பல நிமிடங்களுக்கு பிறகு மூச்சு வாங்க நிமிர்ந்தவன், “இது பிரெஞ்சு கிஸ்!” என்று சொல்லி மீண்டும் அவளிடம் வரப்பார்க்க, “போதும் போடா!” என அவன் நெஞ்சோடு முகத்தை அழுத்திக்கொண்டாள் அவள்.
“அதுக்குள்ளயா?” அவன் குரலே மாறிப்போயிருந்தது. அவனை நிமிர்ந்துக்கூட பார்க்க முடியவில்லை அவளால்.
கீழிருந்து ரோஷிணி ‘கார் வந்துடுச்சு வா!’ என அழைத்தார் சத்தியநாதன். அதில் நிதானத்திற்கு வந்த இருவரும், ஒருவரை ஒருவர் பார்க்க, முத்தத்தின் மிச்சம் இன்னும் அவர்கள் முகத்தில் இருந்தது.
அவளை கிறக்கத்துடன் பார்த்து, தன் உதடுகளை அவள் உதடுகளின் மீது ஒருவித மென்மையுடன் அழுத்தமாய் ஒற்றி எடுத்தவன், “இது லைட் கிஸ்” என்றான்.
“ப்ச்… போடா!” தன்னிடம் இருந்து அவனை தள்ளி விட்டவள், கட்டிலில் இருந்து எழுந்துக்கொள்ள, “சீக்கிரம் ரெடி ஆகி வா! கான்ட் வெயிட் எனிமோர்” என்றான் தாபத்துடன்.
“நீ வெளில போ” என்றவள் அவனை இழுத்துக்கொண்டே கதவருகே போக, “நைட் எங்க ஊரு ஸ்பெஷல் கிஸ் எல்லாம் இருக்கு… சோ, எல்லாத்துக்கும் ரெடியா வா!” என்றதும்,
“அதென்ன உங்க ஊரு ஸ்பெஷல்!?” என்றவளின் வாயை பொத்தி, “எதுவும் கேட்காத! சொன்னா சென்சார் ஆகிடும்!” என்றவன், ஒரு பறக்கும் முத்தத்தோடு சென்றுவிட்டான். அவன் போன பின்னும் கூட அவள் தேகம் இயல்புக்கு வர நெடு நேரம் பிடித்தது.
மதுரையில் இருந்து விமானம் ஏறி மும்பை ஏர்போர்ட் வந்து இறங்கினர் எல்லோரும். அங்கே ஆளுக்கு முந்தி திரவியனும் சங்கவியும் காத்துக்கொண்டிருந்தனர். இருவரும் அதீத பயம், பெரியவர்களை எதிர்க்கொள்ள! ஆனாலும், இதை இப்படியே விட முடியாதே! சங்கவி காலத்துக்கும் பெற்றவர்களை நினைத்து அழுதால்…?!
மனதை திடமாக்கிக்கொண்டு நின்றிருந்தனர். சங்கவி பரிட்சைக்காக முன்பே திண்டுக்கல் வந்து ஹோட்டலில் தங்கி பரீட்சை முடிந்ததும் மாலை நேர விமானத்தில் இவர்கள் மும்பை வர, அவர்களுக்கு பிந்திய விமானத்தில் இப்போது இவர்கள் வந்தனர்.
இருவரையும் பார்த்ததுமே ஆண்கள் இருவருக்கும் அப்படியொரு கோபம்! திரவியன் நேராக சத்தியநாதனின் காலில் விழுந்துவிட்டான்.
சங்கவி அழுகையோடு ருக்மணியை கட்டிக்கொள்ள, சிறிது நேரம் இதே காட்சியே அங்கு ஓடியது.
வீரைய்யன் தான், “போதும்டா… இதுக்கு மேல வீம்பு, பிடிவாதம்’ன்னு மிச்ச வாழ்க்கையை ஓட்டாதீங்க” என்று சொல்ல, அதே தான் அவர்களுக்கும் எண்ணம். ஆனாலும், ரத்தத்தில் ஊறிய வீம்பு தடுத்தது.
“நான் பேச மாட்டேன்! இவங்க வேணா வந்து போகட்டும்!” ஒன்று போல அண்ணன் தம்பி இருவருமே சொல்ல, ‘இந்த வரை இறங்கி வந்ததே போதும்’ என்று எண்ணினர் எல்லோரும்.
அடுத்து ஆஸ்திரேலியா போக வேண்டிய விமான அறிவிப்பு வந்தது. எல்லோரும் கிளம்ப, “ஓகே ஹேவ் எ சேஃப் ஜர்னி” என்றான் ஜேகோப்.
திரவியன், “நீ வரலையா?”
“இல்ல பையா… என்ட வேற ப்ளான் இருக்கு” கண்ணடிக்க, இளம்ஜோடிகளை மிகவும் ஆராயாமல் சில ‘பத்திரங்களை’ சொல்லிவிட்டு எல்லாரும் புறப்பட, ரிச்சர்ட் மகனை கட்டியணைத்தார்.
