“இருக்கும் இருக்கும் பழைய வீடு பாத்தியா, அதான்? சரி நைட்டுக்கு சாப்பிட இட்லி கொண்டு வந்துருக்கேன். இங்கயே சாப்பிடுறியா? இல்லை அங்க வந்து எல்லார் கூடவும் சாப்பிடுறியா மா?”
“கொஞ்சம் தலை வலிக்குது மா. நான் இங்கயே சாப்பிட்டுக்குறேன். என்னால உங்களுக்கு தான் கஷ்டம்”
“நீயும் என் பொண்ணு மாதிரி தான் டா. கூட நாலு இட்லில நான் ஒண்ணும் குறைஞ்சிற மாட்டேன். இங்க இருக்குற வரைக்கும் நான் தான் உனக்கு சாப்பாடு செஞ்சு தருவேன். நீ இந்த வீட்ல தனியா இருக்குறது எனக்கு பிடிக்கலை தான். உன்னை என் கூடவே பெரிய வீட்டுக்கு கூட்டிட்டு போகணும் போல தான் இருக்கு. ஆனா ஊர்ல ஏதாவது சொல்லிறக் கூடாது. அப்புறம் ரொம்ப நன்றி டா”
“எதுக்கு மா?”
“இன்னைக்கு நீ எவ்வளவு பெரிய காரியம் செஞ்சிருக்க தெரியுமா? இந்த கதிர் மனசுல என்ன இருக்குனு நான் மண்டையை உடைக்காத நாள் இல்லை. உன்னால எல்லாம் நல்ல படியா முடிஞ்சிருச்சு. கதிர் ஏதோ உன்னை திட்டிட்டானாம்? மன்னிப்பு கேக்கணும்னு சொன்னான் அதை மனசுல வச்சிக்காத. அவன் ரொம்ப நல்லவன் மா”
“கதிர் திட்டினதுக்கு மன்னிப்பு கேட்ட நீங்க உங்க மகன் செஞ்ச காரியம் தெரிஞ்சா என்ன செய்வீங்க மா?”, என்று மனதில் நினைத்தவள் “அதை விடுங்க. கதிர் எனக்கு அண்ணன் மாதிரி தான். யாராவது அண்ணா திட்டினாங்கன்னு கோபப் படுவாங்களா?”, என்று கேட்டாள்.
அவள் கன்னம் வருடிய பாமா “அருமையான பொண்ணு மா நீ. எப்பவும் நீ சந்தோஷமா இருக்கணும். சரி சூடா இருக்கும் போதே சாப்பிடு சரியா? அப்புறம் உனக்கு துணைக்கு படுக்க அத்தை வருவாங்க”, என்றாள்.
“அவங்க எதுக்கு மா? நான் தனியா இருந்துக்குவேன். பக்கத்துல தான் எல்லாரும் இருக்கீங்களே? அப்புறம் என்ன?”
“அதனால என்ன இருக்கு? உன்னைத் தனியா விட மனசில்லை. அத்தை வருவாங்க. அங்க தூங்குறதை இங்க வந்து தூங்கப் போறாங்க. இதுல என்ன இருக்கு? சரி நீ சாப்பிடு. நான் எல்லாரையும் சாப்பிட வைக்கணும்”, என்று சொல்லி விட்டுச் சென்று விட்டாள்.
பாமா சென்றதும் அப்படியே அமர்ந்திருந்தாள். அவளுக்கு பசி என்பதே இல்லாமல் போனது. அப்போது தேவி அவளை அழைக்க அன்னைக்காக உற்சாகமாக காட்டிக் கொண்டவள் அவர்கள் எங்கு சென்று கொண்டிருக்கிறார்கள் என்று விசாரித்தாள். தேவி போனை வைத்ததும் திண்ணையில் அமர்ந்து நிலவை பார்த்துக் கொண்டிருந்தாள்
அப்போது அவளைத் தேடி வந்தார் பார்வதி. “வாங்க பாட்டி, சாப்பிட்டீங்களா?”, என்று கேட்டாள் வினோதினி.
“சாப்பிட்டேன் டா. நீ சாப்பிட்டியா கண்ணு?”
“ஆன்… சாப்பிட்டேன்”
“அப்படியா? பாமா கொண்டு வந்த தட்டை எடுத்துப் பாக்கவா?”, என்று கேட்டதும் தலை குனிந்தாள்.
அவள் அருகே அமர்ந்த பார்வதி “எங்க வீட்டுக்கு சந்தோஷத்தை பரிசளிக்க வந்த உன் சந்தோஷத்தை என் பேரன் உன் கிட்ட பறிச்சிட்டான்ல? அவனை மன்னிச்சிரு மா”, என்று பார்வதி சொன்னதும் “பாட்டி”, என்று அதிர்ந்து போய் அவரைப் பார்த்தாள்.
