காலையில் அந்த வீடே மயான அமைதியில் இருந்தது. அடுக்களைக்குள் தேவி பாத்திரங்களை உருட்டும் சப்தம் மட்டும் அவ்வப்போது வந்துப்போக, சத்தியன் செய்தித்தாளில் மூழ்கியிருந்தார்.
சோபாவின் ஒருபக்கம் ஜேகோப்… மறுபக்கம் அவனுக்கு எதிரே ரோஷிணி…!
இரவு நடந்த நீண்ட சம்பாஷனைக்கு பிறகு இருவரும் முகமுமே களையிழந்து போனது. அதிலும் ரோஷிணி விடிய விடிய அழுதிருப்பாள் போலும்… கண்ணிமைகள் தடித்து, கன்னம் சிவந்து பார்க்கவே பாவம் போல இருந்தாள். அன்னை கேட்டதற்கு ‘தலைவலி’ என சமாளித்துவிட்டு அமைதியாக அமர்ந்திருந்தாள்.
ஜேகோப் எதிரில் இருந்தவளை பார்க்க, இரவு நடந்த பேச்சுக்கள் எல்லாம் இப்போதும் கூட அவன் காதில் ஒலிப்பதை போல இருந்தது. என்ன மாதிரியான மனநிலையில் துள்ளிகுதித்து போனவனை, மொத்தமாய் அடித்துப்போடும்படி பேசிவிட்டு இப்போது கண்ணை கசக்கிக்கொண்டு அமர்ந்திருப்பதை பார் என ஆத்திரம் கூட வந்தது.
‘ஏன் அப்படி பேசுன?’ இப்போது கூட எதிரே இருப்பவளின் கழுத்தை பிடித்து ஆக்ரோஷமாய் கேட்க வேண்டும் போல வந்தது.
அவளிடம் காதலை சொல்லப்போகிறோம் என்ற பரவசத்தில் இருந்தவனை, “இதுக்குன்னே நாக்கை தொங்க போட்டுட்டு அலைவீங்களா? ச்சை!” என்ற அவள் பேச்சு அதிர வைக்க, அதிலும், ‘ச்சை’ என்ற அவள் அசூயை சுமந்த முகம் அவனுக்கு உள்ளுக்குள் எழுந்த உணர்வுகளை எல்லாம் நொடிப்பொழுதில் அமிழ்ந்துப்போக செய்துவிட்டது.
“என்ன பேசுற ரோஸ்?” அவன் வார்த்தையே வராது வினவ, “உங்க ஊரு ஆளுங்களுக்கெல்லாம் பொண்ணுங்களை தொடுறதும், பின்ன கழட்டி விடுறதும் இலகுவா இருக்கலாம்… ஆனா எங்களுக்கு அப்படி இல்ல… ஒருத்தனை கட்டி அவன்கூடவே வாழனும்… அதுதான் வாழ்க்கை…! உங்களை மாதிரி மாசத்துக்கு ஒருத்தின்னு போறவங்களுக்கு எங்களை மாதிரி பொண்ணுங்க சரி வர மாட்டோம்! உங்க ஆட்டத்தை என்கிட்டே காட்டணும்ன்னு நினைக்காதீங்க! வேற மாதிரி ஆகிடும்!
நீங்க தொட்டப்போவே எல்லாரையும் கூட்டி நான் பஞ்சாயத்து வச்சுருக்கணும்.. ஏற்கனவே பிரிஞ்ச ஆளுங்களை ஒன்னு சேர்க்க தான் வந்து இருக்கீங்க, இப்போ இன்னொரு பிரச்சனைல குடும்பம் மொத்தமா உடைஞ்சுட கூடாதேன்னு தான் எதுவும் சொல்லாம உங்ககிட்ட பேசிட்டு இருக்கேன்…
ஆனா, இன்னொரு முறை நான் இப்படியே இருப்பேன்னு நினைக்காதீங்க!” என்றவளோ,
தன் துப்பட்டாவினுள் மறைத்து வைத்திருந்த பணத்தை எடுத்து, “இந்தாங்க உங்க பணம்! சும்மா ஏமாத்திட்டேன் ஏமாத்திட்டேன்னு சொல்லிட்டே இருந்தீங்களே? கணக்கு சரியா போச்சு! இனி உங்க வேலையை நீங்க பாருங்க, என் வேலையை நான் பாக்குறேன்” என்றாள்.
