“சரி, எனக்குத் தேவைப்படும் போது கேட்டு வாங்கிக்கிறேன்!” என்றிட, பெயரிற்கு என்று ஒரு ஐம்பது ரூபாய் நோட்டை மட்டும் கொடுத்துவிட்டு, தமிழுடன் இல்லத்திற்குள் அடியெடுத்து வைத்தான் இளஞ்சேரல்.
புதியதாய் வெள்ளைப் பூச்சுச் செய்யப்பட்டு.. சற்றே பரந்து, அதே அளவிற்குக் கச்சிதமாகவும் இருந்தது வீடு. பார்த்ததுமே புரிந்து கொண்டனர், அனைத்தும் புதிய பொருட்கள் என்று.
வேணுகோபாலனும், சவிதாவும்.. கங்கா இருந்த பொழுது வாழ்ந்த வீட்டைத்தான், முன்பு பார்த்து இருந்தனரே தவிர, சேரல் புதுப்பித்த பின்பு தற்பொழுது தான் முதன்முறை காண்கின்றனர்.
நாராயணி, “விளக்கேத்த வைக்கணும்!” என்றிட, கூடத்தின் ஒருபுறம் திரையிட்டு மறைத்திருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றான்.
“சாமி ரூமு, தனியா இல்லையா.?” என மூத்தவர் வினவ, “இந்த வீட்டுல, அப்படிப் பழக்கம் இல்ல ஆச்சி!” என்றவன் திரையை விலக்கினான்.
மூன்றரை அடி உயரத்தில் கங்காவும் ரத்னமும் கருப்பு வெள்ளையில் புகைப்படமாய் இருக்க.. அதன் சட்டத்தைச் சுற்றிலும் பொருத்தப்பட்டு இருந்த சிறிய அளவிலான வண்ண விளக்குகள், ஒளியை உமிழ்ந்து அலங்காரமாய்க் காட்சி அளித்தன. மல்லிகைப் பூ மாலை அணிவிக்கப் பட்டு இருந்தது அவர்களிற்கு. அருகிலேயே ஜெயராமும், அளவான புகைப்படமாய்ப் புன்னகை சிந்தினார்.
அனைவருக்குமே ஒரு நொடி மனம் நெகிழ.. சவிதா, “சாமி படம் எங்க சேரா.?”
“இங்க, அம்மா அப்பாவையும் மாமாவையும் கும்பிடுறதோட சரி. சாமி படம், கடையில மட்டும் தான் இருக்கு!”
நாராயணி, “எப்படி விளக்கேத்துறது?”
“படம் வேணுமா என்ன? மனசுல நினைச்சா பத்தாது.? இதோ.. அம்மா சாமி கும்பிட்ட விளக்கு இருக்கு, ஏத்தட்டும்!” என்றவன் தனியாய் அலமாரியில் இருந்த குத்து விளக்கைக் காட்டி.. தீப்பெட்டியை தமிழின் கையில் கொடுக்க, கேள்வியாய் நோக்கினாள் அவள்.
“என்ன பார்க்கிற.? மாமா முன்னாடியும் விளக்கு இருக்கு பாரு. சேர்த்து ஏத்து. ஆசிர்வாதம் வாங்கிக்கலாம்!” என்றவன் மாலையைக் கழட்டிவிட்டு கைப்பேசியோடு நகர்ந்தான்.
குமாரிற்கு அழைத்தவன், “வியாபாரம் எப்படி இருக்குடா.?”
“ஒண்ணும் சரியில்ல. ரெண்டு சப்பை நின்னு போச்சு. வர்றவங்க எல்லாம் உங்களைத்தான் கேட்கிறாங்க.”
“அதுல பாதிப் பேருக்கு மேல, கல்யாணத்துக்கு வந்திட்டாங்க. சரி, முடிஞ்ச வரைக்கும் பாரு, இல்லேனா எடுத்து வை. சாயங்காலம் வந்து கணக்கை ஒப்படைச்சிட்டு, சம்பளத்தை வாங்கிக்க!” என்றவன் வந்த பொழுது, தாங்கள் புதியதாய் வாங்கி வந்ததில் பெயர்த்தியை விளக்கேற்ற வைத்திருந்தார் நாராயணி.
அதைக் கண்டு புன்னகைத்தவன், தனது அன்னையின் விளக்கை தானே ஏற்ற.. “தமிழ், நீயும் சேர்ந்து சேராவோட கையைப் பிடி!” என்றார் சவிதா.
