டயும் வேலை பாக்க போகல… நம்ம கடை இது”
தந்தையை பார்த்து, “நான் சொந்தமா ஒரு ரிசார்ட் வித் ஹோட்டல் ஸ்டார்ட் பண்ணலாம்னு இருக்கேன் பா”
சுப்பிரமணி இதை சற்றும் எதிர் பார்க்கவில்லை, வேலையை விட்டு வந்ததாக அவன் கூறியவுடன் தாய் தந்தையின் அருகே இருக்க விரும்பி திருநெல்வேலியில் ஏதாவது ஒரு கடையில் வேலைக்கு செல்வான் என்று எதிர் பார்த்தார். ஆனால் இவன் அப்படியே மொத்தமாக வேறு கதை கூறிக்கொண்டிருந்தான்.
தந்தையின் முகம் யோசனையில் இருக்க அன்னையை பார்த்தான்… நிர்மலமான முகம் மகிழ்ச்சியில் இருந்தாலும் ஒரு சந்தேகமும் இருந்தது, தொழிலில் சிறிதும் அனுபவம் இல்லாதவன் இவ்வளவு பெரிய முயற்சியில் இறங்குவதா என்று.
“என் மேல நம்பிக்கை வைங்கமா” அன்னையின் மன ஓட்டத்தை புரிந்துக்கொண்டு பேசியவனின் கன்னம் தடவி புன்னகைத்தார் மஹாலக்ஷ்மி. யானை பலம் தந்தது அந்த ஒரு புன்னகை…
தந்தை பக்கம் திரும்பி, “என்ன பா யோசனை? எதுவா இருந்தாலும் கேளுங்கபா”
“எவ்ளோ தம்பி எஸ்டிமேட் போட்ருக்க?” – சுப்பிரமணி
“மினிமம் ஒரு கோடி பா” – கார்த்திக்
“எதுக்கு ராசா நல்லா வருமானம் வர்ற வேலைய விட்டுப்போட்டு இப்டி கடனோட சுத்திகிட்டு இருக்க பேசாம அங்கனயே மறுபடியும் போய்க்கோ யா” பேரன் எந்த வித சங்கடத்தையும் அனுபவிக்க கூடாது என்ற எண்ணத்தில் அந்த வயதான பெண்மணி பேசினார்.
“இல்ல பாட்டி இது கண்டிப்பா நல்ல தொழில் தான். காலத்துக்கு தகுந்த மாதிரி மாறிட்டே இருந்தா நிச்சயமா தொழில்ல முன்னேற்றம் இருந்துட்டே இருக்கும்”
“சரி தான் தம்பி ஆனா இவ்ளோ பணம் கஷ்டம் இல்லையா? எங்க பண்ண போற? இடம் பாக்கணும்… எல்லாமே இருக்கே”
“நான் எல்லாமே யோசிச்சிட்டேன் பா… குற்றாலம்ல வைக்கலாம்னு யோசிச்சேன். இங்க இருந்து இருவது நிமிஷம் தான். இடம் கூட பாத்தாச்சு. மெயின் பால்ஸ், டைகர் பால்ஸ் ரெண்டுக்கும் நடுல இந்த இடம் இருக்கு. மூணு ஏக்கர் நிலம். இடம் மட்டும் சில கோடி வரும் ஆனா இப்போதைக்கு அவ்ளோ அமௌன்ட் இல்ல அதுனால இடத்தை லீசுக்கு அஞ்சு வருஷம் எடுத்து நடத்தலாம்னு யோசிச்சேன்” தந்தையின் முகம் பல யோசனைகளுக்குள் சிக்கிக்கொண்டிருந்தது.
“என்ன ப்பா?” என்றான் அவர் முகம் பார்த்தே, “நான் மட்டும் தனியா இவ்ளோ காசு போடல ப்பா. இன்னும் ரெண்டு பேர் பார்ட்னர்ஷிப் வச்சு தான் பண்றேன். என்னோட ரொம்ப நாள் ஆசை ப்பா இது” ஏகமாய் வந்த மகனின் குரல் அவர் முகத்தில் தெளிவை உருவாக்கியது.