மூச்சுவாங்க பேசிமுடித்தவளை நிலைத்த கண்களோடு வெறித்தான் ஜேகோப். சத்தியமாய் அவளிடம் இருந்து இப்படியாப்பட்ட பேச்சுக்களை அவன் எதிர்ப்பார்க்கவில்லை.
‘என்னவோ அவனையும், அவன் ஊரு ஆட்களையும் காம கொடூரர்கள்’போல பேசிவிட்டாளே!
இதில் கையில் பணம் வேறு!
அவள் பேச்சில் அவன் மனம் காயப்பட்டாலும், அவளை அவன் தவறாக நினைக்கவில்லை.
என்னய்யா அப்படி சொன்னாய்? நான் அப்படி தான் பார்க்கிறாயா? என அத்துமீறவில்லை.
என்னையே அப்படி பேசிவிட்டாய் அல்லவா? நான் யாரென உனக்கு காண்பிக்கிறேன் பார்! என வீரவசனம் பேசவில்லை.
மாறாக, தன் காதலை சொன்னான்!
ஆம்… தன் காதலை தான் சொன்னான்!
உலகில் யாரும் இப்படி ஒரு மனநிலையில் தன் காதலை சொல்லியிருப்பார்களா என அவனுக்கு தெரியாது. ஆனால், உடைந்து போன நெஞ்சை ஒட்ட வைக்கும் மருந்தை தேடி, அவன் காதலை சொன்னான்.
“ஐ ரியலி லவ் யூ ரோஸ்!”
அவன் அப்படி சொன்னபோது அவள் விழிகள் இரண்டும் அகண்டு விரிந்ததே! அது வியப்பிலா? திகைப்பிலா? அல்லது சினத்திலா? என்று அவனுக்கு புரியவில்லை. ஆனால், இதை தன்னிடம் இருந்து அவள் எதிர்ப்பார்க்கவில்லை என்று மட்டும் புரிந்தது அவனுக்கு.
“ஐ ரியலி மீன் இட்!” என்றான் முத்தம் கொடுத்தபோது சொன்னதை போலவே.
“எதையும் புரியாம, தெரியாம, அந்த நேர ஹார்மோன் சேஞ்சஸ்ல சொல்லல நான்! உன்னை கிஸ் பண்ணனும்ன்னு தோணுச்சு! உன்னை மட்டும் தான் தோணுச்சு! நான் கிஸ் பண்ண ரெண்டாவது பொண்ணு நீதான்!” அவன் முடிக்கும்முன்னே அவனை அவள் தீப்பார்வை பார்க்க,
“முறைக்காத! முதல் பொண்ணு என் அம்மா” என்றான் உணர்ச்சிகள் அற்ற குரலில்.
அவள் பார்வை மாற, “நீ மத்த பாரினர்ஸ் பத்தி என்ன அசம்ப்ஷன்’ல இருக்கன்னு எனக்கு தேவையில்லை. ஆனா, நான் என் அம்மா வளர்ப்பு! தேவகி என்னை ‘ஒன் ஃபார் ஒன்’ன்னு சொல்லி தான் வளர்த்தாங்க.
என்னோட ‘ஒன்’ நீதான்!” என்றான் அழுத்தமாய்.