“எனக்கு தெரியும் மா. உன் உதட்டுல இருக்குற காயத்துக்கும் உன் முகம் வீங்கி இருக்குறதுக்கும் காரணம் இன்பா தானே?”, என்று அவர் கேட்க இன்பா மீது கடுங்கோபத்தில் இருந்தாலும் அவர் அப்படிக் கேட்டதும் அவள் முகம் வெட்கத்தால் சிவந்தது.
“அவன் முத்தம் கொடுத்தது எப்படி இவங்களுக்கு தெரியும்? ஒரு வேளை அவன் அதைச் சொல்லிட்டானா? இதைப் போய் ஏன் சொன்னான்?”, என்று எண்ணி அவளுக்கு உண்மையிலே வெட்கமாக வந்தது.
அவளுடைய முகச் சிவப்பை பார்த்த பார்வதிக்கு நடந்த அனைத்தும் தெள்ளத் தெளிவாக புரிய அவரே அதிர்ந்து தான் போனார்.
“இந்த லூசு பய அடிச்சிருப்பான்னு பாத்தா கிஸ் அடிச்சிட்டுள்ள போயிருக்கான்? பல்லு பட்டுத் தான் இப்படி ஆகிருக்கா? அதைக் கண்டு பிடிக்கணுமே?”, என்று மனதுக்குள் எண்ணிக் கொண்டவர் அந்த உண்மையை அவள் வாயில் இருந்தே வரும் படி செய்ய அவளிடம் நயமாக பேச்சுக் கொடுத்தார்.
“இன்பா உனக்கு இப்படி செஞ்சதை நீ ஏன் மா வீட்ல சொல்லலை? இரு நான் இப்பவே சிதம்பரத்துகிட்ட போய் சொல்றேன்”, என்று பார்வதி சொல்ல “ஐயோ பாட்டி, அமைதியா இருங்க. இதைப் போய் எப்படிச் சொல்ல?”, என்று கேட்டாள்.
“சொன்னா தானே மா அவன் தப்பு எல்லாருக்கும் தெரியும்? சிதம்பரத்துக்கு தெரிஞ்சா அவன் தோளை உறிச்சிருவான்”
“இதை எப்படி பாட்டி சொல்ல?”
“வாய்ட்டு தான் சொல்லணும். நீ வா. அங்க போய் பேசிக்கலாம்”
“ஐயோ பாட்டி, அவர் பல்லு பட்டு தான் இப்படி ஆகிருச்சுன்னு எப்படி அடுத்தவங்க கிட்ட சொல்ல முடியும்?”, என்று உளறி நாக்கைக் கடித்துக் கொண்டாள்.
“பூனைக் குட்டி வெளியே வந்து விட்டது”, என்று எண்ணிய பார்வதி அடுத்த நொடி எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் “நீ இன்பாவைக் கல்யாணம் பண்ணிக்கிறியா மா?”, என்று கேட்டே விட்டார்.
“பாட்டி”, என்று அவள் அதிர்ந்து விழிக்க “வெளிப்படையா பாத்தா நடந்தது பெரிய விஷயம் இல்லை மா. இந்த காயம் கூட ரெண்டு நாள்ல சரியாகிரும். நடந்தது ஒரு விபத்து. ஆனா உணர்வு பூர்வமாக பாத்தால் இது ரொம்ப பெரிய விஷயம். உன்னால இந்த விபத்தை மறந்துட்டு வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்க முடியுமா மா?”
“பாட்டி”
“என் பேரன் செஞ்சது பெரிய தப்பு தான் மா. அதை சரின்னு நான் சொல்ல வரலை. ஆனா அவன் உன்னை பொண்டாட்டியா நினைக்கலைன்னா இப்படி ஒரு காரியம் செஞ்சிருக்க மாட்டான். அவன் மனசுல நீ இருக்கக் போய் தான் புத்தி கெட்டு போய் அப்படிச் செஞ்சிட்டான்”
“தெரியும் பாட்டி”
“உன்னை விரும்புறேன்னு சொல்லிட்டானா மா?”
பாட்டி போட்டு வாங்கிக் கோணிடிருக்கிறார் என்று தெரியாமல் “அவர் சொல்லலை. கதிர் தான் கோபத்துல உளறிட்டாங்க”, என்றாள்.
“கதிருக்கும் தெரியுமா? ரெண்டு பேரும் சரியான கூட்டு களவானீங்க. நான் உண்மையிலே சொல்றேன் மா. இன்பா ரொம்ப நல்லவன். கண்டிப்பா அவன் உன்னை விட்டுட்டு வேற ஒரு பொண்ணை நினைச்சு கூட பாக்க மாட்டான். இப்ப நீ சொல்லு. அவனை உனக்கு பிடிக்குமா?”
“பாட்டி”
“எனக்கு உன் மனசுல உள்ளது தெரியணும் டா. வெளிப்படையா பேசு. என் பேரனை உனக்கு பிடிக்குமா?”
