வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்த குமாரின் தலையில் லேசாய்த் தட்டிய சேரல், “கறிக்கு, ஆளுங்க நிக்கிறாங்க. உனக்கு என்னடா வேடிக்கைக் கேட்குது? சரட்டுனு வெட்டி வை!” என்றவன், தான் வெட்டியதை எடுத்து எடை போட.. வாடிக்கையாளர், “அப்படியே, சுவரொட்டி ஒண்ணைப் போட்டு விடுப்பா.”
“அண்ணே கோவிச்சுக்காதீங்க, வித்துப் போச்சு. வீட்டுல பிள்ளைகளுக்கு, ரெண்டு நல்லி எலும்பைப் போட்டு விடுறேன். சுவரொட்டிய நாளபின்ன வாங்கிக்கங்க!” என்றிட, “சரி, போட்டு விடு. ரெண்டு நாளுல வர்றேன். மறக்காம எடுத்து வை!” என உரைத்துப் பணத்தைக் கொடுத்துவிட்டுச் சென்றார்.
அடுத்தடுத்து வியாபாரம் அனல் பறந்தது. மூச்சு விடவும் நேரம் இல்லை சேரலிற்கு. குமாரிற்கு வெட்டுவதில் அவ்வளவாய் பக்குவம் போதாது என்பதால்.. பிரியாணி, சுக்கா போன்றவைகளுக்கு அவனே வெட்ட வேண்டியது ஆயிற்று. வலது கை வலியில் துவள, இடக்கை விரல்களில் இரண்டு வெட்டுக்களும் விழுந்திருந்தன.
வாளியில் இருந்த நீரில் முகத்தையும் கைகளையும் கழுவியவன்.. அருகே இருந்த மளிகைக் கடையில் சிறிது மஞ்சள் பொடி வாங்கிக் காயத்தில் தேய்த்துக் கொண்டு, எதிரே இருந்த தேநீர் கடைக்குச் சென்றான்.
“மச்சான், ரெண்டு டீ! ஒண்ணைக் குமாருக்குக் கொடுத்து விட்டுடுங்க.” என்றிட.. கடையில் பணிபுரிபவன் ஒரு டம்ளரைக் கொண்டு சென்று கொடுத்து வந்தான்.
“இந்தா மாப்ள..” எனக் கடைக்காரர் சேரலின் கரத்தில் ஒன்றைக் கொடுக்க.. அங்குக் கண்ணாடி பாட்டிலில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெரிய பிஸ்கட்டுகள் இரண்டை அவசர அவசரமாய் விழுங்கிவிட்டு, ஆவி பறக்கும் தேநீரை வாய்படாமல் அண்ணார்ந்து ஊற்றிக் கொண்டிருந்தான்.
ஒரே வாய், ஒரே மூச்சு தான். அவனது நடவடிக்கைகளைப் பார்த்தவாறே வந்தனர் இரு பெண்களும்.
தமிழ் கணவனை அறியாதவனைப் போல் பார்க்க.. கீதா, “கிறுக்குப் பயலே, இப்படியா கொதிக்கிற டீயை தொண்டையில ஊத்துவ?”
“நேரம் இல்லக்கா. இந்தா, ஆளுங்க வந்திட்டாங்க பாரு. என்ன, காலையிலயே ரெண்டு பேரும் ஊர்வலம் கிளம்பிட்டீங்க?” என்றபடியே கடைக்குச் சென்று வெட்டத் துவங்க, தமிழ் எட்டவே நின்று கொண்டாள்.
கீதா, “உனக்குத்தான் கஞ்சிக் கொண்டு வந்தேன்.”
“அடடா, கொஞ்சம் முன்னாடி வந்திருக்கக் கூடாது? இப்பதான், பிஸ்கட்டைச் சாப்பிட்டேன்.”
“உனக்கு என்ன அவ்வளவு அவசரம், அதுக்குள்ள முழுங்குன?”
“பசி தாங்க முடியலக்கா. வயிறு காந்த ஆரம்பிச்சிடுச்சு. ஒரு ஃபோன் போட்டுச் சொல்லி இருக்கலாம்ல.?”