“நீ இப்போ என்னை கூப்பிடலன்னாலும் நாளைக்கு உன்கிட்ட என் ‘லவ்’வ சொல்லனும்ன்னு தான் இருந்தேன்! ஆனா, அதுக்குள்ள நீ என்னென்னவோ பேசிட்ட! ரொம்ப ஹர்ட்புல்’லா இருக்கு! பட், கோவம் வரல!”
“வேற யாராவது இப்படி என்கிட்டே பேசியிருந்தா நான் அவங்களை திரும்பி கூட பார்த்துருக்க மாட்டேன்! ஆனா, இப்போக்கூட எனக்கு நீ தான் வேணும்ன்னு அழுத்தமா தோணுது! எப்படி இவ்ளோ குவிக்’கா லவ் வந்துச்சுன்னு தெரியல… எனக்கு என் லவ்வ எப்படி புரிய வைக்குறதுன்னும் தெரியல!
எனக்கு புரிஞ்ச அளவுல சொல்லனும்ன்னா, ‘என் அப்பா, மாம்மி மேல காட்டுறதை விட அதிகமான காதலை, உன்கிட்ட என்னால காட்ட முடியும்! டில் மை டெத்!” என்றான் உணர்ந்து.
அவள் கொஞ்சம் கூட இதை எதையும் எதிர்ப்பார்க்கவில்லை. இரண்டு நாட்களாய் தன்னிடம் பார்வையில் கூட சந்திக்காதவன், ‘ஒரு முறை பார்த்தா என்னவாம்?’ என்று தன்னை ஏங்க வைத்தவன், இப்போது தன்னிடம் உருகி உருகி காதலை சொல்கிறான்!? கனவு போல இருந்தது அவளுக்கு.
“சொல்லு ரோஸ்! நான் வீட்ல பேசுறேன்” அவன் இப்படி சொன்னதும் தான் வீட்டின் நினைவே வந்தது அவளுக்கு.
வீடு என்றதுமே அவள் முகம் வெளிற, “தயவுசெஞ்சு இதை இதோட விடுங்க… உங்களுக்கும் எனக்கும் சரி வராது… ஏற்கனவே ஒரு கல்யாணத்துல தான் குடும்பம் பிரிஞ்சுது… இப்போ மறுபடியும் ஒரு கல்யாணம்… வேண்டாம்!” என்றவள், அவன் குறுக்கே பேச வர கை நீட்டி தடுத்தாள்.
“உங்களுக்கு என்னை சந்தோசமா கட்டிக்குடுப்பாங்கன்னு நினைக்காதீங்க… என்னால காதலுக்காக எல்லாத்தையும் உதறிட்டு உங்க அம்மா மாதிரி உங்க பின்ன வர முடியாது… நம்ம பாட்டி இப்போ இருக்குற நிலைமைக்கு என் அம்மாவை தெரிஞ்சே என்னால தள்ள முடியாது! சொந்தபந்தம்’ன்னு இத்தனை வருஷம் ஒட்டுறவா வாழ்ந்துட்டு ஒருத்தரும் இல்லாம மொழி தெரியாத ஊருல வந்து உங்க முகத்தை மட்டுமே பார்த்துட்டு வாழ்ந்து சாக முடியாது!” என்றவள்,
“இன்னொரு தேவகியா சொந்த வீட்டுக்கே விரோதியா, அம்மா முகத்தை பார்க்க கூட, கூடப்பொறந்தவன் கிட்ட கெஞ்சிக்கிட்டு, மகனை தூது அனுப்பி, நல்ல செய்திக்காக உசுரை கையில புடிச்சுக்கிட்டு ஒரு வாழ்க்கையை என்னால நினைச்சுக்கூட பார்க்க முடியாது!!!” அழுத்தமாய் சொன்னாள்.
வார்த்தைக்கு வார்த்தை அவள் தன் அன்னையை உவமையாக்கி இழுக்க, அது கோபத்தை கொடுத்தாலும், அவள் பார்வையில் இது சரிதானே என்ற நடுநிலை எண்ணத்தில் அமைதி காத்தவன்,
விரக்தியாய் சிரித்தவள், “எஸ்’ சொல்லுவாங்கன்னு எப்படி நினைக்குறீங்க? எனக்கு தெரியாதா என் குடும்பத்தை பத்தி?” என்றாள்.
