நன்கு அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தான் ஜேகோப். அவன் தோள் தொட்டு யாரோ லேசாக உலுக்க, “டேவ், ஐயம் ஸ்லீப்பி” என்றான் கண்களை திறக்காமலே!
“டேவ் இல்ல… தேவி!” என்ற குரல் வர, சட்டென சுதாரித்து கண்களை திறந்தவன், “சாரி ஆன்ட்டி!” என்றான் எழுந்து அமர்ந்து.
“இதுக்கெல்லாம் சாரி சொல்லுவாங்களா?” என்றவர், “முகம் கழுவிட்டு வா! சாப்பிட்டுட்டு தூங்கிக்கலாம்… இங்கயே கொண்டு வந்துட்டேன்” என்றார்.
அவனும் அறையோடு இருந்த பாத்ரூமுக்குள் புகுந்து தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு வெளியே வந்தான்.
“பாத் டப் இல்லையா?” அவன் ஆச்சர்யமாய் கேட்டதும், “அது எதுக்கு?” என்றார் தேவி.
‘எதுக்கா?’ இன்னும் ஆச்சர்யமானவன், “ஷவர் கூட இல்லையே… எப்படி குளிப்பீங்க?” என்றான்.
“அங்கிருக்க குண்டான்’ல தண்ணி நிரப்பி அதுல இருந்து மொண்டு குளிப்போம்… இல்லன்னா பக்கத்துல தான் வாய்க்கால்! அங்க போய் குளிப்போம்!” என்றவர் உணவை அவனுக்காக எடுத்து வைத்தார்.
‘ஓ’ என்றவனுக்கு விநோதமாக இருந்தது. அவன் தங்கியிருந்த ஹோட்டலில் கூட ‘ஷவர்’ இருந்தது, ஆனால் இங்கே அதுவும் இல்லை. போதாதுக்கு ‘இந்தியன் டாய்லெட்’ வேறு! காலை மடக்கி அமர்ந்து எழுவதற்குள் உள்ளே விழுந்துவிடுவோமோ?! என பயந்து வந்தது. அதைவிட கொடுமை அவசரத்தை முடித்துக்கொண்டு கையை நீட்டினால், பேப்பருக்கு பதில் ஒரு பழைய பெயின்ட் டப்பா வருகிறது. அது தான் பாத்ரூம் கப்’பாம்! அதைக்கொண்டு தண்ணீரில் நனைந்து தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு வெளியே வந்தவனுக்கு இந்த கேள்வியை கேட்காமல் இருக்க முடியவில்லை. அதனால்தான் உடனே கேட்டுவிட்டான்.
“வாப்பா… சூடா இருக்கும்போதே சாப்பிடு!” என்றவர், ஒரு பெரிய சில்வர் தட்டில் ஒரு கையளவு அகண்ட சப்பாத்தியை வைத்து, கடலை மாவை கரைத்து வெங்காயம் தக்காளி சேர்த்து தாளித்த பாம்பே சட்னியை அருகே வைத்தார்.
“வாவ்! மாம்மி கூட இதே மாதிரி தான் பண்ணுவாங்க” என்றவன் குனிந்து மோப்பம் பிடித்தான்.
“எக்சாக்ட் அரோமா!” ரசித்து சொன்ன ஜேகோப், “அம்மாக்கு எப்பவும் நான் இந்தியன் பூட் விரும்பி சாப்பிடுறது இல்லன்னு வருத்தம்! அதனால வீக்லி ஒன்ஸ் மெனுல இந்தியன் டிஷ் இருக்கும்! அதுல எனக்கு சப்பாத்தி அண்ட் திஸ் கிரேவி… ம்ம்ம்… ரொம்ப பிடிக்கும்” என்றவன்,
“போர்க் அண்ட் நைஃப் ப்ளீஸ்” என்றான் தேவியிடம்.
தேவகியிடம் கேட்டுக்கேட்டு தான் அத்தனையும் செய்தது என்றதால் அவன் கைகளால் சாப்பிட விரும்ப மாட்டான் என்பதையும் தெரிந்து முன்னமே கத்தியும் முள்கரண்டியும் எடுத்து வந்திருந்தார் அவர்.
சப்பாத்தியை கத்தியில் வெட்டி ஃபோர்க்’கால் குத்தி சட்னியில் முக்கி அவன் வாயில் வைப்பதை பார்க்கவே வேடிக்கையாய் இருந்தது அவருக்கு. ஒரு சப்பாத்தியை மென்று மென்று பத்து நிமிடமாய் அவன் உண்ண, அடுத்து, ஒரு பெரிய குழிக்கரண்டி நிறைய வெண்புட்டை ஆவிபறக்க வைத்தார் தேவி.
அதன்மீது தேங்காய் துருவலை பனிசாரல் போல படரவிட்டவர், ஒரு குழிக்கரண்டி நெய்யை அதில் சுற்றி வட்டமிட, அதோடு கொஞ்சம் நாட்டு சக்கரையை ஒரு ஓரமாய் அள்ளி வைக்க, பார்த்துக்கொண்டிருந்த ஜேகோப்,
“மாம்மி’கிட்ட மெனு கேட்டீங்களா?” என்றான் சரியாக. அவர் சிரித்துக்கொண்டே, “சாப்பிடு.. எப்டி இருக்குன்னு சொல்லணும்” என்றார்.
அவனும் ரசித்து ருசித்து மூக்கால் அரோமாவையும், நாவால் சுவையையும் உணர்ந்து உண்ண,
கட்டைவிரல் நகத்தை கடுப்போடு கடித்து துப்பிக்கொண்டிருந்த ரோஷிணி, “துரோகி! வெறும் சாம்பாரையும், இட்லியையும் அவிச்சு போட்டே இத்தனை வருஷம் ஏமாத்திட்டு இப்போ புட்டாம், பாம்பே சட்னியாம்! புடுங்கிட்டு தான் போவும் அவனுக்கு” தாய் மீதிருந்த கடுப்பில் அவனுக்கு சாபம் விட்டாள்.
ரோஷிணி அவன் அறைக்கு எதிர் அறை தான் என்றதால் பேச்சு கொஞ்சமாய் கேட்டாலும், பார்வைக்கு விருந்து விஸ்தாரமாய் காணக்கிடைத்தது.
“எப்படியும் எல்லாருக்கும் தானே சேர்த்து செஞ்சுருப்பாங்க? இன்னைக்கு எனக்கு இங்கதான் சாப்பாடு!” சங்கவி நாவில் எச்சில் ஊற சொல்ல, ‘அல்பமே’ என்பதை போல முறைத்தாள் ரோஷிணி.
தான் சாப்பிடுவதையே பார்த்துக்கொண்டிருந்த தேவியை கண்ட ஜேகோப், “அம்மாவும் நீங்களும் ரொம்ப க்ளோசா ஆன்ட்டி?” என்றான்.
மெலிதாய் சிரித்தவர், “ரொம்ப க்ளோஸ்’ன்னு சொல்ல முடியாது… அதுக்கும் மேலன்னு சொல்லலாம்… பதினொன்னாவது’ல நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா உட்காருவோம்! அவளுக்கும் கணக்கு வராது, எனக்கும் கணக்கு வராது… வீட்டுப்பாடம் முடிக்காம தினம் போய் கணக்கு பீரியட்’ல வாசல்ல நிப்போம்! அப்படி ஆரம்பிச்சது எங்க நட்பு” அவர் சிரிக்க, அவனுக்கு சிரிப்பு வந்தது.
“அப்பறம், பன்னெண்டாவது பார்டர்’ல பாஸ் பண்ணி அடுத்து படிக்க பிடிக்காம வீட்டுலயே இருந்தோம்… அப்போலாம் டைலரிங் கிளாஸ், டைப்ரைட்டிங் கிளாஸ் இதான் அனுப்புவாங்க பொண்ணுங்களை… வீட்டுல இருந்து வேலை சொல்லி கொல்றாங்கன்னு ரெண்டு பேருமா தையல் கிளாசுக்கு போனோம்! ஒரு வருஷம் ஓடுச்சு! திடீர்ன்னு ஒரு நாள் ஊர் சுத்திப்பார்க்குறேன்னு உங்கப்பா வந்தாரு.