“சீக்கிரமா காதலிக்கிறது தப்பு இல்லை. அந்த காதல் சீக்கிரமே முடிஞ்சுடாம இருக்கணும்! அது தான் முக்கியம்!” என்று சொல்ல, “நான் உங்க பையன்’ப்பா!” என்றான் ஜேகோப்.
அதில் திருப்தியுற்றவர், மருமகளின் தலையில் ஆதூரத்துடன் தடவிவிட்டு, “என்ஜாய்” என்றதோடு சென்றுவிட்டார்.
“எதுவும் கேட்காம என்னோட வா” என்றவன், மும்பை துறைமுகத்துக்கு அழைத்து வந்தான். இருட்டி இருந்த அந்நேரத்தில் பளபளவென மின்னிய அந்த சொகுசு கப்பலை வாயை பிளந்து பார்த்தாள் ரோஷிணி.
அவளது பாஸ்போர்ட் விசா எல்லாம் எடுத்துக்கொண்டவன் ஃபார்மாலிட்டி முடித்து அவளை கைப்பிடித்து கப்பலுக்கு அழைத்துப்போக, இன்னமும் பிரம்மிப்பு நீங்காமல் ‘ஆஆஆ’ என்றே தான் அவனுடன் வந்தாள்.
அங்கே இருந்த கப்பல் அலுவலர், “ஹோ! கேப்டன் ஜேகோபியன்? இட்ஸ் பீன் எ லாங் டைம் சின்ஸ் வீ மெட்!”
(கேப்டன் ஜேகோபியன்? உங்களை சந்திச்சு ரொம்ப நாள் ஆச்சு) என்று உற்சாகமாய் கைகுலுக்க, இவனும் பதிலுக்கு கை குலுக்கினான்.
ரோஷிணியின் வாய் இன்னும் அதிகமாய் பிளந்தது.
“நீ கேப்டன்’னா?” அவள் கேட்க, அலுவலரிடம் பேசிக்கொண்டே, “ம்ம்ம்” என்றான் இவளிடம்.
அவளுக்கு அப்படி ஒரு ஆச்சர்யம்.
“இந்த கப்பல் எல்லாம் ஓட்டுவாங்களே? அந்த கேப்டனா?” அவள் கேட்க, இவளை திரும்பிப்பார்த்து சிரித்தவன், “ம்ம்ம்” என்றான்.
அதற்குள் பேசிமுடித்து அவன் அவளுடன் உள்ளே நகர, “அப்ப இந்த கப்பலை நீ தான் ஓட்டப்போறியா?” என்றாள் அவள்.
அவள் இடையோடு கையிட்டு குறுக்கே இறுக்கியவன், “கப்பலை நான் ஓட்டுனா உன்னை யார் ஓட்டுவா?” விஷமமாய் கேட்க, அவள் கன்னங்கள் இரண்டும் செக்க சிவந்தது.
செவன் ஸ்டார் ஹோட்டலை விட அதிக சொகுசுடன் இருந்த கப்பலை பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்ப்பதை போல பார்த்துக்கொண்டிருந்தாள் ரோஷிணி.
அவளுக்கு ஜேகோப் கேப்டன் என்று தெரிந்ததும் அதைத்தொட்டே கேட்க நிறைய இருந்தது.
“நீ கப்பல்ல போய்ட்டா நான் என்ன பண்ணுவேன்!?” பாவமாக கேட்க, “நீயும் என்னோடவே வருவ!” என்றதும், “நானா? நிஜமாவா?” என்று குதூகலித்தாள் அவள்.
கப்பல் புறப்பட்டது.
“எவ்ளோ நேரம் ஆகும் நம்ம ஆஸ்திரேலியா போக?”
இப்படி கேட்டவளை கண்டு சிரித்தவன், “நேரமா? டூ வீக்ஸ் ஆகும் அங்க போக” என்று சொல்ல, “அம்மா…..ஆஆடி… அவ்ளோ நாள் எங்க இருப்போம்?” என்றாள்.
“இங்க தான்!”
“இங்கயா? கப்பல்’லயா?”
அவன் ‘ஆம்’ என்க, அவளுக்கு ஏதோ கனவு லோகத்தில் கால்பதித்ததை போல இருந்தது. ஒவ்வொரு இடத்தையும் உற்சாகமாய் ஆச்சர்யமாய் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தாள்.
“சூப்பரா இருக்கு ஜாக்! இந்த மாதிரி கப்பலை டைட்டானிக் படத்துல தான் பாத்துருக்கேன்” என்றாள் அவன் கைகளை கட்டிக்கொண்டு.
சிரித்தவனோ, “டைட்டானிக் வியூ பாக்கலாம் வரியா?” என்றான். அவள் என்னவென்றே தெரியாமல் தலையாட்ட, கப்பலின் கூர் முனை பகுதிக்கு அவளை இட்டு சென்றான் அவன்.
