அழைப்பு மணியின் ஒலியில் கதவைத் திறந்தார் நாராயணி. வாயிலில் நின்று இருந்தவனைக் கண்டதும் முகம் சுருங்கிவிட, “சவிதா..” எனக் குரல் கொடுத்த படியே உள்ளே சென்றார்.
“ரொம்பப் பெரிய மனுசனா ஆகிட்ட. உன்னை வானு வேற கூப்பிடணுமா? ஏழு வருசம் இங்கதான இருந்த, அப்புறம் என்னவாம்.?”
“ஆனா, நானு வெளியப் போயி பத்து வருசம் ஆச்சே? இப்ப, இந்த வீட்டுக்கு அந்நியமா மாறிட்டேன்!”
சற்றே முகம் வாட, “ஏன்டா இப்படிப் பேசுற? அதான் நான் கூப்பிடுறேன்ல.?” என்றவாறே அவனின் கைப்பற்றி அழைத்துச் சென்றார் சவிதா.
உள்ளே நுழைந்ததுமே ஆடவனின் கண்கள் தேடியது என்னவோ, அவளைத்தான். ஆனால் பாவைதான், பார்வையில் படுவதாய் இல்லை.
அவர் தந்த தேநீரை அருந்தியவன், கொண்டு வந்த புடவையைக் கொடுத்தான்.
“அம்மாக்குச் சாமிக் கும்பிட்டதா சேரா.?”
“ம்ம்.. இங்க இருந்தப்ப என்னை உங்களோட சொந்தப் பிள்ளை மாதிரி பார்த்துக்கிட்டீங்க அத்தை. அம்மா சேலையை, வேற யாருக்கும் கொடுக்க மனசு வரல. அதான் இங்க கொண்டு வந்திட்டேன்.”
புன்னகைத்தவர், “எப்படி இருக்க.?”
“எனக்கென்ன, ராஜா மாதிரி இருக்கேன். கண்டிஷன் போடவும், கேள்வி கேட்கவும் யாரும் இல்ல!”
“நிறையவே மாறிட்ட.”
அவன் புன்னகைக்க, “இங்க இருந்தப்ப, நீ பேசுற சத்தம், பக்கத்துல இருக்கிறவங்களுக்குக் கூடக் கேட்காது. ஆனா இன்னைக்கு, என்ன போடு போடுற.?”
“பிழைக்கணுமே அத்தை? வாய்தான் மூலதனம். அது இல்லாம ஒண்ணும் செய்ய முடியாது!”
சவிதா, “சேரா.. தூரல் போடுது பாரு. உள்ள வா, கொஞ்ச நேரம் கழிச்சுப் போயிக்கலாம்!”
‘உள்ளே சென்றால், அவளை இன்னும் சிறிதுநேரம் பார்க்கலாம்!’ என மனம் ஆசைக் கொள்ள, ‘நேரம் கடந்து கொண்டிருக்கிறது. நாளை உனக்கான பணிகள் காத்திருக்கின்றன!’ என்று கடமையை அறிவுறுத்தியது மூளை.
‘ஆசையா? கடமையா?’ என்ற பட்டிமன்றத்தில், உணர்ச்சியானது மனதை வெற்றி பெற வைத்து, அவனை வீட்டிற்குள் அழைத்துச் சென்றது.
இங்க வரும் போதாவது நீட்டா பேண்ட் சர்ட் போட்டா, என்ன.? யார் பேச்சையும் கேட்க மாட்டான், திமிர் பிடிச்சவன். இதுல, இவன்கிட்ட நான் பேசணுமா? அவனுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் இருக்கு, பேச? அவனை, உன்னோட நிறுத்திக்க. என்னை எல்லாம் இதுல இழுக்காத!” என்றவள் எழுந்து அவளறைக்குச் செல்ல,
“உன்னோட வேலையை மட்டும் பாரு. என்னோட பேத்தியை கட்டாயப் படுத்தாத. போனவன் அப்படியே போகாம, எதுக்கு இப்படி அப்பப்ப வந்து நிக்கிறானோ.. தெரியல!” என்ற மாமியாரின் சொற்களில், கனத்த மனதுடன் வெளியே வந்தார் சவிதா.
கூடத்தில் அமர்ந்திருந்தான் சேரல்.
‘இவர்கள் பேசியது எதுவும் அவனின் செவிகளை எட்டி இருக்கக் கூடாது!’ என்ற வேண்டுதலுடன் அவனருகே செல்ல, புன்னகைத்தான்.
சில நிமிடங்கள் அமைதியாய்க் கடந்திருக்க, “அத்தை..”
அவர், “என்னடா.?” என்ற படியே கேள்வியாய் நோக்க, “நான் உங்கக்கிட்ட ஒண்ணு கேட்கிறேன், தப்பா நினைச்சிக்காதீங்க?”
சவிதா சிரித்து, “பீடிகை எல்லாம் பலமா இருக்கு?”
அவனும் சிரித்து, “தோணிச்சு, விசயம் அந்த மாதிரி!” எனச் சற்றே தயங்கியவன், “தமிழை, எனக்குக் கட்டித் தர்றீங்களா.?”