தினம் நாங்க போற நேரம் எங்க கண்ணுல படுவாரு… அப்ப திடீர்ன்னு எனக்கு அம்மை போட்டுடுச்சு, ஒரு பத்து நாளு அவ மட்டும் தனியா கிளாஸ் போனா! அவ்ளோதான் தெரியும்! பார்த்தா, காதலுங்குறா… கல்யாணங்குறா… எனக்கு இப்போவரைக்கும் புரியாத ஒரு விஷயம்’ன்னா… உங்கப்பாருக்கு அப்ப தமிழ் தெரியாது, இவளுக்கோ இங்க்லீசு வராது… எப்படி என்ன பாஷைல ரெண்டு பேரும் பேசிக்கிட்டாங்க… இவ எந்த நம்பிக்கைல அவரோட போனா… ஒன்னுமே விளங்கல போ” என்றவரை கண்டு வாய்விட்டே சிரித்தான் ஜேகோப்.
“இவ போனதுக்கு அப்பறம் வீடே வெறிச்சோடி போச்சு! உங்க அம்மத்தா ரொம்ப நொந்துட்டாங்க… அவங்களுக்கு ஆறுதலா இருப்போம்ன்னு நான் அடிக்கடி இங்க வர, உங்க மாமாவோட ஒண்ணுவிட்ட தம்பிக்கு என்னை பேசி முடிச்சுட்டாங்க! எனக்கு மட்டும் அப்பப்ப லெட்டர் போடுவா! ஆனா, கல்யாணம் முடிச்சு நான் அவங்க வீட்டுக்கே வந்த பிறகு, ‘அவ என் பிரன்ட்டு, நான் அவக்கிட்ட பேசுவேன்னு’ எப்படி சொல்ல முடியும்? இப்போவே இந்த கோவத்துல இருக்கவங்க, அந்த நேரம் எந்த அளவு ஆடிருப்பாங்கன்னு யோசிச்சு பாரு நீயே!
அவகிட்ட பேசுறேன்னு மூச்சுக்கூட விட முடியாது! ஏதோ இப்போ ஃபோனை கண்டுப்பிடிச்ச புண்ணியவானால யாருக்கும் தெரியாம அப்பப்ப பேசிட்டு இருக்கேன்! என் பொண்ணுக்கு கூட தெரியாது தெரியுமா?” ரகசியம் போல சொன்னார் அவர்.
“உன்னை உன் அப்பாவை எல்லாம் போட்டோ’ல பார்த்துருக்கேன்… நேர்ல பாப்பேன்னு நினைச்சது கூட இல்லை” என்றவர் ஜேகோபின் சிகையை ஆதூரமாய் வருட, அவனும் அவரைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான்.
அவன் அப்படியே இருக்க,
“இன்னும் கொஞ்சம் போட்டுக்கோ பப்பூ” தேவி புட்டை இன்னமும் வைக்கப்போக, “நோ ஆன்ட்டி, இட்ஸ் மோர் தேன் இனஃப்… உங்களுக்காக தான் இன்னைக்கு நான் அதிகமா சாப்பிட்டேன்” என்றவன் தட்டுடன் எழுந்துக்கொண்டான்.
“தட்டை குடு, நான் கழுவிக்குறேன்”
“இட்ஸ் ஓகே ஆன்ட்டி, கிட்சேன் எங்கன்னு சொல்லுங்க”
“அதெல்லாம் வேண்டாம்” கிட்டத்தட்ட அவனிடம் இருந்து தட்டை பிடுங்கியவர், “நல்லா நிம்மதியா தூங்கு! நாளைக்கு பாப்போம்” என்றார்.
அவர் அங்கிருந்து கீழே இறங்கி சென்றதும், அறையில் இருந்த பெரிய ஜன்னலை திறந்து விட்டான் ஜேகோப். இரவு நேர காற்று அவன் முகத்தில் அடிக்க, இதமான மனநிலையில் நின்றிருந்தவனை,
“உனக்கு தமிழ் தெரியும்ன்னு ஏன் சொல்லல?” என்ற குரல் கலைக்க, திரும்பாமலே அது யாரென தெரிந்தது.
“உன்னை தானே கேட்குறேன்… என்ன திட்டத்தோட இங்க வந்துருக்க?” என்று ரோஷிணி கேட்டிட, அவளது புரியாத பேச்சில், “வாட் டு யூ மீன்?” என திரும்பினான் ஜேகோப்.
“ஆங், மீனு, நண்டு, கோழி! இன்னும் எதுக்கு தஸ்ஸு புஸ்ஸுன்னு பேசி ஏமாத்தப்பாக்குற?”