“என் அம்மா சிரிச்சு பேசுறதால சரின்னு சொல்லுவாங்கன்னு நினைக்குறீங்களா? இன்னமும் அவங்களுக்கு நீங்க ‘ஃபிரன்ட் பையன்’ தான். நாத்தனார் மகனோ, எனக்கு முறைப்பையனோ கிடையாது. அவங்க மனசுல அப்படி தான் இருக்கு! சொன்னா புரிஞ்சுக்கோங்க!” என்றாள் பொறுமையாய்.
ஆனால், அவனுக்கு தன்னை முயன்றுக்கூட பார்க்க விடாமல் அவள் முட்டுகட்டை போடுவது எரிச்சலை கொடுக்க,
“ஐ வோன்ட் பிலீவ்!” அவனும் வெடுக்கென சொல்ல, “பிடிக்கலன்னா பிடிக்கல தான்! பிடிச்சுருந்தா நீங்க லவ் சொன்னப்போ நான் ஓகே சொல்லிருப்பேனே!?” என்று கேட்க,
“நீ சும்மா ஃபேமிலி டிராமா போட்டுட்டு இருக்க! செண்டிமெண்டல் ஃபூல்ஸ்!” அவன் பல்லைக்கடிக்க,
“வயசு வேகத்துல ஒரு முடிவு எடுத்துட்டு, வயசான காலத்துல வருந்துறதுக்கு இப்போவே நான் ‘செண்டிமெண்டல் ஃபூல்’லா இருக்கலாம்… தப்பே இல்ல” என்றவள் தேவகியை தான் மறைமுகமாய் சாடினாள்.
அவனுக்கும் அது புரிந்தது. பொறுமையை இழுத்துப்பிடித்தான்.
“ஐ… லவ்… யூ…! கேட்டுச்சா? ஐ…..லவ்….. யூஊஊ…” சத்தமாய் அழுத்தமாய் கத்தியவன், “உனக்கு எப்போ இந்த செண்டிமெண்டல் செயினை விட நான் முக்கியம்ன்னு தோணுதோ, அப்போ சொல்லு…” நிறுத்தி, “ஐ…லவ்…யூ…ஜாக்’ன்னு!” என்றான் கடுகடுப்பாய்.
“வாய்ப்ப…” அவள் மறுத்து சொல்ல வர, “ஷட் அப்ப்ப்ப்” அலறினான் அவன். ரோஷிணிக்கு தூக்கி வாரி போட்டது. யாரேனும் வந்துவிட்டால் என்ன செய்வது என அவள் பதற, அதையெல்லாம் மதியாதவன், “ஒன்னு இல்லன்னா இன்னொன்னுன்னு போற நீ சொன்ன ‘ஃபாரின் ரிடர்ன்’ இல்ல நான்! என் லைஃப்’ல லவ் ஒன்னு தான்! அது நீ தான்!” என்றான் வெகு திண்ணமாய்.
அவள் அப்படியே உறைந்து நிற்க, “ஐ வில் பீ வெய்டிங் ஃபார் யூ” என்றான் மெல்லிய குரலில். சொல்லிவிட்டு அவன் நிற்காமல் சென்றுவிட, அவளுக்கு தான் கண்களில் இருந்து துடைக்க துடைக்க நிற்காமல் கண்ணீர் வழிந்தது.
சத்தியநாதனின் மொபைல் சத்தத்தில் முந்தைய இரவு நினைவுகளில் இருந்து மீண்டான் ஜேகோப்.
மறுமுனையில், ரோஷிணியின் கல்லூரி அலுவலக ஊழியர் பேசினார். சத்தியநாதனுக்கு தெரிந்தவர்.