அவர் திகைப்பாய் நோக்க, “சரி, இல்லைனு ஏதாவது ஒரு பதிலைச் சொல்லுங்க அத்தை! இப்படியே பார்த்தா, என்ன அர்த்தம்?”
“என்ன நினைச்சுடா, இப்படிக் கேட்கிற.?”
“எல்லாம் உங்க மகளை நினைச்சுத்தான்!”
“அவ, உன்னைத் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டிறாளே?”
அவன் சிரிக்க, “டேய், நிஜத்தைச் சொல்லு!”
“கேளுங்க, சொல்லுறேன்!”
“என்ன திடீர்னு?”
“திடீர்னு எல்லாம் இல்ல, மூணு வருசமாவே!”
அவர் குழப்பமாய்ப் பார்க்க, “மாமா, இறந்ததுக்கு வந்து, ரெண்டு நாள் தங்கி இருந்தேன்ல? அவ அழுதுக்கிட்டே இருந்ததைப் பார்க்கவும், மனசுக்கு ஒருமாதிரி ஆகிடுச்சு. மாமாவும் தமிழும் எவ்வளவு நெருக்கம்னு, எனக்கு நல்லா தெரியும்.
நானு இங்க இருந்த ஏழு வருசமும், மாமா பக்கத்துல தான படுத்துக்குவா? நிஜமாவே, அப்ப ரொம்பப் பயமா இருந்திச்சு அத்தை, ‘எப்படி இவ, அதுல இருந்து மீண்டு வரப் போறா’னு. ஆனா பரவாயில்ல, சமாளிச்சிட்டா.
என்னனு தெரியல, இங்க வர்றப்ப எல்லாம்.. ‘எப்படி இருக்கா? நல்லா இருக்காளா? மாமாவ நினைச்சு இன்னும் அழுவாளா’னு மனசு அடிச்சிக்கும். நமக்காக ஒருத்தர் அப்படி இல்லையேனு, ஒரு ஏக்கம்.
அவனைக் கனிவுடன் பார்த்தவர், “உள்ள, அவ உன்னைப் பத்தி என்ன பேசுனானு தெரியுமா.?”
அவன் சிரித்து, “தமிழுக்கு என்மேல வருத்தம், ஒழுங்கா படிக்கலேனு. இங்க இருந்து கிளம்புறதுக்கு முன்னாடி, ஒழுங்கா காலேஜ் போயி படிக்கிற வழியைப் பாருனு சொன்னா. ஆனா நானுதான்..”
“அதையே தான், இப்பவும் சொல்லுறா. நீட்டா, டிரஸ் பண்ண தெரியலயாம். திமிரு அதிகமாம். அப்புறம் எப்படி உன்னைக் கல்யாணம் செஞ்சிக்க, சரினு சொல்லுவா.?”
“அவளுக்கு என்மேல கோபம் தானே தவிர, வெறுப்பு இல்ல அத்தை. இதுவும் ஒருவகையான அக்கறை மாதிரிதான். புரிஞ்சிக்குவா என்னை!”
“ஆனா.. சேரா. அத்தை மாமா எல்லாம்.?”
“உங்களுக்குச் சம்மதமா.?”
அவர் அமைதியைப் பதிலாகத் தர, “தாத்தா புரிஞ்சிப்பாரு. ஆச்சியையும் தமிழையும் தான் சமாளிக்கணும்!”
“அதை யார் செய்யிறது?”
“தாத்தாக்கிட்ட பேசி சம்மதிக்க வச்சிட்டா, அவரே ரெண்டு பேர்க்கிட்டயும் பேசிடுவாரு!”
“நல்லா, தெளிவா தான் யோசிக்கிற!”
சின்னதாய்ச் சிரித்தவன், “நீங்க, ஒண்ணுமே சொல்ல மாட்டிறீங்களே?
“நான் பார்க்க, வளர்ந்தவன் டா நீ! சந்தோஷம் தான் எனக்கு. ஆனா..”
“ஆனா.. என்ன அத்தை?”
“உனக்கே தெரியும். தமிழ், யோசிக்காம பேசிடுவா. அது எதிர்ல இருக்கிறவங்களுக்குக் காயத்தைக் கொடுக்குமேனு கொஞ்சம் கூட நினைச்சுப் பார்க்க மாட்டா. உன்னை எந்த அளவுக்குப் புரிஞ்சுப்பானு தெரியல. மனசு ஒத்து, சேர்ந்து வாழுவாளானு தான்.. “
அவர் சிரிப்பால் சம்மதத்தைத் தெரிவித்து, “நானும் மாமாக்கிட்டப் பேசுறேன்!”
தலை அசைத்தவன், “மழை நின்னுப் போச்சு. கிளம்புறேன்!” என வெளியேற, அவன் பார்வையில் பட்டதும், தனது அறையில் அதுவரை திறந்து வைத்திருந்த ஜன்னல் கதவை மூடினாள், சவிதா ஜெயராமின் மகள் செந்தமிழ்.
அதைக் கண்டவனின் இதழ்களில், தானாய் புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது.