‘என்ன நடக்கிறது இங்கே?’ என அவன் புரியாமல் நின்றதெல்லாம் வெறும் சில நிமிடங்கள் தான்!
பரமு கோவத்துடன் கொண்டு வந்து அவன் முகத்தில் வீசி எறிந்த ஒரு புகைப்படத்தில் கையில் பிடித்து பார்த்தபோது, அவனால் என்ன நடக்கிறது என்பதை புரிந்துக்கொள்ள முடிந்தது.
சற்று நேரத்திற்கு முன்னர்…
திராட்சை தோட்டத்திற்கு கிளம்பிக்கொண்டிருந்த பரமேஷ்வரனை பார்க்க அந்த காலை நேரத்திலேயே அந்த ஊர் ஆள் ஒருவர் வந்தார். அவரை கண்டதுமே புருவங்கள் முடிச்சிட்டது பரமுவிற்கு.
எப்போது புரளி பேசவும், வெட்டி வம்பை இழுக்கவும் மட்டுமே மற்ற வீட்டின் படியேறும் குணமுள்ள அந்நல்மனிதர் தன் வீட்டிற்குள் பிரவேசிக்க, மனதார ‘வாங்க’ என்றுக்கூட சொல்லமுடியாமல் யோசனையுடனே நாற்காலில் அமர சொன்னார் பரமு.
வந்தவரும் சுற்றி வளைக்காமல், “சங்கவி காலேஜு போயிடுச்சா?” என்று ஆரம்பிக்க,
“இல்ல… லீவ் இப்போ… கடைசி பரிட்சைக்காக படிக்குற லீவு” யோசனையோடு பரமு சொல்ல, “ஓ… அப்போ போன வாரம் எங்கோ போச்சே!? அது எங்க?” என்றார் அவர்.
“அது… கொஞ்சம் படிப்பு கம்மியா வர புள்ளைங்களை காலேசுலையே தங்க வச்சு நாலு நாள் படிக்க வைக்குறேன்னு வாத்தியார் சொல்லவும், அனுப்பி வச்சேன்!”
“ஓஹோ! காலேசு எங்க கொடைக்கானல்லயா?” நக்கலாய் அவர் கேட்க, பரமுவிற்கு நரம்புகள் புடைக்க ஆரம்பித்தது.
“அட, என் தங்கச்சி புள்ளைக்கு போன மாசம் கண்ணாலம் ஆச்சே, உனக்கு கூட பத்திரிக்கை வச்சேனே, நினைவு இருக்கா?” என்றார் அவர் சம்பந்தமே இல்லாமல்.
‘இருக்கு’ என அவர் தலையாட்ட, “புது ஜோடி நம்ம கொடைக்கானலுக்கு தேனிலவு வந்துருந்தாங்க… ஒரு வாரத்து மேல தங்கி சீராடிட்டு நேரா மாமன் வீடுன்னு, என் வீட்டுக்கு விருந்துக்கு வந்துட்டாங்க… இப்போ என் வீட்டுல தான் புள்ளைங்க இருக்கு” என்றார்.
பரமுவிற்கு எரிச்சலாய் வந்தது.
“அதுக்கென்ன இப்போ?” வெடுக்கென அவர் கேட்டுவிட, “அதொண்ணுமில்ல, அங்க சுத்தி பாக்கும்போது எடுத்த போட்டோ எல்லாம் நம்ம கண்ணன் கடைல பிரிண்ட் போட்டு மாப்பிள்ளை நைட்டு வாங்கியாந்தாரு… நாங்க எல்லாம் இப்போ கண்ணு முழிச்சதும் தான் ஒன்னொன்னா பாத்தோம்! அதுல பாரு, ஒரு போட்டோ மட்டும், உன்கிட்ட காட்ட வேண்டியதா போச்சு!” என்றவர், தன் இடுப்பில் சொருகி வைத்திருந்த போட்டோ’வை எடுத்து நீட்ட, அதை வாங்கிப்பார்த்த பரமு, அதில் அந்த ஆள் சொன்ன புதுமண தம்பதி படகு சவாரி செய்த போது எடுத்த செல்பி புகைப்படம் இருக்க,
“இதை ஏன் என்கிட்ட காட்டுறீங்க?” என்றார் அதிகரித்த எரிச்சலுடன்.