“ஏமாத்துறதா? நானா? அதெல்லாம் ‘பை ப்ளட்’ உனக்கு தான் நல்லா வரும் போல” முகத்தில் வெறுப்பு தெரிய அவன் பேச,
“ஹே, தேவையில்லாம பேசாத! உனக்கு நல்லா தமிழ் தெரியும்போது எதுவுமே தெரியாதவன் மாதிரி எதுக்கு எங்கக்கிட்ட நடிச்சு ஏமாத்துன?”
“நீங்க என் ரிலேடிவ்’ன்னு தெரிஞ்சு கொஞ்சம் ஃபன் பண்ணலாம்ன்னு நினைச்சேன்” என்றதும், வாயை கைக்கொண்டு மூடியவள், “அவ்வ்வ்வா! அப்போ நாங்க யாருன்னு தெரிஞ்சே தான் நீ எங்களை ஏமாத்த பாத்துருக்கியா?” என்று கேட்க, வார்த்தைக்கு வார்த்தை அவள் கோர்த்த ‘ஏமாற்று’ என்ற வார்த்தையில் எரிச்சல் ஆனான் அவன்.
“ஹெலோ? என்ன ஏமாத்துனாங்க? வன் கிளாஸ் ஒப் ஜூஸ்’க்கு எயிட் தவுசன்ட் குடுத்து நான் தான் ஏமாந்துருக்கேன்… அது இல்லாம உங்க ரூம் ரெண்ட் வேற! இதுல ஒரு கார்ட் வேற… வாட்ஸ் தட்? தேல்பத்துரா…” புருவத்தை நீவிக்கொண்டே யோசித்தவனுக்கு அது வாயில் வராது போக,
“வாட் எவர்! என்னை கிண்டல் செஞ்சு வேற கார்ட் குடுத்துருக்கீங்க! நானும் நீங்க பேசிக்கும்போதெல்லாம் ஜஸ்ட் சும்மா சொல்றீங்க, ச்சீட் பண்ண மாட்டேன்னு நினைச்சுட்டு இருந்தேன்! பட் யூ வேர்…?!” என்றவன், “உப்ப்” என பெருமூச்சு விட்டான்.
“தேங்க்ஸ் ஃபோர் யுவர் மில்லியன் டாலர் அட்வைஸ்! கேன் யூ ப்ளீஸ் லீவ் மை ரூம் ஃபார் காட்ஸ் சேக்” கையெடுத்து கும்பிடாத குறையாக பல்லைக்கடித்துக்கொண்டு அவன் அவளை வெறியேற சொல்ல,
“நான் உன்கிட்ட ஒன்னு கேட்கணும்” என்றாள் அவள்.
“வாட்?”
“நீ ஒன்னும் பழி வாங்க எல்லாம் வரலைல?” மொட்டையாக அவள் கேட்க, “புரியல?” என்றான் அவன்.
“இல்ல, நாங்க பணத்தை ஏமாத்திட்டோம்ன்னு கோவத்துல எங்களை பழி வாங்க இந்த வீட்டுக்கு வந்து… இல்லன்னா… உங்க அப்பாம்மா’வ எங்க வீட்டுல சேர்த்துக்கலன்னு கோவத்துல இந்த வீட்டுக்கு வந்து நல்லவன் போல நடிச்சு எல்லாரையும் ஏமாத்தி எங்க ரெண்டு பேருல ஒருத்தரை கல்யாணம் செஞ்சு, அப்பறம் எங்களை வச்சு இவங்களை பழி வாங்கி…”
அவள் பேசிக்கொண்டே போக, “ஹே ஹே… ஜஸ்ட் ஸ்டாப்… ஸ்டாப் இட்!!” என இடைவெட்டினான் ஜேகோப்.
“என்ன உளர்ற நீ?”
“நான் ஒன்னும் உளறல! இதுக்கெல்லாம் வாய்ப்பு இருக்கு தானே? ஒருவேளை நீ இந்த மாதிரி எண்ணத்துல இருந்தா…நாங்க அதுக்கெல்லாம் ஆள் இல்லன்னு தெளிவா சொல்லி உனக்கு புரிய வைக்கலாம்ன்னு நினைச்சேன்!”