“ஆளாளுக்கு ஃபோன் போட்டு, ஈரல் எடுத்து வை. ரெத்தம் எடுத்து வை, சுவரொட்டி எடுத்து வைங்கிறாங்க. இங்க கடையில வந்து நின்னுக்கிட்டுக் கேட்கிறவங்களுக்குக் கொடுக்காம, அவங்களுக்கு எப்படி எடுத்து வைக்கிறது? வந்து வாங்கிக்கிட்டா, சரி. இல்லையினா, வியாபாரம் கெட்டுப் போகுது இல்ல? ஃபோன் எடுத்தா தானனு, கடை ஓடுறப்ப எடுக்கிறதே இல்ல.” எனச் சத்தம் வெளியில் வராமல் உரைக்க.. “சரிதான்!” எனச் சிரித்தவள், “இந்தக் கஞ்சியை என்ன செய்யிறது.?”
“கொண்டா. மணி, ஒன்பது தான ஆகுது. பத்து பதினோரு மணிக்கு எப்படியும் பசிக்கும், குடிச்சிக்கிறேன்.”
“நேரமாகுது பாரு.. அண்ணே..” என அருகில் இருந்த சிறிய அளவிலான உணவகத்தின் உரிமையாளருக்குக் குரல் கொடுத்தவன்.. சற்றே நிதானித்து, “இங்க வேணாம். தமிழ், இந்த வாடைக்குச் சாப்பிட மாட்டா. நீயி, நம்ம ராயல் ஹோட்டலுக்குக் கூட்டிட்டுப் போ அக்கா. அப்படியே பெரியப்பாவுக்கும் பார்சல் வாங்கிக்கோங்க. மதியத்துக்கு, கறி எதுவும் கொடுத்து விடவா.?”
சட்டென்று சிரித்தவன், “சரி சரி, நாளைக்குப் பார்த்துக்கலாம். முதல்ல அவளைக் கூட்டிட்டுக் கிளம்பு! இந்தா காசு, எதுவும் வேணும்னா அப்படியே பஜார்ல வாங்கிட்டுப் போங்க.” என்று நான்கு ஐநூறு ரூபாய் நோட்டுகளையும் கொடுக்க, “காசு பத்தலேனா?”
“எதுக்குப் பத்தாம போகுது, பஜாரையே விலைக்கு வாங்கப் போறியா என்ன?”
“நாங்க என்னமும் வாங்குவோம்.”
“சரி சரி, தேவையானதை வாங்கிட்டு என்னோட பேரைச் சொல்லீட்டுப் போ.” என்று அனுப்பி வைத்தான்.
புடவை முந்தானையால் மூக்கை மூடியபடி நின்றிருந்த தமிழ், கணவனைத் திரும்பிப் பார்த்தபடியே கீதாவுடன் நடந்தாள். அருகே இருந்த குமாரைக் கோபத்தில் திட்டுவது தெரிந்தது.
இல்லத்தில் புன்னகை மாறாமல் அவளிடம் விளையாடி வம்பு செய்யும் குறும்புகள் நிறைந்த கண்ணனாய் தெரிந்தவன், இங்குச் சற்றே அரக்கனாகக் கூட அவளின் பார்வைக்குத் தென்பட்டான்.
சட்டை இல்லாமல் பனியன் மட்டுமே அணிந்திருந்தான். அதிலும் அங்கங்கு குருதித் துளிகளால் செம்மை பரவி இருந்தது. மடித்துக் கட்டி அவள் பார்த்திடாத கைலிவேட்டி, முழங்கால் வரை ஏற்றிக் கட்டி இறுக்கி முடிச்சிடப்பட்டு இருந்தது. காலையில் கிளம்பும் பொழுது நெற்றியில் வைத்து வந்த திருநீறும் குங்குமமும் வியர்வையில் கரைந்து, முகத்தை அலங்கோலமாய் மாற்றி ஏகத்திற்கும் கடுமையை ஏற்றி இருந்தன.