அவள் அன்னையைப் பார்க்க, அவரின் விழிகள் கண்டிப்பைக் காட்டியது.
எதிலும் ஈடுபடாது தனியாகவே நின்று கொண்டனர், கீதாவும் காயத்திரியும்.
சிறிது நேரத்தில் மண்டபத்திற்கு வரமுடியாத வியாபாரிகள், இல்லத்திற்கு வர.. வெள்ளை வேட்டி வட்ட மேஜை மாநாடு துவங்கியது.
காகித கப்களில் பரிமாறப்பட்ட தேநீரைக் கண்டவன், “இது என்ன கடையா, யூஸ் அண்ட் த்ரோல கொண்டு வர்ற அக்கா.? வீட்டுக் கிளாஸ்ல கொடுக்கிறது தான முறை!”
“முறையையும் உன்னோட கௌரவத்தையும் மட்டும் பார்க்காத சேரா, உன்கூட இருக்கிற பொம்பளைங்களோட சௌகர்யத்தையும் யோசி. ஒண்ணு ரெண்டு பேருனா, டம்ளரைக் கழுவி வேலை பாக்கலாம். பத்து பன்னெண்டு பேருக்குச் செய்யிறது, சிரமம்! ஒரு வேலையைச் செய்யிறதுக்கு முன்னாடி, இனி உன்னோட பொண்டாட்டிக்கிட்ட ஒரு வார்த்தைக் கேட்டுக்க. நல்லதோ கெட்டதோ, நீயி செய்யிற ஒவ்வொன்னுலயும் அவளுக்கும் சரிபாதி பங்கிருக்கு!” என்ற கீதா, தேநீரோடு சேர்த்து இனிப்பு மற்றும் கார பலகாரங்களையும் காகித தட்டில் பரிமாறினாள்.
அரை மணி நேரத்திற்கும் மேல் பேசிவிட்டுக் கிளம்பினர். மதியத்திற்கு மேல் வந்த கறிக்கடைக் காரர் ஒருவர், “ஞாயித்துக் கிழமையா விசேஷத்தை வச்சிட்டியேப்பா.? தாலி கட்டுற நேரத்துக்கு வர முடியாம போச்சே!” என உண்மையான வருத்தத்துடன், மனதார வாழ்த்தி விட்டுச் சென்றார்.
சவிதாவும் பெரியவர்களும் அதிகாலையிலேயே விழித்ததின் காரணமாய்க் களைப்பில் கண் அயர்ந்து விட, “சரி சேரா, நீயும் கொஞ்சம் ஓய்வெடு. நானு சாயங்காலமா வர்றேன்!” என்ற கீதா, காயத்திரியை அழைத்துக் கொண்டு கிளம்பினாள்.
ஒரு பெருமூச்சை வெளிவிட்டு மனைவியின் அருகே வந்து அமர்ந்தவன், “என்னமா, மௌன விரதமா.? வாயவே திறக்காம இருக்க.?”
“பேசுறதுக்குக் கேப் விட்டா தான? நீயா பேசுற, நீயே ஒரு முடிவை எடுத்துட்டுச் சொல்லுற! இதுல நானு சொல்லுறதுக்கும் பேசுறதுக்கும் என்ன இருக்கு?”
“கோவமா?”
“கல்யாண மாப்பிள்ள, வர்ற நேரமா அது.?”
“அப்படிச் சட்டுனு எல்லாம் வந்திட முடியாதுமா. நான்தான் ராத்திரியே அத்தை, தாத்தா, உன்கிட்ட எல்லாம் சொன்னேன்ல.?”
“எஸ். சொன்ன! போயிட்டு வரவானு கேட்கல.”
“சரி தப்புதான். இனி, கேட்டுச் செய்யிறேன். ஆனா கடை விசயத்துல, அப்படி இருக்க முடியாது. எனக்குத் தொழில் இருக்கு, கடமை இருக்கு, லட்சியம் இருக்கு. அதுல எல்லாம், நீ தலையிடக் கூடாது. நானும் உன்னோட எண்ணங்களுக்குக் குறுக்க நிக்க மாட்டேன். நீ, நீயாவும்.. நான், நானாவும் இருந்துக்கலாம்.”