“நீயும் உன் டர்ட்டி தாட்ஸ்’ஸும்!” கடுகடுவென திட்டியவன்,
“லுக், உனக்கு பணம் ஏன் தேவைப்பட்டதுன்னு எனக்கு தெரியாது! தெரிஞ்சுக்க விருப்பமும் இல்லை! ஆனா, அதுக்காக நீ பண்ணது… என்னால மன்னிக்கவே முடியாது.
இந்த நாட்டுக்கு நான் ஃபர்ஸ்ட் டைம் வரேன்! என்கிட்டே நீங்க இப்படி ஒரு சீட்டிங் பண்ணிருக்கீங்க! இதே நான் இல்லாம வேறொரு ஆளா இருந்துருந்தா, அவனுக்கு இந்தியா மேலயும், இந்தியன் பீபுள் மேலயும் எந்த மாதிரி இம்ப்ரெஷன் வந்துருக்கும் சொல்லு?
நீங்க பண்ற தப்பு, உங்களோட போகாது! அது இந்த நாட்டுக்கே கெட்டப்பேரு! உங்களோட சீப் ஆக்ட்டிவிட்டி’யால மொத்த இந்தியாக்கும் கெட்ட பேர் வரணுமா சொல்லு? அதுவும் இப்போ இருக்க டிஜிட்டல் வோர்ல்ட்’ல ‘ரிவியு’ங்குற பேருல எல்லாத்தையும் யூடியுப்’ல போடுறாங்க! நீங்க பண்ண சீட்டிங்’கையும் வீடியோ’வா போட்டா என்ன செய்வீங்க? அந்த வீடியோ’வ எத்தனை லட்சம் பேர் பார்ப்பாங்க… அவங்க எல்லாரும் இந்தியா’வ என்ன நினைப்பாங்க? ஆல்ரெடி இந்தியா’ன்னா ட்ராபிக், டர்ட்டிநெஸ், ரோட்சைட் பெக்கர்ஸ், இண்டீசென்ட் பீகேவியர்’ன்னு தப்பா தான் நினைக்குறாங்க! இதுல நீங்களும் ஒரு ‘பெதர்’ வைக்குற மாதிரி பீகேவ் பண்ணலாமா சொல்லு?”
அவன் கேட்க கேட்க தலைகுனிந்து நின்றிருந்தாள் ரோஷிணி.
அவள் வாடிப்போய் நிற்பதை கண்டவன், “எனக்கு பழி வாங்குறதெல்லாம் தெரியாது… கோபம் வந்தாலும் கொஞ்ச நேரம் தான்! பிடிக்கலன்னா அமைதியா ஒதுங்கிடுவேன்! அதான் நான்!” என்றான்.
அவள் அப்போதும் குனிந்த தலை நிமிரவில்லை.
“ஓகே லீவ் இட்! இனியாவது ஒரு விஷயம் செய்யுறப்போ ப்ரோ’ஸ் அண்ட் கான்’ஸ் யோசிச்சு பண்ணுங்க… குட் நைட்!” என்று அவன் முடிக்க, அப்போதும் நிமிராமல் ‘சல்யுட்’ வைத்துவிட்டு அமைதியாய் வெளியேறினாள் ரோஷிணி.
‘ரொம்ப பேசிட்டோம் போல’ அவள் செய்கையை பார்த்தவனுக்கு வருத்தமாய் போனது. கதவு திறந்து இருக்க, அதை தாழிட சென்றவன் காதில் சங்கவியின் கீச்சு குரல் ஒலித்தது.
“என்னடி சொல்றான்? பழி வாங்க ஒன்னும் வரலை’ல?”
“அதெல்லாம் இல்லடி… அவன் பக்கம் பக்கமா விஜயகாந்த் பட வசனமெல்லாம் பேசி மொக்கை போட்டுட்டு இருக்கான்… லூசுப்பய!” என்று ரோஷிணி அசட்டையாய் சொல்ல, ஜேகோபிற்கு சுறுசுறுவென கோபம் ஏறியது.
சற்று முன்னர் இவளுக்கு போய் பாவம் பார்த்தோமே என்று தன்னைத்தானே திட்டிக்கொண்டவன்,
“இன்கார்ஜிபிள் இடியட்!”
(திருந்தாத ஜென்மம்) என்று பல்லிடுக்கில் திட்டிக்கொண்டு கதவடைத்தான்.