“திருப்பதி போயிருக்கிறதா சொன்னாங்க? தரிசனம் எப்படி இருந்திச்சு.?”
“ரொம்ப நல்லா இருந்திச்சு. காலையில தான் வந்தோம்!”
“சரிமா. எங்க சேரா?”
“சாப்பிடுறான்.”
“சனிக்கிழமை கங்காவுக்கும் அண்ணனுக்கும் திதி. அவனுக்கு ஞாபகம் இருக்கா, என்னனு தெரியல. அதைச் சொல்லத்தான் கூப்பிட்டேன். கோவிலுக்குப் போய், ஒரு விளக்கு மட்டும் போட்டு, சாமி கும்பிட்டு வர சொல்லுமா!”
“ம்ம்.. எங்களை எல்லாம் மொத்தமா மறந்துட்ட போல, ஊரு பக்கமே வர மாட்டிற?”
“உங்களுக்குத் தான் தெரியுமே, இங்க இருக்கிற வேலை எல்லாம். ஒரு நிமிசம் விட்டுட்டு, இங்க அங்க நகர முடியாது.”
“நான் என்னமோ, உன்னை இங்கயே வந்து குடியிருக்கச் சொன்ன மாதிரி பேசுற? ஒருநாள், வந்திட்டுப் போனா என்னடா?”
சின்னதாய் சிரித்தவன், “தாத்தா என்ன செய்யிறாரு?”
“சும்மா அப்படியே, வெளிய போயிருக்காரு.”
“ம்ம்..” என்றவன் சற்றே தயங்கி, “என்ன செய்யிறா, உங்க பொண்ணு?”
“எக்ஸாம் எல்லாம் முடிஞ்சிடுச்சு. ரிசல்ட் வரவும் தான், அடுத்து என்ன செய்யிறதுனு பார்க்கணும். நானு கல்யாணம் செய்யலாம்னு நினைக்கிறேன். அவ, வேலைக்குப் போகணும்னு சொல்லுறா.”
அவளைப் பற்றி மேலும் விசாரிக்கத் துடித்த நாவை கட்டுப்படுத்தியவன், “சரிங்க அத்தை. ஆச்சி?”
“இருக்காங்க, எப்பவும் போல எதையாவது பேசிக்கிட்டு!”
அவன் சிரிக்க, “சரிப்பா!” என்று பேச்சை முடித்தார் சவிதா.
இளையவனின் முகத்தையே பார்த்திருந்த கீதா, “டேய், என்ன விவரம்.?”
“என்ன?”
“எதுக்கு, இப்ப நீயி அந்தப் பிள்ளைய பத்தி விசாரிச்ச?”
“இது என்ன கொடுமையா இருக்கு? ஒருத்தர் கிட்ட பேசுறப்ப, அவங்க குடும்பத்து ஆளுங்களை எல்லாம் விசாரிக்கிறது இல்லையா.?”
“ஆஹான்! உன் மூஞ்சிய பாத்தா, நீயி அந்த அர்த்தத்துல விசாரிச்ச மாதிரி தெரியலயே?”
“எனக்கு வேலை கிடக்கு, கிளம்புறேன்!” என்று அவன் எழ, கைப்பற்றி நிறுத்திய கீதா, “என்னோட மாமியா, இங்க வந்துச்சா சேரா?”
அவளை ஆழ்ந்து பார்த்தவன், “அதான் ஒண்ணும் இல்லனு அப்பவே சொல்லிட்டேனே?”
“பொய் சொல்லாதடா!”
அவன் அமைதி காக்க, “என்னடா சொல்லுச்சு, உன்னை?”
“ஏன்கா, உன்னை இப்படி அசிங்கமா பேசுது அந்தக் கிழவி?”
“என்ன பேசுச்சு?”
“வீட்டுக்குள்ள வரைக்கும் போயிட்டு வர்ற? சோறாக்கி வேற போடுறாளாம், காரணம் இல்லாமலா இருக்கும்? நீயி ஒண்ணும், கூடப் பிறந்தவன் இல்லயே? இவ்வளவு தூரம் செய்யிறானா, அதுல அவளுக்கு ஆதாயம் இருக்கும்ல? சும்மாவே ஆம்பளைங்கள…” என்று அவன் சங்கடத்துடன் பாதியிலேயே நிறுத்த, “தேடி அலையிறவனு சொல்லி இருக்கு!” என்றபடி வந்தான் மோகன்.
இருவரும் ஒருசேர, “மாமா..” என்று அதிர்ச்சியுடன் பார்க்க, மனைவியின் கைப்பற்றித் தன்னோடு அணைத்துக் கொண்டான் அவன்.