அவனை அடையாளம் கண்டுக்கொண்ட பாதுகாவலர்கள் ஒரு தலையசைப்புடன் அங்கிருந்து வேறிடம் சென்றுவிட, ஒரு சின்ன படி போன்ற கட்டையில் அவளை ஏறி நிற்க வைத்தான் ஜேகோப்.
ரோஷிணிக்கு அடிவயிறு வரை தடதடத்தது. கப்பல் நீரை கிழித்துக்கொண்டு சென்றுக்கொண்டிருந்தது. இரவு நேரத்தில் கப்பல் கடந்து செல்லும் வழியெல்லாம் வெண்ணிற நுரை போல நீர் மேலும்பி அடங்க, தன் மேல் மோதி சண்டையிடும் உப்புக்காற்றில் அவள் தேகம் விரைக்க, அதை பின்னிருந்து பாந்தமாய் கட்டிக்கொண்டான் ஜேகோப்.
கைகளை மட்டும் இருவரும் அகல விரித்தால், அப்படியே ‘டைட்டானிக் போஸ்’ தான்!
“பிடிச்சுருக்கா?” அவள் காதில் கிசுகிசுப்பாய் அவன் கேட்க,
“ம்ம்ம்!” என்றவளுக்கு அவனை கட்டிக்கொண்டு அவனுக்குள் புதைக்கொள்ள வேண்டும் போல இருந்தது.
“கனவு மாறி இருக்கு” என்றாள் உண்மையான பிரம்மிப்புடன்.
“இன்னும் என்ன என்ன கனவு இருக்கோ சொல்லு, நடத்திடலாம்” என்று அவன் சொல்ல, அது உருட்டல்ல… உண்மை என்றே அவன் கண்கள் அவளுக்கு உணர்த்தியது.
திடீரென அவனுக்கு சங்கவி சொன்னது நினைவு வர, “நீ நல்ல கவிதை சொல்லுவியாமே! சங்கவி சொன்னா… இப்போ ஒன்னு சொல்லு கேட்ப்போம்!” என்றான்.
ரோஷிணி மனதுக்குள், ‘அடிப்பாவி… நான் போடுற மொக்கை பன்ச்’சை கவிதை’ன்னு சொல்லி இந்த குழந்தையை ஏமாத்திருக்கியே’ என்று நினைக்க,
இவனோ, “சொல்லு ரோஸ் பாப்பா” என்றான் கொஞ்சலாய்.
அவளோ குரலை செருமி, “பனிப்பாறைல மோதி கவுந்துப்போனா அது பழைய டைட்டானிக்…
பூம்பாறைக்கு வந்து பொண்ணை தூக்கிட்டு போனா, அது புது டைட்டானிக்” என்று சொல்ல,
“வாவ்… அடடா” என்றான் ஜேகோப்.
“இன்னும் இருக்கு கேளு” என்ற ரோஷிணி,
“அந்த டைட்டானிக் ‘காதலில் கவுந்து போகும்!’
இந்த டைட்டானிக் ‘காதலில் கரைபுரண்டு ஓடும்!’ என்று சொல்ல, வாய்விட்டு சிரித்தவன்,
“சூபெர்ப்! என்ன ஒரு கவித” என்றான் அவள் நெற்றியோடு நெற்றி முட்டி.
அவளோ, “இந்த ஆம்பளைங்க எல்லாம் ரொம்ப மோசம் தெரியுமா?” என்று சம்பந்தமே இன்றி சொல்ல,
“ஏன் பாப்பா?” என்றான் ஜேகோப் புரியாமல்.
“என்னவோ ஸ்பெஷல் கிஸ் எல்லாம் நைட் இருக்குன்னு ஒரு ஆள் சொன்னான்! இப்போ என்னனா அதை பத்தியே யோசிக்காம என்கிட்ட மொக்க கவித கேட்டு சிரிச்சுட்டு இருக்கான்” என்று விளையாட்டாய் நொடிக்க,
“இந்த பொண்ணுங்க எல்லாம் ஃபிராடு’ன்னு கேள்விப்பட்டுருக்கேன்… ஆனா இப்போதான் பாக்குறேன்” என்ற ஜேகோப், அவளை அப்படியே கையில் அள்ளிக்கொண்டு,
“அன்னைக்கு என்ன சொன்ன? ரசகுல்லா மாறி கும்முன்னு இருக்கேனா நான்?” போன மாதம் அவள் பேசியதை கூட நினைவு வைத்து அவன் இப்போது கேட்க, “எப்போ?” என்று கேட்டவளின் பேச்செல்லாம் அவர்களின் அறைக்குள் நுழையும் வரை தான் இருந்தது.
அதன் பின்…
அதன்பின் என்ன? திண்டுக்கல்லில் ஒரு டைட்டானிக் உதயமாகி, தன் முடிவில்லா காதல் பயணத்தை இனிதே துவங்கியிருந்தது.