வெட்டும் போது தெறித்த சிறுசிறு எலும்புகளும், கறி, சவ்வு போன்றவையும் தலைமுடி, உடல், கைக்கால் எனப் பாரபட்சம் இன்றி எல்லா இடத்திலும் ஒட்டி இருந்தது. அவன் இல்லத்திற்கு வரும் பொழுதே.. முகம், கைக்கால்களைக் கழுவிக்கொண்டு தான் வருகிறான், என்று தற்போது புரிந்து கொண்டாள்.
விடுதியில், உணவு உட்செல்ல வில்லை. அவனின் வாசம், தன்னைத் தொடர்வதாய் உணர்ந்தாள் தமிழ். உண்ண இயலாமல் அப்படியே வைத்து விட்டாள்.
கீதா புரியாமல் பார்த்து, “என்ன தமிழ்.?”
“சாப்பிட முடியல அண்ணி.”
“ஏன்மா? நாலு வாய்கூடச் சாப்பிடலயே.?”
“இல்ல, ஒரு மாதிரியா இருக்கு.”
“பிடிக்கலயா உனக்கு?”
அவள் பதில் உரைக்காமல் புன்னகைக்க, “சரி, அப்ப ஜூஸைக் குடி!” எனப் பழச்சாறு ஒன்றை அருந்த வைத்து, அழைத்து வந்தாள் கீதா.
வழியில், “அண்ணி, ஒண்ணு கேட்கவா உங்கக்கிட்ட.?”
“என்னமா.?”
“இவரு, ஏன் இந்த வேலை செய்யிறாரு.?”
“என்ன, இப்படிக் கேட்கிற.?”
“வேற ஏதாவது, தொழில் பழகி இருக்கலாம்ல.?”
“ஏன், உனக்குப் பிடிக்கலயா.?”
“இதெல்லாம் பழக்கம் இல்லேல.?” எனச் சமாளித்தவள்.. பேச்சை மாற்றும் விதமாய், “ரொம்ப வம்பு பேசுறாரே, உங்க தம்பி. ஆனா அங்க இருக்கும் போது, ரொம்ப அமைதியா இருந்தாரு தெரியுமா?”
மெலிதாய்ச் சிரித்த கீதா, “அது அவனோட இடம் இல்லேல, அதான். சேரலுக்குச் சின்ன வயசுல இருந்தே பிடிவாதம் அதிகம் தமிழ். அநியாயத்துக்குச் சேட்டை செய்யிவான். சமாளிக்கவே முடியாது. நினைச்சதை செஞ்சு முடிக்கணும்பான்.”
“அத்தை மாமா எப்படி? அவங்களை மாதிரியா இவரு.?”
“அப்படிச் சொல்ல முடியாது. ஒரு சில குணம் மட்டும், சபாபதி அப்பாவை மாதிரி. அவர் உறுதியான ஆளு. ஒரு வேலையைத் தொட்டா, செஞ்சு முடிக்கிற வரை நிம்மதியா தூங்க மாட்டாரு. கங்கா அம்மா.. அதான் உன்னோட அத்தை, அவங்களும் தான். ஆனா ரொம்பச் சாந்தம்.
நம்ம ஊரு ஸ்கூலுக்கு, தமிழ் டீச்சரா வேலைக்கு வந்தாங்க. அப்ப எனக்கு நாலு வயசு. அம்மா இல்ல. ஸ்கூல்ல தமிழம்மானு தான் கூப்பிடுவோம். அது அப்புறம், போகப் போக அம்மாவா மாறிடுச்சு. சபாபதி அப்பா ஊராட்சி மன்றத் தலைவரா இருந்ததால, அடிக்கடி ஸ்கூலுக்கு வந்து என்னென்ன தேவைனு விசாரிச்சிட்டுப் போவாரு. அவரோட சொந்தக் காசுலயே நிறையச் செஞ்சிருக்காரு, ஊருக்கு.
ஸ்கூல் பில்டிங் வீக்கா இருக்கு, அதை முதல்ல சரி பண்ணணும்னு அவங்களுக்குள்ள பேச ஆரம்பிச்சு, ரெண்டே மாசம் தான்.. கல்யாணம் செஞ்சிக்கப் போறோம்னு வந்து நின்னாங்க. கங்கா அம்மா வீட்டுல ஒத்துக்கல. உங்க அப்பா தான் வந்து, ஊருல சபாபதி அப்பாவைப் பத்தி விசாரிச்சுப் பார்த்திட்டுக் கல்யாணத்தை முடிச்சு வச்சிட்டுப் போனாரு.”