“மன்னிச்சிடு மாப்ள! எங்கம்மா இங்க வரைக்கும் வரும்னு நானு நினைக்கல. எவ்வளவு தூரம் மனசு நொந்திருப்ப.?”
“என்ன மாமா, பெரிய வார்த்தை எல்லாம் பேசுறீங்க? அதெல்லாம் ஒண்ணும் இல்ல. என்னைய பேசுனா என்ன, துடைச்சுப் போட்டுட்டுப் போயிக்கிட்டே இருப்பேன். அக்கா தான்..”
மோகன் ஒரு பெருமூச்சை வெளிவிட, “நீங்க, எங்களைப் புரிஞ்சிக்கப் போயி சரியாப் போச்சு. இல்லையினா, என்ன ஆகியிருக்குமோ.? நானு, குழந்தைக்காக அக்காக்கு வைத்தியம் பார்க்கத்தான், இங்க வந்து இருக்கீங்கனு நினைச்சேன். ஆனா, வேற ஏதோ நடந்திருக்குப் போலயே அங்க.?”
மோகன் தயங்க, உடன்பிறவா தமக்கையானவள் கணவனின் மார்பில் புதைந்து இருப்பதைப் பார்த்து விட்டு, அங்கிருந்து வெளியேறினான் இளஞ்சேரல்.
“கீதா, இங்க பாரு!” என அவளின் முகம் நிமிர்த்த, “நீங்களும் என்னைச் சந்தேகப் படுறீங்களா மாமா.?”
“இருந்தாலும் பயமா இருக்கு. நீங்க, மாறிட மாட்டீங்க இல்ல மாமா? என்னை விட்டுட்டுப் போயிடாதீங்க! அப்புறம், நானு இவ்வளவு ஏச்சுப் பேச்சையும் கேட்டுட்டுப் பொறுமையா இருக்கிறதுக்கு அர்த்தமே இல்லாம போயிடும். அதுக்குப் பின்னாடி இந்த உசுரை வச்சிக்கிட்டு மட்டும், என்ன கிடைக்கப் போகுது?”
“எதுக்கு நீயி, இவ்வளவு பேசுற? உன்னைப் பத்தி ஏதாவது ஒத்த வார்த்தைச் சொன்னாலும், அது என்னை நானே கொன்னுக்கிறதுக்குச் சமானம்! அதெல்லாம் விட்டுட்டுப் போக மாட்டேன் நானு. என்கிட்ட இருக்கிற குறையைப் பெருசா நினைக்காம, இப்படி ராஜா மாதிரி யாரு பார்த்துப்பா சொல்லு.?”
அவன் சிரித்து, “நாம திருப்பதி போறதை, எங்க அம்மாக்கிட்டச் சொல்லலையாம். செலவுக்குக் காசு கொடுக்காம போயிட்டோம்னு, அந்தக் கோபத்தை இங்க வந்து கொட்டீட்டுப் போயிருக்கு! நீயி சங்கடப் படாத. இனிமேல் சரியா காசைக் கொடுத்திடுறேன். வராது இங்க!”
அவள் கண்களைத் துடைத்துக் கொண்டு நிமிர, “என்னோட தங்கப் பொண்ணு இல்ல, சிரி ராணிமா!” என அவளின் கன்னம் பிடித்து ஆட்ட, “போங்க மாமா..” என்று கணவனின் கரத்தைத் தட்டிவிட்டுச் சிவந்த முகத்துடன் நகர்ந்தாள்.
மோகனிற்கு மனம் வலித்தது, ‘தன்னால் தானே, அவளிற்கு இவ்வளவு அவப்பெயரும் வேதனையும்!’ என்று. இருந்தும் அதைச் சரி செய்யும் வழிதான் தெரியவில்லை. ஒரு பெருமூச்சை விட்டபடி வெளியே வர, பரமசிவம் படுத்திருந்த இடம் காலியாய் இருந்தது. இளஞ்சேரலுடன் சென்றிருப்பார் போலும்.
* * *
நடுத்தர வர்க்க ஆடையகம் ஒன்றில் இருந்தனர், குருவும் சீடனும். தனது தாய்த் தந்தையரின் நினைவு நாளிற்காக, உடை எடுக்க வந்திருந்தான் இளஞ்சேரல். சவிதா அழைப்பு விடுத்து உரைத்ததுமே, பரமசிவத்தை அழைத்து வந்து விட்டான்.
ஆரம்பக் காலங்களில் இப்பகுதியில் குடில் அமைத்து மக்கள் வாழ்ந்து வந்தனராம். அவர்களிற்கு தெய்வமாகவும் காவலாகவும் இருந்தவர் பார்வதியின் மணாளன் ஆதிசிவன்.