“அட பரமு… எந்த ஒரு விஷயம் சொன்னாலும் அதை ஆழ்ந்து பார்க்க வேண்டாமா?” கிண்டலாய் சொன்னவர், அந்த போட்டோவை வாங்கி, “இதோ இங்க பாரு… இது யாரு..?” என்று கேட்க, அசிரத்தையுடன் வாங்கி பார்த்தவருக்கு தன் கண்களையே நம்பமுடியவில்லை.
அந்த புகைப்படத்தில் இரு தம்பதிகளுக்கும் மத்தியில் சற்றே தூரத்தில், ஆனால் அடையாளம் காணும்படியான தெளிவில் வேறொரு போட்டில் சவாரி செய்துக்கொண்டிருந்தனர் சங்கவியும், அவள் எதிரே ஜேகோப்’பும்!
தன் மகளை அதில் பார்த்ததே அதிர்ச்சி என்றால், உடன் ஜேகோபை பார்த்தது பேரதிர்ச்சி.
சங்கவிக்கு பக்கவாட்டில் அமர்ந்திருந்த ரோஷிணி அந்த புகைப்படத்தில் தெரியாமல் போனதை அதிர்ஷ்டம் என்பதா இல்லை துரதிர்ஷ்டம் என்பதா என்று தெரியவில்லை!
மொத்தத்தில் பார்ப்பவர் கண்ணுக்கு சங்கவியும் ஜேகோபும் ஜாலியாக பயணிப்பது போல தான் இருந்தது அது…!
“இது… இது?” பரமு என்ன சொல்வதென தெரியாமல் தடுமாற, “உன் பொண்ணு இல்லீன்னு சொல்லப்போறியா? எனக்குக்கூட தோணுச்சு, இது நம்ம புள்ளையா இருக்காதோன்னு! அதான், என் வீட்டுல இருந்து உன் வீட்டுக்கு வர நெடு முழுக்க இருக்க அத்தினி ஆளுங்கக்கிட்டையும் இதை காட்டி கேட்டுட்டேன்! பூரா பயலும் இது சங்கவிதாங்குறான்…!” என்று அவர் சொல்ல, பரமு தலையில் இடி விழுந்ததை போல ஆனது.
ஊருக்கே சொல்லிவிட்டு வந்து, கடைசியாக தன் வீட்டில் நிற்கிறானே என்ற ஆத்திரம்… அதை வெளியில் காட்ட முடியாத சூழ்நிலை.
இதை விட மோசமாய், “ஆனா பாரேன் பரமு, இந்த வெளிநாட்டு பையன் உன் வூட்டுக்கு வந்து ஒரு வாரம் இருக்குமா? ஊரே பாக்க தானே வூட்டுக்குள்ள வந்தான்… ஆனா, இந்த போட்டோ போன வாரத்துக்கும் முந்தி எடுத்தது, அதாவது உன் புள்ள காலேசுல தங்கி படிச்சுது’ல? அப்போ எடுத்தது… அதெப்படி இந்த வாரம் அறிமுகமானவனோட அதுக்கு முந்தி வாரமே ஊர் சுத்த முடியும்!?” அவர் கேட்க, திக்கென்று அவரை பார்த்தார் பரமு.
“எனக்கு தான் கணக்கு தெரியலையோ’ன்னு ஊரு பயலுங்கக்கிட்ட எல்லாம் கேட்டேன்… அவங்களுக்கும் அதே தான் சந்தேகமா இருக்காம்!” என்று அவர் சொல்ல, இடிந்தே போனார் மனிதர்.
“என்ன சொல்லு… இந்த பொம்பளை புள்ளைங்களை எல்லாம் நம்பவே முடியாது… எப்போ என்ன செய்யும், காலை வாரும்ன்னு யாருக்கு தெரியும்!” என்று தன்போக்கில் சொன்னவர், “சரி பரமு, நீ ஆக வேண்டியதை பாரு, எனக்கு வேறொரு வேலை இருக்கு, கிளம்புறேன்” என்றவர், விஷத்தை பரிபூரணமாய் கக்கிவிட்ட நிம்மதியில் அங்கிருந்து அகன்றார்.