“காசுக்கு என்ன ப்பா பண்ண போற?”
“இத்தன நாள் வர என்னோட சாளரில ஒரு ருபாய் நீங்க வாங்கல. அப்டியே தான் ப்பா இருக்கு. அதுவே பதினோரு லட்சம் மேல இருக்கு. இன்னும் ஒரு இருவது இருபத்தி அஞ்சு லட்சம் தான்… லோன் போடலாம்னு ஐடியால இருக்கேன்பா”
“கூட பார்ட்னர்ஷிப் வக்கிர பசங்க நல்ல பசங்க தானா தம்பி?”
“நம்பிக்கையானவங்க தான்ப்பா. அதுவும் இல்லாம அக்ரீமெண்ட், பாண்ட் எல்லாமே தெளிவா பண்ணிட்டு தான் வேலைய ஸ்டார்ட் பண்ண போறோம்”
“குற்றாலம் சீசன் இருக்க டைம்ல தானே கார்த்தி கூட்டம் வரும்… மத்த நேரம் எல்லாம் சும்மா இருந்தா நல்லவா இருக்கும்?” – சுப்பிரமணி
“அதையும் யோசிச்சிட்டோம் ப்பா… குற்றாலம்ல ஸ்டார்ட் பண்ற கடையோட அதே பேர்ல திருநெல்வேலில ஒரு ஹோட்டல் ஓபன் பண்ணி வருஷம் புல்லா அங்க பாக்க போறோம். சீசன் டைம்ல மட்டும் குற்றாலம்ல. அதுக்கும் தனியா ஒரு இருவது லட்சம் ரெனோவேஷன் அமௌன்ட் ஒதுக்க போறோம்”
அனைத்திற்குமே தெளிவாக திட்டம் போட்டு வகுத்திருக்கும் மகனின் மனநிலை இதை விட்டு மாறப்போவதில்லை என்று புரிந்து மனைவியை சுப்பிரமணி பார்க்க, கணவர் கையில் கை வைத்து தன்னுடைய விருப்பத்தை மஹாலக்ஷ்மி தெரிவிக்க, சுப்ரமணி மகனுக்கு சிரிப்புடன் பச்சை கொடி நீட்டினார்.
“என்ன மருமகளே அப்டியே மகனே பாத்துட்டே இருந்தா போதுமா, பூஜ ரூம்ல இருக்க திருநீர் எடுத்துட்டு வா. புள்ளைய ஆசீர்வாதம் பண்ணிப்புடுவோம்”
மாமியாரின் சொல்லில் தான் நினைவு வர வேகமாக எழுந்து சென்றவர் நூற்றி ஒரு ரூபாயை மஞ்சள் துணியில் முடிந்து வைத்து இறைவனிடம் மகனுக்காக மட்டுமே வேண்டி திருநீறை எடுத்து வந்து சேர்மத்தாய் கையில் கொடுத்தார்.
“கிழக்கு பாத்து நில்லு ராசா” கார்த்திக் இன்முகமாய் அவர் கை காட்டிய திசையில் எழுந்து நின்று தன் நெற்றியை மறைத்திருந்த சிகையை வலது கை வைத்து பிடித்து நிற்க, மூன்று விரல்கள் நிறைய திருநீறை எடுத்து அவன் நெற்றியில் வைத்துவிட்டு, “ராஜா கனக்கா இருப்பயா நீ”
அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியவன் அடுத்து தாய் தந்தை இருவரிடமும் ஆசீர்வாதம் வாங்கி தான் யோசித்து வைத்திருக்கும் கட்டிடத்தின் விளக்கப்படத்தை மொத்த குடும்பத்திடமும் ஆசையாக காட்ட துவங்கினான்.