“ம்ம்.. நீங்களும் அவரும், எப்படி இவ்வளவு அட்டாச்டா இருக்கீங்க அண்ணி?”
“ரொம்பக் கஷ்டப்பட்டு, ஸ்கூலைத் திரும்பக் கட்ட ஏற்பாடு செஞ்சாங்க. அதுனால, எங்களுக்குக் கிளாஸ் எல்லாம் கிரௌண்ட்ல தான் நடந்துச்சு. பழைய கட்டிடத்துல ஏதாவது வேலை செய்ய முடியுமானு பார்க்கப் போனப்ப தான், கனமழைக் கொட்டிப் பில்டிங் இடிஞ்சு விழுந்து அம்மா அப்பா ரெண்டு பேருமே இறந்திட்டாங்க.
ஜெயராம் மாமா, சேரலை நானு பார்த்துக்கிறேனு கூட்டிட்டுப் போயிட்டாரு. ஊருல மழை, வெள்ளம், நிலத்துல விதைச்சது எல்லாம் தண்ணியோட போயிடுச்சு. ஸ்கூலும் இல்ல. அங்க இருந்தா, நல்லா படிப்பான்னு.. நானும் அப்பாவும் தான் சமாதானம் செஞ்சு அனுப்பி வச்சோம். அப்புறம் நடந்தது தான், உனக்குத் தெரியுமே.?”
“ம்ம்.. இங்க வந்து எப்படி இந்தத் தொழில் பழகினாரு.?” எனச் சுற்றி வளைத்து, துவங்கிய இடத்திலேயே வந்து நின்றாள்.
அப்பதான்.. திடீர்னு ஒருநாள் சேரல் வந்து நின்னான். திரும்பப் போக மாட்டேன்னு, அவ்வளவு பிடிவாதம். சாப்பிடாம பட்டினி கிடந்து, இங்க இருக்கிறதுக்கு அப்பாவை ஒத்துக்க வச்சான். உங்கப்பா தேடி வந்தாரு. வர முடியாதுனு உறுதியா சொல்லிட்டான்.
ஏதாவது தொழில் வேணும்ல.? நிலத்துல விதைக்க ஏற்பாடு செஞ்சாங்க. ஆனா மழையே வரல. ஆத்து, கிணத்து தண்ணிய நம்பி எல்லாம் ஒண்ணும் செய்ய முடியாது. அதுனால, அதை விட்டுட்டுக் கிடைக்கிற வேலைக்குப் போனான். சபாபதி அப்பா மேல இருந்த மரியாதையால, அவனை எல்லாருமே அனுசரிச்சுக்கிட்டாங்க. செய்யிற வேலையை விட, அதிகமாவே சம்பளம் கொடுத்தாங்க.
உன்னோட வீட்டுக்காரன் தான், ரோஷக்காரன் ஆச்சே? நீங்க என்ன எனக்குக் காசு தர்றதுனு, வெளிய வேலைக்குப் போகாம, அப்பாக்கூடவே இருந்துக்கிட்டான். ஆடு வாங்க போறது, உரிக்கிறது, வெட்டுறதுனு ஒரு வருசமா எல்லாத்தையும் கவனிச்சிட்டு, கறிக்கடைப் போட போறேன்னு வந்து நின்னான்.
வெட்டுறதுக்குச் சொல்லிக் கொடுங்கனு கேட்கவும், அப்பா முடியவே முடியாதுனு சொல்லிட்டாரு. அப்பதான் பக்கத்து ஊரு கோவில் திருவிழாக்கு, ஆடு வெட்ட அப்பாவை அழைக்க வந்தாங்க. அவர் அந்தச் சமயம் வெளிய போயிருந்ததால, இவன் நானு வர்றேன்னு கிளம்பிட்டான்.”
தமிழ் திகைத்து, “ஐயோ!” என்றிட, சிரித்து விட்டாள் கீதா.