பரமு தளர்ந்துப்போய் அப்படியே தரையில் அமர்ந்துவிட்டார். கையில் அந்த போட்டோ கசங்கிக்கொண்டிருந்தது. மகளது வாழ்க்கை அங்கே கேள்விக்குறியாக நிற்க, அதை எப்படி சரி செய்வது என தெரியாமல் இருண்டுப்போனது மனது.
அதைவிட, துரோகம்… மறுபடியும் ஒரு துரோகம்!!!
தன் மகளா? இப்படி பொத்தி பொத்தி வைத்தும் கூட தன்னை மீறி வழித்தவற முடிந்துவிட்டதே!? அதிலும் அவன்! ஒன்றும் தெரியாதவன் போல உள்ளே நுழைந்து எல்லோரிடமும் நல்லவன் வேடம் போட்டுக்கொண்டிருக்கிறானே!
நினைக்க நினைக்க நெஞ்சு விம்மியது. கண்கள் கூட கலங்கும் போல இருக்க, பாரமாகி போன மனதுடன் அமர்ந்திருந்தவரை தான், “அப்பா, என்னாச்சு?” என்று உலுக்கினாள் சங்கவி.
தந்தை தரையில் நொந்துப்போய் அமர்ந்திருப்பதை கண்டதும் பயந்துப்போய் வந்து அவள் வினவ, ஒன்றும் சொல்லாமல் கையில் இருந்ததை அவளிடம் நீட்டினார்.
வாங்கி பார்த்தவளுக்கு, உலகம் ஒரு நொடியில் ராட்டினம் சுற்றியது. நா உலர, வியர்வை பெருக, “ப்..பா?” என அவள் திக்கி அழைத்து முடிப்பதற்குள் அவள் செவிப்பறை கிழிந்தது. அதில் அவள் போட்ட அலறல் கேட்டு தான் எல்லோரும் வந்தது.
மனதின் துக்கம் எல்லாம் பெருங்கோபமாய் மாறிப்போனது பரமேஸ்வரனுக்கு. கண்மண் தெரியாமல் மகளை அடித்துப்போட, என்ன ஏதென்று புரியாமல் எல்லோரும் தடுக்க, அப்போது தான் ஜேகோப் உள்ளே நுழைந்தான். அவனை பார்த்ததுமே ஆத்திரம் தாளாமல் அடித்துவிட்டவர், அதன் பின்பு விஷயத்தை எல்லோரிடமும் உரைத்தார்.
கேட்டதில் யாருக்கு அதிர்ச்சி அதிகம் என கணக்கே இல்லை. ருக்மணி தன் பங்கிற்கு மகளிடம் கை நீட்ட, மனமுவந்து அவரை தடுக்க அங்கே யாருமில்லை. தேவி தான் ஒப்புக்காக ‘விடு’ என்று சொல்லிக்கொண்டிருந்தார்.
“எப்படி டா? எப்படி இப்படி இருக்கீங்க? எங்க குடி கெடுக்கன்னே கிளம்பி வருவீங்களோ? அப்ப, உன் அப்பன் வந்தான்… முதுகுல குத்துனான்…! இப்போ நீ வந்துருக்க, நல்லவன் போல நடிச்சே, எல்லாரையும் நம்ப வச்சு முதுகுல குத்திட்டீல?” பரமு கேட்க, ஜேகோப்’புக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
“அதானே, அப்பன் புத்தி தானே உன் ரத்தத்துலயும் ஓடும்! உன்கிட்ட வேற எதை எதிர்ப்பார்க்க முடியும்? ஆனா, உங்களுக்கெல்லாம் வேற வீட்டு பொண்ணுங்களே கிடைக்காதோ? ஒருவேளை நான் உன் அம்மாவை சேர்த்துக்கலன்னு பழி வாங்க இந்த ரூட்ட போட்டு குடுத்து அனுப்புனாளா உங்கம்மா?”