பரஸ்பர விசாரிப்புகளுக்கு பின்னே, “நம்ம ரெண்டு பாப்பா’வும் இன்னும் ஃபீஸ் கட்டாம இருக்கு… லீவு முடிஞ்சா கடைசி பரீட்சை வந்துடும்… நாந்தான் கட்டவேண்டிய நாளு போகுதேன்னு நம்ம புள்ளைங்களாச்சேன்னு கட்டி விட்டேன்! இப்ப மாச கடைசி… பட்ஜெட் கைய கடிக்குது! அதான் அண்ணன் காதுல போட்டுட்டு பணத்தை வாங்கிப்போம்ன்னு பார்த்தேன்” என்று இழுத்து இழுத்து அவர் பேச, இங்கே சத்தியநாதனின் கண்கள் லிப்ஸ்டிக் போட்டதை போல சிவந்துக்கொண்டே போனது.
“நம்ம கணக்கு கிட்ட நான் சொன்னேன்னு சொல்லி வாங்கிக்கோ” இறுகிய குரலில் சொல்லிவிட்டு வைத்தவர், “ரோஷிணிஈஈஈ… என்று வீறீட, தன் நினைவுகளில் மூழ்கி கிடந்தவளுக்கு அவர் குரலில் சர்வமும் நடுநடுங்கியது.
தேவி கையில் இருந்ததை அப்படியே போட்டுவிட்டு ஓடி வர, அதற்குள் ரோஷினியை நெருங்கியிருந்த சத்தியநாதன்,
“எக்ஸாம் ஃபீஸ் கட்டிட்டியா?” என்றார் இரும்பென.
இன்னும் நடுங்கியது அவளுக்கு. பற்கள் எல்லாம் தந்தியடிக்க, பின்னால் பயத்தில் நகர்ந்துக்கொண்டே போனவளிடம் அவர் மீண்டும் அதட்டலாய் கேட்க, “க…க…கட்டிட்டேன் ப்பா” என்றதும், எங்கிருந்து தான் அப்படி ஒரு கோபம் வந்ததோ, தன் உயரத்திற்கு ஓங்கி ஒரு அறை விட்டதில் ரோஷிணி சுழன்றுப்போய் தரையில் கிடந்தாள்.
“ஐயோ…!” தேவி அலறலோடு மகளை தூக்க, “பொய்… பொய் சொல்ற நீ… அதுவும் என்கிட்டயே!?” கேட்டுக்கொண்டே மீண்டும் கையை ஓங்கிக்கொண்டு போக, அதிர்ந்து சிலையென நின்றிருந்த ஜேகோப் குறுக்கே புகுந்து பிடித்துக்கொண்டான்.
“விடுங்க அங்கிள்.. லீவ் ஹர்” அவன் பிடித்துக்கொண்டே சொல்ல, “விடு டா நீ! இப்போவே பொய் சொல்றா என்கிட்ட! காலேஜ் பீஸு கட்ட குடுத்த காசை என்ன செஞ்ச நீ? சொல்லு என்ன செஞ்ச ?” என்று கேட்க, ஜேகோப்புக்கு அந்த ‘எட்டாயிரம்’ நினைவு வந்தது.
அவளோ, “காணா…போச்சு!” என்று முனக, “நாலாயிரத்தை காணா தொலைச்சுட்டு ஒரு வார்த்தை மூச்சு விடாம இவ்ளோ நாள் இருந்துருக்க நீ?” என்று அதற்கும் சேர்த்து அடிக்க வந்தார்.
பரீட்சைக்கு பணம் கட்டவில்லை என்றாலும் அவர்கள் கல்லூரியில் அதிக கெடுபிடி கொடுக்க மாட்டார்கள். பரீட்சை அன்று காலை கொண்டு வந்து கட்டினால் கூட பரிட்சைக்கு அனுமதி கிடைத்துவிடும். இதுபோல பலர் செய்து அவள் நான்கு வருடமாய் பார்த்திருந்தபடியால் இம்முறை துணிந்து அவள் செய்ய, மாட்டிக்கொண்டாள்.