“இந்த விசயத்துக்கு முன்னாடி கேட்டுருந்தா கண்டிப்பா பிடிக்கும்னு தான் சொல்லிருப்பேன். ஆனா இப்ப அப்படி நினைக்கவே முடியலை பாட்டி. எனக்கு கோபம் தான் வருது”
“இப்ப உனக்கு இருக்க கோபத்துல அவன் உன் முன்னாடி வந்தா என்ன மா செய்வ?”
“அவர் சட்டையை பிடிச்சு ஏண்டா இப்படி செஞ்சன்னு கேப்பேன்?”, என்றாள்.
“அவனை சட்டையைப் பிடிச்சு கேப்பே சரி. ஆனா இதே காரியத்தை வேற யாரோவோ, இல்லை உன் கூட வேலை பாக்குற யாராவது செஞ்சிருந்தா என்ன பண்ணிருப்ப மா?”
“அப்ப இன்பாவை மட்டும் ஏன் நீ அப்படிச் செய்யலை? எங்க எல்லார்க் கிட்டயும் கூட ஏன் இந்த விஷயத்தை மறைக்க நினைச்ச? அவன் முத்தம் கொடுத்ததைச் சொல்ல ஒரு மாதிரி இருந்தாலும் அவன் அடிச்சான்னு கூட நீ சொல்லியிருக்கலாமே? ஏன் சொல்லலை?”
“பாட்டி”
“பொதுவா புருஷன் பொண்டாட்டிக் குள்ள நடக்குறதை தான் அடுத்தவங்களுக்கு தெரிய கூடாதுன்னு நினைப்போம். அவன் உன்னை அப்படிச் செஞ்சதும் பொண்டாட்டின்னு நினைச்சு தான். அதை நீ மறைச்சதும் அவனை உனக்கு பிடிக்க போய் தான். அவனைக் காட்டிக் கொடுக்காம நீ அழுதுட்டு இருக்க காரணம் அது தான். நான் மனசார தான் கேக்குறேன். அவனைக் கல்யாணம் பண்ணிக்கிறியா? உன் கோபத்தை கல்யாணத்துக்கு அப்புறம் அவன் மேல காட்டு”
“பாட்டி, அவரை எனக்கு நாலஞ்சு நாளா தான் தெரியும்? அதுக்குள்ள கல்யாணம் எப்படி?”
“இப்ப உங்க வீட்ல மாப்பிள்ளை பாத்தா அவன் கூட நீ எத்தனை நாள் பழகி மா சரின்னு சொல்லுவ?”
“பாட்டி”
“ஒருத்தங்களை பிடிக்கிறதுக்கு நாள் கணக்கு அவசியம் இல்லை மா. இந்த ஒரு விஷயத்தை மட்டும் விட்டுட்டு இன்பாவை உனக்கு பிடிச்சிருக்கான்னு சொல்லு”
“பிடிக்கும் பாட்டி”, என்று உண்மையை ஒத்துக் கொண்டாள் வினோதினி. அதைக் கேட்டு நிம்மதியாக இருந்தது பாட்டிக்கு.
“நாளைக்கு நான் உங்க அம்மா அப்பா கிட்ட இன்பாவுக்காக உன்னை பொண்ணு கேக்க போறேன். சிதம்பரம் உன்னை மருமகளா ஆக்குறதுக்கு சம்மதம் சொல்லிட்டான். அதுக்கு முன்னாடி உன் விருப்பத்தை கேட்க தான் வந்தேன்”
“பாட்டி, உடனே எதுவும் வேண்டாமே. கொஞ்ச நாள் கழிச்சு….. இதெல்லாம் பேசுங்க என்னால இப்ப உங்க பேரனை நேருக்கு நேர் பாக்க முடியுமான்னு கூட தெரியலை. அவர் மேல எனக்கு இருக்குறது கோபமா வெறுப்பா ஆதங்கமா? எதுன்னு கூட தெரியலை. எனக்கு யோசிக்கணும்”, என்றாள்.
“நீ யோசி, உன்னை யார் யோசிக்க வேண்டாம்னு சொன்னா? ஆனா நான் நாளைக்கு உங்க வீட்ல பேசப் போறது உறுதி? உன்னோட அம்மா அப்பா உன் கிட்ட இன்பாவைப் பிடிச்சிருக்கான்னு கேட்டா அவங்க கிட்ட யோசிக்கணும்னு சொல்லு சரியா? இப்ப முதல்ல நீ சாப்பிடணும். அப்ப தான் தூங்க முடியும்”, என்றவர் உள்ளே சென்று பாமா வைத்து விட்டுச் சென்ற உணவை எடுத்து வந்து அவளுக்கு ஊட்ட ஆரம்பித்தார்.
குழப்பமான மனநிலையில் இருந்த வினோதினி அவர் ஊட்டிய அனைத்தையும் சாப்பிட்டு விட்டாள்.