“மைன்ட் யுவர் வேர்ட்ஸ் அங்கிள்” பொறுமையாக சொன்னான் ஜேகோப்.
“என்னடா மைன்ட்’டு? ஊரு முழுக்க என் பொண்ணு உன்னோட சுத்துனான்னு பரவி கடக்கு… என்ன சொல்ல போற அதுக்கு?” கத்தியவர், “உங்கொம்மாவை வர சொல்லு மொதோ!” என்று உத்தரவிட,
“ஃபர்ஸ்ட் லெட் மீ எக்ஸ்ப்ளெயின் அங்கிள்…” முடிந்தவரை பொறுமையாய் ஆரம்பித்தான் ஜேகோப்.
“நீ ஒரு மயிரும் புடுங்க வேண்டாம்… மரியாதையா நீ உன் அம்மாவை வர சொல்லு… நான் அவகிட்ட பேசிக்குறேன்!” என்று குதித்தார் பரமு.
வீட்டில் இருந்த வேறு யாருமே வாயே திறக்கவில்லை, வீரைய்யன் உட்பட. அனைவருக்குமே இது நம்ப முடியாத அதிர்ச்சியே!
“தெரியாம தான் கேக்குறேன், இது எத்தனை வருஷ ப்ளான்’டா? என் பொண்ணை காதலிச்சு, ஏமாத்தி இங்கிருந்து தூக்கிட்டு ஓடனும்’ன்னு!”பரமு கேட்க,
“அங்கிள், நாங்க லவ் பண்ணவே இல்லை” என்று அவன் சொன்னது அவர் ஆத்திரத்திற்கு தூபம் போட்டதை போல மாற,
“அடப்பாவி… என்னடா மனுஷன் நீ? எப்படி டா ஒரு பொண்ணை வாழ்க்கையை கெடுத்துட்டு இப்படி சொல்ல முடியுது?” என்றது வேறு யாரும் அல்ல… தேவி தான்!
அவரா? அவரா பேசியது? அதிர்ந்துப்போனான் அவன்.
இரவு, ‘சிரிச்சு பேசுற எல்லாருக்குமே இன்னொரு முகம் இருக்கு’ என ரோஷிணி சொன்னது அவனுக்கு நினைவில் வந்தது.
“ஆன்ட்டி… என்ன நடந்துச்சுன்னு முதல்ல யாராது விசாரிங்க… நீங்களே உங்க இஷ்டத்துக்கு ஸ்டோரி பண்ணாதீங்க!” விரக்தியாய் அவன் சொல்ல,
ஜேகோபுக்கு ஏதோ காற்றில்லா அறையில் சிக்கிக்கொண்டதை போல மூச்சு முட்டியது.
சங்கவியோ குனிந்த தலை நிமிரவில்லை. அழுதுக்கொண்டிருந்தாள். ரோஷிணி அவளோடு சேர்ந்து நடப்பதை தவிப்போடு பார்த்துக்கொண்டிருக்க,
“நீ உன் அம்மாவை முதல்ல வர சொல்லு… வர முஹூர்த்ததுலையே உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம்…!” என குண்டை தூக்கி போட்டார் பரமேஸ்வரன்.
ஜேகோப், ரோஷிணி இருவரும் விதிர்த்துப்போய் நிற்க, ஜேகோப் மறுத்து பேசும்முன்னே அவர் காலை சென்று கட்டிக்கொண்ட சங்கவி, “ப்பா… நாங்க லவ் பண்ணல ப்பா! எனக்கு அவரை அப்போ யாருன்னு கூட தெரியாதுப்பா… நம்புங்கப்பா” என்று கதறினாள்.
“தெரியாதவனோட நீ போனன்னு நான் நம்பனுமா?”
“அப்பா.. சத்தியமா ப்பா” தன் தலையில் கைவைத்து சொன்னவள், “ரோஷிணி சொல்லுடி!” என்றாள் அவளிடம்.
“ஆமா பெரியப்பா! நானும் அவளும் தான் போனோம்!” என்று சொல்லி முடிக்க கூட இல்லை, சத்தியனும் தேவியும் அடி விலாச துவங்கினர்.