“மா நல்ல நாள் மட்டும் பாத்து சொல்றிங்களா? பூமி பூஜை போடணும். பசங்க என்ன பாத்துட்டு வர சொன்னானுக”
“ம்ம்ம் பாத்து சொல்றேன் ப்பா” காலெண்டர் ஒன்றை எடுத்து பார்த்தவர் அடுத்த பதினைந்து நாட்களில் நாள் பார்த்து கூற நண்பர்களிடம் கலந்து ஆலோசித்து அந்த நாளையே குறித்துக்கொண்டனர்.
“ஆண்ட்டி” மஹாலக்ஷ்மி வாசலுக்கு செல்லும் முன் சுபத்ரா வாசலுக்கு சென்றிருந்தாள்.
“அடடே… உள்ள வா வைஷு”
“ஹாய் சுபி… என்ன இந்நேரம் நீ தூங்கிட்டு இருந்துருப்பியே இன்னைக்கு அதிசயமா இன்னும் முழிச்சிருக்க? சரி அத விடு இன்னைக்கு நான் ஒரு சம்பவம் பண்ணேன்”
வெளியே பேசிக்கொண்டிருந்த வைஷ்ணவியின் குரல் உள்ளிருந்த அத்தனை பேருக்கும் கேட்க கார்த்தியோ, ‘இன்னைக்குமா’ என்று தான் தோன்றியது.
“என்னனு கேட்டா நீயே ஷாக் ஆகி மயக்கம் போட்டு ரெண்டு நாள் கழிச்சு தான் எந்திரிப்ப… இப்ப தான் மஹேஷு மயக்கம் போட்டு விழுந்துச்சு, தண்ணி தெளிச்சு ஒக்கார வச்சிட்டு வந்துருக்கேன். வாத்தி எல்லாம் நெஜுல கை வச்சிட்டாரு ஏனா நான் செஞ்ச விசியம் அப்டி. அட வந்த விசயத்த மறந்துட்டேன் பாரு… இந்தா நான் செஞ்சேன்”
எப்பொழுது தான் பேசி முடிப்பாள் என்று காத்திருந்த சுபத்ரா சிரிப்புடன், “என்ன செஞ்ச?” ஆச்சிரியமாக கேட்டாள்.
“பிரியாணி…” திரு திரு என விழித்த சுபத்ராவை பார்த்து, “என்ன சுபி பாத்துட்டு இருக்க? சாப்டு சாப்பிட்டு பாத்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லணும்” சுபத்ராவின் கையை பிடித்து உள்ளே தள்ளி சென்றவள் அங்கு சுப்ரமணியனையும் கார்த்திகையும் சுத்தமாக எதிர் பார்க்கவில்லை. உறங்கி இருப்பார்கள், மஹாலக்ஷ்மி, சுபத்ராவிடம் கொடுக்கலாம் என்று தான் வந்தது.
“இப்ப தான் வைஷு சாப்பிட்டோம் அப்றம் சாப்புடுறேன்” தீர்க்கமாக மறுத்து இப்பொழுதே உண்ண வேண்டும் என்று கட்டளையோடு அவளை உண்ண வைத்தாள்.
“ம்ம்ம் நல்லா இருக்கு வைஷு. நிஜமா சொல்லு நீ தான் இத செஞ்சதா?”
“தெரியும்… இந்த உலகம் என்ன நம்பாத்துன்னு தெரியுமே. வீட்டுல என் அண்ணன் மேல சத்தியம் பண்ணேன் இங்க யார் மேல பண்றது?” வைஷ்ணவி பேசுவதை கேட்டு சிரித்தபடியே சுப்பிரமணி தன்னுடைய அறைக்குள் செல்ல, தான் குடும்பத்திடம் காட்டிக்கொண்டிருந்த காகிதங்களை எடுத்துவைத்துக்கொண்டே கார்த்திக் ஓரக்கண்ணில் நோட்டம் விட்டான்.
“ஏய் என் அண்ணன் வேணாம்” பதறினாள் சுபத்ரா.