“நீ.. நீயா, நான்.. நானா இருக்கிறதுக்கு எதுக்கு இந்தக் கல்யாணம்.?”
“ஏன்னா.. எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கே. ஆசை இருக்கே. நீயும், ஊருக்கு வந்து போறப்ப எல்லாம் என்னைச் சைட் அடிச்சியே!”
அவள் முறைத்துவிட்டுத் திரும்ப, ‘உண்மையைச் சொன்னா, ஒத்துக்கிறாளானு பாரு? வீம்பு பிடிச்சவ!’ என மனதிற்குள் சிரித்துக் கொண்டவன், “தமிழ்மா.. திருமண வாழ்க்கைன்றது ஒண்ணா சேர்ந்து, கைக் கோர்த்து, சுக துக்கங்களைப் பகிர்ந்து பயணிக்கிறது தானே தவிர, ஒருத்தருக்கு ஒருத்தர் முட்டுக்கட்டையா இருக்கிறதுக்கு இல்ல.”
“ரொம்பத் தெளிவுதான். ஆனா, நீ செய்யிற ஒரு விசயம் என்னோட உடலையும் மனசையும் பாதிக்கிற பட்சத்துல, நான் அதை அனுமதிக்கவும் மாட்டேன். ஏத்துக்கவும் மாட்டேன்.”
அவன் சிரித்து, “அப்ப, கொஞ்சம் புருசனுக்காக விட்டுத் தரலாமே.?”
“நீ செய்யாத எதையும், என்கிட்ட இருந்தும் எதிர்பார்க்காத. இட்ஸ் நாட் எ ஒன் வே, ரைட்.?”
சேரல் அவளை எவ்வித மாற்றமும் இன்றிப் பார்த்திருக்க, “என்ன சொன்னேனு புரிஞ்சிச்சா? இல்ல டிரான்ஸ்லேட் பண்ணணுமா.?”
“அப்ப.. என்னையும் சமாளிக்கக் கத்துக்கோ!” என அவள் எழுந்து செல்ல, “கொஞ்சம் வெளிய போயிட்டு வர்றேன்!” என்றுவிட்டுக் கிளம்பினான்.
சற்றே நிதானித்தவள், “எப்ப வருவ.?”
“அது தெரியல. வேலை முடியும் போதுதான் வர முடியும்!”
அவள் கேள்வியாய்ப் பார்க்க, “நீயும் வர்றியா.?”
“எங்க போகப் போற.?”
“இந்தக் கேள்விய நீயி முன்னாடியே கேட்டிருக்கணும் தமிழ்மா. மாத்திக் கேட்கிற.?” எனச் சிரித்தவன், “வா..” என்று கைநீட்ட, உறங்குபவர்களைப் பார்த்தாள் அவள்.
“அக்காக்கிட்ட சொன்னா, வந்து பார்த்துக்கும்!” என்றவன் கீதாவிற்கு அழைப்பு விடுத்த படியே, மனையாளின் கையைப் பற்றிக் கொண்டு வெளியே வந்தான்.
“சேரா, சொல்லுடா..”
“வீட்டுக்கு வந்து, என்னோட மாமியாரைக் கொஞ்சம் பார்த்துக்க ராணி.”
“ஏன்.. நீயி என்ன செய்யிறியாம்.?”
“என் பொண்டாட்டியோட வெளிய போறேன்!”
“டேய்! வந்தேனு வையி, உன்னோட கழுத்துலயே ஏறி மிதிச்சிடுவேன். காலையில நீயி செஞ்ச வேலைக்கே, கடுப்புல இருக்கேன். நல்லா நாலு அறை விட்டிருப்பேன். கல்யாண மாப்பிள்ள ஆச்சேனு தான், விட்டேன்!”
“ரொம்பப் பேசாத அக்கா. தம்பிக்காக இதைக்கூடச் செய்ய மாட்டியா நீயி.?”
“நானு, என்னோட புருஷன் வேலை சொன்னாலே செய்ய மாட்டேன். நீயி சொல்லுறதை எல்லாம் எதுக்குச் செய்யணும்?”
“கல்யாணத்துக்குனு ரெண்டு பட்டுச் சேலை எடுத்துக் கொடுக்கும் போது மட்டும், வாயெல்லாம் பல்லா வாங்கிக்கிட்ட இல்ல? அப்ப, இதையும் செய்யணும்!”