“என்ன தைரியம் உங்க ரெண்டு பேருக்கும் பொய் சொல்லிட்டு போக?” ஆத்திரத்தில் ஆவேசமும் சேர இரு பெண்களுக்கும் சரமாரியாய் விழுந்தது. ஜேகோப்’புக்கு ஏதோ டிஸ்கவரி சேனலில் சிங்கம் கூட்டமாக புள்ளி மானை வேட்டையாடுவதை போல தோன்றியது. குறுக்கே போய் நிற்கக்கூட முடியாத சூழ்நிலை.
“இவன் எப்படி வந்தான்?” ஜேகோபை காட்டி கேட்க, “தெரியாது” என்றாள் அவள். அதற்கும் அடி விழுந்தது.
“நிசமா தெரியாதும்மா!” ரோஷிணி கதற,
“அவங்களுக்கு தெரியாது” என்றான் ஜேகோப்.
“நீ சொல்லு, எதுக்கு போன?” அவனிடம் வந்தார் தேவி.
“நான் உங்களை எல்லாம் பாக்க இங்க வரதுக்கு முன்ன, ரெண்டு நாள் ரிலாக்ஸ் பண்ணிக்கலாம்ன்னு கொடைக்கானல் போனப்போ ஐ மெட் தெம் தேர். அவங்க என் ரிலேடிவ்’ன்னு தெரியும் எனக்கு. அதான் அவங்க கூட ஊர் சுத்தி பாக்க ஹெல்ப் கேட்டேன்! தே ஹெல்ப்ட் மீ! தட்ஸ் இட்”
“அப்ப திட்டம் போட்டு தான் உறவாடிருக்க… இல்லையா?” பரமு குதித்துக்கொண்டு வர, “ஓ…காட்! இது இவ்ளோ பெரிய இஸ்ஸூ ஆகும்ன்னு தெரியாது எனக்கு!” என்றான் அவன்.
“இப்போ ஆகிடுச்சு… அதுக்கு என்ன பதில் வச்சுருக்க?”
“என்ன பண்ண சொல்றீங்க?”
“அவளை நீ தான் கட்டிக்கணும்! கல்யாணம் பண்ணிட்டு எங்கயோ போய் தொலைங்க… என் பொண்ணு செத்துட்டான்னு நான் இருந்துட்டு போறேன்!” அவர் சொல்ல, சங்கவியும் ருக்மணியும் விம்மி அழுதனர்.
“கல்யாணமா? நான் எப்படி? நான் ஏன் பண்ணனும்?”
“ஊரு முழுக்க அவ உன்னோட சுத்துனான்னு பரப்பி விட்டுட்டான் அந்த நாதாரி… இனி எவன் கட்டுவான் இவளை?”
“திஸ் இஸ் ரிடிகுலஸ்!” என்றவனுக்கு செய்வதறியாது போனது. அங்கிருந்த ஒரு முகமும் தனக்கு உதவும் சாயலில் கூட இல்லாது போக, பதைத்துப்போனான்.
“அப்பா… நான் கல்யாணமே பண்ணிக்கல… உங்ககூடவே இருந்துடுறேன்! ப்ளீஸ் ப்பா” சங்கவி கெஞ்ச,
“ரோஷிணி கூட சங்கவி பக்கத்துல தான் இருந்தா… அதை சொல்லி புரிய வைக்கலாம் எல்லாருக்கும்” ஜேகோப் சொல்ல,
“ஒருத்தி வாழ்க்கையை கெடுத்தது பத்தாதுன்னு என் பொண்ணு வாழ்க்கையையும் கெடுக்க வரியா?” என்றார் தேவி. இத்தனை நாளும் சிரித்து, கொஞ்சி பேசியவர் இல்லை இவர்.
“ஐயோ இல்ல ஆன்ட்டி… இப்போ ரோஷிணியும் தானே என்னோட அதுல இருக்கா… அப்ப அவளையுமா நான் மேரேஜ் பண்ண முடியும்?” நியாயமாக அவன் கேட்க வர, அது அநியாயமாய் போனது அவர்களுக்கு.