இறைவனிற்குத் தனிப்படையாய் கோவில் என்று, ஏதும் இல்லை அவ்வூரில். தங்களது இல்லத்தைப் போலவே, குடில் அமைத்து அவரை வழிபட்டு வந்தனர் மக்கள். அதனால் அந்த ஊருக்கு ஆதிக்குடில் எனப் பெயர் வந்ததாய், காலங் காலமாய் ஒரு கதையைச் சொல்லி வருகின்றனர்.
பெரும்பாலும் இம்மாதிரியான கதைகள் தானே, நம் வரலாற்றைச் சுமந்து அடுத்தத் தலைமுறைக்குக் கடத்தி வருகின்றன. கதை என்றாலே, கற்பனையும் கலந்தது தானே? இதிலும் கற்பனை இருக்கலாம்!
ஊரின் பெரிய தலைக்கட்டாய் இருந்து, பஞ்சாயத்தில் முக்கிய இடம் வகித்தவர், ரத்தின சபாபதி. அவரின் மனையாள் கங்கா. அவர்களுடையது காதல் திருமணம். அந்தக் காதலிற்கான பரிசுதான் இளஞ்சேரல். தற்போது அவனின் தாய்த்தந்தையர் இருவருமே உயிரோடு இல்லை. அவர்களின் கடந்த காலத்தைப் பின்னர் அறிந்து கொள்ளலாம்.
பரமசிவம், ஊரில் மதிப்பு மிகுந்த ஆள். மக்களால் பெரியவர் என அழைக்கப் படுபவர். ரத்தின சபாபதியை விட, நான்கு வயது மூத்தவர். அவர் உயிரோடு இருந்த காலத்தில், வலது கையாய் இருந்தவர். எதற்கும், எவரிற்கும் அஞ்சாதவர். வாய்ச் சொற்களைக் காட்டிலும், செயல்களின் தாக்கம் அதிகம். அதுவும் அரிவாள் என்றால்.. வெட்டு ஒன்று, துண்டு இரண்டுதான்.
இதன் காரணமாகவே, கோவில் வேண்டுதல்களில் ஆடு வெட்டுவது முதல் கோழி அறுப்பது வரை.. இவர்தான் அனைத்திற்கும். அதற்காகத் தனியாய்க் காணிக்கையையும் வழங்கி விடுவர்.
‘ஓர் உயிரைக் கொல்வது பாவம்!’ என்று ஊரார் அனைவருமே ஒதுங்கி விட, அதையே பரம்பரைப் பரம்பரையாய்.. வருமானத்திற்காகத் தொழிலாய்ச் செய்து வருகின்றனர் பரமசிவத்தின் குடும்பத்தார்.
தற்போதும், கறிகடை என்னவோ இளஞ்சேரல் உடையது தான். ஆனால் வளரும் இளைஞனின் மீது அந்தக் குருதி வாசத்தைப் படிய விடாது.. ஆட்டின் தலையை அறுத்து, தோலை உரித்துக் கொடுப்பது மூத்தவரே.
வியாபாரத்திற்காக ஆடுகளின் எண்ணிக்கை அதிகமாகும் நாட்களில், அறுப்பதை மட்டும் தான் செய்துவிட்டு, உரிக்கும் பணியைக் குமாரிடம் கொடுப்பார். இளஞ்சேரலும் தேவையான நேரங்களில் உரித்துக் கொள்வான்.
அவ்வூரில் வருமானத்திற்குத் தேவையான, பெரும்பாலான தொழில்களையும் அறிந்தவன் சேரல். ஆடு மேய்ப்பது, டைல்ஸ் கற்கள் பதிப்பது, மின்னிணைப்புச் சம்பந்தமான பணிகள், வெள்ளைப் பூச்சுச் செய்வது, சித்தாள் முதல் கொத்தனார் வரை, மண்பாண்டம் செய்தல், வாழ்வின் உயிர்நாடியான விவசாயம் எனச் சகலத்தின் அடிப்படைப் பணிகளையும் அறிவான். எனினும் தேவை ஏற்படாமல் அதனைச் செய்ய மாட்டான்.
சனிக்கிழமை அன்று கோவிலிற்கு அரிசி, பருப்பு வாங்கிக் கொடுத்து.. தாய்த் தந்தையருக்காக மோட்ச விளக்கு போட்டு வணங்கியவன், அதன் தொடர்ச்சியாய் இல்லத்திற்கு வந்து புத்தாடைகளை வைத்து வழிபட்டு, விரதத்தை முடித்தான்.
வேட்டி சட்டையை.. கடந்த பத்து ஆண்டுகளாய் தனக்கு அரணாய் இருக்கும் பரமசிவத்திடம் கொடுத்தவன், புடவையைத் தருவதற்காக.. தனது அன்னைக்கு இணையானவரைக் காண்பதற்காகக் கிளம்பினான்.