பணம் கட்டவில்லை என்றதிற்கே இந்த அடி… ஆட்டம்… கோபம்… இன்னமும் அவர்கள் பொய் சொல்லிவிட்டு கொடைக்கானல் சென்றது தெரிந்தால், உயிரோடு சமாதி தான்!
“அங்கிள் விடுங்க அங்கிள்…. ப்ளீஸ்” ஜேகோப் கெஞ்ச, “கொஞ்ச நாள் கையை நீட்டாம விட்டதும் குளிர் விட்டு போச்சு… என்ன?” ஆத்திரமாய் கேட்டவருக்கு தான் ஆத்திரம் அடங்கவே இல்லை.
இங்கே இப்படி இருக்க, பக்கத்து வீட்டிலோ, “அம்மாஆஆஆஆ” என்ற சங்கவியின் அலறல் இந்த வீடு வரை எதிரொலித்து திடுக்கிட வைத்தது.
“பரமுக்கும் தெரிஞ்சுபோச்சு போல! ரெண்டும் சேர்ந்து கூடுகளவாணித்தனமா பண்றீங்க… இருங்க வச்சுக்குறேன்” என்ற சத்தியன் வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு அங்கே போக,
“ஐயோ, அது ஒரு அடிக்கு தாங்காதே!” என்ற தேவியும் பின்னேயே ஓட,
‘எங்க வீடு ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு’ ஸ்ட்ரிக்ட்டு’ஸ்ட்ரிக்ட்’டு’ என இருபெண்களும் சொல்லியபோதேல்லாம் புரியாதது இப்போது புரிந்தது அவனுக்கு.
‘யப்பா! என்ன அடி!’ என அவன் நினைக்கும்போதே, “சங்கவியை அடிச்சே கொன்னுடுவாங்க!” என்ற புலம்பலோடு வாசலுக்கு ஓடினாள் ரோஷிணி.
சங்கவியின் முகத்தை நினைக்க, அவனுக்கு மிகவும் பாவமாக போனது. இரண்டு அடி விழுந்தாலும் சரி, குறுக்கே புகுந்து அவளை காப்பாற்றலாம் என்ற நல்ல எண்ணத்தில் அந்த வீட்டுக்குள் அவன் நுழைய,
“இதோ வந்துட்டானே…என் குடி கெடுத்தவன்” என்ற கத்தலோடு ஓடி வந்த பரமேஸ்வரன், அவன் எதிர்ப்பார்க்கும் முன்னே, கன்னத்தில் ஓங்கி அறை விட கதி கலங்கி நின்றுவிட்டான் ஜேகோப். அவன் கண்முன் பூச்சி பறந்தது, தலையை சுற்றி குருவிகள் வட்டமிட்டது.
அவன் சுதாரிக்கும் முன்னே, “போடுறா உங்கம்மாவுக்கு ஃபோனை… இப்போ உடனே அவ இந்த வீட்டுக்கு வந்தாகணும்!!” என்று அவர் கர்ஜிக்க, அவன் ஒன்றுமே புரியாமல் பார்வையை சுற்றி சுழல விட்டான்.
அங்கே தாத்தா வீரைய்யனோ, “நான் சொன்னேன்’ல பார்த்தியா? அவனே கூப்புடுறான்!” தன் ஆரூடம் பலித்ததை சொல்லி, சைகையில் குதூகலிக்க, ‘டேய் என்னடா நடக்குது இங்க? அவ எக்ஸாம் பீஸ் கட்டாததுக்கு நானும் என் மாம்மி’யும் என்னடா செஞ்சோம்?’ என்று பேந்த பேந்த விழித்துக்கொண்டு பரிதாபமாய் நின்றான் ஜேகோப்.