“போட்டோ’ல அவ தெரியல… சங்கவி மட்டும் தான் தெரியுறா! முக்கியமா ஊருக்குள்ள சங்கவி பேரு தான் உன்னோட சேர்ந்து நாறிக்கிட்டு இருக்கு” பரமு சொல்ல, “மை ஹெவென்!” தலையில் கைவைத்து அப்படியே அமர்ந்துவிட்டான்.
தன்னால் இனி இதை சமாளிக்க முடியாது என்று புரிந்துப்போனது.
பரமு வேறு, “உன் அம்மாவை வர சொல்லு…” என்று கத்த, “சொல்றேன்” என்றான் முனகலாய்.
“உடனே… உடனே… வர சொல்லு” அவர் அதட்ட, “உங்க இஷ்டத்துக்கு எல்லாம் உடனே வர முடியாது!” என்றான் அவன் வெடுக்கென. அவன் பொறுமையின் எல்லை கோட்டை எப்போதோ தொட்டுவிட்டிருந்தான்.
“என்னடா செய்யுறதையும் செஞ்சுட்டு குரல் உசத்துற?” பரமு வேட்டியை மடித்துக்கொண்டு வர, இவன் அதற்கு இணையாய் எழுந்து நின்றான்.
“வா வான்னா? என் ஷர்ட் பாக்கட்’ல இருக்காங்களா? உடனே வந்து குதிக்க! கேன்பெரா டு இந்தியா டென் அவர்ஸ்… டெல்லி டு சென்னை த்ரீ அவர்ஸ்… சென்னை டு மதுரை வன் அண்ட் ஹால்ப் அவர்ஸ்… தென் மதுரை டு திண்டுக்கல், திண்டுக்கல் டு பூம்பாறை சாலிட்’டா ஃபோர் அவர்ஸ்! இது வெறும் ட்ராவெலிங் டைம் மட்டும் தான்! அதுவும் கண்டின்யுஸ் பிளைட் கிடைச்சா!
புரிஞ்சுதா? உடனே வா’வா’ன்னா வந்து குதிக்க முடியாது! வரப்போ தான் வருவாங்க… உங்களால முடிஞ்சதை பாருங்க!” என்றவன் விறுவிறுவென வெளியேறி தன் பையை எடுத்துக்கொண்டு வாசலுக்கு போக,
“என்னடா அப்படியே ஓடலாம்ன்னு பாக்குறியா?” என்று அவசரமாய் வந்து தடுத்தார் பரமு. பின்னே மொத்த குடும்பமும்! பெரியவர்கள் முகத்தில் எல்லாம் அதே கேள்வியே!!!
பேகின் முன் ஜிப்பில் இருந்து பாஸ்போர்ட்டை எடுத்தவன், “இதை வச்சுக்கோங்க! இன்னும் த்ரீ டேஸ்’ல நான் என் பேரெண்ட்ஸ்’ஸோட இங்க வரலன்னா, லோக்கல் போலீஸ் ஸ்டேஷன்’ல இதை வச்சு கம்ப்ளைன்ட் குடுங்க! இது இல்லாம என்னால வெளிநாடு போக முடியாது… காட் இட்?” என்றவன் கிட்டத்தட்ட அதை தூக்கி தான் எறிந்தான். அத்தனை எரிச்சல் அவனுக்கு.
அதிலும் வீரைய்யன்… ஒரு வார்த்தை ஆதரவாய் பேசிவிடவில்லையே. மனமே விட்டுப்போனது அவனுக்கு.
வெளி கேட் வரை சென்றவன் நின்று ஒருமுறை திரும்பிப்பார்க்க, ரோஷிணி அழுகையை அடக்கிக்கொண்டு அவனை பார்த்தபடி நின்றிருந்தாள்.
‘இப்படியே என்னோடு வந்துவிடேன்!’ என அழைக்க வேண்டும் போல இருந்தது. தலையை உலுக்கிக்கொண்டு அந்நினைவை விரட்டியவன், பின் திரும்பியும் பாராமல் அங்கிருந்து சென்றுவிட்டான்.