“அந்தச் சேலைய சுருட்டி வெளித்திண்ணையில தான் போட்டு வச்சிருக்கேன். வந்து தூக்கிட்டுப் போ!”
“அடிப்பாவி அக்கா!”
“ஃபோனை வையிடா.”
“ஃபோனை எல்லாம் வைய முடியாது. அதுக்கு வஞ்சாலும் புரியாது. உனைய வேணும்னா வையலாம். எரும, பன்னி, நாயி, கழுத, பூனை, ஆடே, மாடே, பிசாசே..”
‘கீக்.. கீக்.. கீக்..’ என எதிர்புறம் ஒலி கேட்க, “ஃபோனைக் கட் பண்ணீடுச்சு!” என்று சிரித்தவன் தமிழிடம், “என்ன கிளம்புவோமா.?”
அவனை விழிகள் அகல பார்த்தவள், “இவ்வளவு பேசுவியா நீ? அங்க இருந்த ஏழு வருசமும், வாயவே திறக்கல?”
“எல்லாம் உன்கிட்ட இருந்து கத்துக்கிட்டது தான் பொண்டாட்டி!”
அவள் இதழ்களைச் சுளித்துக் கொண்டு திரும்ப, அவன் சிரித்து, “சீக்கிரம் போனா, சீக்கிரம் வந்திடலாம். எப்படி வசதி.?”
“அண்ணி வர்றேன்னு சொல்லீட்டாங்களா?”
“வந்திடும்!” என்றவன் தனது இரு சக்கர வாகனத்தை இயக்க, பின்னால் அமர்ந்தாள்.
பதினைந்து நிமிடப் பயணம். பச்சைப் பசேலென நீரில் தவழ்ந்த நெல் நாற்றுக் கண்களைக் குளிர்விக்க.. வியர்வையை உற்பத்திச் செய்யும் நண்பகல் கதிரவனோடு சண்டையிட்டு, நிலத்தில் ஒரு பக்கமாய் வளர்ந்து நின்ற அகத்திக் கீரைகளை வெட்டினான் சேரல்.
அவளைக் கனிவாய்ப் பார்த்தவன், “ஒன்பது வருசம் போராடி.. கலெக்டர் ஆஃபிஸுக்கு நடையா நடந்து, வியாபாரிகள் சங்கம் மூலமா ஆளுங்களைப் பிடிச்சு, அவங்கட்ட பேசி இந்த ஊருக்குத் தண்ணிய கொண்டாந்து, காய்ஞ்சு போன நிலத்துக்கு உசுரு கொடுத்து, வேலை செஞ்ச முதல் விதைப்பே இதுதான்.!
இந்த நிலம்.. என்னோட பத்து வருச உழைப்பைத் தின்னு, பாதிச் சம்பாத்தியத்தைச் செமிச்சு, செழிச்சது. இன்னும் ஒத்தப் பைசா எடுக்கல, இதுல இருந்து. எனைய இவ்வளவு வருசமும் தாங்கிப் பிடிச்சுத் தைரியத்தைக் கொடுத்தது.. அந்தக் கத்தியும் கட்டையும் தான். அதுதான் முதல்ல. அதுக்குப் பிறந்த பிள்ளதான், இந்த நாத்து!
நிலம் அள்ளிக் கொடுக்கிற காலம் எல்லாம், என்னைக்கோ மலையேறி போச்சு. அதைக் காயவிட மனசு இல்லாமத்தான் இவ்வளவும் செஞ்சு வச்சிருக்கேன். எனைய ஆளாக்கி விட்டது, ஆடுகளும் கடையும் தான். அதை எப்படி விட முடியும்.?”
தமிழிற்கு ஒன்று மட்டும் புரிந்தது, ‘சேரலையும் கறிக்கடையையும் பிரிப்பது என்பது அத்தனை எளிதல்ல!’ என. அத்தோடு திருமண நாளில் கூட அங்குச் சென்று வரும் பிடிவாதத்தில், தொழிலின் மீதான அவனது ஈடுபாட்டை உணர முடிந்தது.
அடைத்து வைத்திருந்த ஆடுகளிற்கு உண்பதற்கு ஏதுவாய்க் கீரையைக் கட்டி, அவ்விடத்தைச் சுத்தம் செய்து, அவைகள் அருந்துவதற்கு நீரையும் நிரப்பி விட்டு.. மனைவியோடு கிளம்பினான்.